Skip to main content

பா. ராகவன்: எழுத்தும் ஆளுமையும்


 

ஒரு படைப்பாளியாக பா. ராகவனைப் பற்றி சொல்ல சில நல்ல விசயங்கள் உள்ளன:


1) பா.ரா போனில் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார். அழுத்தமான கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்வார். வயிற்றெரிச்சல், பொச்சரிப்பு போன்ற இலக்கிய அரசியல் ஆவலாதிகள் இல்லாதவர். 


2) தன் இயலாமைகள் குறித்த புகார்களை பகிர மாட்டார். 


3) நான் தான் தமிழ் எழுத்துலகின் ஒரே உலக நாயகன் என நிமிடத்துக்கு 60 தடவை சொல்ல மாட்டார். (இதையெல்லாம் ஒரு நல்லியல்பாக இங்கு நான் எடுத்துரைக்க காரணம் இவை தமிழ் இலக்கிய உலகில் அரிதான  சங்கதிகள் என்பதே.)


4) பா. ராவுக்கு எழுத்து தன் பணி, தன் அடிப்படை செயல்பாடு, ஒருவித தேடல் எனும் நம்பிக்கை உண்டு. காலை நடை போவது போல, பொங்கல், வடை, சட்னி சாப்பிடுவது போல எழுத்துப் பணியையும் வைத்துக் கொள்கிறார். அதை மிகையாக அனாவசிய அலங்காரங்களுக்கு உட்படுத்துவது இல்லை. தொடர்ச்சியாக நிறைய எழுத இந்த அணுகுமுறை அவருக்கு பயன்படுகிறது.


5) தமிழில் வெகுமக்கள் எழுத்துக்கும் இலக்கிய எழுத்துக்கும் இடையே ஒரு நூலேணி உள்ளது. அதில் கவனமாக அடி மேல் அடி வைத்து மேலேறி சென்று கொண்டிருப்பவர் அவர். இந்த தெளிவு அவருடைய பலம்.


6) எந்த நாவலையும் அதன் வடிவம், தொழில்நுட்பம் சார்ந்து நுணுகி வாசிக்கிற இயல்பு அவருக்குண்டு. இதுவே தன் நாவலில் பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்ய அவருக்கு வெகுவாக உதவுகிறது. அதாவது தமிழில் வழக்கமாக நடப்பது போல உணர்ச்சிகரமாக மட்டும் அவர் ஒரு புனைவை படிப்பதில்லை. புறவயமான தெளிவான மதிப்பீடுகளை தான் வாசிக்கும் படைப்புகளின் வடிவம் சார்ந்து வைத்திருக்கிறார் என நினைக்கிறேன்.


7) இது நான் புனைவெழுத்து வகுப்பை நடத்திய போது மாணவர்களுக்கு பரிந்துரைத்து வந்த ஒரு விசயம்: நமக்கு இயல்பாக கட்டுரைகளில், கடிதங்களில், பேச்சில் வருகிற மொழியை புனைவிலும் பயன்படுத்தினால் நல்லது. புனைவில் சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்து, நடையை செறிவாக்கலாம். ஆனால் முற்றிலும் மாற்றினால் நாம் வேறு யாரையோ போலச் செய்கிறோம் எனப் பொருள். பா.ரா இவ்விசயத்தில் அசோகமித்திரனின் பிரதான சீடர்: அவருடைய கட்டுரை மொழியை பெரிய மாற்றங்கள் இன்றி அப்படியே நாவலில் கொண்டு வருகிறார். கற்பனையும், பின்நவீன ஆள்மாறாட்டங்கள், ஜித்து வேலைகள் அதை ஒரு நாவலாக்கி விடுகின்றன. 


8. பா.ரா உணர்ச்சிகரமான எழுத்தாளர் அல்ல. சதா சிவந்த கண்கள், புடைத்த நரம்புகள், அழுகை, ஆவேசம், ஓலம் என ரத்தக்களரியாக எழுத மாட்டார். உணர்ச்சிகரமான அலைகழிப்புகள் அவருடைய அகச்சித்தரிப்புகளில் உண்டு, ஆனால் இதையும் விட்டேத்தியான தொனியில் தான் எழுதுவார். தக்காளியை அப்படியே அழுத்திப் பிசைந்தால் பீய்ச்சி முகத்தில் அடிக்குமே அப்படி மொழியை பயன்படுத்த மாட்டார். செய்வது சிக்கன் பிரியாணி என்றாலும் பா.ராவின் “சமையலறை மேடை” எப்போதும் சுத்தமாக அமைதியாக இருக்கும். இந்த விதத்தில் அவர் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க படைப்பாளிகளை ஒத்தவர்.


9) பா.ரா எழுதுவது 100% இலக்கியமா? ஆம், ஆனால் அவர் அகம் சார்ந்த உலகை புறவயமாக சின்னச்சின்ன வாக்கியங்கள் வழியாக சித்தரிக்க முயல்பவர். அதனாலே அவருடைய 1000 பக்க நாவலைக் கூட மூன்று நாட்களில் அலுப்பின்றி நீங்கள் வாசிக்க முடியும். அதே நேரத்தில் ஆழமாக பயணிக்க வேண்டிய இடங்களை இடப்பக்கம் இண்டிகேட்டர் போட்டு வலப்பக்கம் வண்டியைத் திருப்பி தவிர்த்து விடுவார். இந்த புறவய எழுத்தே அவரது வலிமையும் பலவீனமும். இந்த தனக்கே ஆன பாதையில் முழுவேகத்தில் வண்டியை செலுத்தி ஆன்மீகம், உளவியல், மதம், அகத்தேடலாலான வாழ்க்கைகளை, சமகால அபத்தங்களை பிரம்மாண்டமாக சித்தரித்துள்ளதே அவருடைய சாதனை.


10) நான் நாகார்ஜுனர் உரைகளுக்காக மெனெக்கெட்ட, ஹைடெக்கர் வாசிப்பில் ஆழ்ந்து கிடந்த நாட்களில், தத்துவம் பயில்வது உன் வேலையல்ல, புனைவெழுது என்று என்னை திட்டுவார் பா.ரா. அதை (என் வழக்கப்படி) அப்போது பொருட்படுத்த வேண்டாம் என நினைத்தாலும் சில நாட்களில் நாவலுக்கு திரும்பி விடுவேன். என் உபமனம் அவருக்கு ஒரு தனி இடம் கொடுத்துள்ளது என பின்னர் நான் புரிந்து கொண்டென். 


பா.ரா இன்னும் பல அற்புதமான படைப்புகளை நமக்கு தரட்டும்! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...