ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன்.
இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன.
எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருடங்களில் அவனது படைப்புகளை பொருட்படுத்த மாட்டார்கள், ஆனால் பேச்சை, நடவடிக்கைகளை, ஆளுமையை மட்டும் ரசிப்பார்கள். அப்படியே நகர்ந்து நகர்ந்து அவன் வெறும் ஆணாகவும் அவள் வெறும் பெண்ணாகவும் எஞ்சுவார்கள் என நினைக்கிறேன். (விதிவிலக்குகளும் உண்டு.)
இதில் கவிஞர்கள் ஒரு தனிவகை - ஓரளவுக்கு சமூகமாக்கல் செய்பவர்கள் எனில் வருடத்திற்கு சில காதல்களாவது வெற்றிகரமாக அவர்களுக்கு நிகழும். ஒரு கவிஞருக்கு மாதம் சில காதல்களாவது மரக்கிளையில் இருந்து மலர்கள் உதிர்வதைப் போல மடியில் வந்து விழுந்தபடி இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
கட்டுரையாளர்கள் தாம் பாவம் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். அவர்களும் - புரிகிற மாதிரி எழுதுகிறவர்கள், பேசுபவர்கள் எனில் - சக்கை போடு போடுகிறார்கள்.
மொழியின் தளத்தில் இயங்குவதால் கிடைக்கும் ஒரு அனுகூலம் இது. பணம் படைத்த அழகான ஆண்கள் மீது போன்றே அறிவும் கற்பனையும் படைத்தவர்கள் மீதும் பெண்களுக்கு ஒரு மனச்சாய்வு உண்டென நினைக்கிறேன். ஏனெனில் இவர்கள் பெண்களின் மனவுலகை விகாசிக்க வைக்கிறார்கள்.
இதை பல எழுத்தாளர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது வேறு விசயம்.
என்னுடைய ஒரு சந்தேகம் அசோகமித்திரனை இப்படி யாராவது காதலித்திருப்பார்களா?