RCB vs Delhi - final league match
கே.எஸ் பரத் நினைத்த இடங்களில் எல்லாம் பந்தை அடிக்கும் திறமை மிகுந்தவர் அல்ல. உள்ளூர் போட்டிகளில் அவருடைய டி 20 சராசரி 18.5. ஸ்டிரைக் ரேட் 110க்குள். ஆக எதைக் கண்டு இவரை பெங்களூர் அணி தேர்ந்தெடுத்தார்கள் என முதலில் வியந்தேன். கோலி இரண்டு நோக்கங்களுக்காக அவரை அணிக்குள் எடுத்து மூன்றாவது எண்ணில் ஆட வைத்தார்:
1) டி வில்லியர்ஸுக்கு முதுகுக்காயம் இருப்பதால் அவரிடத்தில் ஒரு கீப்பர் தேவை. பரத் ஒரு சிறந்த கீப்பர்.
2) ஹைதரபாத், ஆந்திராவை சேர்ந்த பலரையும் போன்றே பரத் சுழல் பந்தை நன்றாக ஆடக் கூடியவர். மத்திய வரிசையில் விக்கெட் இழக்காமல் ஒற்றை, இரட்டை ரன்களை எடுத்து 120 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிற மட்டையாளர் தேவை. அதனால் பட்டிதாரை தியாகம் பண்ணி பரத்தை அவ்விடத்தில் கொண்டு வந்தார் கோலி.
பரத்தோ தன் மீது அழுத்தம், எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையை பயன்படுத்தி சாமர்த்தியமாக, நிதானமாக ஆடினார். அவ்வப்போது சுழலர்களை மிட் விக்கெட்டுக்கு மேல் தூக்கி அடித்தார். பந்தின் திசை off ஸ்டம்புக்கு வெளியே மாறினால் கவர், எக்ஸ்டிரா கவரில் தட்டி விட்டு முயலைப் போல் ஓடி விடுவார். பெரும்பாலான போட்டிகளில் தன்னால் அணியின் மத்திய வரிசை ஆட்டம் சுணங்காமல் மெத்தனமாகாமல் பார்த்துக் கொண்டார். அவர் எல்லா ஆட்டங்களிலும் சிரத்தையுடன், பந்துகளை ஒழுங்காக கவனித்து சமநிலை குலையாமல் அடித்தாடியதை நான் ரசித்தேன். ஏனென்றால் இந்த ஐ.பி.எல் பருவத்தில் பல இளம் மத்திய வரிசை மட்டையாளர்கள் எந்த பந்து விழுகிறது என்பதையே பார்க்காமல் மட்டையை சுற்றி விக்கெட்டை கொடுப்பதைப் பார்த்தோம். பரத் இந்த விசயத்தில் எனக்கு ராகுல் திராவிட் விக்கெட் கீப்பராக இந்திய ஒருநாள் அணியில் ஐந்தாவது / ஆறாவது எண்ணில் வந்து அடித்தாடிவதை நினைவுபடுத்தினார்.
பரத் எனக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கீப்பர் மட்டையாளர் இயன் ஹீலியையும் நினைவுபடுத்துகிறார். திராவிட், ஹீலி போன்றவர்களுக்கு ஆட்டத்திறன் சற்று குறைவு, ஆனால் அதையே தமது வலிமையாக மாற்றிக் கொண்டார்கள் - எந்த பந்துக்கு, எந்த சூழலுக்கு எப்படி ஆட வேண்டும் என தெளிவான திட்டத்துடன், முன் தயாரிப்புடன் ஆடினார்கள். அதனாலே யாரும் எதிர்பாராத போது நைசாக அங்கிங்கு தட்டி விட்டு ஓடி சரியான நேரத்தில் தாம் அடிக்க வேண்டிய பந்துகளை கணித்து விளாசி வெற்றியின் பக்கத்தில் அணியை கொண்டு சென்று விடுவார்கள். கே.எஸ் பரத் இன்று இறுதிப் பந்தில் நேராக ஒரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை வென்றும் கொடுத்தார்.
போட்டிக்குப் பின் அவர் அளித்த பேட்டியில் "எதுவும் சுலபத்தில் கிடைக்காது, எதை அடையவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். இந்த ஐ.பி.எல்லுக்கு என்றே அவர் தனியாக பயிற்சி எடுத்திருக்கிறார், யாரை எப்படி கையாள்வது என ஒரு மனக்கணக்கை போட்டு வைத்து வந்திருக்கிறார் எனத் தெரிகிறது. பரத்தால் இஷான் கிஷன் இன்று அடித்ததைப் போல ஆட முடியாது. ஆனால் இஷான் கிஷனால் பரத்தைப் போன்று இப்படியான சிக்கலான ஒரு சந்தர்பத்தில் இறுதி வரை நின்று நிதானம் இழக்காமல் ஆட்டத்தை ஏதோ கோழியை ஈரத்துணி போட்டி அமுக்கிப் பிடிப்பது போல கூலாக சத்தமில்லாமல் ஜெயித்து தரவும் முடியாது!
இந்த இடத்தில், பரத்தை நம்பி களமிறக்கி தொடர்ந்து ஆதரித்த கோலியையும் நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

Comments