#நாவலாசிரியனுக்கானகுறிப்புகள் அனுபவம் அதிகமாக ஆக, வயது கூட கூட நாவலாசிரியர்களாக, புனைவெழுத்தாளர்களாக நாம் நமது உண்மையை சொல்லும் திறனை இழக்கிறோமா? இதைக் குறித்து பொதுவாக உள்ள பார்வை இது: கணிசமான இளம் எழுத்தாளர்களிடம் ஒரு அபாரமான துணிச்சலை, அதிரடித்தன்மையை, புதிய மொழியை, ஒரிஜினலான தன்மையை, களங்கமின்மையை அவர்களுடைய முதற் சில கதைகளில், நாவல்களில் நாம் காண்பதுண்டு. (இளமையிலேயே மூத்த படைப்பாளிகளை பிரதியெடுத்து, தேய்வழக்கான மொழியில் எழுதுகிறவர்களும் உண்டு தாம்.) ஆனால் அடுத்தடுத்த நாவல்களில் அவர்களுடைய இந்த தன்னெழுச்சி, களங்கமின்மை, தன்னனுபவ போக்கு குறைந்து, தாம் கண்ட உண்மையை சொல்லியே ஆக வேண்டும் எனும் தவிப்பு குறைந்து அவர்கள் பிரக்ஞைபூர்வமாக எழுத ஆரம்பிப்பார்கள். அதாவது தம்மில் இருந்து வெளியேறி மற்றமைகளில் தம் ஆன்மாவை கடத்தி தம் அன்றாட உலகில் இருந்து மாறுபட்ட உலகொன்றை சித்தரிக்க முயல்வார்கள். சில படைப்பாளிகள் இதிலும் தமது சொந்த குரலை ஒலிக்க விடும் திறன் பெற்றிருப்பார்கள்; சிலரோ பிளாஸ்டிக்கான குரலொன்றில் பேசத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் கவனம் பெறாதிருந்த போது இருந்த துணிச்சல் மறைந்து தம்மை பிறர் அதிகமாக கவனிக்கிறார்களோ எனும் பதற்றம் இபோது அவர்களுடைய இயல்பூக்கத்தை தின்று விடத் தொடங்கும். அதனாலே அவர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்படியாக எழுத முயன்று செயற்கையாக மாறுவார்கள். சில மூத்த படைப்பாளிகள் தமது இளமையில் கொண்டிருந்த செழுமையை, தீவிரத்தை பின்னர் இழந்து தம்மையே பிரதியெடுக்கிறார்கள் என்றும் விமர்சகர்களால் நம்பப்படுகிறது. “அவரோட ஆரம்ப கால கதைகளே எனக்கு பிடிக்கும்” என்று பல சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி வாசகர்கள் கூறுவதுண்டு. ஜேம்ஸ் ஜாய்ஸின் “டப்ளினர்ஸ்” தொகுப்பு அவருடைய “யுலைஸஸை” விட நல்ல புத்தகம் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். தஸ்தாவஸ்கியின் ஆரம்ப கால நாவல்களான Insulted and Humilated, The Double மீது எனக்கு ஒரு தனி பிரியம் உண்டு. அவரது பிற்காலத்தைய நாவல்களின் முதிர்ச்சி, விரிவு இவற்றில் இல்லையெனினும் என் இதயத்தை வெகுவாக கவர்ந்த ஒரு எளிமையை இந்த நாவல்களில் நான் கண்டேன். தமிழ் நாவலாசிரியர்களுக்கும் இதை சொல்ல முடியும். ஆன் லேமெட் தனது Bird by Bird (“ஒவ்வொரு பறவையாய்”) நூலில் இதைப் பற்றி பேசும் போது அனுபவம் பெற்ற ஒரு எழுத்தாளனின் சுயபிரக்ஞை அவனுடைய எழுத்தின் சரளத்தை பாதிக்கக்கூடியதே, அதே நேரம் அதில் இருந்து விடுபட முடியும், அதற்கு அவன் திரும்பத் திரும்ப தனது குழந்தைப்பருவ நினைவுகளுக்குள் பயணிக்க வேண்டும் என்கிறார். இங்கே ‘குழந்தைமை’ என்பதை ஒரு உருவகம் என்றே நான் பார்க்கிறேன். அதாவது நமக்குள் இருக்கும் குழந்தையை திரும்பத் திரும்ப கண்டுபிடிப்பது. புத்திசாலிகளின், நாகரிக வழக்கங்களின் உலகில் அக்குழந்தை ஒரு நிழலாகத் தேய்ந்து போகக் கூடும். தன்னுணர்வும் எழுத்துக்கலை குறித்த போதமும் மிக்க ஒரு நாவலாசிரியனுக்கு தான் எழுதி வரும் படைப்பு பற்றின பயம், குழப்பம், பதற்றம், கற்பனை (இந்நாவல் இப்படியாகுமோ, அப்படியாகுமோ, இப்படி விமர்சிப்பார்களோ, அப்படி பாராட்டி தழுவுவார்களோ) சில நேரம் எழுத்தின் சரளத்தை, வேகத்தைக் குறைக்கும்; போகப் போக நாவலே நின்று போகும். எழுதும் பயத்திலே எழுதுவதை நிறுத்தி ஆய்வில், கற்பனையில் திளைப்பார்கள், எழுதியதை அவ்வப்போது திருத்தி சந்தேகத்தில் எழுத்தாணியால் மண்டையை குத்திக் கொள்வார்கள். ஆக, அந்த ‘குழந்தை’ நமக்கு மிகவும் அவசியம். எதைப் பற்றியும் அஞ்சாமல் கிடைத்த இடத்தில் எல்லாம் ஓடித் திரிந்து ஆபாயங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து காயம்பட்டு அழுது, பொருட்களை போட்டுடைத்து அடிவாங்கி அழுது, எதையாவது கண்டுபிடித்த பரவசத்தில் குதித்து கும்மாளமிட்டு, ஊரெல்லாம் தன் உற்சாகத்தை சரவெடியாக வெடிக்க வைக்கிற அந்த குழந்தை நமக்கு மிகவும் அவசியம். அக்குழந்தையை ஒரு கட்டுக்குள் வைக்கிற முதிர்ச்சியான மனமும் அவசியம். அக்குழந்தை இந்த முதிர்ச்சியும், சுயயோசனையும் மிக்க உலகில் நலிந்து காணாமல் போக விடாமல் தொடர்ந்து அதன் பேச்சுக்கு செவிகொடுப்பது, அதனுடன் விளையாடுவது, அதனுடன் இந்த உலகை மீளக் காண்பது முக்கியம். உண்மையை விளையாட்டுத்தனத்தால், சாகசத்தால் எதிர்கொள்ளும் அதன் இயல்பை நம் எழுத்துக்குள் கொண்டு வருவது ஆகியன நிச்சயமாக நமது எழுத்து ஒரு ஜெராக்ஸ் எந்திரமாக மாறாதிருக்க உதவும். அதே நேரம், நாம் ஒரேடியாக ஒரு குழந்தையாக மாறாதிருப்பது இளம்பெண்களே கிடைக்கவில்லை என்று ஆண்களின் மூஞ்சியில் வண்ணப்பொடியை பூசிக்கொண்டு ரோடெல்லாம் பைத்தியமாக அலைகிற ஹோலி விளையாட்டாக நமது நாவல்கள் மாறி விடாதிருக்க உதவும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments