Skip to main content

ஏன் வாசிக்கவேண்டும்? ஆர். அபிலாஷ் – புத்தகம் - ஒரு பார்வை

 From Muniasamy Ramakrishnan 

”கால்கள்” நாவலுக்காக யுவபுரஸ்கார் விருது பெற்றவர்.  ஆங்கில பேராசிரியராக பணிபுரியும் எழுத்தாளர் அபிலாஷ் கடந்த பத்தாண்டுகளில் வெவ்வெறு சூழலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.


கடந்த சில ஆண்டுகளாக காட்சி படிமங்களின் ஆதிக்கம் வந்த பிறகு, பொதுவாக படிப்பதை விட பார்ப்பது என்பதாக நிலைமை மாறிவிட்டது, பெரும்பாலான இளைய தலைமுறைக்கு படிப்பது என்பது பாடத்திட்டம் தவிர்த்து வேறு எதையும் படிப்பது என்பது மிக மிக குறைந்துவிட்டது. 


நானெல்லாம் படிப்பு தவிர பொதுவாக படிப்பது என்பது நான்காவது வகுப்பிலேயே துவங்கிவிட்டேன். தேநீர் வாங்க கடைக்கு போகும் பொழுது, அங்கு தினத்தந்தியில் சிந்துபாத் கதை படிக்க துவங்கி, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி திரும்பும் வழியில் ஒரு கடையில் வாடகைக்கு புத்தகம் தருவார்கள். அப்பொழுது 25 பைசா வாங்குவார்கள். அங்கு தான் அம்புலிமாமா, பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் என படிக்க துவங்கினேன். பிறகு ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாக இராஜேஷ்குமார் நாவல் படிக்க துவங்கி, பட்டுக்கோட்டை, சுபா, சுஜாதா, பாலகுமாரன் என படிக்க துவங்கி…. நண்பர்களின் தொடர்பால் கணேசலிங்கன், மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் என துவங்கிவிட்டேன். 


என்னைப் போலவே அல்லாமல், அவர்களது சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்களோடு பொதுவாக வாசிப்பதை பலரும் துவங்கியிருப்பார்கள். இப்பொழுது அப்படி ஒரு பழக்கம் குழந்தைகளிடம் மிக மிக கவனம் கொடுத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும். முடியாமலும் போகலாம்.  என் பொண்ணுக்கு படிப்பதை மிகுந்த கவனம் கொடுத்தோம் என சொல்லமுடியாது.  ஆனால் எங்களால் இயன்ற அளவு முயன்றோம். பழக்கப்படுத்த முடியவில்லை. ஆனால், உலகப் படங்களை குறிப்பிட்ட வயதில் இருந்தே எங்களுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.  


ஆக, சமகாலத்தில் ஏன் வாசிக்கவேண்டும்? என்பது பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.  இந்த சமயத்தில் இந்தப்  புத்தகம் அதற்கு துணை செய்கிறது. 


வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியம்?  வாசித்தால் என்ன கிடைக்கும்? வாசிப்பு குறைந்துள்ளதா?  ஆங்கிலத்தில் வாசிப்பது, தத்துவ வாசிப்பை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது? உளவியல் நூல்களை எங்கிருந்து எப்படி வாசிப்பது? என மொத்தம் 22 தலைப்புகளில் விரிவாக விவாதித்துள்ளார்.


எனக்கு பலருடைய பரிந்துரை பட்டியல் எப்பொழுதும் பொருந்தியதில்லை. அதில் ஆசிரியரும் உடன்படுகிறார்.  அதை சொல்லும் பொழுது, “புத்தக தேர்வு என்பது நண்பனை, காதலியை தேர்வு செய்வதைப் போன்றது” என்கிறார். உண்மை தான்.


எனது இணையரும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்.  இரண்டு பேரும் சேர்ந்து புத்தகம் வாங்கினாலும், எனக்கான ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! அவருடைய ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! எனக்கான புத்தகங்களை குறித்துவைத்துக்கொண்டு வாங்கிவிடுவேன். அவருக்கென சிறப்பு தேர்வுகள் பல சமயங்களில் இருந்ததில்லை.   வீட்டில் புத்தகங்களுக்காக ஒரு பீரோ இருக்கிறது.  ஒருநாள் திடீரென வந்து “பெரும்பாலான புத்தகங்கள் உங்களுக்கானதாக இருக்கின்றன. என் டேஸ்டுக்கு எதுவும் இல்லை” என அலுத்துக்கொண்டார்.


பாத்ரூமில் புத்தகம் வாசிக்கும் உங்களுக்கு பழக்கம் உண்டா? எனக்கு இருக்கிறது.  “பாத்ரூம் வாசிப்புக்கு உகந்து வராத புத்தகங்கள் இலக்கியத் தகுதியற்றவை” என்கிறாராம் அமெரிக்க நாவலாசிரியர் ஹென்ரி மில்லர்.


படிக்காமல் டிஜிட்டல் உலகில் நம் நேரத்தை தொலைக்கிறோமோ? இல்லை என்கிறார் ஆசிரியர்.  அந்த நேரம் என்பது நண்பர்களுடன் சுற்றுவதற்கு, கதையளப்பதற்கு, தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு, சொந்தங்களின் வீட்டு சடங்குகளுக்கு போன நேரம் என்கிறார்.  அந்த நேரத்தை எல்லாம் அபகரித்துவிட்டதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்? பேஸ்புக்கால் வாசிக்க அல்ல, “வாழத்”தான் நேரமில்லாமல் போகிறது!” என்கிறார்.


இப்படி பல விசயங்களை போகிற போக்கில் சொல்லி சொல்கிறார்.  மற்றபடி, ஏன் வாசிக்கவேண்டும்? என்கிற கேள்விக்கு ஆசிரியர் வேறு வேறு பதில் சொன்னாலும் பொதுவாழ்வில் ஈடுபடுபவருக்கு கீழே உள்ள பதில் பொருத்தமாக இருக்கிறது. 


”கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!


ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.


கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.


நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”.  பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.


பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.


நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.


நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும்”


- தோழர் மருதையன்.


(ஒரு நீண்ட கட்டுரையிலிருந்து அங்காங்கே வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன்.  உங்களுக்கு அந்த நீண்ட கட்டுரையின் சுட்டியை பின்னூட்டத்தில் தருகிறேன்.)


மற்றபடி, அபிலாஷ் அவர்களுடைய எழுத்து விரைந்து வாசிக்கும் அளவிற்கு இருக்கிறது. தொடர்ச்சியாக முகநூலில் புழங்குவதால், வெகுஜனத்திற்கு புரியும்படி எழுதுகிறார். ஆகையால், நான்கு நாட்களில் 75%க்கும் மேலாக முடித்துவிட்டேன்.  கொஞ்சம் இடைவெளி விட்டு, மீதி 25% முடித்துவிட்டேன். 


வாசிக்க வேண்டிய புத்தகம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...