Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பா. ராகவன்: எழுத்தும் ஆளுமையும்


 

ஒரு படைப்பாளியாக பா. ராகவனைப் பற்றி சொல்ல சில நல்ல விசயங்கள் உள்ளன:


1) பா.ரா போனில் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார். அழுத்தமான கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்வார். வயிற்றெரிச்சல், பொச்சரிப்பு போன்ற இலக்கிய அரசியல் ஆவலாதிகள் இல்லாதவர். 


2) தன் இயலாமைகள் குறித்த புகார்களை பகிர மாட்டார். 


3) நான் தான் தமிழ் எழுத்துலகின் ஒரே உலக நாயகன் என நிமிடத்துக்கு 60 தடவை சொல்ல மாட்டார். (இதையெல்லாம் ஒரு நல்லியல்பாக இங்கு நான் எடுத்துரைக்க காரணம் இவை தமிழ் இலக்கிய உலகில் அரிதான  சங்கதிகள் என்பதே.)


4) பா. ராவுக்கு எழுத்து தன் பணி, தன் அடிப்படை செயல்பாடு, ஒருவித தேடல் எனும் நம்பிக்கை உண்டு. காலை நடை போவது போல, பொங்கல், வடை, சட்னி சாப்பிடுவது போல எழுத்துப் பணியையும் வைத்துக் கொள்கிறார். அதை மிகையாக அனாவசிய அலங்காரங்களுக்கு உட்படுத்துவது இல்லை. தொடர்ச்சியாக நிறைய எழுத இந்த அணுகுமுறை அவருக்கு பயன்படுகிறது.


5) தமிழில் வெகுமக்கள் எழுத்துக்கும் இலக்கிய எழுத்துக்கும் இடையே ஒரு நூலேணி உள்ளது. அதில் கவனமாக அடி மேல் அடி வைத்து மேலேறி சென்று கொண்டிருப்பவர் அவர். இந்த தெளிவு அவருடைய பலம்.


6) எந்த நாவலையும் அதன் வடிவம், தொழில்நுட்பம் சார்ந்து நுணுகி வாசிக்கிற இயல்பு அவருக்குண்டு. இதுவே தன் நாவலில் பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்ய அவருக்கு வெகுவாக உதவுகிறது. அதாவது தமிழில் வழக்கமாக நடப்பது போல உணர்ச்சிகரமாக மட்டும் அவர் ஒரு புனைவை படிப்பதில்லை. புறவயமான தெளிவான மதிப்பீடுகளை தான் வாசிக்கும் படைப்புகளின் வடிவம் சார்ந்து வைத்திருக்கிறார் என நினைக்கிறேன்.


7) இது நான் புனைவெழுத்து வகுப்பை நடத்திய போது மாணவர்களுக்கு பரிந்துரைத்து வந்த ஒரு விசயம்: நமக்கு இயல்பாக கட்டுரைகளில், கடிதங்களில், பேச்சில் வருகிற மொழியை புனைவிலும் பயன்படுத்தினால் நல்லது. புனைவில் சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்து, நடையை செறிவாக்கலாம். ஆனால் முற்றிலும் மாற்றினால் நாம் வேறு யாரையோ போலச் செய்கிறோம் எனப் பொருள். பா.ரா இவ்விசயத்தில் அசோகமித்திரனின் பிரதான சீடர்: அவருடைய கட்டுரை மொழியை பெரிய மாற்றங்கள் இன்றி அப்படியே நாவலில் கொண்டு வருகிறார். கற்பனையும், பின்நவீன ஆள்மாறாட்டங்கள், ஜித்து வேலைகள் அதை ஒரு நாவலாக்கி விடுகின்றன. 


8. பா.ரா உணர்ச்சிகரமான எழுத்தாளர் அல்ல. சதா சிவந்த கண்கள், புடைத்த நரம்புகள், அழுகை, ஆவேசம், ஓலம் என ரத்தக்களரியாக எழுத மாட்டார். உணர்ச்சிகரமான அலைகழிப்புகள் அவருடைய அகச்சித்தரிப்புகளில் உண்டு, ஆனால் இதையும் விட்டேத்தியான தொனியில் தான் எழுதுவார். தக்காளியை அப்படியே அழுத்திப் பிசைந்தால் பீய்ச்சி முகத்தில் அடிக்குமே அப்படி மொழியை பயன்படுத்த மாட்டார். செய்வது சிக்கன் பிரியாணி என்றாலும் பா.ராவின் “சமையலறை மேடை” எப்போதும் சுத்தமாக அமைதியாக இருக்கும். இந்த விதத்தில் அவர் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க படைப்பாளிகளை ஒத்தவர்.


9) பா.ரா எழுதுவது 100% இலக்கியமா? ஆம், ஆனால் அவர் அகம் சார்ந்த உலகை புறவயமாக சின்னச்சின்ன வாக்கியங்கள் வழியாக சித்தரிக்க முயல்பவர். அதனாலே அவருடைய 1000 பக்க நாவலைக் கூட மூன்று நாட்களில் அலுப்பின்றி நீங்கள் வாசிக்க முடியும். அதே நேரத்தில் ஆழமாக பயணிக்க வேண்டிய இடங்களை இடப்பக்கம் இண்டிகேட்டர் போட்டு வலப்பக்கம் வண்டியைத் திருப்பி தவிர்த்து விடுவார். இந்த புறவய எழுத்தே அவரது வலிமையும் பலவீனமும். இந்த தனக்கே ஆன பாதையில் முழுவேகத்தில் வண்டியை செலுத்தி ஆன்மீகம், உளவியல், மதம், அகத்தேடலாலான வாழ்க்கைகளை, சமகால அபத்தங்களை பிரம்மாண்டமாக சித்தரித்துள்ளதே அவருடைய சாதனை.


10) நான் நாகார்ஜுனர் உரைகளுக்காக மெனெக்கெட்ட, ஹைடெக்கர் வாசிப்பில் ஆழ்ந்து கிடந்த நாட்களில், தத்துவம் பயில்வது உன் வேலையல்ல, புனைவெழுது என்று என்னை திட்டுவார் பா.ரா. அதை (என் வழக்கப்படி) அப்போது பொருட்படுத்த வேண்டாம் என நினைத்தாலும் சில நாட்களில் நாவலுக்கு திரும்பி விடுவேன். என் உபமனம் அவருக்கு ஒரு தனி இடம் கொடுத்துள்ளது என பின்னர் நான் புரிந்து கொண்டென். 


பா.ரா இன்னும் பல அற்புதமான படைப்புகளை நமக்கு தரட்டும்! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...