முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எலி

 


எலி


நடைபாதையின் பாதாள சாக்கடை மூடி 

திறந்து கிடக்கிறது

ஒரு எலியின் சிறிய தலை 

எட்டிப் பார்க்கிறது

ஒரு பெரிய குப்பைத் தொட்டி

தளும்பி வழிகிறது

எலி கண்ணிமைக்கும் நேரத்தில் 

முழுமையாக தன்னை வெளிப்படுத்துகிறது

அதை விட வேகமாய் 

சுற்றுமுற்றும் விழிகளைத் திருப்பி விட்டு

ஒரே பாய்ச்சலில் ஒரு துண்டு சப்பாத்தியை எடுத்துக் கொண்டு

உறைவிடத்துக்குத் திரும்ப

நினைக்கிறது

கடைவாயிலில் ஒரு பழுப்பு நிற தெய்வம்

மேலே இருந்து நோட்டமிடுகிறது

எலி மீண்டும் துரிதமாக

பின்னால் கண்களை ஓட்டி விட்டு

தன் சிறிய கால்களால்

சாக்கடைக் குழாய்க்குள் திரும்புகிறது

தெய்வம்

மிக மெதுவாக நிதானமாக பதமாக 

ஒவ்வொரு படியாக தாவி இறங்குகிறது

ஓரிடத்தை தேர்வு செய்து

உட்கார்கிறது

நானே இந்த படிக்கட்டு

நானே இந்த நடைபாதை

நானே இந்த குப்பைத்தொட்டி,

நானே இந்த தெருமுனை,

நானே இங்கு கலகலக்கும் ஜனத்தொகை

இங்கு ஏமாறுகிறவர்கள் ஏமாற்றுகிறவர்களும்

நானே

இங்கு சாலையோரம் தேங்கிய நீரில்

மினுங்குகிற நட்சத்திரங்களும்,

நானே

 அதற்கு கீழும்

அதற்கு மேலும்

ஒளிரும் தெருவிளக்கும் நானே


நானே ஒவ்வொன்றையும் இங்கு

 செலுத்தும் ஆற்றல்

நானே ஒவ்வொன்றாலும்

 செலுத்தப்படும் ஆற்றல்


நானே வாழ்தல்

நானே மரணம்

நானே சர்வம்

நானே இன்மை


அதற்கு உட்கார்ந்து முதுகுவலிக்கிறது

அது அழகாக படுத்துக் கொண்டு

தன் நீட்டின முன்னங்கால்களில்

தலையை வைக்கிறது


நிமிடங்கள் சொட்டிச் சொட்டித்

தளும்புகின்றன

எலி இருட்டுக்குள் இருந்து

தன் கண்கள் மட்டும் உயர

நகரும் கூண்டின் கம்பிகளைப் போல

பின்னிப் பின்னி கடந்து போகும்

 பல கால்களின் நடுவே கிடக்கும்

சப்பாத்தித் துண்டை பார்த்தபடி இருக்கிறது

 தெய்வம் கொட்டாவி விடுகிறது

அது கவனமாக பார்த்தபடி இருக்கிறது

அதே சமயம் மற்றொரு கோணத்தில்

தெய்வம் அசையாமல் இருக்கிறது

தெய்வம் காலாதீதமாக இருக்கிறது

இதில் எதை நம்புவது

என எலிக்குப் புரியவில்லை


இத்தனை நூறு நூறு கால்களில்

ஒன்று கூட எப்படி என் உணவை 

மிதிக்காமல் இருக்கிறது?

இதை எப்படி நம்புவது?

எலிக்குப் புரியவில்லை

வயிற்றில் பசியின் கனலுடன்

அது எனக் காத்திருக்கிறது


எதிரே நிறைய மனிதர்கள்

நீரில் மிதக்கும் எண்ணெய்யில் தெரியும்

வண்ணங்களைப் போலத் தெரிகிறார்கள்

அவர்களில் ஒருவர்

ஒரு குடியிருப்பு வாயிற் கதவைப்

 பார்த்தபடி நிற்கிறார்

வெளியே ஒரு குடும்பம் வருகிறது

பைக்கில் கணவர்

குழந்தையுடன் மனைவி இருக்கையின் பின்னே

ஏறப் போகிறார்

அந்த மனிதரின் மனைவி 

இவரிடம் சென்று 

தன் ஊர், பெயர் விபரங்களைச் சொல்லி

தன் கணவருக்கு அங்கு

காவலாளி வேலை கிடைக்குமா

எனக் கேட்கிறார்.

அடுத்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன்

சாலை விளிம்பில்

 குத்திட்டு அமர்ந்து கொள்கிறார்.


மழை இடைவிடாமல் பேசுகிறது

ஒவ்வொருவர் தோளிலும் தலையிலும் முதுகிலும்

தட்டித் தட்டிப் பேசுகிறது


ஒரு சாட் கடையில்

தேநீர்க் கடை வாசலில்

ஏடிஎம்முக்கு முன்னால்

வரிசை வரிசையாக

மக்கள் முன்னேறுகிறார்கள்

ஒரு வயசாளியின் நீண்ட கை

நின்று நிச்சலமாக

 பிச்சை கேட்கிறது

ஒரு மதுக்கடையின் கல்லா முன்


அதே கை, அதே முகம்

கல்லா,

அதில் பணத்தை எண்ணும் மனிதனின்

முகத்தின் தீவிரம்

அசையாமல் நீண்ட நேரமாக


எலி இனிமேல் வரவே போவதில்லை

என தெய்வம் நினைக்கிறது

அதற்காக தான் நகரத் தேவையில்லை

வாயை முழுமையாகத் திறந்து

மெதுவாக கொட்டாவி விடுகிறது!

தெய்வம் நகர்ந்து விட்டது

என எலி நம்புகிறது

அது துணிச்சலாக வெளியே வருகிறது!


வாழ்க்கை உயிர்த்தெழுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...