ஆர்.அபிலாஷ் அவர்களின் அப்பாவின் புலிகள் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். புனைவிலும் புனைவின்மையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். பொதுவாக மனித மனத்தின் சௌகரியமான பாதைகளிலேயோ அல்லது அசௌகரியமான பாதைகளிலேயோ பயணிப்பர், அனைத்து பாதைகளிலும் நாம் நம்பும் கலாச்சார விழுமியங்களின் எதார்த்த நிலையை கண்முன் விரிய செய்கிறார். மனித மனதின் அத்தனை சிந்தனை போக்குகளையும் அவருடைய பாணியில் சென்று அவரின் தனித்துவமான, உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் தொட்டு அணுகுகிறார். அந்த விதத்தில் தமிழில் வெளிவந்த அனைத்து சிறுகதை தொகுப்புகளிலும் தனித்து நிற்கிறது என்பேன். குறிப்பாக நான் பிறந்து வளர்ந்த குமரி நிலத்தின் வாசனையை அனேக இடங்களில் முகர்ந்தேன். உதாரணமாக குன்னி முத்து, நடுதண்ணி முத்தம் போன்ற காட்சி படிமங்கள் . தெளிவான விவரணை, கதை சொல்லும் நேர்த்தி என முதல் பத்தியிலையே முழுவதுமாக வாசகனை வசீகரித்து உள்ளிழுத்து வெளிவரமுடியாதபடி செய்கிறார், கவித்துவ உவமைகளால் வர்ணனைகளில் வண்ணம் தீட்டிக்கொண்டே நகர்வது வாசகனுக்கு பல்வேறு கற்பனை எண்ணங்களுக்கு வித்திடுகிறது. புனைவில் சில படிமங்களை வாசகன் நெருங்குகையில் அது தன்னை உருமாற்றம் செய்கிறது. இலக்கிய தரத்திலிருந்து வெளிவராமலும் வெகுஜன ரசனைக்கு உட்பட்டும் இருப்பது தனித்துவம். முக்கியமாக எழுத்து பயில்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments