Skip to main content

நாய்களால் முடிவது ஏன் மனிதனுக்கு முடிவதில்லை?


மனிதர்கள் அடிப்படையில் ரகசியப் பிறவிகள். அவர்கள் தமது உறவுகளுக்குள் சில படிநிலைகள் வைத்திருப்பார்கள். ஹாய், ஹலோவுக்கு சில நட்புகள், உதவிக்கு, பேச்சுத்துணைக்கு ஒரு கும்பல், பணத்துக்கு, வேலையில் முன்னேற்றத்துக்கு ஒரு சில நட்புகள், முகப்பழக்கத்துக்கு சிலர், விளையாட, குடிக்க, சிகரெட்டுக்கு, பயணிக்க, (செக்ஸுக்குக் கூட) சில நட்புகள், நெருக்கமான உறவுகள், அவர்கள் மத்தியிலும் பிரிய முடியாதளவுக்கு இணக்கமாக மிகச்சிலர். இந்த படிநிலைக்குள் இன்னின்னாரிடம் இவ்வளவு தகவல்களை தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். நவீன வாழ்க்கையின் ஒரு விசித்திரம் என்னவெனில் நாம் இந்த எல்லா படிநிலையை சேர்ந்தோரிடமும் ஒரே வகையாக அன்பும் அக்கறையும் காட்டுவதது போல நடிக்கிறோம் என்பது. பொதுவில் பார்த்தால் யார் நண்பர், யார் முகப்பரிச்சயம், யார் கூடச் சுற்றுவதற்கு மட்டுமானவர், யார் வெற்று அரட்டைக்கானவர் எனக் கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு நாம் அவர்களுடைய உரையாடலை உற்று கவனிக்க வேண்டும்


மற்றொரு விசித்திரம் மனிதர்கள் தமக்கு மிக மிக இணக்கமாக இருப்பவர்களிடம் கூட தம் ரகசியங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது. இதற்கும் கல்விக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. எந்தளவுக்கு அதிக கல்வி, புத்திசாலித்தனம், நாகரிகம் வருகிறதோ அந்தளவுக்கு கூடுதலாக ரகசியம் பேணுகிறவர்களாக மாறுகிறோம். இந்த ரகசியங்கள் மிக மிக அற்பமானவையாக இருக்கும், ஆனால் அவற்றை நமக்குள்ளே வைத்திருப்பதில் கிளுகிளுப்படைகிறோம். அதனாலே மனிதர்கள் ரகசியப் பிறவிகள் என்றேன்


நாய்கள் இவ்விசயத்தில் நேர்மாறானவை. நாய்களுக்கும் மேற்சொன்ன படிநிலைகள் உண்டு. எல்லா நாய்களையும் ஒரு நாய் தன் உற்ற தோழனாக, புணர்ச்சித் துணையாக, வழித்துணையாக ஏற்பதில்லை. ஆனால் அவற்றுக்குள் எந்த ரகசியமும் இருப்பதில்லை. ஏனென்றால் நாய்கள் உடல்மொழியையோ, பேச்சுமொழியையோ நம்மைப் போல் முழுக்க நம்பி இருப்பதில்லை. இன்று என்னுடைய நாயை வெளியே அழைத்து சென்றிருந்தேன். அப்போது ஒரு பெட்டை நாய் மெதுவாக வந்து  அவனுடைய முகத்தை, காதுகளை முகர்ந்து பார்த்தது. என்னுடைய நாயும் அதை அவ்வாறே திரும்ப முகர்ந்தது. அதன் பிறகு கூச்சம் காரணமாக அது விலகிப் போய் விட்டது. இன்னும் சற்று தைரியமான நாய் என்றால் இருவரும் தத்தமது புட்டங்களையும் முகர்ந்திருப்பார்கள். இப்படிச் செய்வதன் வழி ஒரு நாயால் சில வினாடிகளிலே மற்றொரு நாய் அன்று என்ன சாப்பிட்டிருக்கிறது, அதனுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது, அதன் மனநிலை எப்படி இருக்கிறது, ஹார்மோன்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா, கடைசியாக அது எப்போது புணர்ந்தது என பல ரகசியங்களை / விசயங்களைத் தெரிந்து கொள்கிறது. உடம்பில் இருந்து வெளிப்படும் உயிரி-ரசாயானங்களை தம் நுகர்வுத்திறனால் அலசி ஆராய்ந்து அவற்றால் இவ்வளவு தகவல்களை உள்வாங்க முடிகிறது. நம்மால் ஒருவருடைய பேஸ்புக் கணக்கை பல மணிநேரம் ஆராய்ந்தே அவருடைய பால் அடையாளம் என்னவெனத் தெரிந்து கொள்ள முடியாது. நம் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளையரா, வியாபாரியா, கொலைகாரரா, உத்தமாரா என அவருடன் பல வருடங்கள் பழகிக் கூட கண்டுபிடிக்க இயலாது


சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இது. நான் இதை அடிக்கடி நினைத்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன்

என் சக ஊழியர் ஒருவர். பெண். அவருக்கும் தத்துவத்தில் ஆர்வமுண்டு என்பதால் நாங்கள் நட்பானோம். நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம். இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்தோம். ஆனால் அவரை வேலையை விட்டு நீக்கப்பட்ட தகவலை என்னிடம் உடனடியாகச் சொல்லவில்லை. அவருடைய கடைசி நாளுக்கு ஒரு வாரம் முன்பே என்னை அழைத்துக் கூறினார். நான் அவருடைய தயக்கத்தையும் வருத்தத்தையும் புரிந்து கொண்டேன். இறுதி நாள் அன்று வேலையிட வளாகத்தில் சுற்றி வந்தோம். எங்களுக்கு ஒவ்வொரு இடம் குறித்தும் ஒரு நினைவு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டோம். அப்போது சில சக ஊழியர்களைளை எதிர்கொண்டோம். அவர்களுடன் அந்த தோழி மிக நெருக்கமாக தினமும் பேசுவார் என்பது எனக்குத் தெரியும். பார்க்க இணைபிரியா தோழிகளைப் போலத் தெரியும். ஆனால் அவர்களுக்கு இவர் வேலையை விட்டுப் போகிற விசயம் தெரியாது. கையைப் பற்றி பரஸ்பரம் நலம் விசாரித்து கொஞ்சி விட்டுப் பிரிந்தனர். என்னிடம் சொன்ன தகவலை அனேகமாக தினமும் தான் சந்தித்து உரையாடும் தோழிகளிடம் அவர் ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை? நாளையும் அதற்கு அடுத்த நாட்களும் இவரைப் பார்க்கவில்லை என்றால் மிஸ் பண்ண மாட்டார்களா? ஆனால் அவருடைய கணிப்பு சரிதான். இந்த தோழிகள் அதற்கடுத்த நாட்கள் இவரைக் காணாதத்தைப் பற்றி எந்த கவலையும் படவில்லை

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒரு நாய் ஒரு இடத்துக்குச் சென்றதும் அங்கு வேறெந்த நாய்கள் எல்லாம் வந்து போயிருக்கின்றன என்பதை சில வினாடிகளில் அறிந்து கொள்கின்றன. தன்னிடம் உறவாட வரும் ஒரு வாய் அதற்கு முன் எந்த நாயுடன் எல்லாம் போயிருக்கிறது எனத் தெரிந்து கொள்கிறது. ஆனால் நமக்கு நம் வீட்டில் ஒரு மணிநேரத்துக்கு முன் யாரெல்லாம் வந்திருந்தார்கள், பத்து நிமிடத்துக்கு முன் நம் காதலியிடம் யார் பேசினார்கள் என்று தெரியுமா? நம் நண்பர்கள், காதலர்கள், கணவர் / மனைவியரின் உடல்நலன் பற்றி ஏதாவது தெரியுமா? ஒரு நாய்க்கு தன்னுடன் இருப்பவர் மரணடமடையப் போவது, அவருக்கு புற்றுநோய் வந்திருப்பது கூடத் தெரியும் என்கிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு தம் முன் மேடையில் நின்று பாடிக் கொண்டிருந்தவர் சட்டென மாரடைப்பு வந்து சுருண்டு விழும் போது வியப்பாக இருக்கிறது, அவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. “நல்லா தானே இருந்தார்?” என அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் ஒரு நாய்க்கு இப்படியான குழப்பங்கள் இல்லை. அவர்களுடைய உலகில்திரைமறைவுகள்இல்லை. நமது பிரச்சனை தான் என்ன?


மனிதன் தன்னுடைய பரிணாம வளர்ச்சியின் போது இத்தகைய திறன்களை இழந்து பார்வைப் புலன் சார்ந்தவனாக மாறி இருக்க வேண்டும். அடுத்து மொழி வளர்ச்சி வருகிறது. இப்போது அவன் முழுக்க மொழியை நம்பி இருக்கத் தொடங்குகிறான். மொழியின் ஒரு பெரிய பிரச்சனை என்னவெனில் எதையும் பலவாறாகப் புரிந்து கொள்ளும் தன்மை அவனுக்கு அளிக்கிறது. அடுத்து, மொழிக்குள் பல அர்த்த அடக்குகள் உள்ளதால் உண்மை என்பது மறைந்து மறைந்து விளையாடுகிறது. நாம் உண்மையை விட போலச் செய்யப்படும் உண்மைகளையே எதிர்கொள்கிறோம். சொல்லப் போனால் இந்த உண்மைத் தோற்றங்களைக் கூட நாம் சரியாக எதிர்கொள்வதில்லை. ஒன்று புலப்படும் முன் நாம் மற்றொன்றை நோக்கித் தாவுகிறோம். இரண்டு புலப்படல்களுக்கு இடையே ஒரு அகத்தாவல், அதன் கிளர்ச்சி, தித்திப்பு நமக்கு சாத்தியமாகிறது. இதற்காகவே நாம் அனுதினமும் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும், அடுத்தவர்களுக்கு காதையும் கண்ணையும் கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம். மொழியின் வசீகரமே நம்மை அது எதையும் நேரடியாகப்பார்க்க விடாமல்திசைதிருப்புவதில் இருக்கிறது.


 இரண்டு பேர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கையில் பாருங்கள் - அந்த மகிழ்ச்சியானது பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போதல்ல, கிட்டத்தட்ட அறிந்து கொள்ளும் போதே, அறிந்து கொள்வதற்கு முன்பே வருகிறது. அறிதலை நெருங்கும் போது நாம் மற்றொன்றுக்குத் தாவுகிறோம். சில நேரங்களில் ஒருவர் யார் என்று தெரிந்து கொள்ளும் முன்பே நெருங்கிப் பழகி விடுகிறோம். என்னுடைய தோழி ஒருவர் ஒரு நண்பரின் பெயரைக் குறிப்பிட்டுஎனக்கு அவரை நன்றாகத் தெரியும், ஐந்து வருடங்களாகப் பழக்கம்என்றார். “சரி அவர் எந்த ஊரில் பிறந்தார், அவருடைய கல்விப்பின்னணி என்ன, இப்போது என்ன வேலை செய்கிறார், கடந்த வருடம் அவர் நேர்கொண்ட நெருக்கடி என்ன, அவருக்கு என்னவெல்லாம் நோய்கள் உண்டு, அவருடைய உணவுப்பழக்கம் என்ன?” என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டேன். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, ஆனால் அவரை நன்றாகத் தெரியும் என்றார். அந்த நண்பரிடம் இரண்டு முறைகளே பேசியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த இந்த தகவல்கள் அவருடன் நாட்கணக்காகப் பேசிய இத்தோழிக்கு ஏன் தெரியவில்லை. ஏனென்றால் நமது உரையாடல்களின் நோக்கமே அறிதல் அல்ல


இதை ஒரு குறையாக நான் சொல்லவில்லை, மாறாக இதுவே நாகரிக மனிதனின் இயல்பு என்கிறேன். நாம் சதா உண்மைகளில் இருந்து விலகிச் செல்லும் ஜென்மங்கள். விலக விலக நாம் அதிக மகிழ்ச்சியாக உணர்கிறோம். விலக விலக நாம் தட்டையானவர்களாக, தனியர்களாகவும் மாறுகிறோம். மொழியை முழுக்க சார்ந்திருப்பதைக் குறைத்து, அடிப்படைகளில் கவனம் செலுத்துவது, உரையாடல்களை உண்மையை நோக்கி நகர்த்துவது, கூர்மைப்படுத்துவது நமது நாய் நண்பர்களின் திறமைக்குப் பக்கத்தில் செல்ல நமக்கு உதவலாம்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...