தமிழ் விக்கி பற்றி இவ்வளவு அங்கலாய்ப்புகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் படித்தவரையில் நேர்த்தியாகவே உள்ளது. மூன்று குறைகளை அவர்கள் களைய வேண்டும்:
1) கருத்துக்களை மேற்கோள் காட்டும் போது ஜெ.மோவின் குழுவுக்கு வெளியே எழுதப்பட்டுள்ள விமர்சனக் கருத்துக்களையும் குறிப்பிட வேண்டும். இப்போதைக்கு ஒரு குறுங்குழுவின் echo chamber போல உள்ளது. இதை மாற்ற வேண்டும். (இப்படி கொண்டு வருவதே நோக்கம் என சிலர் கூறுவதையும் கவனிக்கிறேன். ஆனால் ஒரு கோரிக்கையாக கேட்டுத்தான் வைப்போமே!)
2) குறிப்புதவி பட்டியல் இல்லை. ஹைப்பர் லிங்குகள் இல்லை. இவற்றையும் சேர்ப்பது அவசியம். ஆய்வு மாணவர்களிடம் நான் விக்கியில் உள்ள ஹைப்பர் லிங்குகளை கிளிக் செய்து படிக்கக் கேட்பேன். அது இல்லாவிடில் இக்குறிப்புகள் வலைப்பூக்களைப் போல ஆகி விடும்.
3) ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் மட்டுமே குறிப்புகள் உள்ளன. இதைத் தவிர்த்து ஒரு படைப்பு எவ்வகையை சேர்ந்தது, அதன் இயல்புகள் என்னவென வரையறுப்பது சிறப்பாக இருக்கும்.
கடைசியாக, தமிழில் பல இலக்கிய நடவடிக்கைகள் தத்தம் குழுக்களின் சார்புகளின் அடிப்படையிலே நடந்துள்ளன. சி.சு செல்லப்பா, க.நா.சு காலம் முதற்கொண்டே அது தான் நிலைமை. சொல்லப் போனால் தமிழில் சிறுபத்திரிகை இலக்கிய விமர்சனம் என்பது 90% மென் வலதுசாரித்தன்மை கொண்டதே. (அதை நடத்துகிறவர்களில் பெரும்பகுதியினர் காந்தியவாதிகள்.) அந்த அரசியலை நாம் விமர்சித்தும் வருகிறோம். புறவயமான விமர்சனங்களை, இலக்கிய பார்வைகளை நான் தமிழில் இதுவரை பொதுவெளியில் கண்டதே இல்லை. ஆக, இந்த தமிழ் விக்கியிலும் மென் வலதுசாரி பண்பாட்டரசியல், ஜெ.மோவின் இலக்கிய கொள்கைகள் வெளிப்படும், அதைத் தவிர்க்க முடியாது.
அரசியலற்ற பண்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. அது இடதுசாரித்தன்மை கொண்டதாக குறைந்த சதவீதத்திலும், வலதுசாரித்தன்மை கொண்டதாக பெரும்பகுதியும் இருக்கும். மேற்கிலும் இதுவே எதார்த்தம். ஏனெனில் நமது பண்பாட்டை பின்னணியில் இருந்து இயக்குவது முதலீட்டியமும் மதமும் தானே.
நம்பிக்கை இல்லையெனில் நமது இலக்கிய விமர்சகர்களின் பின்னணியை போய் பாருங்கள். பெரும்பாலானவர்கள் தீவிர மதவாதிகள், சாதியவாதிகள். கோயில், தேவாலயம், தொழுகை என விழுந்து விழுந்து புரள்கிறவர்கள். வெளியே காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக இருப்பார்கள்.
இலக்கிய வலதுசாரிகள் வழக்கம் போல தாம் ஒடுக்கப்படுவதாக, இடதுசாரிகள் ஆதிக்கம் பண்ணுவதாக ஒப்பாரி வைத்தபடியும் இருப்பார்கள். அது அவர்களுடைய மோடி மஸ்தான் வேலை.
இந்த கசடுகளுக்கு அப்பால் இலக்கியத்துக்கு பயனுள்ளதாக என்ன நிகழ்கிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஏன் இவ்வளவு அக்கப்போர் என யோசிக்கிறேன். இதுவரை ஏதோ பரிசுத்தமான உலகில் வாழ்ந்ததைப் போலவும், இவர்கள் நாலு பேர் வந்து நல்லா இருந்த ஊரைக் கெடுத்து விட்டதைப் போலவும் பேஸ்புக் சமூகம் பொங்குவது ஏனெனப் புரியவில்லை.
வேலை மெனக்கெட்டு யார் இலக்கியத்துக்கென வேலை பார்த்தாலும், அது ‘யாராக’ இருந்தாலும், பாராட்டத்தக்கதே. நியாயமான விமர்சனங்களையும் தொடர்வோம்.

Comments