Skip to main content

ப்ரியா கல்யாணராமன் - அஞ்சலி



நான் பரவலாக எழுத ஆரம்பித்து 14 வருடங்கள் ஆகின்றன. எனக்குப் பின்னர் எழுத வந்தவர்களே அதிகமாக வெகுஜன இதழ்களில் கதைகளும் தொடரும் எழுதி விட்டார்கள். மிக மிக அண்மையாக இலக்கிய உலகில் நுழைந்து ஒரே புத்தகம் எழுதியவர்களுக்கு கூட வணிக இதழ்களில் தொடர் எழுத வாய்ப்பு கிட்டி விட்டது. நான் மட்டுமே விதிவிலக்கு. வணிக இதழ்களில் அவ்வப்போது கட்டுரை எழுதக் கேட்பதோடு சரி, நான் அப்பரப்பில் ஒரு தற்காலிக சஞ்சாரி மட்டுமே. எனக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் கிடைத்த முதற் சில மாதங்களில் மட்டுமே நாளிதழ்களில் என்னுடைய பேட்டிகளும், சிறு குறிப்புகளும் வந்தன. அப்போது வாராந்தரிகள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது சமூகவலைதளங்கள் இவ்வளவு வலுவாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் என்னுடைய மொழியானது வெகுஜன பரப்புக்கும் ஏற்றதே. என்னால் விளையாட்டு, சினிமா, அரசியல், சமூகத்தில் இருந்து உளவியல், தத்துவம் வரை அறிமுகப்படுத்தி எழுத முடியும். இந்த பன்முகமான தளங்களில் எளிய மொழியில் வெகுஜனத்துடன் பேச ஒரு எழுத்தாளர் நிச்சயமாக நமது பிரபல இதழ்களுக்குத் தேவை. ஆனால் இதுவரை யார் கண்ணுக்கும் நான் பட்டதில்லை. (இப்படி சரியாக பயன்படுத்தப்படாத தகுதியான இன்னும் ஒரு பத்து சமகால எழுத்தாளர்களையாவது என்னால் பட்டியலிட முடியும்.)
ஒரு காரணம் நான் லாபி பண்ணுவதில்லை. மற்றொன்று துணிந்து விமர்சித்து ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் வழக்கம் எனக்கு இருந்தது. சில நேரம் சிக்கலான விசயங்களை ஆய்வு மொழியில் நான் எழுதியதும் உண்டு. அப்புறம், நீங்கள் எடிட்டர்களிடம் நேரடியாகவோ துணை ஆசிரியர்கள் வழியாகவோ தயங்காமல் வாய்ப்பு கேட்க வேண்டும். நான் 2015 வாக்கில் கல்கி ஆசிரியரிடம் அப்படி கேட்டேன். அவர் என்னை தொடர்ந்து எழுதச் சொன்னார். ஒரு வருடத்திற்கு மேல் நான் கல்கியில் வாராவாரம் எழுதினேன். ஆனால் அதன் பிறகு நான் யாரையும் நேரில் சென்று கேட்கவில்லை. ஒரு எழுத்தாளனிடம் ஆசிரியர்கள் எழுதக் கேட்பதே மரியாதை என்றும் தோன்றுகிறது. இதெல்லாம் சேர்ந்து என்னைப் பற்றி ஒரு முரட்டுப்பீஸ் பிம்பத்தை உருவாக்கி விட்டது. என்னைப் போன்றோரைக் கண்டடைந்து எழுத வைக்க ஒரு திறந்த மனமும், ஊடகம் குறித்த தெளிவான நம்பிக்கைகளும் கொண்ட எடிட்டர் வேண்டும். அப்படியான ஒருவர் தான் ப்ரியா கல்யாணராமன்.
அவர் என்னை நேரில் போனில் அழைத்து கிரிக்கெட் பற்றி ஒரு தொடர் எழுதக் கேட்டார். எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. தொடருக்கான தலைப்பையும் அவர் தான் தேர்ந்தெடுத்தார். என் போக்கில் எழுத அனுமதித்தார். என்ன விமர்சனம் வந்தாலும் உறுதியாக கூட நின்றார். 25 வாரத்தில் முடிக்க வேண்டிய தொடரை 60 வாரங்கள் எழுத வைத்தார். அதன் பிறகு நான் தீராநதியில் தொடர்ந்து இலக்கிய / தத்துவக் கட்டுரைகள் எழுதினேன். அதற்கு ப்ரியா கல்யாணராமனும் மணிகண்டனும் தன் காரணம். அவ்வப்போது அவரிடம் “கட்டுரை அனுப்பட்டுமா?” என்று கேட்டால் “உடனே அனுப்புங்க” என்பார். அந்த மாதமே அதை பிரசுரித்தும் விடுவார். இதை ஏன் தனியாக வலியுறுத்தி சொல்லுகிறேன் என்றால் வேறு இலக்கிய / நடுநிலை இதழ்களில் இந்த சுதந்திரம் இருப்பதில்லை. Iconoclastஆக, அரசியல் சரித்தன்மை இல்லாமல் எழுதினால் எல்லா இடங்களிலும் கதவை மூடி விடுவார்கள். ஆனால் “தீராநதியோ” ஒரு விதிவிலக்கு. அங்கு எதையும் எழுத முழுசுதந்திரம் தருவார் ப்ரியா கல்யாணராமன். நமது பல சமகால இலக்கிய எடிட்டர்களிடம் கூட இல்லாத ஒரு திறந்த மனம், துணிச்சல் அவருக்கு இருந்தது.
அண்மையில் தீராநதியை திரும்ப ஆரம்பித்த போது என்னிடம் எழுதக் கேட்டார். “பேஸ்புக்கில பதிவு எழுதிறதுல ஆர்வம் காட்டுறீங்க. நான் கேட்டால் கொடுக்க மாட்டீங்களா?” என கோபப்படவும் செய்தார். அவரது மறைவு ஒரு மிகப்பெரிய இழப்பு.
விகடனில் வந்துள்ள அஞ்சலிக் குறிப்பில் இருந்து:
"ப்ரியா கல்யாணராமனின் சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். தந்தை மற்றும் தாயார் பெயரை இணைத்து தனக்குப் புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். கல்லூரிப் படிப்பு முடித்து, தனக்குக் கிடைத்த அரசுப்பணியையும் மறுத்து, குமுதம் வார இதழில் தன் 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிற்காலத்தில் குமுதம் வார இதழின் ஆசிரியராக உயர்ந்து, பல ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றியவர்.
குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அவர்களால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட ப்ரியா கல்யாணராமன், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியவர். குமுதத்தில் பல தொடர்களையும் எழுதியவர். 108 திருப்பதிகள், கோயில் சொல்லும் கதைகள், தெற்கத்தி தெய்வங்கள், மகிமை மிக்க மகான்கள், ஜகத்குரு, ஆதலினால் ஆலயம் செல்வீர், ஜாக்கிரதை வயசு 16, ஆண்டவன் உங்கள் அருகில் என்று அவர் எழுதிய பல தொடர்கள் நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன.
இளம் பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் இயல்பு கொண்டவர் ப்ரியா கல்யாணராமன்.
ப்ரியா கல்யாணராமனின் மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்."
மனம் உடைந்த நிலையில் தான் இதை எழுதுகிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் சார். நீங்கள் இன்னும் ஒரு முப்பது, நாற்பதாண்டுகளாவது இருந்திருந்தால் எத்தனையோ புதிய படைப்பாளிகளுக்கு குமுதத்திலும் தீராநதியிலும் ஊக்குவித்திருப்பீர்கள். உங்களுடையது ஒரு கலாச்சார முக்கியமான பங்களிப்பு. நீங்கள் என்றும் எங்கள் நினைவில் ஒரு வாடாத மலரைப் போல இருப்பீர்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...