Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தமிழ் எழுத்தாளனின் புலம்பல்


தமிழ் எழுத்தாளர்களிடம் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விசித்திர புகார் இது: “யாருமே என்னைப் பற்றி பேசுவதில்லை, திட்டமிட்டு என்னை இருட்டடிப்பு செய்கிறார்கள். என் புத்தகங்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.” ஆனால் இவர்கள் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு எந்த விமர்சனமும் எழுத மாட்டார்கள். தன்னைப் பற்றி மட்டும் பிறர் மெனக்கெட்டு எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் - 'இதயம்' முரளி போல பிறர் இவர்களை ஒன்சைடாக பின் தொடர வேண்டுமாம், ஆனால் இவர்கள் ஹீராவைப் போல அவர்களைத் திரும்பியே பார்க்க மாட்டார்களாம். சரி இவர்கள் ஏன் அடுத்தவர்களைப் பற்றி எழுதுவதில்லை? ஏனென்றால் அவர்களுடைய படைப்பாக்க பணிகள் இடையே, அன்றாட அலுவல்களின் நெருக்கடிகளுக்கு இடையே, படித்த புத்தகங்களைப் பற்றி விமர்சனம் எழுத நேரம் கிடைக்காது. நியாயம் தானே? ஆனால் மற்றவர்களுக்கும் இது பொருந்தும் தானே?

அடுத்து, விமர்சகர்கள் என இதற்கென்றே மந்திரித்து விடப்பட்ட சில நல்லவர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு மேடை பேச அழைப்பார்கள். முன்னுரை எழுத புத்தகம் அனுப்புவார்கள். ஆனால் அவர்களுக்கு என வாசகர் படையோ, புத்தக விற்பனை மதிப்போ இராது. அவர்களுக்கு விருதுகள் கொடுக்க மாட்டார்கள். அங்கீகாரம் இருக்காது. அதனால் தான் என் தலைமுறையிலும் அதற்கு அடுத்த தலைமுறையிலும் முழுநேர இலக்கிய விமர்சகர்களே இல்லை. நியாயம் தானே? ஒன்று எழுத்துக்கான மதிப்பு, மரியாதை, வாசக அங்கீகாரம் வேண்டும் அல்லது சன்மானம் கிடைக்க வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வேலை செய்ய வேண்டியவன் விமர்சகன் / மதிப்புரையாளன் மட்டுமே. யாருமே சுவருடன் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. இப்போது அறுபது வயதுக்கு மேலுள்ள விமர்சகர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தமிழில் விமர்சகர் என யாருமே இருக்க மாட்டார்கள்.

அடுத்து, விமர்சனம் என்பது ஒரு தத்துவக் கட்டுரை எழுதுவதற்கு கிட்டத்தட்ட இணையாக உழைப்பை கோரும் பணி. சினிமா விமர்சனத்தை விட கடுமையான பணி. நான் முன்பு அதைத் தொடர்ச்சியாக பண்ணி வந்தேன். ஏனென்றால் நான் ஒரு இலக்கிய பைத்தியம். என்னைப் போன்ற வேறு இலக்கிய பைத்தியங்கள் சிலர் ஒரு பத்தாண்டுக்கு முன்பு வரை இதை செய்து வந்தார்கள். ஆனால் அக்காலம் முடிந்து அனேகமாக விட்டது - நான் நாவல் எழுதும் காலங்களில் வாசிப்பேன், ஆனால் வாசிக்கும் நூல்களுக்கு விமர்சனம் எழுத முனைவதில்லை.

அதனால் தான் தமிழின் கணிசமான முக்கிய படைப்புகளுக்கு விமர்சனக் கட்டுரைகளே வருவதில்லை. முன்னணி படைப்பாளிகளுக்குக் கூட சமூகவலைதளங்களில் தான் அதிகமாக அறிமுகக் குறிப்புகள், ரசனை உரைகள் வருகின்றன. அதாவது எழுத்தாளனாக அல்லாதவர்கள் தாம் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார்கள். எந்த திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் தன்னிச்சையாக அவர்கள் எழுதுகிறார்கள். அவர்களும் தாம் எழுத்தாளனாகி கதை, கவிதை எழுதும் வரை தான் இப்பணியை செய்வார்கள்.

சிலநேரம் ஒரு டிரெண்டிங் போல ஒரு புத்தகத்தைப் பற்றி சகஎழுத்தாளர்களும் தொடர்ச்சியாக பேசுவதுண்டு. ஆனால் அது விதிவிலக்கு மட்டுமே. இப்போதைக்கு எழுத்தாளர்கள் அமெச்சூர் எழுத்தாளர்களான வாசகர்களையே நம்பி இருக்கிறார்கள்.

ஆகையால் இனி எழுத்தாளர்கள் தம் சகஎழுத்தாளர்களை எதிர்நோக்காமல் வாசகர்களிடமே மதிப்புரை, ரசனை உரை, விமர்சனத்துக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். என்னுடைய நாவல்களை, சிறுகதைகளை, மற்ற புத்தகங்களைப் பற்றி கூட மூத்த, சமகால எழுத்தாளர்கள் பெரும்பாலும் எழுதியதில்லை. முழுக்க முழுக்க வாசகர்கள் தாம் என்னைப் பற்றி பேசியிருக்கிறார்கள். இதுவே எதிர்காலம்.

இனிமேல் எழுத்தாளன் தன் சகஎழுத்தாளன், மூத்த எழுத்தாளர்கள் முன்பு காற்சலங்கையுடன் சென்று நீதிகேட்க செல்லக் கூடாது. உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே உங்களைப் பற்றி எழுதுவார்கள். சும்மா சும்மா அவர்களிடம் போய் ஒப்பாரி வைக்காதீர்கள். எழுத்தாளர்கள் பரஸ்பரம் ஆதரிக்கிற, ஒன்றாக இணைந்து இயக்கமாக செயல்படுகிற காலம் முடிந்து விட்டது.
யாருக்கும் யார் மீதும் வன்மமோ குரோதமோ இருட்டடிக்கும் நோக்கமோ இல்லை. எழுத்தாளர்களுக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் உண்டு, ஆனால் அந்த அன்பையும் மரியாதையையும் நினைத்துப் பார்க்க இன்று ‘நேரம்’ இல்லை. எல்லாரும் தத்தமது அன்றாட வாழ்க்கையை, இலக்கிய உலகை, இடத்தைக் காப்பாற்ற, எழுத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி நீங்கள் கவனிக்கப்படவில்லை என்று தோன்றினால் வாசகர்களிடம் கேளுங்கள். உங்கள் புத்தகத்தைப் பற்றி அறிமுகம் செய்ய அவர்களிடம் கோருங்கள். வாசக சாலை செய்வதைப் போல இத்தகையோரை உங்கள் கூட்டங்களில் பேச வைத்து உத்வேகப்படுத்துங்கள், ஆற்றுப்படுத்துங்கள். அவர்கள் பயிற்சியற்ற மொழியில் எழுதினாலும், உணர்ச்சிவயப்பட்டு மட்டுமே பேசினாலும் அதில் ஒரு களங்கமின்மை, உண்மைத்தன்மை இருக்கும். இனி இலக்கிய விமர்சனத்தை வாசகர்கள் எடுத்து செய்வார்கள், செய்யட்டும். சக எழுத்தாளன் பாவம் அவனை விட்டு விடுங்கள்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...