ஒரு எழுத்தாளன் தன் சமூகத்துக்காக, பண்பாட்டுக்காக குரல் கொடுப்பவனாக, சில நேரங்களில் அரசியல் பேசுகிறவனாக, போராடுகிறவனாக, எதிர்க்கலாச்சார முகமாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். நானே அப்படி இருக்கத் தான் முயல்கிறேன். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது -
எழுத்தாளர்களின் அரசியல் உவப்பில்லாமல் போகும் போது அவர்களுடைய அரசியலற்ற எழுத்தைப் படிக்கவும் தயக்கம் வருகிறது; அவர்களுடைய அரசியலுடன் முரண்படும் நாம் அவர்களுடைய இலக்கிய இடத்தை மறுக்கவும் தலைப்படுகிறோம். நீங்கள் ஜெயமோகனின் முகாமை சேர்ந்தவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் இடதுசாரி படைப்பாளிகளை முற்றிலுமாக ஒதுக்குகிறார்கள்; ஒரே காரணம் அவர்களுடைய வெளிப்படையான அரசியல் அவர்களுடைய பிரதிகளை அணுக இவர்களுக்குத் தடையாகிறது. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல் “சோவியத் பிரச்சார நெடி வீசுகிறது” என கதையளப்பார்கள். இன்னொரு பக்கம் கடந்த இரு பத்தாண்டுகளாக வலதுசாரி அரசியல் பேசி வரும் படைப்பாளிகள் சிலருடைய புதினங்கள், கதைகள் மீதே ஒரு ஒவ்வாமை நமக்கு ஏற்படுகிறது. நான் அதையும் மீறி அவர்களை படித்து ரசிக்க தலைப்படுகிறேன். ஆனாலும் ஒவ்வாமை அப்புத்தகங்களை நெருங்குவதில் ஏற்படுவதை ஏற்கிறேன்.
என்ன தன் அவருடைய மொழிநடையும் ஸ்டைலும், கதைகளின் நுட்பமும் பிடிக்கும் என்றாலும் நான் சுஜாதாவின் கட்டுரைகளில் வரும் கருத்துக்களால் எப்போதுமே கசப்படைவேன். என்னால் ஒரு தமிழவன், ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கருத்துக்களுடன் உடன்படுவதைப் போல பாரதியார், பு.பி, சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் கருத்துக்களை ஏற்க முடிவதில்லை. சுஜாதாவும், பாலகுமாரனும் இன்று வரை வாழ்ந்து டிவி விவாதங்களிலும் சமூகவலைதளங்களிலும் நடப்பு செய்திகளைப் பற்றி கருத்து தெரிவித்திருந்தால் கடுமையாக வெறுக்கப்பட்டிருப்பார்கள், அது அவர்களுடைய புனைவு எழுத்து மீதும் ஒரு இருட்டைப் போலப் படிந்திருக்கும் என உறுதியாக சொல்கிறேன். நல்லவேளை நேரத்தோடு போய் சேர்ந்து விட்டார்கள்!
இப்பிரச்சனை மேற்கிலும் எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் குறித்து எழுப்பப்படுவதுண்டு. ஷேக்ஸ்பியரில் இருந்து கிப்ளிங், டிக்கன்ஸ் போல பலர், தத்துவத்தில் பிளேட்டோவில் (பாசிச ஆதரவு என) இருந்து ஹைடெக்கர், நீட்சே வரை இனவாத துவேசம் வெளிப்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. ஹைடெக்கரின் நாஜி சார்புநிலை குறித்து நிறைய விவாதங்கள் நடந்ததுண்டு. இத்தனைக்கும் இவர்கள் அரசியல் பற்றி நேரடியாக எதையும் எழுதவில்லை. புனைவுக்குள்ளும் தத்துவத்துக்குள்ளும் நோண்டி எடுத்தே இவ்வளவு விவாதிக்கிறார்கள். இவர்கள் நேரடியாக அரசியல் பேசியிருந்தால் என்ன கதிக்கு ஆளாகி இருப்பார்கள்?
ஆனால் அதையும் மீறி அவர்களை ஆழமாக வாசித்து உள்வாங்குகிற வாசகர்களும் விமர்சகர்களும் அங்கு இருக்கிறார்கள். நம்மூரிலோ இந்த புறவயமாக, நிதானமாக, உணர்வு சமநிலையுடன் ஒரு இலக்கிய / தத்துவ பிரதியை வாசிக்கும் பண்பாடே கணிசமாக இல்லை. நாம் ஒரு சார்பை எடுத்து விட்டுத்தான் ஒரு பிரதிக்குள் போகிறோம். அல்லது சார்பை எடுத்து விட்டு அந்த பிரதியை நோக்கி கதவை அடைத்து விடுகிறோம். விருது, அங்கீகாரம், பாராட்டு என என்ன வந்தாலும் இந்த சார்புநிலை ஒரு பெரும் சுவராக எழுப்பப்பட்டு விடுகிறது. ஒரு நவீனத் தீண்டாமையைப் போல இது பண்பாட்டு வெளிக்குள் நெளிந்து நெளிந்து நுழைந்து விடுகிறது.
ஒரு உதாரணத்துக்கு, மனுஷ்யபுத்திரன் கடந்த இரு ஆண்டுகளாக மிக அதிகமாக காதல் கவிதைகளே எழுதி வருகிறார். இவற்றை நான் அவருடைய ‘மெய்யியல்’ கவிதைகள் எனப் புரிந்து கொள்கிறேன். அவர் இவற்றை சமூக உளவியல் கவிதைகள் என நம்புகிறார். ஆனால் அவர் கவிதை எழுதி முடித்து விட்டு தன் ஷாட் கன், அருவா சகிதம் அரசியல் டிவி விவாதங்களுக்கு கிளம்பி விடுவார். அங்கே அவருடைய கருத்துகளை வெறுப்பவர்கள், அவற்றால் கடுப்பாகிறவர்கள் அவருடைய கவிதைகள் மீதும் அந்த துவேஷத்தைக் காட்டுவார்கள். நாளை அவருக்கு ஒரு தேசிய விருது கொடுக்கப்பட்டால் ‘திமுக கவிஞர்’ என அவர் மீது முத்திரை குத்தி திட்டுவார்கள். இது நிச்சயமாக நடக்கும். ஆனால் இரண்டுமே அவரது வெவ்வேறு முகங்கள். (தனிப்பட்ட முறையில் அவருக்கு வேறு முகங்களும் உண்டு.) இது நம் மூளைக்குள் ஏறுவதில்லை.
இன்னொரு பிரச்சனை அரசியல் சமூகக் கருத்துக்களுக்காக கடுமையாக ஒரு படைப்பாளியை சாடுகிறவர்கள் அவருடைய புத்தகங்களை ஒரு போதும் படிப்பதில்லை என்பது. இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. தமிழ் மண்ணுக்கே உரித்தான பிரத்யேக சுபாவம் இது - ஒரு ஜெயமோகனோ சாருவோ எழுத்தாளர்கள் அல்லாமல் இருந்து ஒரு கருத்தை சொன்னால் இவர்களுக்கு எரிச்சல் வராது. ஆனால் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் கீழ் சொல்லும் போது கொலைவெறி வருகிறது. ஏன் இந்த அடையாளம் இவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது?
எழுத்தாளனை ஒரு பண்பாட்டின், அறிவியக்கத்தின் அடையாளமாக, சமூகத்தை வழிநடத்தும் ஆசானாகப் பார்க்கிறார்களா? எனில் ஏன் அவனைப் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? வாத்தியாருடைய வகுப்பில் உட்கார மாட்டோம், ஆனால் அவர் நாங்கள் சொல்வது படி நடந்து கொள்ள வேண்டும், எங்கள் நம்பிக்கைபடி சிந்திக்க வேண்டும் என்றால் அது என்ன விதமான குழப்பமான நிலைப்பாடு? இத்தனைக்கும் பள்ளி, கல்லூரி பட்ட படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கிறவர்கள் தாம் இப்படி நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் குழப்பம் அதிகமாகிறது. அவன் எழுதுறதை படிக்கவும் மாட்டேன், ஆனால் அவன் நான் ஏற்கிற அரசியல் சமூக அறத்தின் படி தான் நடந்துக்கணும், பேசணும், அது தான் அறம் என்றால், படிப்பதும் அதை ஒட்டி நடந்து கொள்வதும் அறம் ஆகாதா? எழுத்தாளனுக்கு அறம் அவசியம் என்றால் உங்களுக்கு அந்த அறம் வேண்டாமா? உங்களிடையே சமூக விரோத அரசியல் பேசுகிறவர்களாக உங்கள் சொந்தக்காரர்கள், உங்கள் மனைவி, குழந்தைகளே இருப்பார்களே, அவர்களுடன் உறவைத் துண்டித்து விட்டீர்களா?
ஒரு சினிமா நடிகனிடம் இதை எதிர்பார்ப்பதில் கூட நியாயம் உள்ளது. அவன் உங்களுடைய பணத்தில், புகழில் வாழ்கிறான். ஆனால் எழுத்தாளனுக்குத் தான் நீங்கள் அஞ்சு பைசா கொடுப்பதில்லையே. அவன் என்ன பேச வேண்டும் எனக் கோர உங்களுக்கு அந்த அடிப்படை அருகதை கூட இல்லையே.
இப்படி தமிழ் எழுத்தாளன் அந்த காலத்து தேவதாசிகளைப் போல் ஆகி விட்டான் - ஊருக்கே பொண்டாட்டி, ஆனால் யாருக்கும் மனைவி இல்லை. தேவதாசிகளுக்காவது நகை, பணம், சொத்து கொடுத்தார்கள். எழுத்தாளனுக்கு அதுவும் இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது நமது முன்னோடிகளான சி.சு செல்லப்பாவில் இருந்து இன்றைய இன்றைய தேவதச்சன், யுவன், எஸ்.ரா போன்ற மகத்தான எழுத்தாளர்கள் செய்வதைப் போல எந்த அரசியல், சமூகப் பிரச்சனைகளிலும் நேரடியாக கருத்து சொல்லாமல் இலக்கியம், மெய்யியல், அவதானிப்புகள், படைப்பாக்கம் என ஒற்றையடிப் பாதையில் நடையிடுவது தான் நல்லதோ எனத் தோன்றுகிறது. நம் முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லையோ?
Comments