இதைக் கேட்க வினோதமாக இருக்கும் - தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய புனிதப்பசு காந்தி தான்.
பெரியாரின் குடியரசு பத்திரிகை கட்டுரைகளின் தொகுப்பை படிக்கையில் அவர் எத்தனை இடங்களில் காந்தியை விமர்சித்திருக்கிறார் என ஒரு பட்டியல் எடுத்தேன். 13 கட்டுரைகளில் பெரியார் காந்தியை கடுமையாக விமர்சிக்கிறார். மிக முக்கியமான கருத்துக்கள் அவை. ஆங்கிலத்தில் அம்பேத்கர் காந்தியை பற்றி எழுதிய விமர்சனங்களுடன் பொருந்திப் போகிறவை அவை. அது மட்டுமல்ல, அருந்ததி ராயின் “டாக்டரும் புனிதரும்” நீள்கட்டுரைக்கும் இணக்கமானவை பெரியாரின் காந்தி விமர்சனங்கள்.
ஆனால் பெரியாரால் எப்படி தமிழர்களின் வைதீக கடவுள் பக்தியை முழுக்க ஒழிக்க முடியவில்லையோ அப்படியே காந்தி பக்தியையும் அவரால் சீண்டக் கூட முடியவில்லை. ஏனென்றால் காந்தியை புனிதராக முன்னெடுத்து ஆங்கிலத்தில் பல லட்சம் பக்கங்களை எழுதி சினிமாக்கள் எடுத்து அவரை ஒரு நவீன ஏசுநாதராக கட்டமைத்து விட்டனர். தமிழில் எழுத்து இதழின் காலகட்டத்தில் இருந்தே ஏகப்பட்ட காந்தி பஜனை கட்டுரைகள், நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பஜனை மடத்தில் இருந்து தோன்றிய இலக்கிய மனங்களுக்கு காந்தி சொன்ன பல மதவாத, பிற்போக்கு கருத்துக்களை மேற்கோள் காட்டினாலே கோபம் வருகிறது. “டாக்டரும் புனிதரும்” கட்டுரை கூட தமிழில் மொழியாக்கம் பெற்று வந்திருக்கிறது. ஆனால் எந்த அறிவுஜீவியும் அதை படித்ததாக கூட காட்டிக் கொள்ள மாட்டார்கள். தமிழில் நீங்கள் எந்த சிறு, நடுநிலை, அச்சு, இணைய பத்திரிகையிலும் காந்தியை மிகச்சற்று விமர்சித்து அவருடைய எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டிக்கூட ஒரு கட்டுரையை வெளியிட முடியாது. ஆனால் நீங்கள் இங்கே கடவுளை கடுமையாக சாடி எழுதலாம், இங்கே நீங்கள் எந்த சிந்தனையாளரையும், தலைவரையும் விமர்சிக்கலாம், திராவிடத்தை, தமிழ் தேசியத்தை, வைணவத்தை, சைவத்தை விமர்சிக்கலாம். ஆனால் காந்தியை மட்டும் தீண்ட முடியாது. அவர் கடவுளுக்கு அப்பாலான கடவுளாக இங்கு கட்டமைந்திருக்கிறார்.
தமிழ் இலக்கிய சூழலில் முழுமையான கடவுள், மத, மரபு மறுப்பாளராக இருக்க முடியாமல், அதே நேரம் அவற்றில் ஈடுபடவும் முடியாமல் நடுவில் தொக்கி நிற்கிறவர்கள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு காந்தி தான் ஒரே புகலிடம். நடுங்கியபடி மழைக்கு ஒதுங்கி நிற்பவரை திரும்ப பிடித்து மழையிலே தள்ளியதைப் போல் ஆகிறது இவர்களுக்கு நாம் காந்தியை விமர்சித்தால்.
பாஜக முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும், காந்தியை விமர்சித்தால் அது காங்கிரஸின் வாய்ப்பை கெடுக்கும் என நம்புகிறவர்களும் உண்டு. அன்னா ஹசாரே காங்கிரஸுக்கு எதிராக செய்த சர்க்கஸை நினைத்து இன்றும் பொதுமக்களிடையே காந்திக்கு பெரும் மதிப்புண்டு என நினைக்கிறவர்கள் உண்டு. எனக்கு இந்தியா காந்தியை கடந்து மிக நீண்ட தூரம் வந்து விட்டது எனத் தோன்றுகிறது. நான் ஏராளமான மாணவர்களிடம் உரையாடுகிறேன், அவர்களிடையே ஒரு காந்தியவாதியை கூட நான் கண்டதில்லை. மாறாக காந்திய கருத்துக்களை வகுப்பில் விவாதித்தால் கண்டமேனிக்கு அவரை இன்றைய மாணவர்கள் திட்டுகிறார்கள். எனக்கே பாவமாக இருக்கிறது என்றால் பாருங்களேன். ஹிந்த் ஸ்வராஜில் உள்ள ஒரு கட்டுரையை நான், காந்திக்கு ஆதரவாக, வகுப்பில் விவாதித்தால் கூட மாணவர்கள் காந்திக்கு ரெண்டு குட்டு விடாமல் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மதிப்பீட்டின் படி காந்தி மிகவும் காலாவதியான ஒரு டினோசர். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த பெண்களை மொட்டை அடிக்க வைத்து பொதுவில் மன்னிப்பு கேட்க சொன்னதைப் பற்றி லூயிஸ் பிஷர் எழுதி இருக்கிறார் (Life of Gandhi). இதை இங்கே குறிப்பிட்டால் நம் இலக்கிய காந்தியவாதிகள் வந்து “தப்பு தான். ஆனால் அதை அவருடைய காலகட்டத்துக்கு நம்பிக்கைகளின் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டும்” என எல்லாவற்றுக்கும் ஒரு “ஆனால்” போட்டு உருட்டுவார்கள். ஒரு அம்மிக்குழவி கூட தமிழ் இலக்கிய காந்தியவாதிகள் அளவுக்கு உருளாது. “காந்தியை கொஞ்சம் நியாப்படுத்துங்க” என்று சொல்லி விட்டு ஒரு துண்டு தேங்காயும் புளியும் மிளகாயும் பக்கத்தில் வைத்து விட்டால் உருட்டுகிற உருட்டில் நைசாக சட்னியே அரைத்து கொடுத்து விடுவார்கள். ஆனால் இன்றைய இளம் மாணவிகள் இச்சம்பவத்தை எடுத்து காட்டினால் பழைய செருப்பை எடுத்து காட்டி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் காந்தி ஒரு புனிதப்பசு என பயப்படுவதே இல்லை. காந்திக்கு இன்று இந்தியாவில் இருக்கிற ஒரே செல்வாக்கு தமிழ் இலக்கியவாதிகளிடம் மட்டுமே.
எனக்கு இவர்களிடம் உள்ள ஒரே பிரச்சனை வேறு எல்லா விசயத்திலும் கரார்தன்மையை காட்டும், நிஜத்தை எதிர்பார்க்கும் நீங்கள் காந்தி விசயத்தில் மட்டும் ஏன் வேகவைத்த மரிச்சீனி கிழங்கைப் போல இப்படி குழைகிறீர்களே என்பது தான். இந்த மிகைப்படுத்தல், பக்தி, கண்ணீர் மல்கலை விட்டு விட்டு நிஜ காந்தியைப் பற்றி பேச மறுக்கிறார்கள் என்பதே. அண்மையில் போகனிடம் பேசும் போது தல்ஸ்தாயின் உண்மைப் பக்கத்தை, அவருடைய பல கீழ்மைகளைப் பற்றி பேசினால் தமிழில் பலர் புண்படுகிறார்கள், ஏனென்றால் தமிழில் அவரை அறிமுகப்படுத்தியவர்கள் மிகவும் புனிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் காந்தியின் குருநாதர் தான் தல்ஸ்தாய். சீடரை அம்பலப்படுத்தினாலே தாங்காதவர்கள் குருவைப் பற்றி பேசினால் மட்டும் பொறுப்பார்களா? தமிழ் இலக்கிய உலகம் இப்படி பல “தெய்வங்கள் வாழும் நிலமாக” இருக்கிறது.

Comments