நான் எந்த தீவிர படைப்பாளிக்கு, சிறுபத்திரிகை மரபுக்கு, இலக்கியத்துக்கு பங்களித்த படைப்பாளிக்கு தேசிய விருது கிடைத்தாலும் அதை ஆதரித்து வாழ்த்தி இருக்கிறேன். ஏன் இவருக்கு, அவருக்குக் கொடுக்கவில்லை என்று புலம்பியதில்லை. சரியான ஆட்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் மிகச்சரியானவர்களுக்கும் ஒருநாள் வந்தே ஆகும் என நம்புகிறேன். லாபி செய்தாலும் இல்லாவிட்டாலும் கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். நான் எந்த லாபியும் பண்ணினதில்லை, என்னைப் போல கடுமையான விமர்சனங்களை சக படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள், சமூகம், ஆட்சியில் உள்ள அரசியல் இயக்கங்கள் மீது வைத்தவர்கள் என் வயதில் எத்தனை பேர் உண்டு? இப்படிப்பட்ட எனக்கே இரு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. நண்பர் பாவெல் சக்தி தினம் தினம் எழுதுவதன் லாஜிக் படி எனக்கெல்லாம் ஒரு சொப்பு சாமான் கூட கிடைத்திருக்கக் கூடாதே. அவர் பேஸ்புக்கில் வீசும் கத்தியை அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நான் காத்திரமான விமர்சனமாக வீசியிருக்கிறேனே. வெறும் மீம் போடாமல் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேனே. என்னை என்ன ஒதுக்கி வைத்து விட்டார்களா? நான் கடுமையாக விமர்சித்த ஜெயமோகன் தான் என்னை தன் விஷ்ணுபுரம் அரங்குக்கு பேச அழைத்தார். நான் அதன் பின்னர் ஒரு நூறு பக்கங்களாவது அந்த அமைப்பை விமர்சித்து எழுதினேன். அந்த சுதந்திரம் இங்கு எல்லாருக்கும் உள்ளது. அதை பயன்படுத்துவது நம் உரிமை, நம் பொறுப்பு. இங்கே ஏதோ ஜால்ராவால் தான் எழுத்தாளன் பிழைப்பதாக நினைப்பது எல்லாம் நமக்கு ஏற்படும் மனபிராந்தி மட்டுமே.
நாம் தொடர்ந்து வேலை செய்தால் நமக்கான அங்கீகாரம், விருதுகள் வந்தே தீரும். அதைச் செய்வதற்கான அச்சம், தயக்கமே நம்மை பல சதியாலோசனைகளை கற்பனை பண்ண வைக்கிறது. இவர்கள் பேசும் சதியாலோசனைகள் நடைமுறையில் எங்கும் இல்லை. நம்மைக் கண்டு சக எழுத்தாளர்கள் வெறுப்பில் முகம் சுளிப்பதாகக் கருதுவதும் ஒரு கற்பனை. நாம் அவர்களை வெறுப்பதாக நினைத்து அவர்கள் ஒதுங்கிப் போவதே உண்மை. இந்த பரஸ்பரம் பயம், பயத்தினால் வரும் வெறுப்பு தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு.
உண்மையில் நம்மை பழிவாங்க எந்த இலக்கியவாதியும் திரிவதில்லை. நம்மைக் கொல்ல வேண்டும் என மனதில் கத்தியோடு திரிபவர்கள் நம் மனைவி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் மட்டுமே. எழுத்துலகம் மிக பாதுகாப்பானது. இதுவரை சொத்துக்காகவோ துரோகத்தின் பேரிலோ ஒரு கொலையோ விவாகரத்தோ கூட இலக்கிய உலகில் நடந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை உங்களுடைய மனைவியை நோக்கி கேட்க முடியுமா? மாட்டீர்கள். கேட்டால் இரவில் அம்மிக்குழவியை தூக்கி தலையில் போட்டு விடுவார்களோ என பயம். குழந்தைகளை நோக்கிக் கேட்டால் “போடா” என்று சொல்லி விடுவார்களோ என் பீதி. உறவினர்களிடம் தகராறு பண்ணினால் ஊரை விட்டு ஒதுக்கி விடுவார்கள். உண்மையில் சக இலக்கியவாதிகள் உங்களை பழிவாங்க சதியில் எல்லாம் ஈடுபடுவதில்லை. உங்களை ரொம்பவெல்லாம் துன்புறுத்துவதில்லை. நீங்கள் கொஞ்சிக் குலவினாலும் எதையும் தூக்கிக் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து தீவிரமாக இயங்கும் போது, சந்தர்ப சூழல் கூடி வந்தால் விருதுகள், அங்கீகாரங்கள் வரும். இதுவே எதார்த்தம். பாவெல் அண்ணே, எனக்குத் தெரிந்து நான் ஒருமுறை கூட பேசியிராத இலக்கியவாதிகள் கூட என்னிடம் அன்பையும் மரியாதையும் அளித்திருக்கிறார்கள். உங்களுக்கும் அது கிடைக்கும். யுத்தம் வருமுன்னே கோட்டைக் கதவுகளை இழுத்து சாத்தாதீர்கள். என் அனுபவத்தில் சொல்கிறேன்: உங்கள் மொத்த குடும்பமும் உங்களை கைகழுவும் நாள் ஒன்று வரும். ஆனால் நீங்கள் காறித்துப்பும் நாங்கள் உங்களுடன் இருப்போம். சாரு சொல்வதைப் போல எழுத்துலகமே சஹஹிருதயர்களால் ஆனது. ரத்த உறவுகளும் கூட இருப்பவர்களும் ரத்தக் காட்டேறிகள்.
Comments