Skip to main content

வாழ்வின் ஆக மகிழ்ச்சியான நாள்




இன்று என் வாழ்வின் சிறந்த நாட்களில் ஒன்று. அதன் பிறகு என்ன தான் கசப்பாக நடந்தாலும் நாள் முழுக்க மனதுக்குள் இனித்துக் கொண்டே இருக்குமே அப்படியான ஒரு நாள். ஏனென்றால் இன்று என்னுடைய நாவலை எழுதி முடித்தேன்.

 கடைசி அத்தியாயத்தின் சில காட்சிகளை நேற்றிரவு துவங்கி இன்று காலை ஐந்தரை வரை எழுதி ‘முற்றும்’ போட்ட போது ஒரு மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டது. அங்கங்கே ஆரம்பித்து விட்ட இளகுமுனைகளை (loose ends) இறுதி அத்தியாயங்களில் முடிச்சிட்ட போது நிறைவாக இருந்தது. நாவலின் முடிவு நான் ஏற்கனவே திட்டமிருந்தது தான் என்றாலும் ஒரு நுட்பமான சிறிய மாற்றத்தை இன்று எழுதும் போது கடைசி பத்தியில் புதிதாக கொண்டு வந்தேன்.


கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி எழுத ஆரம்பித்து இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சரியாக மற்றொறு ஆறாம் தேதி அன்று முடித்தேன். சரியாக 11 மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் சொற்கள்.


 நாவலின் 70% முதல் 6 மாதங்களில் எழுதி முடித்து விட்டேன். அதன் பிறகு திரும்பப் படித்து தேவையில்லையெனத் தோன்றிய 6 அத்தியாயங்களை அழித்து விட்டு பாதியில் இருந்து நாவலை திருத்தி எழுதினேன். இது போதாதென்று நடுநடுவே நிறைய திருத்தங்களை செய்ய வேண்டி வந்தது - பின்னர் வரும் ஒரு தகவல், பாத்திரம், சம்பவத்திற்கான குறிப்பை, நியாயத்தை ஆரம்ப அத்தியாயங்களில் நுழைக்க வேண்டி வந்தது அல்லது ஆரம்பத்தில் வரும் ஒரு வசனத்திற்கு நியாயம் சேர்க்கும்படியாக ஒரு சம்பவத்தை பிற்பாடு வரும் அத்தியாயம் ஒன்றில் எழுதத் தேவையானது. 


நான் pantser பாணியில் எழுதும் புனைகதையாளன். (இருக்கையில் நுனியில் இருந்து கற்பனை போகிற வழியில் கதையை இட்டுச் செல்லும் பாணி.) அன்றன்றைக்கு என்ன தோன்றுகிறதோ அதுவே அன்றைய அத்தியாயம். நாவலின் இறுதிக் காட்சியைத் தவிர வேறெதையுமே சுத்தமாக திட்டமிடாமல் எழுத எனக்குப் பிடிக்கும். ஆனால் இந்த நாவலில் தான் முதன்முதலாக ஒரு plotter ஆக (ஏற்கனவே உருவாக்கப்பட்ட கதைத்திட்டத்துக்கு ஏற்ப ஒழுங்குபட எழுதுவது) ஒட்டுமொத்த நாவலையும் முன்னுக்குப் பின்னாக, நடுவில் இருந்து முன்னுக்காக கதையின் போக்கை சிந்தித்து திட்டமிட்டு எழுதினேன். அதுவும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தான், என்னை ஆட்கொள்ளுகிற பித்து தான் - இது எந்தளவுக்கு சென்றதென்றால் ஒருநாள் அலுவலகத்தின் கழிப்பறையில் முகம் கழுவிக் கொண்டிருந்த போது ஒரு அத்தியாயத்தின் குறிப்பிட்ட பகுதியொன்றை அழித்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் மனம் திரும்பத் திரும்ப select and delete என்று சொல்லிக் கொண்டிருந்தது. அப்படி யோசித்திருக்கையில் இமைக்கும் முன் கீழே விழுந்து விட்டேன். ஏனென்றால் நான் நடக்கிறேன் என்பதையே மறந்து போனேன். 


இது நான் எழுதி முடித்த நான்காவது நாவல். என்னுடைய மூன்றாவது நாவலுக்கும் இந்த நான்காவதுக்கும் இடையே ஏழாண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆண்டுகளில் நான்குக்கும் மேற்பட்ட நாவல்களை 80% எழுதி கைவிட்டு விட நேர்ந்தது. ஏனென்னால் நாவலொன்றை எழுதி முடிக்க முடியவில்லை என்பது ஒரு புதிராகவே இருந்தது. இத்தனைக்கும் எனக்கு எழுத்து சோம்பலில்லை. பாதியில் ஆர்வம் இழந்து ஒரு புத்தகத்தை அனாதையாக்க மாட்டேன். ஆனால் ஒரு தவறை மட்டும் திரும்ப திரும்ப செய்து வந்தேன்:


 ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு மைய நெருக்கடி இருக்கும். நான் எழுதத் தொடங்கி முதல் 50 பக்கங்களைக் கடந்ததும் அந்த மைய நெருக்கடியை விட்டுவிட்டு வேறு புது பிரச்சனைகளை உருவாக்கி அவற்றை நோக்கி கதையை செலுத்தத் தொடங்கி விடுவேன். 60,000-70,000 பக்கங்களை எழுதிவிட்டுப் பார்க்கையில் அதனுள் மூன்று, நான்கு சிறிய நாவல்கள் சரியாக உருப்பெறாமல் இருக்கும். அடப்போடா என களைத்துப் போய் விட்டு விடுவேன். இந்த கெட்டப் பழக்கத்தைப் புரிந்து கொண்டு அதில் இருந்து பிரக்ஞைபூர்வமாக உடைத்துக் கொண்டு வர நான் நிறைய யோசிக்க, திட்டமிட வேண்டி இருந்தது, தொடர்ந்து என்னையே எச்சரித்து கடிவாளம் போட்டு வழிநடத்திட வேண்டியிருந்தது.


இந்த பின்னணியில் தான் இந்நாவல் எனக்கு ஒரு முக்கியமான திருப்புமுனை. நான் ஏற்படுத்திக் கொண்டிருந்த எல்லைகளை எனக்குள் நானே போராடி கடந்து வர உதவிய படைப்பனுவம் இது. 


ஒரு வாசகன் இந்த நாவலை தொடர்ச்சியாக மூன்று நான்கு நாட்களில் படித்து முடிப்பதே ஒரு முழுமையான அனுபவத்தைத் தரும். குறிப்பாக, பின்னிருந்து முன்னாக கதையோட்டத்தை மனதில் தொகுத்து, துவக்கத்தில் இருந்தே நான் அங்கங்கே விட்டுப்போகும் மர்மங்களுக்கான பதில்களை கண்டடைய இது அவசியப்படும். அப்போது புதிர்களின் முடிச்சுக்களை அவிழ்த்து, அதைக் கொண்டு நாவலின் உபபிரதியான அதன் தர்க்கத்தை, பார்வையை தமது கோணத்தில் புரிந்து கொள்ளும் திகைப்பான அனுபவத்தை ஒரு வாசகன் பெற முடியும். தனித்தனி அத்தியாயங்களாக இடைவெளி விட்டுப் படித்தால் குழப்பங்கள் எஞ்சவே வாய்ப்பதிகம்.


இருந்தாலும், ஒரு நாவல் தொடர்கதையாக வெளியாகும் போது - ஒரு நாவலுக்குக் கிடைப்பதை விட - முற்றிலும் மாறிபட்ட வாசகர் கூட்டமொன்று அதை நோக்கி வருவார்கள். அந்த வாய்ப்புக்காக நான் பிஞ்ச் செயலிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 


இது இவ்வருட முடிவில் நாவலாக பிரசுரமாகும் முன்பு மேலும் ஆய்வு செய்து சில கூடுதல் தகவல்களை சேர்த்து, மொழியை இன்னும் செறிவூட்டி, வடிவத்தில் உள்ள பிசுறுகளையும் களைவேன். இந்த இறுதிகட்ட திருத்தங்களை நாவலின் அடிப்படையான அமைப்பு குலையாமலே செய்வேன். அதன் பிறகே எனது அடுத்த நாவ்ல்களை நோக்கி கவனத்தை செலுத்துவேன்.


ஒரு நாவலில் தினமும் வேலை செய்வது எந்தளவுக்கு உன்னதமான அனுபவமோ அந்தளவுக்கு மிக சிரமமானதாக, சவாலானதாக அது சில நேரங்களில் இருக்கும்.

 சில நாட்களில் எழுத்து பீறிட்டு வரும், சில நாட்களில் ஒரு பத்தியை எழுதவே ஏழெட்டு மணிநேரங்கள் காத்திருக்க நேரிடும். சில நாட்களில் கதையின் ஒரு முக்கியமான கட்டத்தை எப்படி ஏற்கத்தக்க வகையில் உருவாக்குவது, ஒரு நம்பத்தகுந்த தர்க்கத்தை கதைக்கு எப்படிக் கொடுப்பது என சிந்தித்திருக்க வேண்டி வரும். எவ்வளவு யோசித்தாலும் தீர்வே கிடைக்காமல் போகலாம். பின்னர் வேறு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கையில் மூளையில் சட்டென விளக்கெரியும். உடனே நாவலுக்குத் திரும்பி அந்த மாற்றத்தை செய்து கதையோட்டத்தை சீர் செய்யலாம். சில நேரத்தில், ஒரு வாரத்துக்கு மேல் மிகவும் ரசித்து எழுதிய ஆயிரக்கணக்கான சொற்கள் தேவைப்படாது எனத் தோன்றி பின்னர் அழித்திருக்கிறேன். ஆனால் இப்படி தினமும் அம்மையப்பனை சுற்றி உலகையே சுற்றி வரும் எழுத்துப் பயணத்துக்கும் இறுதியாக உருவாகும் நாவலும் ஒன்றாக தாயும் சேயுமாக இருக்க வேண்டியதில்லை. நாவலின் முடிக்கப்பட்ட பிரதியானது ஒரு மாரத்தான் ஓட்டத்தின் இறுதி இலக்கை போன்றது.  நாவல் சிறப்பாக எழுதி முடிக்கப்பட்டால் அது எழுத்தாளனை விட வாசகனுக்கே அதிக பயனளிக்கும். ஆனால் எழுத்தாளனுக்கோ தினமும் ஒரு உலகத்துக்குள் இறங்கி நடந்து பயணித்தபடி அங்கு புதுப்புது வீதிகளை, மாடமாளிகைகளை கட்டியெழுப்பி, அங்கு உலவும் புதுவிதமான மனிதர்களை, அவர்களுடைய விசித்திரமான பிரச்சனைகளை, அப்பிரச்சனைகளால் உருப்பெறும் புதிய சுபாவங்கள் என ஒவ்வொன்றாக கண்டுபிடித்து உருவாக்கியபடியே இருக்க வேண்டும். அதாவது அவன் தினமும் சிறுக சிறுக கட்டியெழுப்பும் ஒரு நகரத்தில் தான் அவன் ஒரு சிறிய இடத்தை தேர்ந்தெடுத்து வசிக்கவும் வேண்டும். தினமும் நாவலில் மூழ்கும் அந்த நான்கைந்து மணிநேரங்களில் நாவலாசிரியன் தனது அன்றாட உலகின் அத்தனை பிரச்சனைகள், குறைகளையும் மறந்து போகலாம். முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறிப் போகலாம்.

 அதனாலே ஒரு நாவலை எழுதி முடிக்கையீல் என்னதான் பெரியதொரு நிம்மதி, புளகாங்கிதம் கிடைத்தாலும், மனம் நிறைவை இறுதியாக உணர்ந்தாலும், அது சில நாட்களுக்கே நீடிக்கும். விரைவில் நாவலாசிரியன் தான் உருவாக்கி புழங்கி வந்த அந்த உலகை மிஸ் பண்ண ஆரம்பிப்பான். அவன் ஒரு கடுமையான வெறுமையை, கசப்பை தன் வாழ்வில் உணர்வான். 

நான் அடுத்து எதிர்கொள்ள வேண்டிய சவால் அது தான். இனி முடிந்தளவுக்கு, வேறு நீண்ட காலம் எடுக்கும் எழுத்துப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். புதிய ஏதாவது ஒரு திறனைக் கற்க வேண்டும். என்னை புத்துருவாக்க வேண்டும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...