Skip to main content

சிறையில் தள்ளி விடுங்கள்!

 

என்னுடைய ஆசைகள் மிகச்சின்ன ஆசைகள்


  1. தினமும் எழுத 3-4 மணிநேரங்கள் வேண்டும். தொடர்ந்து சில நாட்கள் இடைவிடாமல் 10-12 மணிநேரம் எந்த வேலை கொடுத்தாலும் - அது உட்கார்ந்து பண்ணுவதே, யாருடனாவது பேசிக் கொண்டே இருப்பதோ, யார் பேச்சையாவது கேட்பதோ, ஆவணங்களை தயாரிப்பதோ, பயணிப்பதோ - எனக்கு கொலை கடுப்பாகும். அப்போது தான் நான் மிக மோசமான மனநிலையில், யாரைப் பார்த்தாலும் கடித்துக் குதறும் கொதிநிலையில் இருப்பேன்.
  2. புதிய நாவல் ஒன்றை மிகவும் ரசித்து பதிமூன்று நாட்கள் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது வந்தது ஒரு சனியன். தொடர்ந்து அலுவலக வேலைகள் எட்டு மணிநேரம் என்றால், இந்த புதிய சனியன் வேலைக்காக நான் உபரியாக நான்கைந்து, மணிநேரம் தினமும் செலவிட வேண்டி இருந்தது. அதை விட, நாள் முழுக்க அது என் மூளையை அடைத்துக் கொண்டது. அது ஒரு ஆவணத் தொகுப்பு வேலையாக இருந்தாலும் என் கடந்த காலத்தை மீளுருவாக்கத் தேவைப்பட்டதால் என்னை உணர்வுரீதியாக தினமும் புண்படுத்தி வந்தது. அதாவது ஒரு துருவெடுத்த கத்தியால் நம் தேகத்தை நாமே கீறிக் கொள்வதைப் போன்ற வேலை. அதை அடுத்து ஒரு பயணம். இதனால் நாவல் எழுதுகிற சரளம், பாய்ச்சல் அப்படியே முறிந்து போனது. அதன் பின்னர் நாவலுக்குள் புகுந்து அங்கிங்கே உலவ முடிந்தாலும் பழைய ஒழுக்கு கிடைக்கவில்லை. இப்போது ஒரு கணக்கெடுத்துப் பார்த்தேன். தவிர்க்க முடியாத இடைவேளை வருமுன்னர் நான் 14 நாட்களில் 12,000 வார்த்தைகளை முடித்திருந்தேன். இத்தனைக்கும் அப்போது தினமும் வகுப்பு, அதற்கான தயாரிப்புகள், தேர்வுத்தாள் திருத்துவது என கடுமையான வேலைப்பளு இருந்தது. ஆனால் எனக்கான எழுத்து நேரத்தை என்னால் துண்டாக வகுத்துக் கொண்டு செயல்பட முடிந்தது. ஏனென்றால் அந்த வேலைகள் என்னை முழுக்க ஆக்கிரமிப்பவை அல்ல. ஆனால் எழுத்துக்கு தடை வந்த பின்னர் என்னால் அடுத்த 18 நாட்களில் வெறும் 8000 வார்த்தைகளே எழுத முடிந்திருக்கிறது. ஒருவேளை இந்த கொடுமையான இடைவெளி விழுந்திராவிடில் நான் இந்நேரம் நாவலை முடித்து சிறிய திருத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். அதை நினைத்தாலும் தான் எனக்கு கடும் ஆற்றாமை ஏற்படுகிறது.
  3. இப்போது ஒரு பதிப்பகத்துக்கு நாவல் போட்டிக்காக வந்த சில நாவல் பிரதிகளை long listயை தயாரிக்கும் நோக்கில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு விசயத்தில் பொறாமை இவர்கள் மீது ஏற்படுகிறது. இவர்களும் என்னைப் போன்றவர்களே. ஆனால் இவர்களால் ஒரே இடத்தில் இருந்து ஒரு குறுநாவலை எழுதி முடிக்க முடிகிறது. அவர்களுடைய அன்றாடத்தில் எந்த அமைப்பும் கொடூரமாக குறுக்கிடுவதில்லை. பதினைந்து வருடங்களுக்கு மேலாக தினமும் எழுதி வருகிறேன் என்றாலும் என்னால் இது முயலவில்லை என்று நினைத்து வயிறெரிகிறது. ஒரு காலத்தில் எனக்கும் இவர்களைப் போல தொந்தரவில்லாத, நிம்மதிக்கு பங்கமில்லாத, அலைச்சல் இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தது. கொஞ்சம் நேர ஒழுங்கு மட்டும் இருந்தால் எதையும் எழுத முடியும் எனும் நிலை இருந்தது. இன்று இந்த அமைப்புகள் சொன்னால் நான் என் நாவலை விட்டு விட்டு சொன்ன இடத்துக்கு ஓட வேண்டும், சொன்ன வேலைகளை, சொன்ன நேரத்துக்கு செய்து கொடுக்க வேண்டும். அது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களாகக் கூட இருக்கலாம், ஆனால் நான் ஆறு மாத கர்பிணியை கருவறுப்பதைப் போன்றாகும் இது. இதைப் பற்றி ஆஷிஸ் நந்தி எழுதின ஒரு கட்டுரை இருக்கிறது. அதன் தலைப்பை இங்கு குறிப்பிட்டால் கூட எனக்கு அதனால் சிக்கல் வந்து விடும்.
  4. முன்பு போல நினைத்த விசயங்களை எழுதுகிற சுதந்திரம் எனக்கு இல்லை. எதைச் சொன்னாலும் அதை எனக்கெதிராக திருப்பி விடுவார்களோ எனும் அச்சம் இருக்கிறது
  5. என்னைச் சுற்றி எழுத்தாள நண்பர்கள் நிறைய பயணங்களில் ஈடுபடும் போது, எழுத்தாளர்கள் அல்லாத நண்பர்கள் பலதரப்பட்ட வேலைகளை செய்யும் போது இவர்களுக்கு ஏன் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கடுமையான கவனத்தை, நேர நிர்வாகத்தை, கடப்பாட்டைக் கோரும் நாவல் வேலைகள் இல்லை, ஏன் அன்றன்றைக்கான வேலைகளை முடித்து விட்டு டிவி பார்த்து, சமூகவலைதளத்தில் உலவி விட்டு நிம்மதியாக உறங்க முடிகிறது என எண்ணி மனம் தொந்தரவுக்கு உள்ளாகிறது, நான் மட்டும் பிடிவாதமாக தினமும் சில மணிநேரமாவது ஒரே புத்தக புரோஜெக்டில் செலவழித்தாக வேண்டும், என் கவனத்தை வேறு வேலைகளில் வீணடிக்கக் கூடாது என இருக்கிறேன் என புலம்புகிறேன். ஆனால் எனக்குத் தெரியவில்லை. இப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதே நேரம் எனக்கு இந்த ஜாலியோ ஜிம்கானா உலகத்தையே நினைத்து பொறாமையாகவும் இருக்கிறது.
  6. இப்படியான ஒரு அடிமை வாழ்க்கைக்கு நடுவே 2021 ஏப்ரலில் துவங்கி இவ்வருடம் பிப்ரவரியில் 380 பக்கங்களுக்கு மேல் வருகிற ஒரு நாவலை நான் எழுதி முடித்து விட்டேன் என்பதை நினைத்தால் திகைப்பாக இருக்கிறது. அதற்கு நான் கொரோனாவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நமது அமைப்புகளை சக்கரங்களை உடைத்து எல்லாரையும் சற்று தாமதப்படுத்தியதால், கொடுங்கோலர்களின் ரதங்கள் அங்கங்கே தேங்கிப் போனதால், நான் பயனுற்றேன். கொரோனாவை பின்னர் அவர்கள் முறியடித்து பின்னர் என்னை சாட்டையை சொடுக்கி விரட்டத் தொடங்கினார்கள் (நான் எனக்கு சம்பளம் தரும் வேலையை சொல்லவில்லை என்பதை என்னைத் தொடர்ந்து படித்து வருவோர் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.)
  7. என்னுடைய ஆசை மிகவும் சிறியது - நான் கேட்பதெல்லாம் தினமும் சில மணிநேரங்களாவது நான் ஒரே இடத்தில் இருந்தே ஒரே ஒரு புரோஜெக்டில் பணி செய்ய, அடுத்தடுத்த ஆண்டுகளில் சில நாவல்களையாவது எழுதி முடிக்க வேண்டும். அந்த சில மணிநேரங்கள் முழுக்க என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இப்போதைக்கு நான் புக்காவஸ்கியின் கவிதையில் வரும் அந்த மூச்சுத்திணறும் நீலப்பறவையைப் போலிருக்கிறேன்.  
  8. சிறைவாசிகளுக்கு ஏகப்பட்ட நேரம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுடைய நேரம் முழுக்க அவர்களுக்கானது. எனக்காக சிறை நிர்வாகம் ஒரு மடிக்கணினியை மட்டும் அனுமதிக்குமெனில் நான் அடுத்த பத்து வருடங்களும் சிறையில் இருக்க விரும்புகிறேன். ஏனெனில் சுதந்திரமெனில் அது பௌதீகமானது அல்ல, அது ஒருவர் தன் நேரத்தை சுதந்திரமாக செலவழிக்கும் உரிமையாகும். அது இல்லாத சுதந்திரம் என்ன சுதந்திரம்? யாராவது மேற்சொன்ன ஏற்பாட்டை செய்து தர முடியுமெனில் என்னை உடனே சிறையில் தள்ளி விடுங்கள். ஹென்ரி இப்படியான ஒரு கதையை எழுதி இருக்கிறார் - The Cop and the Anthem. அதில் வீடில்லாத ஒரு திருடன் - பெயர் சோபி - குளிர்காலத்தின் கொடுமை பொறுக்க முடியாமல் சிறைக்குப் போய் வசதியாக இருக்கலாம் என யோசித்து பல முயற்சிகளில் ஈடுபடுவான். நானும் சோபியைப் போல கேட்கிறேன்: சிறையில் தள்ளி விடுங்கள்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...