தலித் ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் போராளிகளில் ஒரு பகுதியினர் திராவிட இயக்கத்தை தொடர்ந்து விமர்சித்தும் கேலி செய்தும் சாடியும் வருவதை அறிவோம். அதற்கான காரணங்களின் நியாயத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இது ஒரு சுருக்கமான மீள்கூறல் தான்.
- அதிகாரம், பொருளாதாரம், நிலவுடைமை ஆகியவற்றில் தலித்துகள் தொடர்ந்து நேரடியாக ஒடுக்கப்படுவது பிராமணர்களால் அல்ல, மத்திய சாதிகளாலே. இந்த சாதியமைப்பின் மூலகர்த்தா யாரெனும் விவாதத்துக்கு தொலைநோக்கு பயன்கள் இருக்கலாம், ஆனால் அன்றாடத்தில், உடனடி விவகாரங்களில் இல்லை.
அதனாலே மற்ற சமூகங்களைப் போன்றே தம்மையும் இந்த அமைப்புக்குள் இருந்து ஒன்று திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படித்தான் முன்னேற முடியும் என்கிறார்கள். அப்படித் திரட்டிக் கொள்ள உந்துசக்தியாக எது இருக்கும்? பொருளாதாரத் தேவைகள், லாபங்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒரு பொது எதிரி.
தமிழகத்தில் அப்படித்தான் மற்றமையை ஒன்று - பிராமணர்கள், ஆரிய மதம், வட இந்திய ஆதிக்கம், இந்தி என - உருவாக்கப்பட்டு ஒரு பேரியக்கம் உருவாக்கப்பட்டது. ஒரு இயக்கத்துக்கு தான் யாரென அடையாளப்படுத்த பொது எதிரி அவசியம். சாதி உள்ளிருந்து கொல்ல வேண்டிய எதிரி. ஆனால் அப்படி அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதே சிக்கல். எப்படி அன்று பிராமணர்கள், வைதீகர்கள், இந்தி, இந்திய தேசியவாத ஆதரவாளரக்ள் பிராமணரல்லாதோருக்கு எதிரிகளாகத் தேவைப்பட்டார்களோ அவ்வாறே இன்று தலித்துகளில் ஒரு பகுதியினருக்கு மத்திய சாதிகள் தேவைப்படுகிறார்கள். இருமை இல்லாமல் இயக்கங்கள் உருவாவது சிரமம்.
மீண்டும் சொல்கிறேன் - இப்படி இருமைகள் உருவாவதற்கான எல்லா வரலாற்று, நடைமுறை நியாயங்களும் இருக்கும். அந்த எதார்த்தத்தின் மீது நின்று தான் இந்த அரசியலை ஒரு கூட்டம் பேச முடியும்.
இன்னொரு விசயம் - இந்த துவேசமானது பண்பாட்டளவில் தான் இருக்கும். பிராமணர்கள் மீது பொதுமக்கள் இன்றும் அன்புடன், மரியாதையுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் மனதுக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது, அது பண்பாட்டிலும், அரசியலிலும் மட்டும் உயிர்கொள்ளுகிறது. அந்த தளங்களில் முடிந்தளவுக்கு பிராமண எதிர்ப்பு வெளிப்படுகிறது, அதே நேரத்தில் பிராமண பிரியமும் மதம், வழிபாடு, சமஸ்கிருதமயமாக்கல் எனும் வடிவங்களில் தழைக்கிறது. தலித்-மத்திய சாதி எதிரிடை ஒன்று வலுவாக தோன்றும் பட்சத்தில் அதுவும் இப்படியே இருக்கும்.
2) எதிர்காலத்துக்கான - என்றோ வரப்போகிற ஒரு மாற்றத்துக்கான - லட்சியமா, இன்றைக்கான முன்னேற்ற மார்க்கமா என்றால் பெரும்பாலானோர் பின்னதைத் தான் தேர்வார்கள். தலித்துகளுக்கு இடமளிப்பதில், அங்கீகாரம், பொறுப்பு, அதிகாரம் வழங்குவதில் பிராமணர்கள் முதலிலும், இந்துத்துவர்கள் அடுத்தும் முன்னிலை வகிக்கிறார்கள். இதன் அரசியல் தேவைகள் வேறு. ஆனால் எதார்த்தம் இதுவே. மத்திய சாதிகளால் ஆன பண்பாட்டு இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், கட்சிகளில் இந்தளவுக்கு வரவேற்பு தலித்துகளுக்கு கிடைப்பதில்லை. ஆக இயல்பாகவே அவர்களில் ஒரு பகுதியினர் பிராமணர்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் பின்னால் திரள விரும்புகிறார்கள். அவர்களுடைய சமூகத்தில் இருந்து வேகமாக இந்துத்துவ கட்சியில் சில அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் தோன்றுவதைக் கண்டு பெருமிதம் கொள்ளுகிறார்கள். இந்த இடைவெளியை பாஜக சிறப்பாக அடையாளம் கண்டு பயன்படுத்தி சில மாநிலங்களில் ஏற்கனவே பெரும் கட்சிகளை காலி பண்ணி விட்டது. அவர்களுடைய சோஷியல் என்ஜினியரிங்கைக் கண்டு அஞ்சும் அதே வேளையில் இக்கட்சிகள் அதற்கு ஈடுகொடுக்கும் காரியங்களை பண்ணவும் தயாராக இல்லை.
3) இப்போதைக்கு திமுக செய்ய வேண்டியது அது ஒரு மத்திய சாதிகளின் கட்சி எனும் பிம்பத்தை மாற்றுவது. அதற்கான சின்னச்சின்ன முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். ஆனால் அவை போதாது. அமைச்சரவையில் தலித்துகளின் பிரதிநுத்துவத்தை அதிகப்படுத்துவது, முக்கிய பொறுப்புகளில் அவர்களை அமர்த்துவதும், அதை பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதும் அவசியம்.
4) இந்த உடனடி அதிகாரம் நாடும் தலித்துகள் வி.சி.கவை அதிகமாகச் சாடுவதும், நாங்கள் எப்போதும் சாதி ஒழிப்பைப் பேசி பத்தினித்தனத்தை நிரூபிக்கத் தேவையில்லை எனக் கொந்தளிப்பதும் மேற்சொன்ன இருமையை கட்டமைக்கத் தான். இது ஒரு ஆபத்தான அரசியல். தலித் vs மத்திய சாதிகள் எனும் இருமை அவர்களுக்கு பலனளிக்கும். ஆனால் தலித்துகள் vs தலித்துகள் எனும் உள்யுத்தம் அவர்களையும் மத்திய சாதியினரையும் ஒருசேர பலவீனப்படுத்தும். பாஜக தலித்துகளை தனித்தனியாக உடைத்து வாக்குவங்கியாக்க முயன்று தமிழகத்தையும் பலவீனப்படுத்தும். அதற்குப் பதிலாக ஒன்றிணைந்து ஒரே திரளாக இயங்குவதும், தமக்குள் இருக்கும் முரண்களை உள்வட்டங்களில் பேசித் தீர்ப்பதுமே சரியானது.
5) மற்ற சாதியினரைப் போல் தலித்துகளும் வெளிப்படையாகத் திரண்டு முன்னேற்றத்துக்கு முயல்வது (வணிகத்தில், கலையில், இயக்கங்களில்) பாராட்டத்தக்க ஒன்றே. அதே நேரத்தில் தேவையான நேரத்தில் பிரிந்தும் தேவைப்படும் போது ஒன்றிணைந்தும் அரசியல் செய்வதே அவர்களை வலிமையான சக்தியாக்கும். கடந்த காலங்களில் மத்திய சாதிகளின் அரசியலும் அது தானே. இதை இந்த எதிர்-வி.சி.க, இந்துத்துவ ஆதரவு, இந்துத்துவத்தையும்-திராவிடத்தையும்-ஒருசேர-எதிர்க்கிறோம் எனும் பல பிரிவுகளை சேர்ந்த தலித் ஆர்வலர்கள், போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments