முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சஹஹிருதயர்கள்


நான் எந்த தீவிர படைப்பாளிக்கு, சிறுபத்திரிகை மரபுக்கு, இலக்கியத்துக்கு பங்களித்த படைப்பாளிக்கு தேசிய விருது கிடைத்தாலும் அதை ஆதரித்து வாழ்த்தி இருக்கிறேன். ஏன் இவருக்கு, அவருக்குக் கொடுக்கவில்லை என்று புலம்பியதில்லை. சரியான ஆட்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் மிகச்சரியானவர்களுக்கும் ஒருநாள் வந்தே ஆகும் என நம்புகிறேன். லாபி செய்தாலும் இல்லாவிட்டாலும் கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். நான் எந்த லாபியும் பண்ணினதில்லை, என்னைப் போல கடுமையான விமர்சனங்களை சக படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள், சமூகம், ஆட்சியில் உள்ள அரசியல் இயக்கங்கள் மீது வைத்தவர்கள் என் வயதில் எத்தனை பேர் உண்டு? இப்படிப்பட்ட எனக்கே இரு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. நண்பர் பாவெல் சக்தி தினம் தினம் எழுதுவதன் லாஜிக் படி எனக்கெல்லாம் ஒரு சொப்பு சாமான் கூட கிடைத்திருக்கக் கூடாதே. அவர் பேஸ்புக்கில் வீசும் கத்தியை அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நான் காத்திரமான விமர்சனமாக வீசியிருக்கிறேனே. வெறும் மீம் போடாமல் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேனே. என்னை என்ன ஒதுக்கி வைத்து விட்டார்களா? நான் கடுமையாக விமர்சித்த ஜெயமோகன் தான் என்னை தன் விஷ்ணுபுரம் அரங்குக்கு பேச அழைத்தார். நான் அதன் பின்னர் ஒரு நூறு பக்கங்களாவது அந்த அமைப்பை விமர்சித்து எழுதினேன். அந்த சுதந்திரம் இங்கு எல்லாருக்கும் உள்ளது. அதை பயன்படுத்துவது நம் உரிமை, நம் பொறுப்பு. இங்கே ஏதோ ஜால்ராவால் தான் எழுத்தாளன் பிழைப்பதாக நினைப்பது எல்லாம் நமக்கு ஏற்படும் மனபிராந்தி மட்டுமே.
நாம் தொடர்ந்து வேலை செய்தால் நமக்கான அங்கீகாரம், விருதுகள் வந்தே தீரும். அதைச் செய்வதற்கான அச்சம், தயக்கமே நம்மை பல சதியாலோசனைகளை கற்பனை பண்ண வைக்கிறது. இவர்கள் பேசும் சதியாலோசனைகள் நடைமுறையில் எங்கும் இல்லை. நம்மைக் கண்டு சக எழுத்தாளர்கள் வெறுப்பில் முகம் சுளிப்பதாகக் கருதுவதும் ஒரு கற்பனை. நாம் அவர்களை வெறுப்பதாக நினைத்து அவர்கள் ஒதுங்கிப் போவதே உண்மை. இந்த பரஸ்பரம் பயம், பயத்தினால் வரும் வெறுப்பு தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு.
உண்மையில் நம்மை பழிவாங்க எந்த இலக்கியவாதியும் திரிவதில்லை. நம்மைக் கொல்ல வேண்டும் என மனதில் கத்தியோடு திரிபவர்கள் நம் மனைவி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் மட்டுமே. எழுத்துலகம் மிக பாதுகாப்பானது. இதுவரை சொத்துக்காகவோ துரோகத்தின் பேரிலோ ஒரு கொலையோ விவாகரத்தோ கூட இலக்கிய உலகில் நடந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை உங்களுடைய மனைவியை நோக்கி கேட்க முடியுமா? மாட்டீர்கள். கேட்டால் இரவில் அம்மிக்குழவியை தூக்கி தலையில் போட்டு விடுவார்களோ என பயம். குழந்தைகளை நோக்கிக் கேட்டால் “போடா” என்று சொல்லி விடுவார்களோ என் பீதி. உறவினர்களிடம் தகராறு பண்ணினால் ஊரை விட்டு ஒதுக்கி விடுவார்கள். உண்மையில் சக இலக்கியவாதிகள் உங்களை பழிவாங்க சதியில் எல்லாம் ஈடுபடுவதில்லை. உங்களை ரொம்பவெல்லாம் துன்புறுத்துவதில்லை. நீங்கள் கொஞ்சிக் குலவினாலும் எதையும் தூக்கிக் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து தீவிரமாக இயங்கும் போது, சந்தர்ப சூழல் கூடி வந்தால் விருதுகள், அங்கீகாரங்கள் வரும். இதுவே எதார்த்தம். பாவெல் அண்ணே, எனக்குத் தெரிந்து நான் ஒருமுறை கூட பேசியிராத இலக்கியவாதிகள் கூட என்னிடம் அன்பையும் மரியாதையும் அளித்திருக்கிறார்கள். உங்களுக்கும் அது கிடைக்கும். யுத்தம் வருமுன்னே கோட்டைக் கதவுகளை இழுத்து சாத்தாதீர்கள். என் அனுபவத்தில் சொல்கிறேன்: உங்கள் மொத்த குடும்பமும் உங்களை கைகழுவும் நாள் ஒன்று வரும். ஆனால் நீங்கள் காறித்துப்பும் நாங்கள் உங்களுடன் இருப்போம். சாரு சொல்வதைப் போல எழுத்துலகமே சஹஹிருதயர்களால் ஆனது. ரத்த உறவுகளும் கூட இருப்பவர்களும் ரத்தக் காட்டேறிகள்.

கருத்துகள்

தியானி - Dhyaani இவ்வாறு கூறியுள்ளார்…
ச(ஹ)ஹ்ருதயர்கள், காட்டேறிகள் - very much liked and laughed out loud on these intended puns. Your views on this issue are fair and square.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.