எழுபது, எண்பதுகள் வரை தில்லியில் வாழ்ந்த மத்தியவர்க்க தமிழ் புனைவெழுத்தாளர்களின் கதைகளில், நாவல்களில் சுதந்திர தின அணிவகுப்பைக் காண குடும்பத்துடனோ நண்பர்களுடனோ செல்லும் காட்சி தவறாமல் வருகிறது. அவ்விவரணைகளில் ஒரு திகைப்பு, பிரம்மாண்டம், சாகசங்களுக்கான எதிர்பார்ப்பு, தன்னை மறந்த பரவச உணர்வுகளும் தவறாமல் தோன்றுகின்றன. ராணுவம், மாணவர்களை உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட, சீருடை அணிந்த திரள், ஆயுதங்கள் உணர்த்தும் கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை, அதிகாரத்தின் ஒழுங்கமைவு, ஆடல், பாடல் எனும் தேசியப் பண்பாட்டுப் பெருமிதம் ஆகியவை அவர்களை கிளர்ச்சியடைய வைக்கின்றன. அல்லது தம் அன்றாட வாழ்வின் அலுப்புகளை கூடுதலாக நினைவுபடுத்துகின்றன. இந்த தேசத்தின் அச்சமூட்டும் அதே சமயம் சிலிர்ப்பு தரும் அரசதிகாரத்தின் முகத்தை அவர்கள் முன் இந்த அணிவகுப்புகள் திரைவிலக்கி காட்டுகின்றன. இறையாண்மையை அருகில் போய் பார்க்கும் ஒரு 'தீபாராதனை சடங்காகவும்' அந்த கால மத்திய வர்க்கத்துக்கு இந்த அணிவகுப்புகள் இருந்திருக்கலாம்.அல்லது வெற்றுப் பொழுதுபோக்காகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த படைப்பாளிகள் வெகுமக்கள் ஒரு அரசியல் இயக்கத்தின் சார்பில் திரள்வதையோ, சித்தாந்தம் பேசும் கூட்டங்களையோ இப்படி ரசித்து, பிரமித்து சித்தரிப்பதில்லை. அதாவது ஜனநாயக அரசியல் மீதுள்ள அவநம்பிக்கை, ஒவ்வாமை, தேசிய கட்டமைப்பு, இறையாண்மை, தில்லி மீது ஒரு பிரமிப்பு, நல்லுணர்வு எனும் இருமை இவர்களின் புனைவுகளில் வெளிப்படுகின்றன.
ஒரு கட்டத்துக்கு மேல் இத்தகைய காட்சிகள் நம் கதைகளில் வருவது நின்று போனது. தொண்ணூறுகளில் இந்த அணிவகுப்பை டிவியில் பார்த்தோம். நான் சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருந்த போது காலையில் கிளம்பிப் போய் பார்த்திருக்கிறேன். ஆனால் பரவசமெல்லாம் இல்லை. ஒரு முடிந்து போன சர்க்கஸ் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படுவதைப் பார்க்கும் உணர்வு. இப்போதைய எழுத்தாளர்களுக்கு இதெல்லாம் வெற்றுச்சடங்குகள். அவர்கள் விக்ரம் பட ஆக்ஷன் காட்சிகளுக்குக் குறைவாக எதையும் பிரம்மாண்டமாக ஏற்கப் போவதில்லை!
Comments