Skip to main content

மரணமும் குடும்பம் எனும் அபத்தமும்



மரணம் பல அபத்தங்களை அம்பலப்படுத்தக் கூடியது, படிப்பினைகளை தரக் கூடியது. எனக்குத் தெரிந்த ஒரு மத்திய வயதுப் பெண். தனியாக போராடி தன் மகளை படிக்க வைத்து அவளது திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். நகைகள் வாங்கி, மகளுடன் இரவுணவு அருந்தி விட்டு தூங்கியவர் காலையில் மாரடைப்பு வந்து மரணமடைகிறார். இத்தனை வருடங்களும் தன் மகளுக்காக வாழ்ந்ததற்கான பொருள் என்ன என இதைக் கேள்விப்பட்டதும் யோசித்தேன். 


இன்னொரு பக்கம், மிக அதிகமான துயரங்களை நமக்குத் தருவதும் நெருக்கமான உறவுகளும் குடும்பமுமே. நமக்கு அதே நேரம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதும் இவர்களே. எனில் இதன் பொருள் என்ன? மகிழ்ச்சியை தரும் ஒன்று எப்படி துன்பத்தையும் தர முடியும்? நெருப்பு ஒரு நொடி சுடும், மறுநொடி குளிரும் என்றிருப்பதுண்டா? 


நம் சமூகத்தில் பெரும்பாலானோரின் உலகம் குடும்பம், உறவுகள் என்பதைத் தாண்டி சுழல்வதில்லை. வேலை, குடும்பம், சிறிது பொழுதுபோக்கு என்றே முடிந்து விடுகிறது வாழ்க்கை. ஆனால் இதற்குள் இருந்தே அவர்களுடைய பெரும்பகுதி ஏமாற்றங்களும் கசப்பும் ஏற்படுகின்றன. ஆனால் நிறைய பணமும் அதிகாரமும் இல்லாத பட்சத்தில் அவர்களுடைய பங்களிப்புக்கு, அர்ப்பணிப்புக்கு, தியாகத்துக்கு நிரந்தரமான ஒரு அங்கீகாரம். பலன் கிடைக்கப் போவதில்லை. ஒரு ஸ்விக்கி டெலிவரி பாயைப் போலத் தான் நம் குடும்பம் அவர்களை நடத்துகிறது. நேரத்துக்கு பொருள் கிடைக்காவிட்டால் திட்டும், கிடைத்தால் சில நேரம் டிப்ஸ் கொடுக்கும். அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், மாமா என எந்த உறவுக்கும் அவ்வளவு தான் முக்கியத்துவம் - குடும்பத்துக்குள்ளும் காலத்திலும். பாதி கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது “நீ புடுங்கினது போதும்” என மரியாதையில்லாமல் காலமே தலையில் தட்டி அனுப்பி விடுகிறது. 

அதுவரை நம்மை நம்பியிருந்தவர்கள் சில வாரங்கள் அழுவார்கள், அடுத்து தத்தம் வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கைப் பங்களிப்பும் ஒரு நொடியில் மறைந்து விடுகிறது. ஒரு படத்தில் நீங்கள் சிரமப்பட்டு நடித்த 20 நிமிடங்களை மொத்தமாக எடிட் செய்து இயக்குநர் தூக்கி விட்டு கிரெடிட்ஸிலும் உங்கள் பெயரை இடாதது போல. 

மனிதர்கள் எவ்வளவு சுயநலமும் குரூரமும் மிக்கவர்கள் என்பதை நான் மரணங்களின் போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஒரு உடல் நலிவுற்ற வயதான அம்மாவை பார்த்துக் கொள்ள விருப்பமில்லாமல் “குளிப்பாட்டி” கொன்று விடுகிறார்கள். ஆனால் அதன் பிறகு உண்மையை அறிந்த, அவர் உயிருடன் இருந்த போது அநியாயத்துக்கு பாசம் காட்டிய, அவரது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ கோபம் கொள்ளாமல் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து விடுகிறார்கள். இதுவே தம் சொந்த குழந்தைக்கு மருத்துவமனை தவறாக சிகிச்சை அளித்து கொன்றதாக தெரிந்தால் கூலாக எடுத்துக் கொள்வார்களா? மாடடார்கள். 


ரொம்ப சிரமப்பட்டு வளர்த்த பெற்றோர்களை வளர்ந்து வேலை கிடைத்ததும் அந்நியர்களைப் போல நடத்தும் பிள்ளைகளை நிறைய பேரை கண்டிருக்கிறேன். அதே நேரம் அம்பானிகளுக்கு, ஷாருக்கான்களுக்கு இப்பிரச்சனை ஒரு போதும் வராது. இறுதி வரை அவர்களுடைய பிள்ளைகள் மரியாதையும் அன்பும் காட்டத் தவற மாட்டார்கள். எனில் பணத்தைத் தாண்டி எந்த உணர்வுக்கும் நீடித்த மதிப்பில்லையா? எனில் எதற்காக இவ்வளவு போராட்டம்?


நான் சாருவிடம் பேசிய சில சந்தர்பங்களில் அவர் என்னிடம் மறைமுகமாக இதையே உணர்த்த முயன்றிருக்கிறார். உறவுகளின் திருப்திக்காக, மகிழ்ச்சிக்காக நேரத்தை செலவிடுவது ஒரு அபத்தம் என்று. இந்த உலகில் எது நடந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே நீடித்திருக்கிறான், அவன் தனக்குத் தேவையானதை நாடி அடைவதே முக்கியம், அதில் இருந்து அவனுடைய கவனத்தைத் திருப்பவே இந்த அமைப்பும், அதை ஒட்டிய செண்டிமெண்டுகளும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன என. சாரு சொன்னதன் முழுமையான பொருள் எனக்கு மேற்சொன்ன மத்திய வயதுப் பெண்ணின் மரணத்துடன் தான் புரிந்தது. கூடவே அண்மையில் எனக்கு கிடைத்த சில அனுபவங்களும் உதவின.


இது இப்படி என்றால், ஒரு எழுத்தாளனாக என்னுடைய பங்களிப்பு இந்த நொடி நான் இறந்தாலும் அப்படியே காணாமல் போய் விடுமென நான் நம்பவில்லை. அது மட்டுமல்ல, என்னுடைய எந்த வாசகரும் எனக்கு ஒரு துளி கூட வருத்ததை, கசப்பை தந்ததில்லை. அவர்களுடைய அன்பு என்றும் மாறாததாக இருக்கிறது. நம்முடைய வளர்ப்புப் பிராணிகளும் அப்படியே இருக்கின்றன - நாம் கொடுக்கும் ஒரு நொடி அன்புக்கு பல மணிநேர பிரியத்தை அள்ளித் தருகின்றன. நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் நம்மை பழிவாங்க அவை திட்டமிடுவதில்லை. ஆனால் நம்முடைய பக்கத்து வீட்டார் கூட நம்மைப் பற்றி சரிவர புரிந்து கொள்ளாமல் வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள். நாம் யாரென்று அறியாத அந்நியரிடம் கூட நன்மதிப்பைப் பெற கடுமையாகப் போராட வேண்டி உள்ளது. அப்படிப் பெறும் நன்மதிப்பை கூட ஒரு நொடியில் மறைந்து போய் விடக் கூடியதே. காரணம் இந்த அண்டை வீட்டாரும் அந்நியரும் நாமும் ஒரே வெளியை பகிர்கிறோம் என்பது. இது இவ்வுறவை ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்ப உறவாக்குகிறது.


 நான் மட்டுமல்ல சமூகத்துக்கு, மொழிக்கு, பண்பாட்டுக்கு பயனளிக்கும் பணியில் ஊதியம் இன்றி ஈடுபடுகிறவர்கள் என்றுமே முக்கியமானவர்களாக இருப்பார்கள். கால்டுவெல்லைப் பற்றி நாம் இன்றைக்கும் நினைக்கவில்லையா? அயோத்திதாசரை அவருடைய குடும்பத்தினரை விட அதிக அக்கறையையுடன் கருதி வாசித்து வரும் வாசகர்கள் இல்லையா? பெரியாரின், அம்பேத்கரின், தகாதகதரின் சொற்கள் இன்றும் நம்முடன் இல்லையா? வள்ளுவருக்கு, இளங்கோ அடிகளுக்கு, ஒரே ஒரு அகத்திணை, புறத்திணை பாடல் எழுதிய கவிக்கும் இது பொருந்தும். எம்.ஜி.ஆரும், ரஜினியும் கூட ஒரு காலகட்டத்துக்குப் பிறகு மறக்கப்படுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பமும் உறவினர்களும் அவர்களை நினைவில் வைத்திருந்ததை விட அதிக காலம், அதிக பாசத்துடன் அவர்களுடைய ரசிகர்கள் அவர்களை நினைவிற் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலம் முழுக்க தம் குடும்பத்தையும், உறவுகளையுமே ரசிகர்களை விட அதிக முக்கியமாக நினைத்து கூடுதல் நேரமும் உழைப்பு அவர்களுக்காக செலவிட்டிருப்பார்கள். 


ஆனால் சமூகம் தன்னுடைய சுயநலத்துக்காக நம்மை அபத்தமான ஒன்றுக்காகவே மொத்த வாழ்வையும் அர்ப்பணிக்க வைக்கிறது என்பதே அவலம். நமக்கும் வேறு வழி இருப்பதில்லை. குடும்பத்துக்கு வெளியே நின்று சிந்திக்கும் வக்கற்றவர்களாகவே இந்த சமூகம் நம்மை மாற்றி வைத்திருக்கிறது. ஒருவேளை துறவில் இதற்கு ஒரு தீர்வு இருந்திருக்கலாம். ஆனால் இந்திய சமூகத்தில் பகவத் கீதை தோன்றிய, பக்தி இயக்கம் செழித்த காலகட்டங்களுடன் துறவுக்கான முக்கியத்துவம் ஒழித்துக் கட்டப்பட்ட, குடும்பஸ்தனே உன்னதமான அடையாளம் என்பது நிறுவப்பட்டு விட்டது. அதே நேரம் துறவு என்பதற்கு முன்பிருந்த பொருள் இன்றில்லை.


 துறவறத்தின் நடைமுறை, நோக்கம் முழுக்க மாறி விட்டது. இன்று துறவறம் ஆசிரம அமைப்பினுள் மட்டுமே சாத்தியம். அதற்குள் குடும்பத்தை விட கராறான எந்திரத்தன்மை வந்து விட்டது. இன்னொரு பக்கம் கறுப்புப்பணமும், கார்ப்பரேட் மனப்பான்மையும் துறவு வாழ்க்கையை குடும்ப வாழ்க்கைக்கு இணையானதாக மாற்றி விட்டன. இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் முற்றிலும் வேறொரு பார்வையை அளித்தார். அவருடைய கருத்துப்படி துறவிகளாக செல்பவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை எந்திரத்தனமான அன்றாட உலகின் அலுப்பும், அங்கு அவர்கள் உணரும் மிகப்பெரிய தனிமையும். இளமையில் ஓரளவுக்கு குடும்பத்துடன் அவர்களுக்கு ஒரு தொடர்பு இருக்கும். தனிமையை எதிர்கொள்வதற்கான உடல் திராணியும் இருக்கும். ஆனால் வயதாக ஆக அவர்கள் தம் குடும்பத்துடன் இருந்து துண்டிக்கப்பட்டு விடுவார்கள். அவர்களால் அப்போது தனிமையின் உக்கிரத்தை தாங்கவொண்ணாமல் போகும். “நம்மை விட அதிகத் தனியாக அவர்கள் இருக்கிறார்கள். அதை நினைவு கொள்வதைத் தவிர்க்கவே இவ்வளவு ஆவேசமாக மதச்சடங்குகளில், அதிகார போட்டியில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.


நம் சமூகம் ஒட்டுமொத்தமாக குடும்பத்துக்கு மாற்றான ஒரு வாழ்க்கை முறையை சிந்தித்து கண்டுபிடிக்காத வரையில் நாம் இந்த அபத்தத்துக்குள் மாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...