Skip to main content

Squid Gamesஉம் புதுப்பேட்டையும்




Squid Games இணைய தொடரை இன்று தான் பார்த்து முடித்தேன் - நான் தொடர்ச்சியாக பார்த்த இரண்டாவது தொடர் இது.


1) கண்காணிப்பு சமூகத்தை எப்படி முதலீட்டியம் உண்டு பண்ணுகிறது, எப்படி நமது தன்னிலையை ஒரு பண்டமாகவும், வாழ்க்கையை ஒரு போட்டியாகவும் அது உருமாற்றுகிறது என்பதை கவனிப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வமுண்டு. அது இந்த இணைய தொடர் என்னை ஈர்க்க ஒரு காரணம்.


2) அடுத்து, மிக அதிகமான தேய்வழக்குகளை தயக்கமின்றி பயன்படுத்துகிற தொடர் இது. அதே நேரம், காட்சிகளை பரபரப்பாக வேகமாக கொண்டு செல்லும் இதன் நேர்த்தியான திரைக்கதையையும் பாராட்ட வேண்டும். 


3) பெரும்பாலான காட்சிகள் கனமற்றவை, ஆனால் நன்றாக எடிட் செய்து ஒரு பதற்றத்தில் நம்மை வைக்கிறார்கள். உ.தா., போட்டி பங்கேற்பாளரான ஒரு நாற்பது வயதுப் பெண் கழிப்பறைக்கு சென்று தன் புழைக்குள் கையை விட்டு எதையோ சிரமப்பட்டு எடுக்கிறார். ஏதோ என்னமோ ஒருவேளை சின்ன சைஸ் துப்பாக்கியோ என நாம் இருக்கை நுனிக்கு வரும் போது பார்த்தால் சிகரெட் பாக்கெட். அநாயசமாக ஒரு சிகரெட்டை உருவி சாவதானமாக புகைக்கிறார். அடுத்து அங்கு கழிப்பறைக்குள் வந்து ஒரு இளம்பெண்ணான பங்கேற்பாளர் வந்து கூரையை உடைத்து மேலே ஏறுகிறார். மேலே ஏதோ நடக்கிறது, அந்த உண்மையை கண்டுபிடிக்கப் போகிறேன் என்கிறார். இந்த அம்மா தோளில் ஏறி நின்று மேலே செல்லுகிறார். அப்படி போராடி அவர் ஒரு சாதாரண விசயத்தை கண்டுபிடிக்கிறார். பெரிய குண்டான்களில் சர்க்கரைப் பாகை காய்ச்சுகிறார்கள். ஏன் எதற்கு, இதற்கும் அடுத்த நாள் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த பெண் கீழே இறங்கி பாதுகாப்பாக மீளும் வரை நமக்கு பக்குபக்கென இருக்கிறது. இப்படித்தான் ஒன்றுமில்லாத விசயத்தை வைத்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். இந்த தொடரில் சீக்வென்ஸ்கள் நிறைய இப்படி குட்டிக்குட்டியான கனமற்ற திகில் காட்சிகள் உள்ளன. முதல் முறை பார்க்க செமையாக இருக்கும்.


4) தேய்வழக்கான சங்கதிகள் அதிகம் என்றாலும் உள்ளீடாக (Shawshank Redemptionஇக் போல) ஒரு இருத்தலிய சரடு ஓடுகிறது. அது இத்தொடருக்கு ஒரு விழுமியத்தை, “ஆழத்தை” அளிக்கிறது.


5) இந்த தொடரில் நல்லவன் என யாருமே இல்லை. நாயகனிடம் அவன் தவறு செய்யும் போதும் ஒரு சின்ன தத்ததளிப்பு இருக்கிறது. அது அவனை களங்கமற்றவனாக காட்டுகிறது. இதை வைத்து ஒரு எதிர்-நாயக பாத்திரமாக ஆகாமல் அவனை நாயகனாக மாற்றி இருக்கிறார்கள் - அதற்கென்றே சில பல காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். நூலில் நடப்பது போன்ற காரியம் இது. ஜெயித்திருக்கிறார்கள். விளையாட்டுகளில் தன் பாதுகாப்புக்காக மற்றவரைக் கொன்றே நாயகன் கடைசி வரை நீடிக்க முடியும், வெல்ல முடியும். ஆனால் அப்படி அவன் சாதிக்கும் போது நமக்கு அவனிடத்து வெறுப்பு வராதபடி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது “புதுப்பேட்டை” உலகத்தினுள் “வேலையில்லா பட்டதாரி” தனுஷை நுழைத்தது போன்ற ஒரு திரைக்கதை இது.


6) இதில் ஒரு துப்பறிவாளர் வருகிறார். காணாமல் போன தன்னுடைய சகோதரனைத் தேடி விளையாட்டு நடக்கும் தீவுக்கு வருகிறார். அந்த பகுதி முழுக்க திராபையாக உள்ளது. Frontman எனப்படும் வில்லன் அவருடைய சகோதரன் என மொக்கையான திருப்பம் வேறு. இந்த துப்பறிவாளரை தீவுக்கு வெளியே விசாரிக்க செய்து இந்த விளையாட்டுகளை நடத்தும் கும்பலை அம்பலபடுத்த முயல்வதாக இருந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக கதை அமைந்திருக்கும்.


7) இத்தொடரின் கிளைமேக்ஸின் திருப்பங்கள் இன்னும் மொக்கையானவை. திரைக்கதையை எழுதும் போது நூற்றுக்கு மேல் பங்கேற்பாளர்கள் கரணம் தப்பினால் மரணம் விளையாட்டுகள் நடக்கும் தீவுக்கு அனுப்பப்பட்டால் என்னவாகும் எனும் ஒற்றைக் கேள்வியை வைத்து களமிறங்கி விட்டார்கள். அதன் பிறகு விளையாட்டுக்கு வெளியே பெரிய நெருக்கடிகளை உருவாக்க இயக்குநர் Hwang Dong-hyukக்குக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். முக்கியமாக நாயகனின் பிரதான விழைவை, ஆன்மீக நெருக்கடியை கதையின் துவக்கத்தில் நிறுவவில்லை. அதனாலே விளையாட்டுகளில் நாயகன் பெரும் தொகையை ஜெயித்த பின் பொருத்தமான கிளைமேக்ஸை உருவாக்கவும் தெரியாமல் சொதப்பி விட்டார்.


8. இத்தொடர் ஆரம்பிக்கும் போதே நாயகனே ஜெயிக்கப் போகிறான் எனத் தெரிகிறது. அப்படியே நடக்கிறது என்பதால் பெரிய திகைப்பு காட்சிகளின் முடிவில் இல்லை. இதுவே நமது “புதுப்பேட்டையில்” என்றால் பல இடங்களில் தனுஷ் எதிலாவது மாட்டிக்கொள்ளும் போது பிழைக்கவே வாய்ப்பில்லை எனத் தோன்றும். அங்கிருந்து அவர் எதையோ ஒன்றை பறிகொடுத்து உயிரையும் கூடுதல் அதிகாரத்தையும் பெறுவதை செல்வராகவனும் பாலகுமாரனும் நன்றாக சித்தரித்திருப்பார்கள். அப்படியான கச்சிதமான சவால்-வீழ்ச்சி-மீட்சி எனும் காட்சி அமைப்புகள் இத்தொடரில் இல்லை. கொஞ்சம் முயன்றால் தமிழர்களாலும் தெலுங்கர்களாலும் கொரியர்களை விஞ்ச முடியும் என எனக்கு இத்தொடரை பார்க்கும் போது தோன்றியது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...