Skip to main content

மூடா தாபமா?




தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்த போது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தை சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்க எந்த பதிவர்களை தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும், பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாக கோலோச்சுகிறது. இந்த பொதுவழக்கை பயன்படுத்துகிறவர்கள் இடையிலும் இலக்கிய வழக்கு மீது ஒரு கிண்டல், மறுப்பு, அது போலியானது எனும் எண்ணம் நிலவுகிறது. இந்த இலக்கிய வழக்கு விரோதிகளின் தாக்குலுக்கு அடிக்கடி இலக்காகிறவர் கோணங்கி, அதுவும் முழுக்க முழுக்க இலக்கிய நடையில் துண்டுத்துண்டான சித்திரங்களை, உருவகங்களை ஒரு மொண்டாஜ் போல தொகுக்க முனையும் பிந்தைய கோணங்கி. அது மட்டுமல்லாது, கதையெழுதும் ஆர்வம் கொண்ட பேஸ்புக்கர்களும் பொதுவழக்கில் நேரடியாக கதையை சொல்ல முடியுமா எனப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு எளிய உணர்வை ஏன் இவ்வளவு அலங்காரமாக, பாசாங்காக, முறுக்காக இலக்கிய எழுத்தாளர்கள் முன்வைக்க வேண்டும் எனப் புரியவில்லை. .தா., ஒரு இலக்கிய மீமில் சில சொற்களை வெகுஜனமும் இலக்கிய ஆர்வலர்களும் எவ்வாறு ஒருவிதமாக பயன்படுத்துவார்கள் என ஒரு பட்டியல் வருகிறது: வெகுஜனம்பிடிச்சவங்கஎன்றால் இலக்கியவாதிபேரன்பின் ஆதி ஊற்றுஎன்று சொல்லுகிறார். வெகுஜனம் (குறிப்பாக சமூகவலைதளத்தில்) “மரண அமைதிஎன்றால் இலக்கியவாதியோபேரிரைச்சலின் மௌனம்என்கிறார். எனக்கு இந்த பேரிரைச்சலின் மௌனம் எனும் சொல்லாடல் பிடித்திருக்கிறது. அதில் ஒரு ஆழம், அமைதியில் உள்ள முரணை சுட்டும் தன்மை உள்ளது. ஆனால் இதைப் போல நாம் எதார்த்தத்தில் பேச மாட்டோமே என்பது தான் இலக்கிய வழக்கை பகடி பண்ணுகிறவர்களின் கேள்வி. கதை எழுதுகிறவர்களுக்கு இது ஒரு முக்கியமான கேள்வியாகும்.


நாம் ஒரு கதையை படர்க்கையில் (third person) எழுதும் போது பொதுவழக்கையே பொதுவாக பயன்படுத்துகிறோம் (“காலை புலர்ந்தது. கனிமொழி ஒரு சிறிய கொட்டாவி விட்டபடி தன் கையடக்க கண்ணாடியில் முகத்தைப் பார்த்து உதட்டுச்சாயத்தை பூசினாள்.”) அல்லது ஒரு அந்தரங்கமான, அணுக்கமான தொனியின் பொருட்டு தன்மையில் (first person) எழுதலாம். (“நான் தூங்கி எழுந்த போது பத்து பேர் சேர்ந்து என்னை தலைகீழாக தொங்க போட்டு அடித்து சிதைத்தது போல உடல் வலித்தது. ரொம்ப மிகைப்படுத்துறேனோ? ஆனால் முதுகில் இருந்து முட்டி வரை தனித்தனியாக வலி, உடம்பு முழுக்க ஒரு அலுப்பு என்று சொன்னால் அதில் மிகையில்லை.”) இப்போது கௌரவமான, புறவயமான தொனியில் எழுத வேண்டுமா, கலகலப்பான தங்குதடையற்ற தொனியில் எழுத வேண்டுமா என்பதே நாம் எடுக்க வேண்டிய முடிவு. இதைத்தான் நாம் பொதுவழக்கில் எழுதவா அல்லது பேச்சுவழக்கில் எழுதவா என யோசிக்கிறோம். இதை நான் சொல்லவில்லை, கிறித்துவுக்கு முன் 384-322 ஆண்டுகளிலே இதை அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார் (“கவிதையியல்”).


 தொல்காப்பியர்மரபியலில்செய்யுளுக்கான மொழியை செய்யுள் வழக்கு, பொது வழக்கு என வகுக்கிறார். இந்த பொதுவழக்குக்குள் அன்றாடத்தில் புழங்குகிற, வாசகரால் உடனடியாக அடையாளம் காண முடிகிற சொற்கள், சொல்வடைகள், மரபுத்தொடர்கள் வரும் என்கிறார் அரிஸ்டாட்டில். இலக்கிய (“செய்யுள்”) வழக்கிலோ வழமைக்கு புறம்பான பிரயோகங்கள் (“பேரிசைச்சலின் மௌனம்”), உருவகங்கள், அலங்காரமான சொற்கள் அதிகமாக வரும். எந்த ஒரு தகவலை, உணர்ச்சியை, கருத்தை நீங்கள் எந்த வழக்கில் சொல்கிறீர்களோ அதைப் பொறுத்து அது ஏற்படுத்தும் உணர்வுத் தாக்கம் மாறும் என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். .தா., நீங்கள் ஒரு கிண்டலான, பகடியான, ஜாலியான உணர்வைத் தர பொதுவழக்கில் கொச்சையான சொற்களை பயன்படுத்தலாம். “அவர் தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரமாக நின்றிருந்தார்என்று சொன்னால் அது நகைச்சுவையாகிறது; “அவர் தன் குறியைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரமாக நின்றிருந்தார்என்றால் அது ஒரு சீரியஸான தொனியைப் பெறக் கூடும். இதைத் தொடர்ந்துபோலீஸ்காரர் தன் ரைபிளின் கட்டையால் இருமுறை கழிப்பறையின் கதவைத் தட்டினார். அவர் தன் குறியை மீண்டும் பார்த்தார். சொட்டுச்சொட்டாக திராவகம் போல மூத்திரத் துளிகள். இடுப்பிலும் அடிவயிற்றிலும் கடும் வலி. ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் உயிரே போவது போல இருந்தது.” என்று கதையை நீட்டித்துக் கொண்டு போகலாம். முதலாவது வகை வாக்கியத்தை (“குஞ்சு”) தொடர்ந்து எழுதினால் அது அராத்து எழுதுகிற பாணி பகடிக் கதையாக உருப்பெறும். ஆக, நாம் தேர்வு செய்கிற சொற்களே நமது கதையின் ஆன்மாவை, தொனியை, “எதிர்காலத்தைதீர்மானிக்கிறது


அரிஸ்டாட்டில் தன்கவிதையியல்நூலில் முழுக்க நாடகங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார் என்பதால் இன்பியல், துன்பியல் என நாடகங்களை பகுத்து, அவற்றில் பொதுவழக்கு இன்பியலுக்கு, இலக்கிய வழக்கு துன்பியலுக்கு என்று வரையறுக்கிறார். இன்பியல் என்றால் மொத்த கதையும் இன்பமாக செல்ல வேண்டும் என்பதில்லை. கதையின் நாயகனுக்கு ஒரு பிறழ்வு இருக்கிறது, அதுவோ அதனால் விளையும் துன்பமோ அவனுக்குப் புரியவில்லை; புரியாமலே அவன் தன் வழமையான தவறுகளை அவன் தொடர்ந்து செய்தால் அது இன்பியல் கதை ஆகி விடும் என்கிறார் அரிஸ்டாட்டில். இதை நாம் இன்றைய புனைவுகளுக்கும் பொருத்ததலாம். நான் முதலில் தந்த உதாரணம் இன்பியலுக்கானது (நகைச்சுவை, பகடி). தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து இன்றைய பாமரன், வா.மு கோமு, அராத்து, பிரபு தர்மராஜ் போன்றவர்கள் வரை இன்பியல் எழுத்தாளர்கள். (பு.பி துன்பியலிலும் பின்னி எடுத்தார் தான்.)


 ஆனால் இந்தபிழை உணர்தல்நேரடியாக நிகழ வேண்டியதில்லை. மிக நுட்பமாக தன் பிழையின் விளைவை பிரதான பாத்திரம் புரிந்து கொண்டான், ஆனாலும் அவன் முழுக்க மாறவில்லை என்று காட்டினால் போதும். புதுமைப்பித்தனின்பால்வண்ணம் பிள்ளையில்பிள்ளை மாலை வீட்டுக்குத் திரும்பியதும் தன் மனைவி தனக்குத் தெரியாமல் பசுமாட்டை வாங்கியதை அறிந்ததும்உம்என்கிறார். அடுத்து உடனே கோனாரை அழைத்து வந்து மாட்டை சல்லிசாக விலை பேசி விற்று விடுகிறார். அடுத்து கதையை பு.பி இப்படி முடிக்கிறார்:

சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும்பொழுது மூத்த பையன்அம்மா என் கண்ணுக்குட்டிஎன்று எழுந்து உட்கார்ந்துகொண்டு அழுதான்.

சும்மா கெட சவமே!” என்றார் பால்வண்ணம் பிள்ளை.”


பால்வண்ணம் பிள்ளைக்கு தன் தோல்வி புரிகிறது. அடுத்து அவர் வீரப்பாக செய்கிற அவலச்செயலை அவரது ஆணவம், ஆணாதிக்க மனம் மீதான பகடியாக பு.பி மாற்றுகிறார். மனிதன் சுலபத்தில் மாறுவதில்லை என்று உணர்த்துகிறார். தன்னுடைய சிக்கல்களை அறிந்திருந்தாலும், அந்த பிரக்ஞையுடன் ஒரு மரபான அடையாளத்தை பேணும் நெருக்கடியும் கௌரவமும் அவனை செலுத்திட அவன் இது போல மோசமாக, வேடிக்கையாக நடந்து கொள்கிறான். அவர் பார்த்த நவீன சமூகம் மீதான் ஒரு இடையீடாகவும் இந்த முடிவு அவரது கதையை மாற்றுகிறது


இப்படி கதையின் முடிவில் முக்கிய பாத்திரம் தன் பிறழ்வின் விளைவுகளை அறிந்து தன்னை திருத்தினாலோ அதைத் தொடர்ந்தாலோ கதை நிறைவு பெறும்.


ஆனால் இந்த பிறழ்வின் துன்பத்தை அவர் உணரும் போது, அதனால் வீழ்ச்சியுற்று துயருறும் போது, அதில் இருந்து தன்னை விடுவிக்கத் தெரியாமல் தவிக்கும் போது, முடிவில் அது தன் பிறழ்வினால் ஏற்பட்ட வீழ்ச்சியே, ஆனால் திருத்திக் கொள்ள காலம் கடந்து விட்டது என அறியும் போது கதை  அவலச்சுவையும், இரக்க உணர்வும் கொண்டு வாசகரை / பார்வையாளரை மனம் கசிய வைக்கிறது. வாசகன் தன்னை அந்த வீழ்ந்த நாயகனின் இடத்தில் வைத்துப் பார்த்து மனம் உடைகிறான். இது அவனுக்கு உணர்வுரீதியான நிறைவை அளிக்கிறது. அது இக்கதையை துன்பியல் கதை ஆக்குகிறது. பு.பியின்பிரம்மராஷஸ்இதற்கு ஒரு சிறந்த உதாரணம். துன்ப-இன்பியல் கதைகளில் (tragi-comedy) மேற்சொன்ன விசயங்கள் நடந்து முடிவில் சற்று சுமூகமான ஒரு தீர்வை அல்லது நிறைவை காண முடியும்.  “சாப விமோசனம்கதையை ஓரளவுக்கு இந்த வகைமைக்குள் கொண்டு வரலாம்


நாம் படிக்கும் அத்தனை நவீன கதைகளும் இந்த மூன்று வகைமைகளுக்குள் கச்சிதமாக பொருந்த அவசியமில்லை, ஆனால் பெரும்பாலும் இந்த வகைமைகளின் பிரதான உணர்ச்சிகளைத் தாங்கியே இக்கதைகள் எழுதப்படுகின்றன என்பதால், வடிவ ரீதியாகவும் நான் கனமான கதைகளை துன்பியலாகவும், மென்மையான, லகுவான உணர்ச்சிகளைக் கொண்ட, பகடியான தொனியைக் கொண்ட கதைகளை இன்பியலாகவும் பகுக்க முடியும்.


நமது கதைகள் எவ்வகையானவை என நமக்குத் தெரியும் பட்சத்தில் கதையின் மொழிவழக்கையும் நாம் தேர்வு செய்வது சுலபமாகும். ஒரு புனைவின் கதைத்திட்டம் (plot), கதைமாந்தர், அவர்களுடைய பிழை, அதனாலான சறுக்கல் / வீழ்ச்சி ஆகிய சங்கதிகளுடன் பிண்ணிப் பிணைந்த ஒன்றாகவே அதன் மொழிவழக்கும் இருக்க வேண்டும் என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். ஆகையால், ஒன்று, நாம் ஒரு சிறுகதையை அதன் கதையமைப்பை, முடிவை மனத்தில் கொண்டு எழுதுகிறோம் - அப்போது அதற்கேற்ற மொழிநடையை தேர்வு பண்ணிக் கொள்வோம். அல்லது கதையில் நாம் எழுதும் முதல் வரியே நம்மை மிச்ச கதையை நோக்கி செலுத்தி செல்லும். ஆங்கிலத்தில் இத்தகைய படைப்பாளிகளை pantser என்று அழைக்கிறார்கள். இவர்கள் தமக்கு வந்து விழும் முதல் வரியின் தொனியை உள்ளுணர்ந்து மிச்ச கதையை கௌரமானதாகவோ அங்கதமானதாகவோ கட்டுப்படுத்தி நடத்தி செல்லலாம்


இலக்கிய எழுத்தாளர்கள் ஏன் ஜிலேபி சுற்றுகிறார்கள், ஏன் அவர்கள் நடப்பியலில் இல்லாத சொல்லாடல்களை பயன்படுத்துகிறார்கள் எனும் கேள்விகளை எழுப்புவோர் ஒரு கதை நடப்புலகை அப்படியே பிரதியெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறவர்கள். (இதை அறிந்தோ அறியாமலோ அவர்கள் கோருகிறார்கள்.) ஆனால் நடப்புலகை எந்த கதையும் போலச் செய்வதில்லை என்பதே உண்மை. அதற்கு இரு காரணங்கள்:

) நடப்புலகம் காலம், வெளி சார்ந்து ஒரு ஒழுங்குக்குள் அமைவதில்லை. நிறைய முரண்கள் மலிந்தவையாக நடப்புலகம் உள்ளது. நடப்புலகில் காணும் சம்பவங்களை நினைவுபடுத்தும் விதமாக கதையை அமைப்பதையே எழுத்தாளன் செய்கிறான். அப்போது அவன் தன்னுடைய கோணத்தில், மொழியில், சிந்தனை ஓட்டத்தின் படி நடப்புலகிலிருந்து ஒரு சிறு துளியை எடுத்து தன் நுண்பெருக்கியில் வைத்துப் பார்க்கிறேன். அதை மீளுருவாக்கி அதற்கு ஒரு ஒழுங்கை, ஒரு அர்த்தத்தை கொடுக்கிறான். மிக முக்கியமாக அவன் நடப்புலக செயல்களுக்கு ஒரு முடிவை அளிக்கிறான் (நடப்புலகில் எதுவும்முடிவதில்லை”.) ஒரு ஆழமான அர்த்தத்தை நம்பும்படியாக அவன் நடப்புலகுக்கு அளிக்கையில் அவன் இலக்கிய எழுத்தாளனாகிறான். இந்த அர்த்தமானது இல்லாமல் வேடிக்கையாகவோ நெகிழ்ச்சியாகவோ மீளுருவாக்கம் பண்ணினால் அவன் வணிக எழுத்தாளனாகிறான். மக்கள் ஒரு கதையை கேட்பதன் நோக்கமே வாழ்க்கையை ஒரு அர்த்தத்தை பொருத்திப் பார்க்கத்தான், அதில் அவர்களுக்கு ஒரு தனி இன்பம் கிடைக்கிறது என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார்.


) நடப்புலகமேஉண்மையானதுஅல்ல. அனேமாக நாம் காணும் வெளியுலகம் ஒரு நாடக மேடையை போன்றதே. ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் நாம் ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிகிறோம், ஒரு குறிப்பிட்ட விதமாக பேசுகிறோம், நடந்து கொள்கிறோம், அந்த சந்தர்ப்பம் மாறும் போது நம்முடைய ஆடைகள், பேச்சுவழக்கு, நடத்தை எல்லாம் முழுக்க மாறுகின்றன. நாம் அன்றாடத்தில் சந்திக்கும் மனிதர்களின் நோக்கங்கள், அழுத்தங்கள் அவர்களை நம்முடன் உறவாட வைக்கின்றன. இந்த நோக்கங்களே அன்றாட வாழ்வினுள் ஒரு கதைத்திட்டத்தை உண்டு பண்ணுகிறது. இதை ஒட்டியே நாம் பேசுகிறோம், கை, கால்களை அசைக்கிறோம், சிரிக்கிறோம், கோபப்படுகிறோம், அழுகிறோம், கொட்டாவி விடுகிறோம். ஆக மனிதனுக்கோ வாழ்வுக்கோ ஒரு சாராம்சமான உண்மைத்தன்மை இல்லை. நாம் நமக்கு அளிக்கப்பட்ட களத்தை, சக பாத்திரங்களை, வசனங்களை, ஆடை அணிகளை ஏற்று அவர்களுக்கு / அவற்றுக்கு ஏற்ப பேசுகிறோம், நடந்து கொள்கிறோம். எழுத்தாளன் இந்த நடப்பியல் நாடகத்தை மீளுருவாக்கி ஒரு புனைவின் மீது மற்றொரு புனைவை கட்டியெழுப்புகிறான். ஆக, அவன் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறதா என அக்கறை கொள்ள அவசியமில்லை. வாழ்வெனும் பெரும்புனைவுக்கு நியாயம் சேர்க்கும்படியான ஒரு புனைவு ஒழுங்கு தனது கதையில் இருக்கிறதா என்று மட்டும் அவன் தன்னைக் கேட்டுக் கொண்டால் போதும்; எப்படி அரங்கு, சூழல், சக-மனிதர்கள், மொழி மாறும் போது மனிதர்கள் எப்படி தடாலடியாக மாறுகிறார்களோ, எப்படி அவர்களின் தன்னிலையும் மாறுகிறதோ அவ்வாறே ஒரு கதைக்குள்ளும் இந்த அங்கங்களை மாற்றினால் அதன் தொனி, போக்கு, விளைவு, தாக்கம் மாறும் என அவன் அறிந்து கொண்டால் போதும் என்கிறார் அரிஸ்டாட்டில்


நமது கதைகளுக்குள் பாத்திரங்கள் பேசும் போது அதற்கு இலக்கிய வழக்கையே நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். (வட்டார வழக்கை வலியுறுத்துகிற கதைகளே இதற்கு விதிவிலக்கு.) சில நேரம் இலக்கிய வழக்கையும் வட்டார வழக்கையும் கலந்து ஒரு புது வகையான வாக்கிய நடையை உருவாக்குகிறோம்:

“‘அவனை மாதிரி லாவகமாகவும் துரிதமாகவும் நடக்கிற பயலெ இந்த ஜென்மத்திலே நான் கண்டது இல்லே. ஆள் எப்படி? தங்க விக்கிரகம்! கை அப்படியே கீழே பார்த்துப் போய்க்கிட்டே இருக்குது தரையெத் தொடறாப்லே …” (“ஒரு புளிய மரத்தின் கதை”, சுந்தர ராமசாமி, பக். 22)


“‘என்ன இதுஎன்றாள்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் மந்திரம்’.

எக்ஸைட்டிங்! சொல்லு சொல்லு!’

தனியாக மறைவிடத்தில் சொல்ல வேண்டும்

(…)

அவ, உடனே கிளம்புஎழுந்துவிட்டேன்.

இரு நிமிஷம் இரு. என் கணவனிடம் சொல்லிவிட்டு வருகிறேன். ராபி! ராபி!’ என்று கூப்பிட்டாள்.” (“ப்ரியா”, சுஜாதா, பக். 203)


ஒரு பாத்திரத்தின் மனவோட்டத்தை பதிவு பண்ணும் போது இலக்கிய வழக்கு தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்குகள் அந்தந்த கதைகளுக்கு, வசன பரிவர்த்தனைக்கு எப்படியான தொனி கிடைக்க வேண்டும் எனும் நோக்கிலேயே தேர்வு செய்யப்படுகின்றன. மேலே வரும் வசனங்களை முழுக்க இலக்கிய வழக்கிலோ வட்டார வழக்கிலே எழுத முடியும்; ஆனால் அவ்வாறு செய்யும் போது மேற்சொன்ன நாவல்களின் தொனி, ஸ்டைல் முழுக்க மாறி விடும். சுஜாதாவின் நாவலில் வரும் இந்த வசனங்களை தனியாக எடுத்து செந்தமிழுக்கு நான் மாற்றினால் அவை கல்கியின் பொன்னியின் செல்வனில் வருகிறவை என்று நீங்கள் நினைக்க வாய்ப்புண்டு.

 கோணங்கியும், ஜெ.பி சாணக்யாவும் இந்த புரிதலுடனே தமது மொழிவழக்கை தேர்வு செய்கிறார்கள். அவர்களுடைய பின்நவீன கதைகளின் மொழிவழக்கை மட்டும் மாற்றினாலே அக்கதைகள் முழுக்க வேறு ரூபம் கொண்டு விடும்.


இப்போது நாம் இக்கட்டுரையின் தலைப்பில் வரும் கேள்விக்கு மீள்வோம். தனிமையில் இருக்கும் ஒரு பெண் மிகவும் இச்சை கொள்கிறாள். தாபத்தில் அவளுடைய உடல் தகிக்கிறது. ஆனால் நடப்புலகில் எந்த பெண்ணும் இவ்வுணர்வுகளை நான் இங்கு பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு உணர மாட்டாள், சொல்ல மாட்டாள். “ரொம்ப மூடாயிருக்குஎன்பதே அவர்கள் தம் காதலர்களுடம், கணவன்களிடம் சொல்லும் விதமாக இருக்கும். “மூட்என்பது அப்படி ஒரு தனித்துவமான பொருளை அப்போது கொள்ளுகிறது. இந்த சொல் இருக்கும் போது நாம் ஒரு கதையில்அவள் அன்று காலையில் எழுந்து பார்த்தால் வானம் மூட்டமாக இருந்தது. மழைக்கோள். வீட்டுக்குள் அரை இருள் பெருகி நிற்கிறது. அவளுக்கு செம மூடாக இருந்தது. அவன் இப்போ இங்கே இல்லியேச்சே!”  என்றும் எழுதலாம். “அவளுடல் அந்த குளிர்மையின் நடுவே ஒரு தழலைப் போல் எரிந்தது. ஒரு அணைப்பு, ஒரு ஸ்பரிசம், ஒரு அன்பான சொல். அவள் உதடுகளை மெல்ல திறந்து அவனுடைய பெயரை சொல்லிக் கொண்டாள்.” என்றும் எழுதலாம். இரண்டு விரவணைகளும் கதையை வெவ்வேறு திசைகளில் இழுத்து செல்லும்


இலக்கிய மொழியை பகடி செய்யும் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நுட்பமான வித்தியாசம் இது தான்!


நன்றி: தமிழினி மின்னிதழ், ஜனவரி 30 2022


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...