Skip to main content

திராவிட இயக்க அரசியலும் தலித்துகளின் கோபமும்

 




தலித் ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் போராளிகளில் ஒரு பகுதியினர் திராவிட இயக்கத்தை தொடர்ந்து விமர்சித்தும் கேலி செய்தும் சாடியும் வருவதை அறிவோம். அதற்கான காரணங்களின் நியாயத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இது ஒரு சுருக்கமான மீள்கூறல் தான்.


  1. அதிகாரம், பொருளாதாரம், நிலவுடைமை ஆகியவற்றில் தலித்துகள் தொடர்ந்து நேரடியாக ஒடுக்கப்படுவது பிராமணர்களால் அல்ல, மத்திய சாதிகளாலே. இந்த சாதியமைப்பின் மூலகர்த்தா யாரெனும் விவாதத்துக்கு தொலைநோக்கு பயன்கள் இருக்கலாம், ஆனால் அன்றாடத்தில், உடனடி விவகாரங்களில் இல்லை.

அதனாலே மற்ற சமூகங்களைப் போன்றே தம்மையும் இந்த அமைப்புக்குள் இருந்து ஒன்று திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படித்தான் முன்னேற முடியும் என்கிறார்கள். அப்படித் திரட்டிக் கொள்ள உந்துசக்தியாக எது இருக்கும்? பொருளாதாரத் தேவைகள், லாபங்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒரு பொது எதிரி

தமிழகத்தில் அப்படித்தான் மற்றமையை ஒன்று - பிராமணர்கள், ஆரிய மதம், வட இந்திய ஆதிக்கம், இந்தி என - உருவாக்கப்பட்டு ஒரு பேரியக்கம் உருவாக்கப்பட்டது. ஒரு இயக்கத்துக்கு தான் யாரென அடையாளப்படுத்த பொது எதிரி அவசியம். சாதி உள்ளிருந்து கொல்ல வேண்டிய எதிரி. ஆனால் அப்படி அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதே சிக்கல். எப்படி அன்று பிராமணர்கள், வைதீகர்கள், இந்தி, இந்திய தேசியவாத ஆதரவாளரக்ள் பிராமணரல்லாதோருக்கு எதிரிகளாகத் தேவைப்பட்டார்களோ அவ்வாறே இன்று தலித்துகளில் ஒரு பகுதியினருக்கு மத்திய சாதிகள் தேவைப்படுகிறார்கள். இருமை இல்லாமல் இயக்கங்கள் உருவாவது சிரமம்.


மீண்டும் சொல்கிறேன் - இப்படி இருமைகள் உருவாவதற்கான எல்லா வரலாற்று, நடைமுறை நியாயங்களும் இருக்கும். அந்த எதார்த்தத்தின் மீது நின்று தான் இந்த அரசியலை ஒரு கூட்டம் பேச முடியும்.


இன்னொரு விசயம் - இந்த துவேசமானது பண்பாட்டளவில் தான் இருக்கும். பிராமணர்கள் மீது பொதுமக்கள் இன்றும் அன்புடன், மரியாதையுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் மனதுக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது, அது பண்பாட்டிலும், அரசியலிலும் மட்டும் உயிர்கொள்ளுகிறது. அந்த தளங்களில் முடிந்தளவுக்கு பிராமண எதிர்ப்பு வெளிப்படுகிறது, அதே நேரத்தில் பிராமண பிரியமும் மதம், வழிபாடு, சமஸ்கிருதமயமாக்கல் எனும் வடிவங்களில் தழைக்கிறது. தலித்-மத்திய சாதி எதிரிடை ஒன்று வலுவாக தோன்றும் பட்சத்தில் அதுவும் இப்படியே இருக்கும்.


2) எதிர்காலத்துக்கான - என்றோ வரப்போகிற ஒரு மாற்றத்துக்கான - லட்சியமா, இன்றைக்கான முன்னேற்ற மார்க்கமா என்றால் பெரும்பாலானோர் பின்னதைத் தான் தேர்வார்கள். தலித்துகளுக்கு இடமளிப்பதில், அங்கீகாரம், பொறுப்பு, அதிகாரம் வழங்குவதில் பிராமணர்கள் முதலிலும், இந்துத்துவர்கள் அடுத்தும் முன்னிலை வகிக்கிறார்கள். இதன் அரசியல் தேவைகள் வேறு. ஆனால் எதார்த்தம் இதுவே. மத்திய சாதிகளால் ஆன பண்பாட்டு இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், கட்சிகளில் இந்தளவுக்கு வரவேற்பு தலித்துகளுக்கு கிடைப்பதில்லை. ஆக இயல்பாகவே அவர்களில் ஒரு பகுதியினர் பிராமணர்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் பின்னால் திரள விரும்புகிறார்கள். அவர்களுடைய சமூகத்தில் இருந்து வேகமாக இந்துத்துவ கட்சியில் சில அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் தோன்றுவதைக் கண்டு பெருமிதம் கொள்ளுகிறார்கள். இந்த இடைவெளியை பாஜக சிறப்பாக அடையாளம் கண்டு பயன்படுத்தி சில மாநிலங்களில் ஏற்கனவே பெரும் கட்சிகளை காலி பண்ணி விட்டது. அவர்களுடைய சோஷியல் என்ஜினியரிங்கைக் கண்டு அஞ்சும் அதே வேளையில் இக்கட்சிகள் அதற்கு ஈடுகொடுக்கும் காரியங்களை பண்ணவும் தயாராக இல்லை


3) இப்போதைக்கு திமுக செய்ய வேண்டியது அது ஒரு மத்திய சாதிகளின் கட்சி எனும் பிம்பத்தை மாற்றுவது. அதற்கான சின்னச்சின்ன முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். ஆனால் அவை போதாது. அமைச்சரவையில் தலித்துகளின் பிரதிநுத்துவத்தை அதிகப்படுத்துவது, முக்கிய பொறுப்புகளில் அவர்களை அமர்த்துவதும், அதை பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதும் அவசியம்


4) இந்த உடனடி அதிகாரம் நாடும் தலித்துகள் வி.சி.கவை அதிகமாகச் சாடுவதும், நாங்கள் எப்போதும் சாதி ஒழிப்பைப் பேசி பத்தினித்தனத்தை நிரூபிக்கத் தேவையில்லை எனக் கொந்தளிப்பதும் மேற்சொன்ன இருமையை கட்டமைக்கத் தான். இது ஒரு ஆபத்தான அரசியல். தலித் vs மத்திய சாதிகள் எனும் இருமை அவர்களுக்கு பலனளிக்கும். ஆனால் தலித்துகள் vs தலித்துகள் எனும் உள்யுத்தம் அவர்களையும் மத்திய சாதியினரையும் ஒருசேர பலவீனப்படுத்தும். பாஜக தலித்துகளை தனித்தனியாக உடைத்து வாக்குவங்கியாக்க முயன்று தமிழகத்தையும் பலவீனப்படுத்தும். அதற்குப் பதிலாக ஒன்றிணைந்து ஒரே திரளாக இயங்குவதும், தமக்குள் இருக்கும் முரண்களை உள்வட்டங்களில் பேசித் தீர்ப்பதுமே சரியானது


5) மற்ற சாதியினரைப் போல் தலித்துகளும் வெளிப்படையாகத் திரண்டு முன்னேற்றத்துக்கு முயல்வது (வணிகத்தில், கலையில், இயக்கங்களில்) பாராட்டத்தக்க ஒன்றே. அதே நேரத்தில் தேவையான நேரத்தில் பிரிந்தும் தேவைப்படும் போது ஒன்றிணைந்தும் அரசியல் செய்வதே அவர்களை வலிமையான சக்தியாக்கும். கடந்த காலங்களில் மத்திய சாதிகளின் அரசியலும் அது தானே. இதை இந்த எதிர்-வி.சி., இந்துத்துவ ஆதரவு, இந்துத்துவத்தையும்-திராவிடத்தையும்-ஒருசேர-எதிர்க்கிறோம் எனும் பல பிரிவுகளை சேர்ந்த தலித் ஆர்வலர்கள், போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...