Skip to main content

எலி

 


எலி


நடைபாதையின் பாதாள சாக்கடை மூடி 

திறந்து கிடக்கிறது

ஒரு எலியின் சிறிய தலை 

எட்டிப் பார்க்கிறது

ஒரு பெரிய குப்பைத் தொட்டி

தளும்பி வழிகிறது

எலி கண்ணிமைக்கும் நேரத்தில் 

முழுமையாக தன்னை வெளிப்படுத்துகிறது

அதை விட வேகமாய் 

சுற்றுமுற்றும் விழிகளைத் திருப்பி விட்டு

ஒரே பாய்ச்சலில் ஒரு துண்டு சப்பாத்தியை எடுத்துக் கொண்டு

உறைவிடத்துக்குத் திரும்ப

நினைக்கிறது

கடைவாயிலில் ஒரு பழுப்பு நிற தெய்வம்

மேலே இருந்து நோட்டமிடுகிறது

எலி மீண்டும் துரிதமாக

பின்னால் கண்களை ஓட்டி விட்டு

தன் சிறிய கால்களால்

சாக்கடைக் குழாய்க்குள் திரும்புகிறது

தெய்வம்

மிக மெதுவாக நிதானமாக பதமாக 

ஒவ்வொரு படியாக தாவி இறங்குகிறது

ஓரிடத்தை தேர்வு செய்து

உட்கார்கிறது

நானே இந்த படிக்கட்டு

நானே இந்த நடைபாதை

நானே இந்த குப்பைத்தொட்டி,

நானே இந்த தெருமுனை,

நானே இங்கு கலகலக்கும் ஜனத்தொகை

இங்கு ஏமாறுகிறவர்கள் ஏமாற்றுகிறவர்களும்

நானே

இங்கு சாலையோரம் தேங்கிய நீரில்

மினுங்குகிற நட்சத்திரங்களும்,

நானே

 அதற்கு கீழும்

அதற்கு மேலும்

ஒளிரும் தெருவிளக்கும் நானே


நானே ஒவ்வொன்றையும் இங்கு

 செலுத்தும் ஆற்றல்

நானே ஒவ்வொன்றாலும்

 செலுத்தப்படும் ஆற்றல்


நானே வாழ்தல்

நானே மரணம்

நானே சர்வம்

நானே இன்மை


அதற்கு உட்கார்ந்து முதுகுவலிக்கிறது

அது அழகாக படுத்துக் கொண்டு

தன் நீட்டின முன்னங்கால்களில்

தலையை வைக்கிறது


நிமிடங்கள் சொட்டிச் சொட்டித்

தளும்புகின்றன

எலி இருட்டுக்குள் இருந்து

தன் கண்கள் மட்டும் உயர

நகரும் கூண்டின் கம்பிகளைப் போல

பின்னிப் பின்னி கடந்து போகும்

 பல கால்களின் நடுவே கிடக்கும்

சப்பாத்தித் துண்டை பார்த்தபடி இருக்கிறது

 தெய்வம் கொட்டாவி விடுகிறது

அது கவனமாக பார்த்தபடி இருக்கிறது

அதே சமயம் மற்றொரு கோணத்தில்

தெய்வம் அசையாமல் இருக்கிறது

தெய்வம் காலாதீதமாக இருக்கிறது

இதில் எதை நம்புவது

என எலிக்குப் புரியவில்லை


இத்தனை நூறு நூறு கால்களில்

ஒன்று கூட எப்படி என் உணவை 

மிதிக்காமல் இருக்கிறது?

இதை எப்படி நம்புவது?

எலிக்குப் புரியவில்லை

வயிற்றில் பசியின் கனலுடன்

அது எனக் காத்திருக்கிறது


எதிரே நிறைய மனிதர்கள்

நீரில் மிதக்கும் எண்ணெய்யில் தெரியும்

வண்ணங்களைப் போலத் தெரிகிறார்கள்

அவர்களில் ஒருவர்

ஒரு குடியிருப்பு வாயிற் கதவைப்

 பார்த்தபடி நிற்கிறார்

வெளியே ஒரு குடும்பம் வருகிறது

பைக்கில் கணவர்

குழந்தையுடன் மனைவி இருக்கையின் பின்னே

ஏறப் போகிறார்

அந்த மனிதரின் மனைவி 

இவரிடம் சென்று 

தன் ஊர், பெயர் விபரங்களைச் சொல்லி

தன் கணவருக்கு அங்கு

காவலாளி வேலை கிடைக்குமா

எனக் கேட்கிறார்.

அடுத்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன்

சாலை விளிம்பில்

 குத்திட்டு அமர்ந்து கொள்கிறார்.


மழை இடைவிடாமல் பேசுகிறது

ஒவ்வொருவர் தோளிலும் தலையிலும் முதுகிலும்

தட்டித் தட்டிப் பேசுகிறது


ஒரு சாட் கடையில்

தேநீர்க் கடை வாசலில்

ஏடிஎம்முக்கு முன்னால்

வரிசை வரிசையாக

மக்கள் முன்னேறுகிறார்கள்

ஒரு வயசாளியின் நீண்ட கை

நின்று நிச்சலமாக

 பிச்சை கேட்கிறது

ஒரு மதுக்கடையின் கல்லா முன்


அதே கை, அதே முகம்

கல்லா,

அதில் பணத்தை எண்ணும் மனிதனின்

முகத்தின் தீவிரம்

அசையாமல் நீண்ட நேரமாக


எலி இனிமேல் வரவே போவதில்லை

என தெய்வம் நினைக்கிறது

அதற்காக தான் நகரத் தேவையில்லை

வாயை முழுமையாகத் திறந்து

மெதுவாக கொட்டாவி விடுகிறது!

தெய்வம் நகர்ந்து விட்டது

என எலி நம்புகிறது

அது துணிச்சலாக வெளியே வருகிறது!


வாழ்க்கை உயிர்த்தெழுகிறது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...