சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளிவந்த பின் இணங்கிப் போனதைப் பற்றி பேசும் நாம் காந்தியும் ஒரு கட்டம் வரை பிரித்தானியருக்கு ஜால்ரா அடித்தவரே என்பதை மறந்து விடுகிறோம். வடக்கே உள்ள அரசியல் வியாபாரிகளும் அனைவரும் அன்று அப்படித்தான் இருந்தார்கள். காங்கிரார் இப்படி என்றால் அவர்களுக்கு எதிராக இருந்த கட்சியினரும் அவ்வாறே பிரித்தானியருடன் நல்லுறவை பேணினர். ஒரு கட்டத்தில், சிறையில் இருந்து மன்னிப்புக் கேட்டு வெளிவந்த சாவர்க்கர் காந்தியின் எதிர்பாரா வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தனது அரசியலை அப்படியே காந்திக்கு நேர் எதிர் பாதையில் வகுத்துக் கொண்டார். பிரித்தானிய எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு பேசாமல் ஓய்வூதியம் வாங்கியபடி இந்துத்துவாவை கனவு காணவும் வளர்த்தெடுக்கவும் தன் கடைசி காலத்தில் முயன்றார் என்பதே வரலாறு. நாம் இப்போது காந்தி ஆங்கிலேயரை எதிர்த்த இந்த இறுதி சில பத்தாண்டுகளையும் அப்போது சாவர்க்கர் எடுத்த எதிர் தேசிய, பிரித்தானிய ஆதரவு நிலைப்பாட்டையும் மட்டும் வைத்து இருவரையும் மதிப்பிடுவது நியாயமல்ல. இரண்டு பேருமே சந்தர்ப்பவாதிகள் என்பதே உண்மை.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய போது அதற்கு ஆதரவளித்து தன் பத்திரிகையில் எழுதியவர் காந்தி. அது மட்டுமல்ல கடிதத்தை எப்படி எழுதினால் பிரித்தானியர் அருள் பாலிப்பர் என ஒரு வக்கீலாக பரிந்துரைத்தவர். எப்படி இருக்கிறது ஜோடி?
சாவர்க்கர் அன்றிருந்த பல காங்கிரஸ், காங்கிரஸ் அல்லாத தலைவர்களைப் போல அரசியலில் சமயோஜிதத்தை முக்கியமாக கருதினவர். இன்று நாம் ஏதோ மாய லோகத்தில் மிதந்தபடி காங்கிரசார் மட்டும் வெள்ளையரை காலமெல்லாம் எதிர்த்த வீரர்கள் என்றும், சாவர்க்கர் மட்டும் பேடி என்று வசனம் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. சுதந்திரத்துக்கு மூன்று பத்தாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை பார்த்தாலே நமது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்து ராணியை சேவித்தவர்களே என புரிந்து போகும். அந்த கூட்டத்தில் வெறுப்பரசியலின் தாவூத் இப்ராகிமாக திகழ்ந்தவரே சாவர்க்கர் என்பது தான் வித்தியாசம். ஆரம்பத்தில் இருந்தே அவர் வன்முறையையும் துப்பாக்கியையுமே நம்பினார் என அவரது வரலாறு சொல்லுகிறது.
அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டதும் அமைதி வழி அரசியலில் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதாலே. சிறை வாசத்துக்குப் பின் ஊர் திரும்பிய அவர் கடைசியில் செய்ததென்ன? காந்தியைக் கொல்வதற்கு என துப்பாக்கியை கோட்சே கையில் ஒப்படைத்தார். இந்த துப்பாக்கி, சதியாலோசனைகள், தீவிரவாதம், பின்னால் அவர் உருவாக்கிய மதவாதம், இந்து தேசியவாதத்தை தவிர்த்தால் அவரும் அந்த கால காங்கிராரைப் போல வெள்ளையருக்கு கால் அமுக்கி விட்ட பரம்பரை தான். இவர்களில் உத்தமர்கள் என நாம் இன்று நம்ப விரும்புகிற பொருளில் யாரும் இல்லை.
அன்றைய சூழல் அப்படி - வெள்ளையரின் சாம்ராஜ்ஜியம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் நொடிந்திட காந்தியும் அவரது தொண்டர்களும் இது தான் சந்தர்ப்பம் என திரும்ப அடித்தனர். அதுவரை வெள்ளையனுக்கு நீதியுணர்வு உண்டு எனக் கூறி வந்த காந்தி யு டர்ன் எடுத்து 'இனி நாட்டை ஆளும் தகுதி உனக்கு இல்லை' என்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் எல்லாம் ஒரு உணர்ச்சிகரமான சாக்கு மட்டுமே. ஆங்கிலேயர் என்றுமே கொடூரமாகத் தான் இந்தியர்களை நடத்தி வந்தனர். நிஜத்தில் நாட்டை ஆகும் பொருளாதார ஆற்றலை அன்று வெள்ளை அரசு இழந்து வந்ததையே காந்தி அன்று அப்படி பில்ட் அப் பண்ணி சொன்னார். வரலாறு இப்படிப் போகிறது - நம் வடக்கத்திய தியாகிகள் ஒவ்வொருவரும் ஒரு வியாபாரி. சாவர்க்கர் துப்பாக்கியாலும் பின்னர் மன்னிப்பு கடிதத்தாலும் மதவாதத்தாலும் வியாபாரம் செய்தார். காந்தி அதையே சமரசம், குற்றவுணர்வு, உணர்வு சுரண்டல், சனாதனம், தியாகம் என வேறுவழியில் செய்து நல்ல பெயர் பெற்றார். வரலாறும் சந்தர்பங்களும் காலனியாதிக்கத்தில் இனி லாபமில்லை என முதலீட்டியம் உலகம் முழுக்க உணர்ந்து கொண்டதும் இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. ஆனால் அந்த பெருமையை மொத்தமாக காந்தி ஆண்ட் கோ லவுட்டிக் கொண்டனர்.
இப்படி நமது வரலாறு சொல்வது என்னவென்றால் காந்தியோ சாவர்க்கர்
யாரும் மெச்சத்தக்கவர்கள் அல்ல.


Comments