இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிழைப்பு தேடி சிங்கப்பூருக்கு வந்த சில தமிழர்களின் கதை எனத் தோன்றினாலும் இது அதுவல்ல. மாறாக வியாபாரம், உழைப்பு, வன்முறை மூலம் தன்னையறிவதே இந்த நாவலின் மையம். கதைசொல்லி சிறுவயதிலேயே தன் பெற்றோரை விட்டு சிங்கப்பூருக்கு வந்து ஒரு மளிகைக்கடையில் சேர்ந்து வேலை செய்கிறான். தன்னைப் போன்று அந்த ஊருக்கு வந்தவர்களுக்கு என்னவெல்லாம் நேர்கிறது, மது போதை, வன்முறை, பெண்ணாசை என ஆண்கள் தம் பாதையை இழப்பதை, பெண்கள் அவர்களால் துயருறுவதையும், பிரித்தானியர்கள் அதிகாரத்தை விட்டு விலகும் இடத்தில் வந்து சேரத் தவிக்கும் அரசியல் தலைவர்களையும் காண்கிறான். இறுதியில் எப்படி தன்னுடைய கடை முதலாளி தனது முதலாளியின் கடையை எடுத்துக் கொண்டாரோ அதே போல அவரது கடையும் தன்னிடம் வந்து சேர்வதைப் பார்க்கிறான். கடும் உழைப்பாலும் அதிர்ஷ்டத்தாலும் அவன் மேலே வந்து சிறிய அளவில் ஒரு பணக்காரன் ஆகிறான். வாழ்க்கை மிக எளிதானது, காதல், கோப வெறி, அரசியல் சித்தாந்தம், லட்சியம் ஆகியவற்றுக்கு வெளியே இருப்பது வாழ்க்கை, வாழ்க்கைக்குத் தேவை பணம், சாப்பாட்டுக்கு உத்தரவாதம், அமைதியான குடும்ப வாழ்க்கை, இவற்றில் மிதமிஞ்சி உணர்ச்சிகரமாக ஈடுபடாமல் விலகி இருப்பதே எனும் தெளிவுக்கு வருகிறான். அதனாலே அவனை “ஞானக்கூத்தன்” என இந்திரஜித் அழைக்கிறார்.
இது போக இந்நாவலுக்குள் மற்றொரு கதைமடிப்பு இருக்கிறது - அது கதைசொல்லியின் (அவனுக்கென்று பெயர் இருப்பதாகத் தெரியவில்லை, அவன் ஒரு everyman.) உளச்சிக்கல், அடிக்கடி அவனுக்கு ஏற்படும் பிரமைகள், அவனை வழிநடத்தும் மிகுபுனைவு தோற்றங்கள் பற்றியது. ஏனோ இந்திரஜித் அந்த பாதையில் நாவலை எடுத்துச் செல்லவில்லை. அந்த பாதையில் ஐம்பது பக்கங்கள் நாவல் போயிருந்தால் இன்னும் சிக்கலானதாக, இருண்மையானதாக (செகாவின் “கறுப்புத் துறவியைப்” போல) வந்திருக்கும். நான் இந்நாவலை எழுதியிருந்தால் அந்த எருமை மீது வரும் சீனருடன் அவன் பேசுவதாக, அதன் பிறகு அதன் பொருளென்ன, அவனுடைய அப்போதைய நிலையில் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு தீர்வுக்கு (மதம், சிறுதெய்வங்கள், குடும்ப தெய்வம், காதல், காமம், அப்பா, அம்மா இப்படி ஏதாவது ஒன்றை ஒரு உருவகமாக மாற்றி) வருவதாக முடித்திருப்பேன்.
அதே போல நாவலின் இறுதி அத்தியாயங்களை - கதைசொல்லி தன் வியாபாரத்தை எப்படி போராடி மீளுருவாக்கி பணக்காரனாகிறான், அவனுடைய சவால்களை முறியடிக்கிறான் என்பதை - அவர் இன்னும் விரித்து 50-70 பக்கங்களாக எழுதி விட்டு கதைசொல்லி அடிதடி கேங்குகளுக்குள் போகலாமா வேண்டாமா எனத் தடுமாறுவதை ஒன்றிரண்டு அத்தியாயங்களில் சுருக்கியிருக்கலாம். இது நாவலுக்கு ஒரு சமநிலையைக் கொடுத்திருக்கும்.
இவ்வகை நாவல்களை நமது மத்திய வர்க்க ஆண்களின் (பூர்ஷுவா எலிப்பொந்து வாழ்க்கைக்கு வெளியில்) பணத்தேடல், வாழ்வில் நிறைவை அடைவதற்காகன் தத்தளிப்பு, இறுதியில் வெற்றியைப் பேசும் bildungsroman பாணி கதைகள் என்று கூறலாம். தமிழில் 80களில் பாலகுமாரனும், 2010க்குப் பிறகு சரவணன் சந்திரனும் இவ்வகை கதைகளை இலக்கிய-வணிக ரசனைக்குள் நின்று எழுதினார்கள். மேற்கில் பவுலோ கோய்லோ Alchemist போன்ற நாவல்களை வெற்றிகரமாக எழுதி இந்த வடிவத்தில் தனிமனிதனின் தன்னறிதலை பிரதானப்படுத்தினார். சரவணன் சந்திரன் பொருளாதார வெற்றி, ஆன்மீக மலர்ச்சி இரண்டையும் ஒரே புள்ளியில் (வியாபாரம் + முருக வழிபாடு + செக்ஸ்) இணைக்க முயன்றார். இதில் இரண்டாவது இரு அம்சங்களையும் பெரிதாகத் தொடாமல் கொஞ்சம் இருத்தலியல் தொனியில் இந்திரஜித் எழுத முயன்றிருக்கிறார்.
வடிவரீதியாக இன்னும் கொஞ்சம் திருத்தியிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு நூறு பக்கங்கள் எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.
பதிப்பகம்: உயிர்மை

Comments