ஆர்.அபிலாஷ் அவர்களின் அப்பாவின் புலிகள் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். புனைவிலும் புனைவின்மையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். பொதுவாக மனித மனத்தின் சௌகரியமான பாதைகளிலேயோ அல்லது அசௌகரியமான பாதைகளிலேயோ பயணிப்பர், அனைத்து பாதைகளிலும் நாம் நம்பும் கலாச்சார விழுமியங்களின் எதார்த்த நிலையை கண்முன் விரிய செய்கிறார். மனித மனதின் அத்தனை சிந்தனை போக்குகளையும் அவருடைய பாணியில் சென்று அவரின் தனித்துவமான, உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் தொட்டு அணுகுகிறார். அந்த விதத்தில் தமிழில் வெளிவந்த அனைத்து சிறுகதை தொகுப்புகளிலும் தனித்து நிற்கிறது என்பேன். குறிப்பாக நான் பிறந்து வளர்ந்த குமரி நிலத்தின் வாசனையை அனேக இடங்களில் முகர்ந்தேன். உதாரணமாக குன்னி முத்து, நடுதண்ணி முத்தம் போன்ற காட்சி படிமங்கள் . தெளிவான விவரணை, கதை சொல்லும் நேர்த்தி என முதல் பத்தியிலையே முழுவதுமாக வாசகனை வசீகரித்து உள்ளிழுத்து வெளிவரமுடியாதபடி செய்கிறார், கவித்துவ உவமைகளால் வர்ணனைகளில் வண்ணம் தீட்டிக்கொண்டே நகர்வது வாசகனுக்கு பல்வேறு கற்பனை எண்ணங்களுக்கு வித்திடுகிறது. புனைவில் சில படிமங்களை வாசகன் நெருங்குகையில் அது தன்னை உருமாற்றம் செய்கிறது. இலக்கிய தரத்திலிருந்து வெளிவராமலும் வெகுஜன ரசனைக்கு உட்பட்டும் இருப்பது தனித்துவம். முக்கியமாக எழுத்து பயில்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்