5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்?
அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா?
பதில்: என் அப்பாவுக்கு திராவிட சிந்தனைகளில் ஆர்வம் இருந்தது. அவர் வாயில் இருந்து ஓராயிரம் முறைகள் பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய புகழ்மொழிகளைக் கேட்டிருப்பேன். ஆனால் சின்ன வயதில் இவர்கள் என்னை ஈர்க்கவில்லை. பதினைந்து வயதில் நான் அறிமுகம் கொண்ட சிறுபத்திரிகை மரபும் திராவிட சிந்தனைகளில் இருந்து விலக்கியே வைத்தது. ஆனால் பின்னாளில் கிடைத்த அனுபவங்கள் பெரியாரியம் எவ்வளவு முக்கியமான சிந்தனைப் பள்ளி, சாதியம், பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு மையம் சாராம்சவாதம், இறைநம்பிக்கை எனப் புரிய வைத்தது. பெரியாரிய வாசிப்பு, பௌத்தம் குறித்த வாசிப்புகளும் சிந்தனையும் இந்த நிலைப்பாட்டை இன்னும் ஆழமாக்கியது. இன்னொரு பக்கம் எனக்கு சோஷலிஸ சிந்தனைகளில் உள்ள நம்பிக்கைக்கும் கலை இலக்கிய பெருமன்ற தொடர்புக்கும் சம்மந்தம் உள்ளது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதாரம் மக்களிடையே ஏற்படுத்தும் பிளவுகள், அநீதியான வாழ்க்கைமுறை, அடிமைத்தனம், சுரண்டல் இதையெல்லாம் காணும் போது மார்க்ஸியத்தில் இருந்தே நமது நெருக்கடிக்கான விடையை காண முடியும் எனும் நம்பிக்கை எனக்கு வலுத்துள்ளது. நவதாராளாவதத்தின் போக்கை உள்வாங்கி அரசின் முழுக்கட்டுப்பாட்டில் மக்களை முதலீட்டாளர்களாக்கி, பங்குதாரார்களாக்கி உற்பத்தியும், தொழில்களும் நடக்கிற ஒரு புதிய சோசலிச முதலீட்டிய அமைப்பு, அரசே முதலீட்டியமாகிற, அதை மக்களே கட்டுப்படுத்துகிற, வரிகளோ வலுவான இறையாண்மையோ இல்லாத நிலை தோன்ற வேண்டும். அதே நேரம் அது இறையாண்மையை முழுமையாக வலியுறுத்தாத ஓரளவுக்கு அனார்க்கிஸத் தன்மை கொண்ட அரசாக உருவாக வேண்டும் என கனவு காண்கிறேன். எல்லா மாற்றங்களும் கனவிலும், கற்பனைகளில் இருந்தும் தானே உருவாகின்றன!
தத்துவத் தளத்தில் தெரிதாவைப் பற்றி படிக்கையில் எதேச்சையாக ஒரு ஆய்வுக்கட்டுரையில் நாகார்ஜுனர்-தெரிதா ஒப்பிட்டை கவனித்தேன். பௌத்தம் என்றால் ஜென் என்ற அளவில் தெரிந்திருந்த எனக்கு மகாயான பௌத்தத்தை சேர்ந்த நாகார்ஜுனரின் “மூலமத்யமகா காரிகா” எனும் நூல் மிகப்பெரிய திறப்பை அளித்தது. சாக்ரடீஸ், ஹைடெக்கர், தெரிதா, லக்கான், டெலூஸ் இவர்களை எல்லாரையும் விட சிறந்த தத்துவஞானி நாகார்ஜுனர் தான் எனும் முடிவுக்கு வந்தேன்.
ஏனென்றால் நாகார்ஜுனர் அடிப்படை எனும் விசயத்தையே தகர்க்கிறார். வாழ்வில் விடுதலை என்றால் என்ன என புரிய வைக்கிறார். இந்த புரிதலை இலக்கியத்துக்குள் எப்படி கொண்டு வருவது, வாழ்க்கையில், நடப்புலகில், சிந்தனைமுறையில் எப்படி பரிசீலித்துப் பார்ப்பது என இப்போது யோசிக்கிறேன்.
6. சிறந்த கட்டுரையாளர்களாக,அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்? தமிழுக்கு மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். வியாசம் என்றால் “ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை” என்கிறது அகராதி. உங்களின் வியாசர்கள் யார் யார்?
7. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் என்ன? எவரின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்?
8. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?
பதில்: எனக்கு சிறந்த நூல் பட்டியலில் நம்பிக்கை இல்லை. “சிறந்த” என ஒன்றுமில்லை,
யாருமில்லை. ஒவ்வொன்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் அந்த இடத்தைப் பெறுகின்றன.
மேலும் வாசிப்பு ஒரு அந்தரங்க நடவடிக்கை. எப்படி உங்கள் காதலியை நான் பரிந்துரைப்பதில்லையோ அப்படியே உங்களுக்கான எழுத்தாளனையும் நான் பரிந்துரைக்கக் கூடாது என நினைக்கிறேன். எனக்கு சுத்தமாகப் பிடிக்காத, நம்பிக்கை இல்லாத எழுத்தாளனை நீங்கள் கொண்டாடினாலும் நான் உங்களை மாற்ற முயல மாட்டேன். எதை வாசிக்கிறோம் என்பதல்ல, எப்படி வாசிக்கிறோம் என்பதே முக்கியம் என்கிறார் தெரிதா. ஒரு சிக்கலற்ற படைப்பைக் கூட ஒருவர் வெகுசுவாரஸ்யத்துடன் படித்து ஒன்றை அவர் அடைய முடியும்.
அந்த ஒன்று என்ன? நமது உளவாதலின் நுட்பத்தை, நமது இன்மை நோக்கிய ஒரு திறப்பை, புத்தக வாசிப்பு சாத்தியமாக்கும். அது எதையும் உருவாக்கித் தருவதில்லை; அதனால் வாசிப்பை மகத்துவப்படுத்த அவசியமில்லை. மாறாக அது நமது இன்மைக்கான வாயிலாக இருக்கிறது. ஆகையால் வாசிப்பே முக்கியம், எதை என்பதல்ல.

Comments