உடலை கவனிப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கிறது. எந்தளவுக்கு என்றால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மாலையில் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்கிறேன். அங்கே ஒன்றரை மணி நேரம் போகிறது என்றால் வீட்டுக்குத் திரும்பியதும் அசதி மேலிடுகிறது, சாப்பிட்டு தூங்கி விடுகிறேன். அதே நேரம் பகல் முழுக்க இருந்த அலுப்பு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததும் நீங்கி விடுகிறது. புத்துணர்ச்சி கிடைக்கிறது, ஆனால் இந்த அலுப்பு இருந்த இடத்தில் உடல்சார்ந்த களைப்பு வந்து அமர்ந்து கொள்கிறது. இந்த புதிய ஒழுங்கும் பயிற்சியும் என் உடல்நலனை மேம்படுத்தி உள்ளது. ஆனால் அதற்கு நான் கொடுக்கிற விலை என்னுடைய எழுத்து -
முன்பு என் வேலை நேரம் முடிந்து மாலையில் தினமும் நான்கு மணிநேரங்களாவது எழுதி விட்டு தான் வீட்டுக்குத் திரும்புவேன். வீட்டுக்கு வந்தாலும் எழுதலாம், ஆனால் வீட்டை அடைந்ததும் என் மனம் தானாக ஓய்வை நாடும் என்பதால் நான் அதைத் தவிர்த்து வந்தேன். இதனால் என்னால் நிறைய எழுத முடிந்தது. வீட்டை அடைந்து சாப்பிட்டுத் தூங்க நேரமாகும், அடுத்த நாள் கடுமையான அசதி இருக்கும் என்றாலும் இத்தனை பக்கங்களை எழுதி முடித்தோமே எனும் திருப்தி இருக்கும். இப்போதோ உடலுக்கு முன்னுரிமை கொடுத்ததும் எழுத்து பின்னுக்குப் போய் விட்டது.
காலையில் எழுந்து எழுதலாம் என்றால் சிறுவயதில் இருந்தே அப்பழக்கம் இல்லை. பகலில் கிடைக்கிற ஒரு சில மணிநேரங்களை வைத்து சமாளிக்க வேண்டி இருக்கிறது.
இன்னொரு விசித்திரம் - எழுதுவதை விட உடற்பயிற்சி செய்வதும் நேரத்துக்கு சாப்பிடுவதும் கூடுதல் இன்பமளிக்கிற செயல்களாக இருக்கின்றன. குத்துப்பயிற்சி செய்யும் அந்த அரைமணி நேரம் என் ஒரு நாளின் உச்சபட்ச இன்பமளிக்கும் நேரமாக இருக்கிறது. அப்படி என்றால் நான் இத்தனை நாட்களாக உடலை நலிவடைய வைக்கும், பெரிய கிளர்ச்சியோ இன்பமோ தராத ஒரு பணியிலா என் மாலைப் பொழுதுகளை செலவிட்டு வந்தேன்?
Comments