பாரதி மணி அவர்களை சென்னையில் சிலமுறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் எனக்கு “பொன்னியின் செல்வனில்” வரும் ஆழ்வார்க்கடியானை நினைவுபடுத்துவார். அவரைப் பற்றி பொதுவில் உள்ள, எழுத்தின் வழி உருவாகிற சித்திரங்களுடன் முரண்படாதபடி நாம் சந்திக்கும் போதும் தோன்றுவார். எப்படி கல்கி ஆழ்வார்க்கடியானை மாறாத இயல்பு கொண்ட ஒரு பாத்திரமாக தொடர்ந்து தக்க வைத்தாரோ, அப்படியே பாட்டையாவும் நம்மிடையே தோன்றினார்.
நுரைத்துப் பொங்கும் பியரைப் போல் ஒரு சிரிப்பு, பிரவாகிக்கும் உற்சாக அருவி, அதே நுட்பமான கிண்டல், நாடக மேடையில் குறைவான ஒளியில் மையத்தில் உயரமான நாற்காலியில் கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் பாத்திரத்தைப் போல ஒரு தோரணை, ஒரு துணிச்சல், ஸ்டைல்.
நான் பெங்களூருக்கு வந்த பிறகு வாசக சாலை கூட்டங்களில் அவரை சந்தித்ததுண்டு. அவருடைய வீடு கூட சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே இருந்தது. 'ஒருநாள் சாப்பிட வாங்க' என்று கூட அழைத்தார். ஆனால் நான் பெங்களூர் வந்த பிறகு யாரையும் சந்திக்க மனமில்லாமல், ஒரு அவநம்பிக்கையான மனநிலையில் இருப்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வந்து இத்தனை வருடங்களில் தமிழவனையோ வேறு நண்பர்களையோ சென்று சந்திக்கவில்லை. தவறு தான். ஆனால் என்ன செய்ய? எப்போதெல்லாம் பாட்டையாவின் புத்தகங்களைப் பார்க்கிறேனோ அவரைப் பற்றி நினைக்கிறேனோ என்ன இப்படி பக்கத்தில் இருந்து ஒரு எட்டு போய் பார்த்து வராமல் இருக்கிறேனே என குற்றவுணர்வு எட்டிப் பார்க்கும். பிறகு இருட்டு மீண்டும் என் மனத்தை மூடிடும். எண்ணங்கள் சிதறும். இப்படி போய்க் கொண்டிருக்கும் போது அவர், எதிர்பாராமல் யாரோ நம் முகத்துக்கு எதிராக கதவை மூடியதைப் போல, மேடையின் திரையை மூட சொல்லி விட்டு போய் விட்டார்.
அவரை கடைசியாக இங்கு வாசக சாலை கூட்டத்தில் சந்தித்த போது இளைஞர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் உற்சாகத்தில் திளைத்திருந்தார். அவர் வயது ஆட்களிடம் உள்ள அதே பேச்சார்வம், அதன் பின்னால் ஒரு தனிமை! அந்த ஜாலியான பந்தாவான தோற்றத்திற்குப் பின்னே, அவருக்கு தன்னுடன் வம்பளக்கிற, சிரித்து அகம் மலர்கிற நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் நிறைய பேர் சுற்றி இருக்க வேண்டும் எனும் ஏக்கம் இருந்தது என நினைக்கிறேன். அவருடைய சிறப்பு இப்படி யோசிக்கவே விடாதபடி தன்னை வேறுவிதமாக - துக்கமே அற்ற, ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற ஒருவராக - நம் மனங்களில் தக்க வைத்துக் கொண்டார் என்பதே. இதை எழுதும் போதும் அவர் பின்னால் இருந்து கனிவான புன்னகையுடன் கூர்மையாக பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது.
ஆழ்ந்த இரங்கல்!
Comments