பொதுவாக கொழுப்புணவுகள் சுவையானவை. சாப்பிட்டதும் நிறைவு தருபவை. அதனால் கீட்டோ உணவு முறையின் முதல் இரு நாட்கள் நன்றாகவே போயின. மூன்றாவது நாள் தான் தலைவலி, சிறிது களைப்பு தென்பட்டது. அடுத்து இந்நிலை மோசமாகி ஒருவிதமான கோபம், கடுப்பாக மாறி யாரைப் பார்த்தாலும் கொலைகாண்டாகத் தொடங்கியது. தலைசுற்றல் ஏற்படவில்லை, இயல்பாகவே எல்லா வேலைகளையும் பண்ண முடிந்தது. வகுப்பில் நன்றாகவே பேசினேன். அன்றாட வேலைகளிலும் குழப்பம், நினைவு மறதி ஏற்படவில்லை. ஓய்வு நேரத்தில் நிறைய எழுதக் கூட முடிந்தது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தேன். முன்பு நான் எழுதும் போது விரல்கள் வேகமாக தட்டச்சுப் பலகையில் விளையாடும். ஆனால் இன்றோ நான் நினைத்த சொல்லை ஒரு வினாடி தாமதமாகவே என் விரல்கள் அடித்தன. அதாவது நான் நினைப்பதற்கும் என் உடல் செயல்படுவதற்கும் இடையே ஒரு மிகச்சிறிய தாமதம், lag ஐ உணர்ந்தேன். என்னுடைய இதுவரையிலான எழுத்துப் பயிற்சியினால் இக்குறையைக் கடந்து எழுதவும் வேறு வேலைகளை முடிக்கவும் இயன்றது.
ஆனாலும் இன்று முழுக்க மனதின் பின்னால் கண்ணுக்குப் புலப்படாத யார் மீதோ கடும் வன்மம் நொதித்துக் கொண்டிருந்தது. இன்று கஷ்ட காலத்துக்கு யாராவது என் கோபத்தை கிளறும்படியாக, என்னை சீண்டும்படியாக நடந்திருந்தால் நான் நிச்சயமாக என் கட்டுப்பாட்டை இழந்திருப்பேன். நல்லவேளை இன்று உலகம் மிக அமைதியாக என் முன் காட்சியளித்தது. சாலையில் கூட வாகன நெரிசல், இடைஞ்சல்கள் இல்லை. எப்படியோ பகல் நேரப் பணிகளை முடித்து வீட்டுக்கு வந்து ஒரு ஆம்லெட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு குத்துச்சண்டை பயிற்சிக்காக ஜிம்முக்கு சென்றேன்.
இன்று மாஸ்டர் ஒரு கடினமான அடவைப் பயில வைத்தார். என் எதிரே ஒரு பையன் உட்கார்ந்து கொண்டு இடது கையால் குத்துவான். நான் தலையை இடப்பக்கமாக அசைத்து அந்த குத்தை தவற விட்டு அவனுடைய கை திரும்பப் போகும் முன்பே அதன் மீதாக என் வலக்கை கொண்டு அவனுடைய கைக்கும் தலைக்குமான இடைவெளியில் குத்த வேண்டும். இதைப் புரிந்து கொண்டு சரியாகப் பயிலவே நேரம் பிடித்தது. நான் நினைத்து குத்துகிறேன், அது சில நொடிகள் தாமதமாகவே போய் படுகிறது. நான் தலையை சாய்த்து மிஸ் பண்ணுறேன், ஆனால் நினைத்த வேகத்தில் தலை அசையவில்லை. ஒருவழியாக இதை செய்து காட்டிய பின்னர் அடுத்ததாக மிஸ் பண்ணி குத்தி விட்டு அதே சரளத்துடன் என்னுடைய கை என் வலது காதைப் பாதுகாக்க வரும் முன்பே இடக்கை எதிராளியை அடைந்து அவனை அப்பர் கட் செய்ய வேண்டும் என்றார் மாஸ்டர். எப்படியென்று செய்தும் காட்டினார். இரண்டு குத்துக்களையும் வேகமாக ஒரே ஒழுக்கில் விட என்னால் முடியவில்லை. விலகி மிஸ் பண்ணி குத்தி விட்டு அடுத்தொரு அப்பர் கட்டை விட்டாலும் என் உடம்பு தனியாகவும் கைகள் தனியாகவும் இயங்குவதைப் போலொரு உணர்வு. அப்போது தான் மாஸ்டர் வந்து “உங்க மைண்ட் இங்க இல்ல. வேறெதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க” என்றார். நான் அவரிடம் கீட்டோவின் மூன்றாவது நாளாகையால் என் உடல் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது என்றேன். அவர் கிளம்பும்படி சொன்னார்.
அப்போது தான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது - முழுமையான மன ஆற்றலோ, உடல் வேகமோ இல்லாமல் இருந்தால் கூட பேசுவது, யோசிப்பது, எழுதுவது போன்ற வேலைகளை சமாளிக்க முடிகிறது. உடம்பு சுத்தமாக முடியாத சந்தர்பத்தில் கூட சுணக்கமின்றி ஒரு நாவலை எழுத, ஒரு பாட்டைப் பாட, ஒரு மணிநேரம் மேடையில் பேச, தர்க்கரீதியாக சிந்தித்து முடிவெடுக்க முடிகிறது. ஆனால் உடலை முழுக்க பயன்படுத்த வேண்டிய இடங்களில் தான் அந்த தாமதமான எதிர்வினைகள் நம்மை கைவிட்டு விடுகின்றன. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நம் உடல் முழுக்க அம்பலப்பட்டு விடுகிறது. ஒரு அரைவினாடி தாமதத்தில் உடல் இயங்குவது கூட அங்கு அனைவருக்கும் புலப்பட்டு விடுகிறது.

Comments