Skip to main content

சாணிக் காயிதம்



தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்று என இதை மனம் திறந்து பாராட்டுகிறேன். அதற்கான காரணங்கள் இவை:
1) ஒவ்வொரு சட்டகமாக இவ்வளவு அழகாக, அர்த்தம் பொருந்தியதாக ஒரு படத்தைப் பார்த்து சில வருடங்கள் ஆகின்றன (கடைசியாக மிஷ்கினும், ராமும், ரஞ்சித் “காலாவிலும்” செய்திருந்தார்கள்.) முதல் காட்சியின் சட்டகத்தில் இருந்து கடைசிக் காட்சித் துளி வரை ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஒரு நேர்த்தியான, திட்டவட்டமான காட்சி மொழி இருக்கிறது. குறிப்பாக, துவக்கத்தில் இருந்தே (அதாவது பழிவாங்கும் படலம் துவங்கும் போதிருந்தே) பொன்னியும் சங்கையாவும் ஒரு சதுர சட்டகத்தின் வழியாகவே உலகைப் பார்க்கிறார்கள். அது ஒரு ஜன்னலாகவோ கார் ஜன்னலாகவோ இருக்கிறது. மற்றொரு காட்சியில் வில்லனின் ஆட்கள் தொலைநோக்கி வழியாக கடலில் நின்றெரியும் படகைப் பார்க்கையில் அந்த சட்டகம் வட்டமாக இன்றி சதுரமாக இருக்கிறது. இது எதார்த்தமில்லையே என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இப்படத்தின் கூறுமொழி ஒரு மீஎதார்த்தத்தினால் ஆனது. இந்த இடத்தில் இவர்களும் பொன்னியையும் சங்கையாவையும் போன்றே பழிவாங்கும் தூய்மையான, நோக்கமற்ற வன்முறைக்குள் வந்து விட்டார்கள் என்று இயக்குநர் உணர்த்துகிறார்.
மற்றொரு காட்சியில், ஒரு நிழல் கவிந்த சுவர் ஓரத்தை காட்டுகிறார்கள். அதை அடுத்து அங்கு பொன்னி, சங்கையாவின் மெட்டாடர் வேன் வந்து நிற்பதைக் காட்டுகிறார்கள். பெரும்பாலான படங்களில் இது ரிவர்ஸாகவே இருக்கும். ஆனால் இங்கோ ஏற்கனவே ஒளியும் இருளும் கலந்த உலகினுள் அவர்கள் வந்திறங்குவதைக் குறிக்கும் நோக்கில் இப்படி சித்தரிக்கிறார்கள். இப்படியே எத்தனையோ தருணங்கள் படத்தில் உள்ளது. ஒவ்வொன்றையும் பற்றி எழுதினால் நூறு பக்கங்களாவது வரும். அந்தளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
2) படத்தில் குடும்ப செண்டிமெண்டுகள், பாடல்கள் இல்லை. நகைச்சுவை இல்லை. பின்னணி இசை தேவையான இடங்களில் மட்டுமே உள்ளது. இதை இனி வரும் படங்களிலும் இயக்குநர்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும். பாடல்களை தனி ஆல்பமாக வெளியிடுவதே சிறந்தது. ஏனென்றால் பெரும்பாலான படங்களில் பாடல்கள் உணர்ச்சிகளை மிகைப்படுத்த, கதையோட்டத்தை தடைசெய்யவே பயன்படுகின்றன. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் அப்படித்தான்.
3) பொதுவாக பிளேஷ்பேக்குத் தான் கறுப்புவெள்ளை வண்ணத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் அருண் இரு முக்கிய பாத்திரங்கள் முழுக்க வன்முறையில், கசப்பில், ஆறாத வடுக்கள் பற்றின நினைவுகளில் மூழ்குவதைக் காட்ட பயன்படுத்துகிறார். இது ஏற்படுத்தும் அதிர்ச்சியும், தாக்கமும் வலுவானது. கறுப்பு வெள்ளைக் காட்சிகள் வரும்போதெல்லாம் யாரோ ஊசியால் என்னைக் குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
3) மோனோகுரோம் நிற அமைப்பும் பாராட்டத்தக்கது. இது பல பின்நவீன படங்களில் வருவது தான் என்றாலும் இப்படத்தில் பாத்திரங்களின் உளவியலை உணர்த்த சரியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
4) அந்த கடற்கரை ஷாட்டுகள், அதில் சிறுவயது பொன்னியும் அவள் அம்மாவும் தனியாக நடந்து போவது, சங்கையா ஒரு சிறுவனாக ஒரு மணற்குன்றின் மீதேறி அவர்களைப் பார்ப்பது, ஷாட் மெல்ல மெல்ல விரிந்து அதன் ஓரத்தில் சங்கையா வந்து தேய்ந்து மறைவது அற்புதமான காட்சி. சில நொடிகளில் அவர்களுடைய வாழ்வின் விளிம்பில் அவன் இருக்க விரும்புவதும், ஆனாலும் மறைய நேர்வதும் காட்டப்படுகிறது. (ஹிந்து விமர்சனத்தில் ஶ்ரீவத்ஸன் சொல்லுவதைப் போல பெர்க்மேனின் சாயல் இதில் உள்ளது தான்.) பல இயக்குநர்கள் இதைக் காட்ட வசனங்கள், ஒரு “ஓஓஓ” என்று ஒப்பாரிக் குரலில் பாடல், கண்ணீர்த் துளிகள் திரண்ட கன்னங்கள் என (விஜய் டிவி பாணியில்) பெரும்பிரயத்தனம் செய்திருப்பார்கள். அருணுக்கு இந்த எக்ஸ்டிராஸ் இல்லாமல் ஒளிப்பதிவை மட்டும் கொண்டு சிக்கனமாக கதை சொல்லத் தெரிகிறது.
5) பிளேஷ்பேக்கை தமிழ் சினிமாவில் மிக மோசமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என முன்பு ஒருமுறை எழுதி இருந்தேன் அல்லவா, இப்படத்தில் பிளேஷ்பேக் அட்டகாசமாக உள்ளது. இரண்டு பிளேஷ்பேக்குகள் வருகின்றன: அ) பொன்னிக்கு நடக்கும் பாலியல் தாக்குதல், அவளது குடும்பம் உயிருடன் எரிக்கப்படுவது. ஆ) பொன்னியும் அவளது அம்மாவும் அவளது அப்பாவின் முதல் மனைவியால் துரத்தப்படுவது, சாபத்துக்குள்ளாவது. இதை நான்லீனியராக படம் முழுக்க சொல்கிறார்கள். இது பிளேஷ்பேக் கதைகூறலுக்கு இடைஞ்சலாகாமல் இருக்க உதவுகிறது. அடுத்து மொத்த படத்தையும் பொன்னியின் நினைவுகூறலாகப் பார்க்க வழிவகுக்கிறது. அதாவது பிளேஷ்பேக்குக்குள் பிளேஷ்பேக்குக்குள் பிளேஷ். எப்படி!
6) படத்தில் உள்ள தூய்மையான, தர்க்க நியாயமற்ற வன்முறை பற்றி சொன்னேன் அல்லவா, இது எதார்த்த சினிமாவுக்கு விரோதமான ஒன்று என்பதால் தமிழில் வெகு அரிதாகவே இது காட்டப்படுகிறது. பொன்னியையும் அவளது குடும்பத்தையும் வில்லன்கள் தாக்குவதற்கு, அழிப்பதற்கு எந்த காத்திரமான, தர்க்கரீதியான காரணமும் இல்லை. முகத்தில் துப்பியதற்கான எவனாவது ஒரு குடும்பத்தை நெருப்பிட்டு கொளுத்தி, ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் பண்ணுவானா? பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள் நம் நாட்டில். சொல்லப் போனால் 99% வன்முறையும் எந்த தர்க்கத்துக்கும் உடன்படாததே - சினிமாவில் மட்டுமே ஒரு காரணத்தை வலிந்து புனைகிறார்கள். அருண் சாதியத்தையும், காமத்தையும், ஆண் மீதான வன்மத்தை பெண்ணுடலில் செயல்படுத்திப் பார்க்கும் விருப்பத்தையும் இந்த காட்சிகளில் கோர்க்கிறார். இது நம் நெஞ்சில் வந்து அறைகிறது.
அதே போல பொன்னியும் அவளுடன் அவள் அண்ணன் சங்கையாவும் பழிவாங்கலாம் என முடிவெடுக்கும் தருணம் வெற்றிமாறனின் “அசுரனில்” போல இனிமேல் ஓட இடமில்லை எனும் நிலையில் அல்ல. வில்லன்கள் வக்கீல் மற்றும் போலீசின் துணையுடன் தப்பித்துப் போகிறார்கள். அவ்வளவு தான், இனி நானே கொல்லுகிறேன் என பொன்னி முடிவெடுக்கிறாள், அவளுடன் சங்கையாவும் கைகோர்க்கிறான். எவ்வளவு எளிதாக அந்த தருணத்தை காட்டி விட்டார் இயக்குநர். தேவையில்லாத டிராமா, கண்ணீர், கொந்தளிப்பு இல்லை. இவ்விதத்தில் “சாணிக் காயிதம்” எனக்கு புரூஸ் லீயின் Return of the Dragonஐ நினைவுபடுத்தியது.
7) அதே நேரம் மலையாளப் படமான “களாவில்” (கூடவே சில உலகப்படங்களில்) நாம் கண்ட தூய்மையான வன்முறை இப்படத்தில் இல்லை, இதைப் போய் ஏன் அதிக வன்முறை என்று மக்கள் முத்திரை குத்துகிறார்கள் எனப் புரியவில்லை. நான் பார்த்ததிலேயே மிகக்குறைவான வன்முறை கொண்ட படம் இது தான். தனியாக உருளும் தலை, மெல்ல மெல்ல அடங்கும் உடல் என எதையும் காட்டவில்லை. பொன்னி பார்க்க, நினைக்க விரும்பும் வன்முறை தருணங்கள் மட்டுமே படத்தில் வருகின்றன.
8) மகாபாரதக் கதையின், பாரதியின் “பாஞ்சாலி சபதத்தின்” இன்னொரு வடிவமே “சாணிக் காயிதம்”. ஆனால் நீதிக்கான கொந்தளிப்புகள், கூக்குரல்கள் இல்லாத வடிவம். சொல்லப் போனால் மகாபாரதக் கதையில் கூட நாம் இன்று பேசுகிற அறம், நீதி போன்றவை இல்லை. இதை உணர்த்தும் நோக்கில் மூன்று தருணங்கள் வருகின்றன:
அ) பொன்னியும், சங்கையாவும் தம் பட்டியலில் உள்ளவர்களைக் கொன்று விட்டு அடுத்து என்ன பண்ணலாம் என்று பேசிக் கொள்வது. அப்போது சுட்டப்படும் வெறுமையானது பாரதப் போருக்குப் பின்னர் பாண்டவர்களும் மீதமாகும் (திருதராஷ்டிரர் உள்ளிட்ட) கௌரவர்களும் உணரும் வெறுமையே.
ஆ) திருதராஷ்டிரரை உணர்த்துவதற்காக சுடலை எனும் பார்வையற்ற சிறுவனை கதைக்குள் கொண்டு வருகிறார்கள். அவர்கள் சதா யாரையாவது சார்ந்திருக்கிறான். முதலில் தன் குடிகார அப்பாவை, அடுத்து தன் அப்பாவைக் கொல்ல விரும்பிய, தன்னையே கொல்ல நினைக்கிற சங்கையாவை. அவனுக்கு யாரிடத்தும் ஒரு பிடிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மோசமான நிகழ்வை அவன் தன் பார்வையற்ற கண்களால் ‘பார்த்திருக்க’ நேர்கிறது. அவன் அப்போது தன்னால் இயன்ற நன்மையை செய்ய முயல்கிறான், ஆனால் அவனால் அது இயல்வதில்லை. இது படத்தின் கிளைமேக்ஸில் காட்டப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு அருண் “ஆயிரம் பார்வைகள்” என பெயரிட்டிருக்கிறார். இதன் வழி திருதராஷ்டிரர் தன் சபையில் பாஞ்சாலி அவமதிக்கப்பட்ட போது உணர்ந்த மனநிலையை மீள்வாசிப்பு செய்திருக்கிறார்கள். நீதியின் கண்கள் எப்போதும் பார்வையற்றவை தாம், ஆனால் அதையும் மீறி அதில் சிறிது கருணை இருக்கலாம் என்கிறார். பொன்னி அவனை ஏற்கிற இடத்தை நியாயப்படுத்த இந்த உண்மை வெளிப்படும் தருணம் உதவுகிறது. அதே நேரத்தில் கதையின் மொத்த போக்குடன் பொருத்தப்படாமல் இருந்தாலும் முத்தாய்ப்பாக, மனதைத் தொடும், வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கும் விதமாக படத்தை முடிக்கவும் இது உதவுகிறது. எப்படி ஆயினும் பார்வையற்றவனின் ஆயிரம் பார்வைகள் எனும் உருவகம் தொடர்ந்து நம்மை தொந்தரவு செய்தவதாக உள்ளது. இந்த ஒரு இடத்துக்காக இப்படம் நமது வரலாற்றில் நீடித்திருக்க வேண்டும்.
இ) கடைசி வில்லனைக் கொல்லும் இடத்தில் புரொஜெக்டரின் ஒளியில் குருதித் துளிகள் பீய்ச்சியடிக்க சிவப்பு மழையில் நனைந்தபடி அனுபூதி அடையும் தருணம் அப்படியே துரியோதனனின் குருதியை தன் கூந்தலில் பாஞ்சாலி பூசும் இடத்தை நினைவுபடுத்துகிறது.
“சாணிக் காயிதத்தின்” ஒளிப்பதிவுக்காக நிச்சயம் யாமினிக்கு தேசிய விருது அளிக்கப்பட வேண்டும்.
இந்த படத்தை மிஸ் பண்ணாதீங்க!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...