முந்தின வருடத்தை விட இந்த வருடம் எனக்கு மகிழ்ச்சியானதாக, நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எல்லா பிறந்த நாட்களிலும் நான் வழக்கமாக உற்சாகமாக இருப்பேன். கடந்த சில வருடங்களே விதிவிலக்கு. இவ்வருடம் நான் மீண்டும் அதே உற்சாகத்தை திரும்பப் பெற்றிருக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு மாதமாக மனம் சற்று தெளிவாகி இருக்கிறது. சின்னச் சின்ன, சில நேரம் பெரிய பிரச்சனைகளைக் கூட அதிகம் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எடுத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு காரணம் எனக்கு அளப்பரிய அன்பைத் தரும் நண்பர்கள் என் நெஞ்சிற்கு இனியவர்களும். மற்றொரு முக்கிய காரணம் சற்று விசித்திரமானது:
பிறர் தமது அனுபவம், உள்ளுணர்வு வழியாக கற்கிற பாடங்களை நான் எப்போதும் வாசிப்பு வழியாகவே கற்கிறேன். ஒருவேளை ஒரு புத்தகம் தர்க்கரீதியாக பிசிறில்லாத கருத்தாக்கமாக ஒரு பாடத்தை அளிக்கும் போது அது சுலபத்தில் என் மனதில் போய் சப்பணமிட்டு அமர்ந்து கொள்கிறது என நினைக்கிறேன், ஆனால் உணர்வுரீதியான அனுபவங்களை நான் ஆர்ப்பார்ட்டமாக எதிர்கொள்ளும் போது இயல்பாகவே அவை என் மனக்கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி விடுகின்றன. அவ்விதத்தில் அண்மையில் அரிஸ்டாட்டிலை தொடர்ந்து வாசித்தது, அவருடைய கருத்துக்களைப் பற்றி யோசித்து எழுதவும் செய்தது எனக்கு மிகவும் உதவி உள்ளது. அது எனக்குள் ஏதோ ஒரு மாயத்தை செய்து விட்டது. அவர் கவிதையியல், அறம் குறித்து சொல்லி உள்ள கருத்துக்கள் கூட இந்த உலகை, மனிதர்களை, வாழ்வை அறிவதை சற்று சுலபமாக்கி உள்ளது. நான் கடுமையான அழுத்தத்தில் இருந்த நாட்களில் இது எனக்கு மிகவும் தேவைப்பட்டது. இத்தனைக்கும் நீண்ட காலமாக அவரைக் குறித்து எனக்கு ஒரு எதிர்மறையான எண்ணமே இருந்தது, ஆனால் இப்போது அவர் என்னுடைய ஆசான்களில் ஒருவராகி விட்டார்.
இப்போது நான் இந்த வாழ்க்கையை ஒரு பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளமாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு சிறு பகுதியிலும் பலவிதமான படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. நான் என் வாழ்க்கையின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினால், முடிந்தளவுக்கு பிறருடைய படப்பிடிப்பு உதவினாலும் போதும். ஒவ்வொரு பிரச்சனையும் தனிமனிதர் எனும் நடிகர்களாலோ அவர்களுடைய பாத்திரங்களாலோ அவர்களை உருவாக்கிய திரைக்கதையாலோ மட்டுமே விளைவதில்லை. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று கலந்ததாக, ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துவிட முடியாதபடி பிணைந்ததாக இருக்கின்றன. ஆகையால் நான் என்னையோ பிறரையோ குற்றம் சொல்வதில் பொருள் இல்லை. திரைக்கதையின் நோக்கம் அர்த்தத்தை உண்டு பண்ணுவது, அர்த்தத்தின் நோக்கம் மகிழ்ச்சியை தருவது. ஆக, தொடர்ந்து ‘திரைக்கதையை’ செறிவாக்கும் பணியை மட்டும் நான் செய்திருந்தால் போதும் என கற்றுக் கொண்டேன்.
அண்மையில் எனக்கு காவல் நிலையம் செல்லும் அளவுக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அப்போது ஒரு ‘தவறான படப்பிடிப்பின்’ பக்கம் கூட தலைகாட்டக் கூடாது, ‘மோசமான இயக்குநர்கள்’, ‘அபத்தமான ‘திரைக்கதைகளிடம்’ இருந்து விலகி இருக்க வேண்டும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு வற்புறுத்தி நம்மை ‘நடிக்கக்’ கேட்டுக் கொண்டலும் சரி எனப் புரிந்து கொண்டேன்.
இந்த இனிய பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆழ்மனதில் இருந்து அன்பையும் முத்தங்களையும் அளிக்கிறேன். அரிஸ்டாட்டில் எனும் அந்த மாமனிதனையும் இந்நாளில் வணங்குகிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்!

Comments