Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

Squid Gamesஉம் புதுப்பேட்டையும்




Squid Games இணைய தொடரை இன்று தான் பார்த்து முடித்தேன் - நான் தொடர்ச்சியாக பார்த்த இரண்டாவது தொடர் இது.


1) கண்காணிப்பு சமூகத்தை எப்படி முதலீட்டியம் உண்டு பண்ணுகிறது, எப்படி நமது தன்னிலையை ஒரு பண்டமாகவும், வாழ்க்கையை ஒரு போட்டியாகவும் அது உருமாற்றுகிறது என்பதை கவனிப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வமுண்டு. அது இந்த இணைய தொடர் என்னை ஈர்க்க ஒரு காரணம்.


2) அடுத்து, மிக அதிகமான தேய்வழக்குகளை தயக்கமின்றி பயன்படுத்துகிற தொடர் இது. அதே நேரம், காட்சிகளை பரபரப்பாக வேகமாக கொண்டு செல்லும் இதன் நேர்த்தியான திரைக்கதையையும் பாராட்ட வேண்டும். 


3) பெரும்பாலான காட்சிகள் கனமற்றவை, ஆனால் நன்றாக எடிட் செய்து ஒரு பதற்றத்தில் நம்மை வைக்கிறார்கள். உ.தா., போட்டி பங்கேற்பாளரான ஒரு நாற்பது வயதுப் பெண் கழிப்பறைக்கு சென்று தன் புழைக்குள் கையை விட்டு எதையோ சிரமப்பட்டு எடுக்கிறார். ஏதோ என்னமோ ஒருவேளை சின்ன சைஸ் துப்பாக்கியோ என நாம் இருக்கை நுனிக்கு வரும் போது பார்த்தால் சிகரெட் பாக்கெட். அநாயசமாக ஒரு சிகரெட்டை உருவி சாவதானமாக புகைக்கிறார். அடுத்து அங்கு கழிப்பறைக்குள் வந்து ஒரு இளம்பெண்ணான பங்கேற்பாளர் வந்து கூரையை உடைத்து மேலே ஏறுகிறார். மேலே ஏதோ நடக்கிறது, அந்த உண்மையை கண்டுபிடிக்கப் போகிறேன் என்கிறார். இந்த அம்மா தோளில் ஏறி நின்று மேலே செல்லுகிறார். அப்படி போராடி அவர் ஒரு சாதாரண விசயத்தை கண்டுபிடிக்கிறார். பெரிய குண்டான்களில் சர்க்கரைப் பாகை காய்ச்சுகிறார்கள். ஏன் எதற்கு, இதற்கும் அடுத்த நாள் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த பெண் கீழே இறங்கி பாதுகாப்பாக மீளும் வரை நமக்கு பக்குபக்கென இருக்கிறது. இப்படித்தான் ஒன்றுமில்லாத விசயத்தை வைத்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். இந்த தொடரில் சீக்வென்ஸ்கள் நிறைய இப்படி குட்டிக்குட்டியான கனமற்ற திகில் காட்சிகள் உள்ளன. முதல் முறை பார்க்க செமையாக இருக்கும்.


4) தேய்வழக்கான சங்கதிகள் அதிகம் என்றாலும் உள்ளீடாக (Shawshank Redemptionஇக் போல) ஒரு இருத்தலிய சரடு ஓடுகிறது. அது இத்தொடருக்கு ஒரு விழுமியத்தை, “ஆழத்தை” அளிக்கிறது.


5) இந்த தொடரில் நல்லவன் என யாருமே இல்லை. நாயகனிடம் அவன் தவறு செய்யும் போதும் ஒரு சின்ன தத்ததளிப்பு இருக்கிறது. அது அவனை களங்கமற்றவனாக காட்டுகிறது. இதை வைத்து ஒரு எதிர்-நாயக பாத்திரமாக ஆகாமல் அவனை நாயகனாக மாற்றி இருக்கிறார்கள் - அதற்கென்றே சில பல காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். நூலில் நடப்பது போன்ற காரியம் இது. ஜெயித்திருக்கிறார்கள். விளையாட்டுகளில் தன் பாதுகாப்புக்காக மற்றவரைக் கொன்றே நாயகன் கடைசி வரை நீடிக்க முடியும், வெல்ல முடியும். ஆனால் அப்படி அவன் சாதிக்கும் போது நமக்கு அவனிடத்து வெறுப்பு வராதபடி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது “புதுப்பேட்டை” உலகத்தினுள் “வேலையில்லா பட்டதாரி” தனுஷை நுழைத்தது போன்ற ஒரு திரைக்கதை இது.


6) இதில் ஒரு துப்பறிவாளர் வருகிறார். காணாமல் போன தன்னுடைய சகோதரனைத் தேடி விளையாட்டு நடக்கும் தீவுக்கு வருகிறார். அந்த பகுதி முழுக்க திராபையாக உள்ளது. Frontman எனப்படும் வில்லன் அவருடைய சகோதரன் என மொக்கையான திருப்பம் வேறு. இந்த துப்பறிவாளரை தீவுக்கு வெளியே விசாரிக்க செய்து இந்த விளையாட்டுகளை நடத்தும் கும்பலை அம்பலபடுத்த முயல்வதாக இருந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக கதை அமைந்திருக்கும்.


7) இத்தொடரின் கிளைமேக்ஸின் திருப்பங்கள் இன்னும் மொக்கையானவை. திரைக்கதையை எழுதும் போது நூற்றுக்கு மேல் பங்கேற்பாளர்கள் கரணம் தப்பினால் மரணம் விளையாட்டுகள் நடக்கும் தீவுக்கு அனுப்பப்பட்டால் என்னவாகும் எனும் ஒற்றைக் கேள்வியை வைத்து களமிறங்கி விட்டார்கள். அதன் பிறகு விளையாட்டுக்கு வெளியே பெரிய நெருக்கடிகளை உருவாக்க இயக்குநர் Hwang Dong-hyukக்குக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். முக்கியமாக நாயகனின் பிரதான விழைவை, ஆன்மீக நெருக்கடியை கதையின் துவக்கத்தில் நிறுவவில்லை. அதனாலே விளையாட்டுகளில் நாயகன் பெரும் தொகையை ஜெயித்த பின் பொருத்தமான கிளைமேக்ஸை உருவாக்கவும் தெரியாமல் சொதப்பி விட்டார்.


8. இத்தொடர் ஆரம்பிக்கும் போதே நாயகனே ஜெயிக்கப் போகிறான் எனத் தெரிகிறது. அப்படியே நடக்கிறது என்பதால் பெரிய திகைப்பு காட்சிகளின் முடிவில் இல்லை. இதுவே நமது “புதுப்பேட்டையில்” என்றால் பல இடங்களில் தனுஷ் எதிலாவது மாட்டிக்கொள்ளும் போது பிழைக்கவே வாய்ப்பில்லை எனத் தோன்றும். அங்கிருந்து அவர் எதையோ ஒன்றை பறிகொடுத்து உயிரையும் கூடுதல் அதிகாரத்தையும் பெறுவதை செல்வராகவனும் பாலகுமாரனும் நன்றாக சித்தரித்திருப்பார்கள். அப்படியான கச்சிதமான சவால்-வீழ்ச்சி-மீட்சி எனும் காட்சி அமைப்புகள் இத்தொடரில் இல்லை. கொஞ்சம் முயன்றால் தமிழர்களாலும் தெலுங்கர்களாலும் கொரியர்களை விஞ்ச முடியும் என எனக்கு இத்தொடரை பார்க்கும் போது தோன்றியது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...