நேற்றைய இணையவழி கருத்தரங்கில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி பேசி உண்மையில் தாவு தீர்ந்து போனது - கலவையான பார்வையாளர்கள் என்பதால் இரண்டிலும் பேசுங்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டிருந்ததால் அப்படி ஆகிற்று. முதலில் நான் ஆங்கிலத்திலே பேசியாக வேண்டும் என நினைத்திருந்ததால் குறிப்புகளையும் அம்மொழியிலே எடுத்திருந்தேன். அதை இங்கு விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகளின் ஆர்வம், கேள்விகள், கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியளித்தன. அண்மையில்“தமிழா தமிழா” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து விவாதம் நடந்த போதும் இதை கவனித்தேன். மாற்றுத்திறனாளிகள் அரசியலாக்கம் பெறுகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராட வேண்டும், பேச வேண்டும் எனும் தன்னுணர்வு அவர்களிடையே அதிகமாகி உள்ளது. பழைய தயக்கம் இப்போது இல்லை. மற்ற மாநிலத்தவர்களிடத்து பேசுகையில் தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளிகளிடம் இந்த அரசியலுணர்வு, ஒற்றுமை அதிகம் என்றார்கள். ஒருமித்த உணர்வு கொண்டோருடன் இருந்து உரையாடுகையில் ஒரு நம்பிக்கையும் உத்வேகமும் சூழலில் உருக்கொண்டு நம் நரம்புகளிலும் படரும் அல்லவா அதை நேற்று உணர்ந்தேன். போகிற போக்கைப் பார்த்தால் மாற்றுத்திறனாளியியல் ஒரு ஆய்வுத்துறையாக அடுத்த பத்தாண்டுகளில் தீவிரம் பெறும் என நினைக்கிறேன். இது ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும்.
மாற்றுத்திறனாளியியல் சார்ந்த படைப்புகள் சினிமா, இலக்கியம் உள்ளிட்ட கலைத்துறையிலும் அதிகம் வர வேண்டும், அது களப்போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக இருக்கும் என்று கூறினேன். முந்தின தினம் தலித்தியம் பற்றி பேசிய கவிஞர் சுகிர்தராணி இதேவிதமான கருத்தை தெரிவித்தார் என்று கூறினர்.
“கால்கள்” நாவலின் புரூபை என்னிடம் கொடுத்துவிட்டு “இதன் தலைப்பை மறுபரிசீலனை பண்ணுங்க, இந்த தலைப்பினால் இதை ஊனம் பற்றின நாவலாக மட்டும் நம் சூழலில் பார்த்து விடுவார்கள்” என்று மனுஷ் கவலை தெரிவித்தது ஞாபகம் வருகிறது. அங்கிருந்து நீண்ட தூரத்திற்கு இருவருமே இப்போது வந்து விட்டோம்.
Comments