நான் என் தானியங்கி சக்கரநாற்காலியை விடுகிற இடத்தில் காலை நேரத்தில் தேனீக்கள், வண்டுகள், குளவிகள், வெட்டுக்கிளிகள் தினமும் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் பண்ணும். இன்று காலை நான் என் அலுவலகத்துக்காக மின்தூக்கியில் ஏறும் போது என் பையில் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தேன். ஆர்ப்பாட்ட களத்தில் இருந்தே என் பையில் வந்தேறியிருக்க வேண்டும். இளம்பச்சையில் பளபளப்பாக அழகாக இருந்தது. அதன் அசையாத அமர்தல், தான் எங்கிருக்கிறோம் எனும் தன்னுணர்வு இன்மை எனக்கு சிறுபயத்தைக் கொடுத்தது. கூடவே எனக்கு இந்த பறக்கும் உயிர்களைக் கண்டாலே ஒரு உதறல். பறக்கும் கரப்பானபூச்சியைக் கண்டால் என்னை மறந்து கைகளைத் தூக்கியபடி கத்துவேன். அதனால் வெட்டுக்கிளியிடம் முதலில் சொல்லிப் பார்த்தேன். அது கேட்கவில்லை. ஊதி விட்டேன். சிறிது அசைந்தது. ஆனால் என் பையை விட்டிறங்க மறுத்தது. தட்டி விட்டாலும் கேட்கவில்லை. மின் தூக்கியில் இருந்து வெளிவந்ததும் அதை தட்டி விட்டேன். இப்போது அது தரையில் இறங்கி அங்கும் ஒரு தியான முத்திரை காட்டி அமர்ந்தது. பொறுமையாக ஊரைப் பார்த்து போ என நான் என் அலுவலகம் சென்று விட்டேன்.
நான் என் வகுப்புக்காக மீண்டும் அதே மின் தூக்கியிடம் வந்த போது தான் தரையில் அதைப் பார்த்தேன் - ப யாரோ மிதித்ததில் இளம்பழுப்பில் தன் உள்ளுறுப்புகளை கக்கி விட்டு கால்களைப் பரப்பி பரிதாபமாகக் கிடந்தது. இப்போது வரை அந்த பிம்பம் என் மனதை விட்டகலவில்லை. அது ஏன் என் பையில் ஏறியது? போராட்டக் களத்திலே இருந்திருக்கலாம் அல்லவா? மின் தூக்கி அருகே வந்தவர்கள் ஏன் அதைப் பார்க்கவில்லை? தமது பூட்ஸ் கால்கள் எதையெல்லாம் மிதிக்கின்றன என கவனிக்க மாட்டார்களா? அது ஏன் அந்த பெரிய பூட்டைப் பார்த்ததும் எழுந்து தாவிப் பறக்கவில்லை? அது எந்த சப்தமும் எழுப்பாமல் இறந்திருக்கும் அல்லவா?
ஒருவேளை எதேச்சையாக அது என் பையில் ஏறி அமர்ந்திருக்கலாம். எங்கு போனாலும் அங்கு நமக்கு இரை கிடைக்கும் என நம்பியிருக்கலாம். பூட்ஸ் அணிந்த கால்கள் வந்த போது சுதாரிக்க அவகாசம் இல்லாமல் போயிருக்கலாம். நமக்கும் அப்படித் தானே ஆகிறது - சுதாரிக்க சிறிதும் அவகாசம் தராமல் இந்த வாழ்க்கை எதையெதையோ நம்மிடம் இருந்து தட்டிப் பறித்து விட்டு நிராதரவாக விட்டுப் போகிறது.
காலம் ஏன் இப்படி ஒரு ஜேப்படித் திருடனாக இருக்கிறது? விபத்து என்றால் இந்த திருடனிடம் நம் உடலை, நம் உறவுகளை, உயிரை பறிகொடுப்பது தானே? இங்கு நடக்கிற எதற்காவது ஒரு தர்க்கம், நியாயம் இருக்கிறதா? நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்மை எங்கு எடுத்து செல்லும் என்பது குறித்து ஏதாவது ஒரு முன்னறிதல் நமக்கு இருக்கிறதா? எந்த உயிருக்காவது இருக்கிறதா?
முன்னறிவில்லாமல் தன்னை காலத்திடம் ஒப்புக்கொடுத்த வெட்டுக்கிளியே இங்கு உன் தவறு தான் என்ன? இன்று நீ கூடுதலாக சிறிது நேரம் தூங்கியிருக்கக் கூடாதா? சிறு இலைகளை ஏதாவது ஒரு தாவரத்தில் தேடியிருக்கக் கூடாதா? அங்கேயே எதையாவது வேடிக்கை பார்த்தபடி இருந்திருக்கக் கூடாதா? ஏன் என்னுடன் உல்லாச சுற்றுலா வந்தாய்? நான் ஏன் உன்னைக் கண்டு பயந்தேன்?
சிறு வெட்டுக்கிளியே அடுத்த முறை உன்னை இறக்கி விட மாட்டேன்.

Comments