லஷ்மி சரவணகுமார் பங்கேற்ற ஒரு கூட்டத்திலே நான் இதைச் சொன்னேன் - எதிர்கால தமிழ் இலக்கியத்தின் திசைகளைத் தீர்மானிக்கும் ஒரு சில படைப்பாளிகளில், ஆளுமைகளில் ஒருவராக அவர் இருப்பார். எழுத்து மட்டுமல்ல, தொடர்ச்சியான வாசிப்பு, தனக்கான பாதையை அமைக்கும் முயற்சி, அயராமல் தன்னை தக்க வைக்கும் முனைப்பு ஆகிய இயல்புகளை நான் என் தலைமுறையினர் அனைவரிடம் காண்பதில்லை. நிறைய பேர் தனிப்பட்ட தேவைகளால் இலக்கிழந்து போகிறார்கள். ஒரு சில புத்தகங்கள் எழுதிய பிறகு ஒரு நீண்ட இடைவெளி, அடுத்து திரும்ப வருகிறார்கள், காணாமல் போகிறார்கள், அல்லது வெறும் தோற்றமாக மட்டும் நிலைக்கிறார்கள். லஷ்மி என்ன தடுமாற்றங்கள் வந்தாலும் இலக்கிய குதிரையில் இருந்து இறங்குவதே இல்லை என்பது பாராட்டத்தக்கது. இன்னொரு பக்கம் சினிமாவிலும் இயங்கி வருகிறார். இரு எதிரெதிரான களங்களில் வேலை செய்வது மிக மிக கடினம். கடும் பிரயாசை, கவனம், தீர்க்கமான பார்வை இருந்தாலே அது சாத்தியமாகும்.
கடந்த பத்தாண்டுகளில் அவர் சிறுகதைகளில் கையாண்டுள்ள பரப்பு, உணர்ச்சிகள், வித்தியாசமான கதையமைப்புகளைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே கதையை திரும்பத் திரும்ப எழுதக் கூடாது எனும் தெளிவும், ஆசான்களை பிரதியெடுக்கக் கூடாது எனும் முடிவும், தனக்கான எழுத்துலகை உருவாக்க வேண்டும் எனும் தீர்மானமும் இக்கதைகளின் பின் இருக்கிறது.
புதிய உலகொன்றை, தனக்கேயான உலகொன்றை உருவாக்க முயலும் படைப்பாளிக்கே ஆன தடுமாற்றங்களை அவருடைய கதைகளிலும் காண முடியும். அதுதான் அவருடைய வலிமை என்றும் தோன்றுகிறது.
கடந்த ஓராண்டில் வெகுஜன பரப்பில் அவர் எழுதிய தொடர்புனைவில் தன் மொழியை, கதைகூறும் பாணியை சற்றே லகுவாக்கி, பரபரப்பாக்கியிருக்கிறார். நரனும் இதைச் செய்திருக்கிறார். இது இன்று தோன்றியுள்ளதொரு போக்கு.
அதே போல கடந்த ஏழாண்டுகளில் அவர் சிறுகதையின் இலக்கணத்தை, வடிவ ஒருங்கை மீறி நாவலுக்கான களத்தை சிறுகதைக்குள் கொண்டு வருகிறார். சில சிறுகதைகளை சுருக்கமான திரைக்கதை வடிவிலும் எழுதுகிறார். இதைப் பற்றி நான் விசாரித்த போது சிறுகதையின் கராறான இரும்பு விதிகள் மூச்சுத்திணறடிக்கும் வகையில் உள்ளன, அவற்றை மீறிப் போக வேண்டும் என்று தெரிவித்தார். இது தான் எனக்கு லஷ்மியிடம் பிடித்தது - சரியோ தப்பா தான் என்ன செய்கிறோம், செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவு அவரிடம் உண்டு. யோசித்தால் உடனடியாக செயல்படுத்தும் பாங்கும் அவருக்கு உண்டு.
தற்போது அவரது மோக்லி அமைப்பைக் கொண்டு அவர் ஒருங்கிணைக்கும் கூட்டங்களும் முக்கியமானவை. சிலரைப் போல ஒரு அமைப்பை உருவாக்கி தன் படைப்புகளைப் விளம்பரப்படுத்த அதை பயன்படுத்தாமல் தான் நம்புகிற, முக்கியமாக கருதுகிற விசயங்களை, ஆளுமைகளை உள்ளே கொண்டு வந்து அக்கூட்டங்களை நடத்துகிறார். மடங்களை உருவாக்க முயலவில்லை.
மனதளவில் லஷ்மி இன்னும் ஒரு 12 வயதுக்காரரே என அவரிடம் பேசும் போதும் அவர் தன் அப்பாவைப் பற்றி எழுதியுள்ளவற்றைப் படிக்கையிலும் தோன்றும். அதாவது தன்னை ஒரு தன்னிலையாக அவர் எப்படி பார்க்கிறாரோ அந்த பிம்பத்தை சொல்கிறேன். அந்த பிம்பத்தின் குரலிலே அவர் எழுத்துக்குள் பேசுகிறார். அவருடைய புனைவுகளிலும் அவர் தனக்கென முதிர்ச்சியான குரலை உருவாக்கிக் கொள்வதில்லை. அவருடைய கதைகளில் - குறிப்பாக தன்மையில் (first person) சொல்லப்படும், பெண்களை மையமிட்ட கதைகளில் - ஒலிப்பது இந்த பன்னிரெண்டு வயதினனின் குரலே. தான் எப்படியே தன் கதைகளிலும் அப்படியே இருக்க முயல்வது தான் அவரது பிரதானமான சிறப்பே. அதில் செயற்கைத்தனம், நாடகம் துளியும் இல்லை. அவரது எழுத்து நம்மை ஈர்ப்பதற்கு - அதன் கலைத்தன்மையை, மனவெழுச்சியை கடந்து - இந்த உளவியலும் ஒரு முக்கிய காரணம். மேற்கில் ஜெ.சி சாலிங்கர், புக்காவஸ்கி போன்றோர் - வேறு தளங்களில், சூழல்களில் - இப்படியான பதின்வயது ஆளுமையை எழுத்துக் குரலாக உருமாற்றி வெற்றி கண்டவர்களே.
லஷ்மி சரவணகுமார் சினிமாவிலும் வெப்சீரிஸிலும் வெற்றி பெற இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்.

Comments