Skip to main content

போஹோ




வாஸ்தோவின் “போஹோவை” ஒரு மாதிரி ஹிப்பி நாவல் என்று கூறலாம். இவ்வகை நாவல்களில் நகர / கிராமிய மத்திய வர்க்க வாழ்க்கை சற்று எதிர்மறையாகவும், எந்த பிடிப்புமில்லாத பயண / சாலை வாழ்க்கை உன்னதமாகவும் காட்டப்படும். சமூக வாழ்க்கையின் காயங்களை சமூக பந்தமற்ற ஒரு வாழ்க்கை குணப்படுத்தும் என்றும் இவ்வகை கதைகளில் சொல்லப்படும். வாசகர்களில் பலரும் உள்ளூர ஏங்குவது எல்லாவற்றையும் அறுத்துப் போட்டுவிட்டு ஓடி விடவேண்டும் என்பதையே, ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது. அதனாலே இத்தகைய கதைகளுக்கு எப்போதும் மவுசிருக்கும், விட்டு விடுதலையாகும் சாகச வாழ்க்கை திரும்பத் திரும்ப ரசிக்கப்படும். ஆனால் வாசகன் சமூகத்துக்குள் இருப்பவன் என்பதால் இக்கதைகளில் நாயகன் திரும்ப ஊருக்கு வருவான். (அல்லது சமூகத்தில் இருந்து புறவெளிக்கு எதிர்காற்றில் மயிர்க்கற்றைகள் அலைய பைக்கில் பிறந்து போவான்.) அதுவே நாவலுக்கு ஒரு முழுமையை கொடுக்கும். இறுக்கம்-கசப்பு-விடுதலை-திகைப்பு-மீண்டும் திரும்புதல் என்பதே ஹிப்பி நாவலின் இலக்கணம். வாஸ்தோ இந்த கதையமைப்பை காதல், மனமுறிவு, குற்றம், தப்பித்து ஓட்டம், பைக் ரைடிங் அனுபவங்கள், மனம் ஆற்றுப்படுதல் எனும் போக்கில் கோர்த்திருக்கிறார்.


வாஸ்தோவின் இந்த நாவலில் சில குறைகள் உள்ளன, ஆனால் அவற்றையும் மீறி இது எனக்குப் பிடித்திருக்கிறது. 


ஏனென்றால், தமிழில் இம்மாதிரி மனநிலையை பேசுகிற நாவல்கள் அரிது. அடுத்து, வாஸ்தோவிடம் இயல்பான நகைச்சுவை உண்டு. 


அது அவரது நடைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. உ.தா., ஓவர் தித்திப்பான ஒரு காதல் காட்சியை தன் அங்கத உணர்ர்வு, நகைச்சுவை தொனி மூலம் அவர் எதார்த்தமாக்கி விடுகிறார். ஒரு கொடூரமான பலாத்கார காட்சியை எழுதிவிட்டு அதை செய்தவனை நுட்பமாக பகடி செய்து, அவனுக்குள் இருக்கிற குழந்தைத்தனம், அதன் அபத்தம் என்று இன்னொரு பக்கத்தை காட்டி அப்பாத்திரத்தை உயிரோட்டம் கொள்ள செய்கிறார். 


“அலைக்கழிப்பு மிகுந்த ஐந்தாவது நாளின் அனுபவங்கள்” என்றொரு அத்தியாயத்தை மிக நன்றாக எழுதியிருக்கிறார். மாறுபட்ட பாத்திரங்களின் வாழ்வில் வரும் ஒரு சம்பவத்தை அந்த ஒரே அத்தியாயத்துக்குள் கலந்து எழுதும் போது அது பொருத்தமின்மைகள் இன்றி சரியாக இயைந்து போவதைக் கண்டு அசந்து போனேன்.


 வாஸ்தோவின் நடையிலும் ஒரு தனித்துவம் உள்ளது. ஆனால் அது அவர் தன்னுடைய கதையை எழுதும் போது மட்டும் தான்; குற்றவாழ்க்கை பற்றி எழுதும் போது செயற்கையாக, சினிமாத்தனமாக மாறிவிடுவதுடன் அந்த நடையும் காணாமல் போய் விடுகிறது.


 சிலரைப் படிக்கும் போதே நமக்குத் தெரிந்து போகும், இந்தாளுக்கு பெரிய சிக்கல்களின்றி எழுத வருகிறது என்று, வாஸ்தோ அப்படியான ஒருவர்.


இந்த நாவலின் பலவீனங்கள் மூன்று:

1. சரவணன் சந்திரனின் தாக்கம். அவரது ஆவி வாஸ்தோவுக்குள் அவ்வப்போது இறங்கி ஆட்டி வைக்கிறது. அதை விரட்டி தன் பாணியை முழுக்க அவர் கைகொள்ள வேண்டும். “போஹோவில்” ஒரு நல்ல விசயம் அவர் நாயகனை கடைசியில் பழனிக்கோ, சபரிமலைக்கோ அனுப்பவில்லை, ஒன்றிரண்டு சித்தர்களை குறுக்கமறுக்க நடக்கவில்லை என்பது. ஆனாலும் இறுதி அத்தியாயத்தில் ஒரு ஞானியை, பக்கிரியைப் போன்ற ஆசாமி வருகிறார், அவர் மிக கனிந்தவராக இருக்கிறார், அவரிடம் இருந்து நாயகன் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு அமைதியாகிறான். இந்த இடத்தையும் வாஸ்தோ நன்றாக எழுதியிருந்தாலும், கதைக்கு ஒரு நிறைவைத் தர வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றாலும், அது எப்போதும் நாயகனின் அனுபவங்களில் இருந்து கிடைப்பதாக அமைவதே கூடுதல் சிறப்பாக இருக்கும். மற்றொன்று ஜேக் கெரவக்கின் On the Road போன்ற நாவல்களில் வருவதைப் போன்ற ஒரு ஆழமான பார்வையை (ஜென் பௌத்தம் சார்ந்து) இதில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “சாதாரணர்களின் ஆன்மீகம்” எனும் சரவணன் சந்திரனின் பார்வையை தான் வாஸ்தோவின் இங்கு பயன்படுத்துகிறார் என்பது அவரது தனித்துவத்தை வெகுவாக குறைக்கிறது. 

2. மாறுபட்ட பாத்திரங்களின் உபகதைகளை பிரதான பாத்திரத்தின் அத்தியாயங்களுடன் கலந்து எழுதுவது ரொம்ப சவாலானது. ஏனென்றால் 200 பக்க நாவல்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தின் கதையை மட்டுமே முழுமையாக பேசி மற்றவை அரைகுறையாக முடித்து வைக்க வேண்டி வரும். அல்லது 400 பக்க நாவலாக எழுத வேண்டும். வாஸ்தோ இந்த வடிவத்தை ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார் என்றாலும், கோயில் கொடை நடக்கும் போது சில பாத்திரங்கள் சட்டென உக்கிரம் பெற்று சாமியாடிவிட்டு அப்படியே போதையில் சரிந்து விழுவதைப் போல உபபாத்திரங்கள் முடிந்து விடுகின்றன.  

3. கிளைமேக்ஸ் அத்தியாயம் சரியாக வரவில்லை. ஹிப்பி நாவலை நாம் இன்பியல் (comedy) வகையில் சேர்க்க வேண்டும். இவ்வகையில் கதையின் முடிவில் நாயகனுக்கு ஒரு பரிசோ, காதலியோ கிடைக்க வேண்டும், ஒரு சாதனையோ, பெரும் வெற்றியோ அமைய வேண்டும். இது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். அப்போதே வாசகர்களுக்கு நிறைவாக இருக்கும் என்று The Seven Basic Plots நூலில் கிறிஸ்டபர் புக்கர் சொல்லுகிறார். “ அட்டகத்தியின்” கிளைமேக்ஸுக்கு அடுத்த கிளைமேக்ஸில் ரஞ்சித் இதை சரியாக செய்திருப்பார். காதலிகளை இழந்து தன்னை நோக்கி சிரித்தபடி செல்லும் நாயகனின் பிற்பாடான வாழ்க்கையை ஒரு நிறைவானதாக சற்று பகடியுடன் காட்டி இருப்பார். வாஸ்தோவும் அப்படி ஒன்றை முயன்றிருக்க வேண்டும். (அல்லாவிடில் துவக்கத்தில் இருந்தே காதலற்ற மற்றொரு கதையாக இதை மாற்றியிருக்க வேண்டும்.)


ஆனாலும் எனக்கு இந்த நாவல் பிடித்திருக்கிறது. நீங்களும் படித்துப் பாருங்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...