“நம்மால் இந்த பெங்களூர் குளிரைத் தாங்கிக் கொண்டு எழுதவே முடியவில்லை, ஐரோப்பா போன்ற தேசங்களில் குளிர்காலங்களில் எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள்?” என்பது எனக்கு புரிபடாத மர்மங்களில் ஒன்று. குளிர்காற்று அடிக்கும் போது ஒன்று கம்பளி அங்கியை அணிந்திருக்க வேண்டும், அல்லாவிட்டால் அடிக்கடி கைகளைக் கொண்டு உடம்பை நாமே அணைத்துக் கொள்ள வேண்டி வரும். சரி, அப்படியே கம்பளி உடை அணிந்திருந்தாலும் விரல்கள் குளிரில் விரைக்கிற உணர்வு வரும் போது தட்டச்சுவது சிரமம். கையுறை அணிந்து எழுதலாம் என்றால் விரலின் சருமம் பொத்தான்களில் படுகிற உணர்வு கூட இல்லாமல் என்ன எழுத்து? இது போக, அடிக்கடி உள்ளிருந்து குளிர் கிளம்பி வந்து காதுக்குள் கெக்கலிக்கும் போது ஒருவேளை நிஜமாகக் குளிர்கிறதா அல்லது நமக்குத் தான் ஜுரம் வந்து விடுகிறதா என சந்தேகம் வருகிறது. இந்த அவஸ்தைகள் தொடர்ந்து எழுத்தின் சரளத்தில் இருந்து நம்மை தடம் புரள வைக்கிறது. அதே நேரம் எழுத்து குழாயைத் திறந்ததைப் போல கொட்ட ஆரம்பித்து விட்டால் குளிரின் தாக்குதல் மறந்து போகும். “ரொம்ப நேரமா என்னை மறந்திட்டியா?” எனக் கேட்டபடி உடனே அது தன் ஜில்லென்ற விரல்களை நம் விலாவிலோ முதுகிலோ வைத்து திரும்பவும் கவனத்தை சிதறடிக்கவும் செய்யவும்.
சென்னையில் வியர்வை நெற்றியில் இருந்து ஒழுக, கழுத்துப் பக்கம் கசகசக்க எந்த கவலையும் இல்லாமல் என்னை மறந்து நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த குளிர் அவ்வளவு அந்நியமாக இருக்கிறது. ஒருவேளை குளிரிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதனுடன் ஒரு சினேகம் ஏற்பட்டு “வாப்பா பக்கத்தில் வந்து உட்காரு” என்று அழைத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அதனுடன் இணக்கமாக இருக்க முடியலாம். வெப்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை.
அப்புறம், சென்னையில் வெக்கை என்றால் அது எப்போதும் ஒரே போலத்தான் இருக்கும். இங்கோ பத்து நிமிடத்துக்கு முன் வீசிய குளிர் காற்றை இப்போது காணோம். லேசாக வெப்பம் மிதந்து வருகிறது. காலையில் ரொம்ப குளிர்கிறது என்று கம்பளி அணிந்து வந்தால் பத்து மணிக்கு மேல் வெயில் உறைக்கிறது. சரி ரொம்ப வெயில் போல என ஹய்யா என்று உட்கார்ந்தால் குளிர் பதுங்கியிருந்த சீரியல் கில்லரைப் போல பாய்ந்து வருகிறது. சற்றும் கணிக்க முடியாத, முரண்படும் உணர்வு வெளிப்பாடுகளால் ஆன ஒரு உறவைப் போல இது இருக்கிறது. அவ்விதத்தில் “காதலில் சொதப்புவது எப்படி?” படத்தின் அமலா பாலைப் போல இருக்கிறது பெங்களூர்.
ஒரு காலத்தில் குளிர்மையை மிகவும் ரொமாண்டிசைஸ் பண்ணியிருக்கிறேன். இப்போது தான் எஸ்.ரா ஏன் வெயிலைப் பற்றி மருகி மருகி தன் நாவல்களில் எழுதுகிறார் எனப் புரிகிறது. வெயிலின் பிள்ளைகளால் குளிரின் சித்தி கொடுமையை தாள முடியாது.
Comments