எலி
நடைபாதையின் பாதாள சாக்கடை மூடி
திறந்து கிடக்கிறது
ஒரு எலியின் சிறிய தலை
எட்டிப் பார்க்கிறது
ஒரு பெரிய குப்பைத் தொட்டி
தளும்பி வழிகிறது
எலி கண்ணிமைக்கும் நேரத்தில்
முழுமையாக தன்னை வெளிப்படுத்துகிறது
அதை விட வேகமாய்
சுற்றுமுற்றும் விழிகளைத் திருப்பி விட்டு
ஒரே பாய்ச்சலில் ஒரு துண்டு சப்பாத்தியை எடுத்துக் கொண்டு
உறைவிடத்துக்குத் திரும்ப
நினைக்கிறது
கடைவாயிலில் ஒரு பழுப்பு நிற தெய்வம்
மேலே இருந்து நோட்டமிடுகிறது
எலி மீண்டும் துரிதமாக
பின்னால் கண்களை ஓட்டி விட்டு
தன் சிறிய கால்களால்
சாக்கடைக் குழாய்க்குள் திரும்புகிறது
தெய்வம்
மிக மெதுவாக நிதானமாக பதமாக
ஒவ்வொரு படியாக தாவி இறங்குகிறது
ஓரிடத்தை தேர்வு செய்து
உட்கார்கிறது
“நானே இந்த படிக்கட்டு,
நானே இந்த நடைபாதை
நானே இந்த குப்பைத்தொட்டி,
நானே இந்த தெருமுனை,
நானே இங்கு கலகலக்கும் ஜனத்தொகை
இங்கு ஏமாறுகிறவர்கள் ஏமாற்றுகிறவர்களும்
நானே
இங்கு சாலையோரம் தேங்கிய நீரில்
மினுங்குகிற நட்சத்திரங்களும்,
நானே
அதற்கு கீழும்
அதற்கு மேலும்
ஒளிரும் தெருவிளக்கும் நானே
நானே ஒவ்வொன்றையும் இங்கு
செலுத்தும் ஆற்றல்
நானே ஒவ்வொன்றாலும்
செலுத்தப்படும் ஆற்றல்
நானே வாழ்தல்
நானே மரணம்
நானே சர்வம்
நானே இன்மை”
அதற்கு உட்கார்ந்து முதுகுவலிக்கிறது
அது அழகாக படுத்துக் கொண்டு
தன் நீட்டின முன்னங்கால்களில்
தலையை வைக்கிறது
நிமிடங்கள் சொட்டிச் சொட்டித்
தளும்புகின்றன
எலி இருட்டுக்குள் இருந்து
தன் கண்கள் மட்டும் உயர
நகரும் கூண்டின் கம்பிகளைப் போல
பின்னிப் பின்னி கடந்து போகும்
பல கால்களின் நடுவே கிடக்கும்
சப்பாத்தித் துண்டை பார்த்தபடி இருக்கிறது
தெய்வம் கொட்டாவி விடுகிறது
அது கவனமாக பார்த்தபடி இருக்கிறது
அதே சமயம் மற்றொரு கோணத்தில்
தெய்வம் அசையாமல் இருக்கிறது
தெய்வம் காலாதீதமாக இருக்கிறது
இதில் எதை நம்புவது
என எலிக்குப் புரியவில்லை
இத்தனை நூறு நூறு கால்களில்
ஒன்று கூட எப்படி என் உணவை
மிதிக்காமல் இருக்கிறது?
இதை எப்படி நம்புவது?
எலிக்குப் புரியவில்லை
வயிற்றில் பசியின் கனலுடன்
அது எனக் காத்திருக்கிறது
எதிரே நிறைய மனிதர்கள்
நீரில் மிதக்கும் எண்ணெய்யில் தெரியும்
வண்ணங்களைப் போலத் தெரிகிறார்கள்
அவர்களில் ஒருவர்
ஒரு குடியிருப்பு வாயிற் கதவைப்
பார்த்தபடி நிற்கிறார்
வெளியே ஒரு குடும்பம் வருகிறது
பைக்கில் கணவர்,
குழந்தையுடன் மனைவி இருக்கையின் பின்னே
ஏறப் போகிறார்
அந்த மனிதரின் மனைவி
இவரிடம் சென்று
தன் ஊர், பெயர் விபரங்களைச் சொல்லி
தன் கணவருக்கு அங்கு
காவலாளி வேலை கிடைக்குமா
எனக் கேட்கிறார்.
அடுத்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன்
சாலை விளிம்பில்
குத்திட்டு அமர்ந்து கொள்கிறார்.
மழை இடைவிடாமல் பேசுகிறது
ஒவ்வொருவர் தோளிலும் தலையிலும் முதுகிலும்
தட்டித் தட்டிப் பேசுகிறது
ஒரு சாட் கடையில்
தேநீர்க் கடை வாசலில்
ஏடிஎம்முக்கு முன்னால்
வரிசை வரிசையாக
மக்கள் முன்னேறுகிறார்கள்
ஒரு வயசாளியின் நீண்ட கை
நின்று நிச்சலமாக
பிச்சை கேட்கிறது
ஒரு மதுக்கடையின் கல்லா முன்
அதே கை, அதே முகம்,
கல்லா,
அதில் பணத்தை எண்ணும் மனிதனின்
முகத்தின் தீவிரம்
அசையாமல் நீண்ட நேரமாக
எலி இனிமேல் வரவே போவதில்லை
என தெய்வம் நினைக்கிறது
அதற்காக தான் நகரத் தேவையில்லை
வாயை முழுமையாகத் திறந்து
மெதுவாக கொட்டாவி விடுகிறது!
தெய்வம் நகர்ந்து விட்டது
என எலி நம்புகிறது
அது துணிச்சலாக வெளியே வருகிறது!
வாழ்க்கை உயிர்த்தெழுகிறது!

Comments