Skip to main content

தமிழ் எழுத்தாளனின் புலம்பல்


தமிழ் எழுத்தாளர்களிடம் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விசித்திர புகார் இது: “யாருமே என்னைப் பற்றி பேசுவதில்லை, திட்டமிட்டு என்னை இருட்டடிப்பு செய்கிறார்கள். என் புத்தகங்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.” ஆனால் இவர்கள் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு எந்த விமர்சனமும் எழுத மாட்டார்கள். தன்னைப் பற்றி மட்டும் பிறர் மெனக்கெட்டு எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் - 'இதயம்' முரளி போல பிறர் இவர்களை ஒன்சைடாக பின் தொடர வேண்டுமாம், ஆனால் இவர்கள் ஹீராவைப் போல அவர்களைத் திரும்பியே பார்க்க மாட்டார்களாம். சரி இவர்கள் ஏன் அடுத்தவர்களைப் பற்றி எழுதுவதில்லை? ஏனென்றால் அவர்களுடைய படைப்பாக்க பணிகள் இடையே, அன்றாட அலுவல்களின் நெருக்கடிகளுக்கு இடையே, படித்த புத்தகங்களைப் பற்றி விமர்சனம் எழுத நேரம் கிடைக்காது. நியாயம் தானே? ஆனால் மற்றவர்களுக்கும் இது பொருந்தும் தானே?

அடுத்து, விமர்சகர்கள் என இதற்கென்றே மந்திரித்து விடப்பட்ட சில நல்லவர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு மேடை பேச அழைப்பார்கள். முன்னுரை எழுத புத்தகம் அனுப்புவார்கள். ஆனால் அவர்களுக்கு என வாசகர் படையோ, புத்தக விற்பனை மதிப்போ இராது. அவர்களுக்கு விருதுகள் கொடுக்க மாட்டார்கள். அங்கீகாரம் இருக்காது. அதனால் தான் என் தலைமுறையிலும் அதற்கு அடுத்த தலைமுறையிலும் முழுநேர இலக்கிய விமர்சகர்களே இல்லை. நியாயம் தானே? ஒன்று எழுத்துக்கான மதிப்பு, மரியாதை, வாசக அங்கீகாரம் வேண்டும் அல்லது சன்மானம் கிடைக்க வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வேலை செய்ய வேண்டியவன் விமர்சகன் / மதிப்புரையாளன் மட்டுமே. யாருமே சுவருடன் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. இப்போது அறுபது வயதுக்கு மேலுள்ள விமர்சகர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தமிழில் விமர்சகர் என யாருமே இருக்க மாட்டார்கள்.

அடுத்து, விமர்சனம் என்பது ஒரு தத்துவக் கட்டுரை எழுதுவதற்கு கிட்டத்தட்ட இணையாக உழைப்பை கோரும் பணி. சினிமா விமர்சனத்தை விட கடுமையான பணி. நான் முன்பு அதைத் தொடர்ச்சியாக பண்ணி வந்தேன். ஏனென்றால் நான் ஒரு இலக்கிய பைத்தியம். என்னைப் போன்ற வேறு இலக்கிய பைத்தியங்கள் சிலர் ஒரு பத்தாண்டுக்கு முன்பு வரை இதை செய்து வந்தார்கள். ஆனால் அக்காலம் முடிந்து அனேகமாக விட்டது - நான் நாவல் எழுதும் காலங்களில் வாசிப்பேன், ஆனால் வாசிக்கும் நூல்களுக்கு விமர்சனம் எழுத முனைவதில்லை.

அதனால் தான் தமிழின் கணிசமான முக்கிய படைப்புகளுக்கு விமர்சனக் கட்டுரைகளே வருவதில்லை. முன்னணி படைப்பாளிகளுக்குக் கூட சமூகவலைதளங்களில் தான் அதிகமாக அறிமுகக் குறிப்புகள், ரசனை உரைகள் வருகின்றன. அதாவது எழுத்தாளனாக அல்லாதவர்கள் தாம் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார்கள். எந்த திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் தன்னிச்சையாக அவர்கள் எழுதுகிறார்கள். அவர்களும் தாம் எழுத்தாளனாகி கதை, கவிதை எழுதும் வரை தான் இப்பணியை செய்வார்கள்.

சிலநேரம் ஒரு டிரெண்டிங் போல ஒரு புத்தகத்தைப் பற்றி சகஎழுத்தாளர்களும் தொடர்ச்சியாக பேசுவதுண்டு. ஆனால் அது விதிவிலக்கு மட்டுமே. இப்போதைக்கு எழுத்தாளர்கள் அமெச்சூர் எழுத்தாளர்களான வாசகர்களையே நம்பி இருக்கிறார்கள்.

ஆகையால் இனி எழுத்தாளர்கள் தம் சகஎழுத்தாளர்களை எதிர்நோக்காமல் வாசகர்களிடமே மதிப்புரை, ரசனை உரை, விமர்சனத்துக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். என்னுடைய நாவல்களை, சிறுகதைகளை, மற்ற புத்தகங்களைப் பற்றி கூட மூத்த, சமகால எழுத்தாளர்கள் பெரும்பாலும் எழுதியதில்லை. முழுக்க முழுக்க வாசகர்கள் தாம் என்னைப் பற்றி பேசியிருக்கிறார்கள். இதுவே எதிர்காலம்.

இனிமேல் எழுத்தாளன் தன் சகஎழுத்தாளன், மூத்த எழுத்தாளர்கள் முன்பு காற்சலங்கையுடன் சென்று நீதிகேட்க செல்லக் கூடாது. உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே உங்களைப் பற்றி எழுதுவார்கள். சும்மா சும்மா அவர்களிடம் போய் ஒப்பாரி வைக்காதீர்கள். எழுத்தாளர்கள் பரஸ்பரம் ஆதரிக்கிற, ஒன்றாக இணைந்து இயக்கமாக செயல்படுகிற காலம் முடிந்து விட்டது.
யாருக்கும் யார் மீதும் வன்மமோ குரோதமோ இருட்டடிக்கும் நோக்கமோ இல்லை. எழுத்தாளர்களுக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் உண்டு, ஆனால் அந்த அன்பையும் மரியாதையையும் நினைத்துப் பார்க்க இன்று ‘நேரம்’ இல்லை. எல்லாரும் தத்தமது அன்றாட வாழ்க்கையை, இலக்கிய உலகை, இடத்தைக் காப்பாற்ற, எழுத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி நீங்கள் கவனிக்கப்படவில்லை என்று தோன்றினால் வாசகர்களிடம் கேளுங்கள். உங்கள் புத்தகத்தைப் பற்றி அறிமுகம் செய்ய அவர்களிடம் கோருங்கள். வாசக சாலை செய்வதைப் போல இத்தகையோரை உங்கள் கூட்டங்களில் பேச வைத்து உத்வேகப்படுத்துங்கள், ஆற்றுப்படுத்துங்கள். அவர்கள் பயிற்சியற்ற மொழியில் எழுதினாலும், உணர்ச்சிவயப்பட்டு மட்டுமே பேசினாலும் அதில் ஒரு களங்கமின்மை, உண்மைத்தன்மை இருக்கும். இனி இலக்கிய விமர்சனத்தை வாசகர்கள் எடுத்து செய்வார்கள், செய்யட்டும். சக எழுத்தாளன் பாவம் அவனை விட்டு விடுங்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...