Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தமிழ் விக்கியும் வெட்டி அங்கலாய்ப்புகளும்



தமிழ் விக்கி பற்றி இவ்வளவு அங்கலாய்ப்புகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் படித்தவரையில் நேர்த்தியாகவே உள்ளது. மூன்று குறைகளை அவர்கள் களைய வேண்டும்:


1) கருத்துக்களை மேற்கோள் காட்டும் போது ஜெ.மோவின் குழுவுக்கு வெளியே எழுதப்பட்டுள்ள விமர்சனக் கருத்துக்களையும் குறிப்பிட வேண்டும். இப்போதைக்கு ஒரு குறுங்குழுவின் echo chamber போல உள்ளது. இதை மாற்ற வேண்டும். (இப்படி கொண்டு வருவதே நோக்கம் என சிலர் கூறுவதையும் கவனிக்கிறேன். ஆனால் ஒரு கோரிக்கையாக கேட்டுத்தான் வைப்போமே!)


2) குறிப்புதவி பட்டியல் இல்லை. ஹைப்பர் லிங்குகள் இல்லை. இவற்றையும் சேர்ப்பது அவசியம். ஆய்வு மாணவர்களிடம் நான் விக்கியில் உள்ள ஹைப்பர் லிங்குகளை கிளிக் செய்து படிக்கக் கேட்பேன். அது இல்லாவிடில் இக்குறிப்புகள் வலைப்பூக்களைப் போல ஆகி விடும்.


3) ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் மட்டுமே குறிப்புகள் உள்ளன. இதைத் தவிர்த்து ஒரு படைப்பு எவ்வகையை சேர்ந்தது, அதன் இயல்புகள் என்னவென வரையறுப்பது சிறப்பாக இருக்கும்


கடைசியாக, தமிழில் பல இலக்கிய நடவடிக்கைகள் தத்தம் குழுக்களின் சார்புகளின் அடிப்படையிலே நடந்துள்ளன. சி.சு செல்லப்பா, .நா.சு காலம் முதற்கொண்டே அது தான் நிலைமை. சொல்லப் போனால் தமிழில் சிறுபத்திரிகை இலக்கிய விமர்சனம் என்பது 90% மென் வலதுசாரித்தன்மை கொண்டதே. (அதை நடத்துகிறவர்களில் பெரும்பகுதியினர் காந்தியவாதிகள்.) அந்த அரசியலை நாம் விமர்சித்தும் வருகிறோம். புறவயமான விமர்சனங்களை, இலக்கிய பார்வைகளை நான் தமிழில் இதுவரை பொதுவெளியில் கண்டதே இல்லை. ஆக, இந்த தமிழ் விக்கியிலும் மென் வலதுசாரி பண்பாட்டரசியல், ஜெ.மோவின் இலக்கிய கொள்கைகள் வெளிப்படும், அதைத் தவிர்க்க முடியாது


அரசியலற்ற பண்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. அது இடதுசாரித்தன்மை கொண்டதாக குறைந்த சதவீதத்திலும், வலதுசாரித்தன்மை கொண்டதாக பெரும்பகுதியும் இருக்கும். மேற்கிலும் இதுவே எதார்த்தம். ஏனெனில் நமது பண்பாட்டை பின்னணியில் இருந்து இயக்குவது முதலீட்டியமும் மதமும் தானே


நம்பிக்கை இல்லையெனில் நமது இலக்கிய விமர்சகர்களின் பின்னணியை போய் பாருங்கள். பெரும்பாலானவர்கள் தீவிர மதவாதிகள், சாதியவாதிகள். கோயில், தேவாலயம், தொழுகை என விழுந்து விழுந்து புரள்கிறவர்கள். வெளியே காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக இருப்பார்கள்.

இலக்கிய வலதுசாரிகள் வழக்கம் போல தாம் ஒடுக்கப்படுவதாக, இடதுசாரிகள் ஆதிக்கம் பண்ணுவதாக ஒப்பாரி வைத்தபடியும் இருப்பார்கள். அது அவர்களுடைய மோடி மஸ்தான் வேலை.


 இந்த கசடுகளுக்கு அப்பால் இலக்கியத்துக்கு பயனுள்ளதாக என்ன நிகழ்கிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஏன் இவ்வளவு அக்கப்போர் என யோசிக்கிறேன். இதுவரை ஏதோ பரிசுத்தமான உலகில் வாழ்ந்ததைப் போலவும், இவர்கள் நாலு பேர் வந்து நல்லா இருந்த ஊரைக் கெடுத்து விட்டதைப் போலவும் பேஸ்புக் சமூகம் பொங்குவது ஏனெனப் புரியவில்லை




வேலை மெனக்கெட்டு யார் இலக்கியத்துக்கென வேலை பார்த்தாலும், அதுயாராகஇருந்தாலும், பாராட்டத்தக்கதே. நியாயமான விமர்சனங்களையும் தொடர்வோம்

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...