Skip to main content

நாவலில் காட்சியைக் கட்டமைக்கும் திறன்: ஷோபாசக்தியின் “சலாம் அலைக்கில்” இருந்து ஒரு உதாரணம்




ஷோபாசக்தியின்சலாம் அலைக்என்னை மிகவும் பாதித்த இடம் இது. ஜெபானந்தன் ஈழப் போரின் போது அங்கிருந்து தப்பித்து நிறைய போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸுக்கு வருகிறான். அங்கு அவன் மற்ற அகதிகளைப் போன்று குடியுரிமைக்காக விண்ணப்பித்து தனக்கெதிராக தொடர்ந்து மூடப்படும் கதவுகளைக் கண்டு மனம் தளராது, அல்லது அதற்கான வாய்ப்பில்லாமல் தன்னை தக்க வைப்பதற்காக ஓடிக் கொண்டே இருக்கிற ஒருவன். அவன் தன்னை விட வயதில் மூத்தவளான உமையாளைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். விவாகரத்து பெறுகிறார்கள். அவர்களுடைய மகனை உமையாள் தனியாக வளர்க்கிறார். அம்மகன் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து மாலியில் நடக்கும் போரில் கண்ணி வெடியில் சிக்கி இறந்து போகிறான். ஜெபான்ந்தன் ஒரு போரினால் சிதைந்து போகும் குடும்பத்தில் இருந்து தப்பி வந்து பிரான்ஸில் தன் மகன் மீண்டும் ஒரு மகனையும் பலி கொடுக்கிற துயரத்துடன், கையாலாகாத பரிதவிப்புடன் நாவல் முடிகிறது.

இறுதியில் வருகிற காட்சி ஒன்று முக்கியமானது. ஒரு சிறந்த காட்சி உருவாக அதன் முடிவில் வரும் சிறிய திருப்பம், அதிர்ச்சியுடன் அதன் பின்புலம், பின்னணியில் வரும் பொருட்கள், உயிர்கள் சரியாக திட்டமிடப்படுவதும் அவசியம் (staging). ஒரு இடம், அங்குள்ள விசயங்கள், அங்கு வரும் மனிதர்கள் எங்கிருக்கிறார்கள், எங்கிருந்து எங்கு போகிறார்கள், ஒரு வசனத்தைப் பேசும் போது எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றின தெளிவு இருந்தால் தான் குறைவான சொற்களில் நம்மால் நெஞ்சைத் தைக்கிற ஒரு காட்சியை உருவாக்க முடியும். இதற்கு கீழ் வரும் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.

 ஜெபானந்தன் ஒரு தேவாலயத்தில் வேலை பார்க்கும் தன் முன்னாள் மனைவியைத் தேடிப் போகிறான். அவனுக்கு ஒரு நிச்சயமான நோக்கம் இருக்கிறது. அது பின்னால் வருகிறது:


"மகன்ர டொக்குமெண்ட்ஸ் வேணும்."

"என்ன டொக்குமெண்ட்?"

"பிறப்பு சேர்ட்டிபிகெட், பிறப்பு சேர்ட்டிபிகெட்"

"என்னத்துக்கு?" என்று கேட்ட உமையாளின் கண்கள் இப்போது சுருங்கிப் போயின. நான் ஆலயத்தின் கூரையைப் பார்த்தவாறே சொன்னேன்:


"மகன் பிரான்ஸுக்காக செத்திருக்கிறான். இதைச் சொல்லிக் கேட்டால் எனக்கு பிரஞ்சு நஷனாலிட்டி கிடைக்கும்."

(...)

உமையாள் தனது கையிலிருந்த இரண்டு தாள்களையும் என் முன்னே மேசையில் வைத்தாள். அவை மகன் மக்ஸென்னினது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்.


நான் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்தேன். உமையாள் அப்போது ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தவாறே ஒளிப்பிராணியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தாள்.


"வாறன்" என்றேன்.


என்னை நிமிர்ந்து பார்த்த உமையாள் "சமைக்கப் போறன் ... சாப்பிடிட்டுப் போறீரோ?" என்று கேட்டாள்.


"பிள்ளைக் கறி" என்றேன்.


"சந்நிதியானே" என்ற முணுமுணுப்பு என் காதில் ஒலித்தது."


(“ஸலாம் அலைக்", பக் 139-140, ஷோபாசக்தி)


இருவரும் தனியாக சந்தித்திருந்தால் இக்காட்சி இவ்வளவு உணர்வுபூர்வமாக அமைந்திருக்காது. அந்த செல்லப்பிராணியும் அதை உமையாள் நடத்தும் விதமும் அச்சூழலை கூர்மையாக்குகிறது. அவர்களுடைய இறந்து போன மகனின் வெற்றிடம் ஒளிமிக்கதாகத் தோன்றுகிறது. இருவர் பேசுகையில் பின்னணியில் வரும் உயிர்கள், பொருள்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதென்பது திரைப்படக்கலையின் முக்கியமான உத்தி. ஷோபாசக்தி இந்நாவல் முழுக்க இப்படியான திரை உத்திகளை நிறைய பயன்படுத்துகிறார்

இன்னொரு விசயம் அந்த ஒளிப்பிராணி அவர்களுடைய மகனின் ஆன்மாவாகவும் இருக்கலாம்.

ஒரு காட்சியில் வெளியை, சூழலை, பொருட்களை எப்படி சரியாக பயன்படுத்துவது, பாத்திரங்களை எங்கே நிற்க வைப்பது எனில் பிளாக்கிங்கிற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது.


கடைசியாக வரும் "பிள்ளைக்கறி" எனும் வசனம் நம்மை உலுக்கிப் போடுகிறது. ஆனால் அத்துடன் காட்சியைத் தறித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உமையாள் மனமுடைந்து "சந்நிதியானே" எனக் கேவுவதாக காட்சி முடிவது தேவையற்றது எனத் தோன்றுகிறது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...