ஷோபாசக்தியின் “சலாம் அலைக்” என்னை மிகவும் பாதித்த இடம் இது. ஜெபானந்தன் ஈழப் போரின் போது அங்கிருந்து தப்பித்து நிறைய போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸுக்கு வருகிறான். அங்கு அவன் மற்ற அகதிகளைப் போன்று குடியுரிமைக்காக விண்ணப்பித்து தனக்கெதிராக தொடர்ந்து மூடப்படும் கதவுகளைக் கண்டு மனம் தளராது, அல்லது அதற்கான வாய்ப்பில்லாமல் தன்னை தக்க வைப்பதற்காக ஓடிக் கொண்டே இருக்கிற ஒருவன். அவன் தன்னை விட வயதில் மூத்தவளான உமையாளைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். விவாகரத்து பெறுகிறார்கள். அவர்களுடைய மகனை உமையாள் தனியாக வளர்க்கிறார். அம்மகன் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து மாலியில் நடக்கும் போரில் கண்ணி வெடியில் சிக்கி இறந்து போகிறான். ஜெபான்ந்தன் ஒரு போரினால் சிதைந்து போகும் குடும்பத்தில் இருந்து தப்பி வந்து பிரான்ஸில் தன் மகன் மீண்டும் ஒரு மகனையும் பலி கொடுக்கிற துயரத்துடன், கையாலாகாத பரிதவிப்புடன் நாவல் முடிகிறது.
இறுதியில் வருகிற காட்சி ஒன்று முக்கியமானது. ஒரு சிறந்த காட்சி உருவாக அதன் முடிவில் வரும் சிறிய திருப்பம், அதிர்ச்சியுடன் அதன் பின்புலம், பின்னணியில் வரும் பொருட்கள், உயிர்கள் சரியாக திட்டமிடப்படுவதும் அவசியம் (staging). ஒரு இடம், அங்குள்ள விசயங்கள், அங்கு வரும் மனிதர்கள் எங்கிருக்கிறார்கள், எங்கிருந்து எங்கு போகிறார்கள், ஒரு வசனத்தைப் பேசும் போது எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றின தெளிவு இருந்தால் தான் குறைவான சொற்களில் நம்மால் நெஞ்சைத் தைக்கிற ஒரு காட்சியை உருவாக்க முடியும். இதற்கு கீழ் வரும் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.
ஜெபானந்தன் ஒரு தேவாலயத்தில் வேலை பார்க்கும் தன் முன்னாள் மனைவியைத் தேடிப் போகிறான். அவனுக்கு ஒரு நிச்சயமான நோக்கம் இருக்கிறது. அது பின்னால் வருகிறது:
"மகன்ர டொக்குமெண்ட்ஸ் வேணும்."
"என்ன டொக்குமெண்ட்?"
"பிறப்பு சேர்ட்டிபிகெட், பிறப்பு சேர்ட்டிபிகெட்"
"என்னத்துக்கு?" என்று கேட்ட உமையாளின் கண்கள் இப்போது சுருங்கிப் போயின. நான் ஆலயத்தின் கூரையைப் பார்த்தவாறே சொன்னேன்:
"மகன் பிரான்ஸுக்காக செத்திருக்கிறான். இதைச் சொல்லிக் கேட்டால் எனக்கு பிரஞ்சு நஷனாலிட்டி கிடைக்கும்."
(...)
உமையாள் தனது கையிலிருந்த இரண்டு தாள்களையும் என் முன்னே மேசையில் வைத்தாள். அவை மகன் மக்ஸென்னினது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
நான் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்தேன். உமையாள் அப்போது ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தவாறே ஒளிப்பிராணியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தாள்.
"வாறன்" என்றேன்.
என்னை நிமிர்ந்து பார்த்த உமையாள் "சமைக்கப் போறன் ... சாப்பிடிட்டுப் போறீரோ?" என்று கேட்டாள்.
"பிள்ளைக் கறி" என்றேன்.
"சந்நிதியானே" என்ற முணுமுணுப்பு என் காதில் ஒலித்தது."
(“ஸலாம் அலைக்", பக் 139-140, ஷோபாசக்தி)
இருவரும் தனியாக சந்தித்திருந்தால் இக்காட்சி இவ்வளவு உணர்வுபூர்வமாக அமைந்திருக்காது. அந்த செல்லப்பிராணியும் அதை உமையாள் நடத்தும் விதமும் அச்சூழலை கூர்மையாக்குகிறது. அவர்களுடைய இறந்து போன மகனின் வெற்றிடம் ஒளிமிக்கதாகத் தோன்றுகிறது. இருவர் பேசுகையில் பின்னணியில் வரும் உயிர்கள், பொருள்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதென்பது திரைப்படக்கலையின் முக்கியமான உத்தி. ஷோபாசக்தி இந்நாவல் முழுக்க இப்படியான திரை உத்திகளை நிறைய பயன்படுத்துகிறார்.
இன்னொரு விசயம் அந்த ஒளிப்பிராணி அவர்களுடைய மகனின் ஆன்மாவாகவும் இருக்கலாம்.
ஒரு காட்சியில் வெளியை, சூழலை, பொருட்களை எப்படி சரியாக பயன்படுத்துவது, பாத்திரங்களை எங்கே நிற்க வைப்பது எனில் பிளாக்கிங்கிற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது.
கடைசியாக வரும் "பிள்ளைக்கறி" எனும் வசனம் நம்மை உலுக்கிப் போடுகிறது. ஆனால் அத்துடன் காட்சியைத் தறித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உமையாள் மனமுடைந்து "சந்நிதியானே" எனக் கேவுவதாக காட்சி முடிவது தேவையற்றது எனத் தோன்றுகிறது!
Comments