முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டீல் செய்வது



எல்லா காலத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகை மனிதர்கள் அதிகமாகத் தோன்றுகிறார்கள். அந்தந்த நேரத்தின் அரசியல் சமூக பண்பாட்டு சூழலின் பிள்ளைகள் இவர்கள். ஒரு உதாரணத்துக்கு, இன்று மனிதர்களை “டீல்” செய்பவர்கள் அதிகமாகி உள்ளார்கள். இவர்கள் ஒருவித பலூன் மனிதர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான இலக்கிய உலகத்துக்கே வருகிறேன்.


தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை - அதாவது இணையதளங்கள், சமூவலைதளங்கள் பரவலாகும் வரை - எதிரும் புதிருமான இலக்கிய அரசியல் முகாம்கள் இங்கு அதிகமாக இருந்தன. இன்றும் தான் இருக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால் அன்று யாரை சந்தித்தாலும் விவாதம் நடக்கும், முரண்படுவார்கள், அது கைகலப்பில் கூட போய் முடியும். அல்லது மணிக்கணக்காய முரண்பட்டுவிட்டு நட்புடன் கைகுலுக்கி பிரிவார்கள். ஆனால் இந்த எதிர்ப்பும், ஆதரவும் கருத்தியல் ரீதியானதாக வெளிப்படையானதாக இருந்தது. இலக்கிய பண்பாட்டு வெளியானது ஒரு சதுரங்க பலகையில் அணிவகுக்கப்பட்ட காய்களைப் போன்றதாக இருந்தது. யார் எங்கும் நிற்கிறார்கள் என்பது எல்லாருக்கும் வெளிப்படையாக இருந்தது. இன்று அப்படி இல்லை. இன்று எல்லாரும் எல்லாருடனும் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்று எல்லாரும் எல்லாரையும் ‘டீல்’ செய்ய முயற்சிக்கிறார்கள். அதிகார மிக்கவர்களும் அதிகாரம் குறைவானவர்களும் பரஸ்பரம் தமக்கு பயன்படுவார்கள் என இரு தரப்புமே இன்று நம்புகிறார்கள்.


இன்று கடுமையாக ஒருவரை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் அதை வெளிப்படையாக முன்வைத்தபடி அவருடன் நல்லுறவை நிறுவ முடியாது. அதாவது நீங்கள் எழுதுகிற ஒரு பின்னூட்டம் போதும் ஒருவர் உங்களை வாழ்நாள் முழுமைக்கும் பிளாக் செய்ய. மாறாக, நீங்கள் கருத்தியல் ரீதியாக எதிர்க்கிற ஒருவரிடம் அதே எதிர்நிலைப்பாட்டின் பின்னணியில் நின்று கொண்டே நல்லுறவை பேண நீங்கள் இன்று ஒரே ஒரு காரியம் செய்தால் போதும் - பொதுவெளியில் அவரைப் பற்றி ஒன்றுமே பேசக் கூடாது. அவரிடம் இருந்து உதவி, சிபாரிசு உள்ளிட்ட பிரதிபலன்கள் வேண்டுமென்றால் அவருடன் நீங்கள் எல்லா இடங்களிலும் கூட இருந்தாலும் போதும். வெளிப்படையாக புகழவோ கொண்டாடவோ தேவையில்லை. அன்னாருடைய இலக்கிய விழாக்களில் போய் அமர்ந்து கொள்வதே போதுமானது. அவருடனான இணக்கத்தை ஒரு அதிகாரமாக காட்டிக்கொள்ள விழைந்தால் மட்டும் அவரைப் பற்றி பெரிய முரண்கள் இன்றி பேஸ்புக்கில் எழுதுவது, ஒரு கட்டத்தில் அவருக்கு முட்டுக்கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இத்தனை விசயங்களும் நடக்கையில் நீங்கள் அவருடன் கருத்தியல் ரீதியாக உடன்படவோ முரண்படவோ அவரை ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டீர்கள். இது ஒரு விசித்திரமான கூட இருக்கிற, முகம் காட்டும் உறவு. ஊர்ப்பகுதிகளில் தெரிந்தவர், தெரியாதவர்களின் வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் தவறாமல் போய் ‘முகம் காட்டுவதைப்’ போன்றது.


இப்படியாக பிரபலங்களை, அதிகார மையங்களை ‘டீலிங்’செய்பவர்கள் இன்றைய இளையதலைமுறையினர் இடையே அதிகமாகி விட்டார்கள் என்பதைக் காண்கிறேன். கொஞ்சம் அசந்தால் இவர்கள் நம்மையே ‘டீல்’ செய்து விடுவார்கள். எந்த விதத்திலும் நமக்கு ஆதரவாகவோ எதிராகவோ நிலைப்பாடு எடுக்க மாட்டார்கள், நமக்கு எதிரான கருத்தியலை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள், ஆனால் நம்முடன் ‘இருப்பார்கள்’. நம்முடைய எழுத்தை கடுமையாக வெறுப்பவர்களாக ஒரு பக்கம் காட்டிக்கொள்வார்கள். ஆனாலும் நம்முடனே ‘இருப்பார்கள்’. 


இவர்கள் இடதுசாரியம் பேசிக்கொண்டே வலதுசாரிகளுடன் கைகுலுக்கி தேநீர் அருந்தி அவர்களை டீல் செய்வார்கள். தலித்தியம் பேசிக்கொண்டே அதற்கு நேரெதிரான முகாமில் உள்ளோரை கையாள்வார்கள். இவர்கள் போலிசாக இருந்தால் கொடூரமான கொலைகாரர்களிடமும் மாமா மச்சானாக பழகுவார்கள். கடும் சாதி எதிர்ப்பாளர்களாக இருந்தால் தீவிர சாதி ஆதரவாளர்களை ‘புரோ’ என்று அழைத்து தோளை அணைப்பார்கள். இவர்கள் பாசாங்காளர்கள் அல்ல. நம்பாத ஒன்றை நம்புவதாக பாவிப்பதே பாசாங்கு. ஆனால் இவர்களோ ஒன்றை நம்பி அதற்கு தொடர்பில்லாமல் மற்றொன்றை செய்கிறார்கள்.


 இது ஒரு புதிய பின்நவீன அணுகுமுறை. இவர்கள் தம் கொள்கையில், சித்தாந்தத்தில், நிலைப்பாட்டில் தீவிர பிடிப்பு கொண்டவர்கள். நமக்கு இவர்களுக்கும் ஒரே வித்தியாசம் இவர்கள் ‘மனிதர்கள் வேறு கருத்தியல் வேறு’ என்று நம்புகிறார்கள் என்பது.


இதன் பொருள் இவர்கள் மனிதநேயர்கள் என்றல்ல. மனிதர்களை இவர்கள் மனிதவளமாக பாவிப்பார்கள். மனிதர்களுக்குள் கருத்தியலோ நம்பிக்கைகளோ சாரமாக இல்லை. கருத்தியலோ நம்பிக்கையிலோ மனிதர்கள் அணிகிற வேடங்கள் என நினைக்கும் இவர்கள் கருத்தியலும் நம்பிக்கைகளும் கூட சாரமற்றவை என நினைக்கிறார்கள். அதனாலே கருத்தியலை ஒரு அரூபமான வஸ்துவாக, வாழ்வுடன் தொடர்பற்ற சங்கதியாக, அதிகாரத்தை அடையும் கருவியாக பார்க்கிறார்கள். கருத்தியலை ஒரு ‘மிதக்கும் குறிப்பானாக’ இவர்கள் பாவிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு அடையாளப்பட்டி, ஒரு அரசியல் பதாகை, ஒரு அனுமதிச்சீட்டு. யாரும் யாரையும் பயன்படுத்தலாம், அதைக் குறித்து குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் பழைய அர்த்தத்தில் இன்று மனிதன் என யாருமே இல்லை என இவர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் நம்மில் ஒரு பகுதி தான். பேச்சை, எழுத்தை வெறும் தகவலாக, சமூகமாக்கல் மார்க்கமாக மட்டுமே பாவிக்கிற இன்றைய நடைமுறை, சூழல் இவர்களை உற்பத்தி செய்துள்ளது. 


ஒருவித பலூன் மனிதர்கள் இவர்கள். நாம் எங்கு போனாலும் கூடவே மிதந்து வருவார்கள். காற்று வீச வேண்டும், அது சாதகமான திசையில் அடிக்க வேண்டும். அவ்வளவு தான். அத்திசையில் மிதக்கத் தொடங்குவார்கள். இன்று நாம் மிகுந்த தனிமையில் இருக்கிறோம். நமக்கு இன்று இத்தகைய பலூன் மனிதர்கள் அதிகமும் தேவைப்படுகிறார்கள். நாம் போகுமிடமெங்கும் தலைக்கு மேல் இவர்கல் வருவது காண நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...