Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆயிரம் கோடி பணம் வைத்திருப்பவனுக்கும் கிடைக்காதது



 கடந்த ஆறு ஆண்டுகளாகவே அனேகமாக நான் தினமும் ஏதாவது ஒரு நாவலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவற்றில் பல நாவல்களை என்னால் சரிவர எழுதி முடிக்க இயலவில்லை என்பதாலே பாதியில் கைவிட நேர்ந்தது. 2021இல் தான் ஒரு நாவலை முடித்து தொடராக வெளியிட்டேன் - “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை”. 2023இல் அது புத்தகமாக வெளிவரும். தடைகள் வராமல் போனால் மற்றொரு நாவலையும் இவ்வருடம் முடித்து விடுவேன். கடந்த ஐந்தாண்டுகள் என் வாழ்வின் மிக மோசமான கட்டம். ஒவ்வொரு சில மாதங்களும் நான் நரகத்தில் மூழ்கி வெளிவருகிறேன். ஒவ்வொரு கணமும் என்னை அழித்து புத்துருவம் பெற்றாலே என்னால் வாழ முடிகிறது. ஒட்டுமொத்த வாழ்வுக்கான துன்பத்தையும் ஒரு சில வருடங்களில் அடைந்து விட்டேன். இருந்தாலும் இந்த கட்டத்தில் நான் ஏன் இப்படி தொடர்ந்து நாவலெழுத்தில் இருந்திருக்கிறேன், இருக்கிறேன் என்பதற்கான பதிலை சொல்கிறேன்.


வேறெந்த வேலையும், அனுபவமும் தராத சில அனுகூலங்களை நாவல் எழுதுவது, ஒரு நாவலின் புனைவுலகம், பாத்திரங்கள், அங்கு தோன்றும் பிரத்யேகமான உணர்வுநிலைகள், நெருக்கடிகள், கண்டடைதல்கள் எனக்கு அளித்திருக்கின்றன:


  1. நடப்பு வாழ்வில் போல யாரோ முடிவெடுப்பதற்காக நாம் நாவலின் உலகில் காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு முடிவையும் பாத்திரங்களின் போக்கை ஒட்டி நாமே எடுக்கலாம்.
  2. இந்த புறவுலகிற்கு எந்த சம்மந்தமும் இல்லாத முற்றிலும் புதியதொரு உலகை சிருஷ்டித்து அங்கு என்னால் போய் பதுங்கி இருக்க முடியும். அங்கு நான் என்ன நினைக்கிறேன், என்ன முடிவெடுக்கிறேன், எதற்காக ஒன்றை செய்கிறேன் என யாருக்கும் சொல்லவோ நியாயப்படுத்தவோ தேவையில்லை. நிஜவாழ்வில் இல்லாத ஒரு ஏஜென்ஸி, அதிகாரம், உரிமை, அது தரும் சுதந்திரம் எனக்கு நாவலின் உலகில் உள்ளது. யாராலும் என்னை நாவலை பாதியில் நிறுத்தவோ எழுதி முடித்த பின் பிடுங்கிக் கொள்ளவோ ஒரு பாத்திரத்தின் போக்கை மாற்றவோ நாவலின் கருப்பொருளை மாற்றவோ முடியாது. என் வாழ்வில் சாத்தியமில்லாத எத்தனையோ விசயங்கள் என் நாவலின் உலகில் சாத்தியமாகிறது. நடப்புலகில் நான் ஒரு திறந்த சிறைச்சாலையின் கைதியாகவும் நாவலுக்குள் ஒரு சுதந்திர மனிதனாகவும் இருக்கிறேன்.


  1. நாவலை எழுதிப் போகையில் ஒரு கட்டத்தில் என் துயரங்கள், நடப்புலகில் நான் எதிர்கொள்ளும் அபத்தங்கள், அவை தரும் மண்டையிடியைப் பற்றி நான் கவலைகொள்ளத் தேவையில்லாமல் போகிறது. எழுதாத போதும் அவற்றை நான் மறந்திருக்கிறேன் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இதைப் பற்றி ஒரு உளவியல் பேராசிரியரிடம் நான் விசாரித்த போது ஒரு விளக்கம் சொன்னார்
  2. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுகளை செயலாக்கம் செய்வதற்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. இதை ஒரு வண்ணக் கண்ணாடி என்று கூறலாம். இதை நாம் அணிந்து கொண்டதும் உலகை நாம் பார்க்கிற வண்ணம், தீவிரம் மாறுபடுகிறது. பச்சைக் கண்ணாடியெனில் உலகம் பச்சை, சிவப்பெனில் உலகம் சிவப்பு. இந்த நடப்பு உலகம் ஏற்படுத்தும் பாதிப்பை சார்ந்து அதை எப்படி அர்த்தப்படுத்துவது, அதை எந்தளவுக்குப் புரிந்து கொள்வது என்பதைத் தீர்மானிப்பது இந்த டெம்பிளேட் தான். சிலருக்கு ஒருவர் முறைத்தாலே கடும் கோபம் வந்து கத்தியைத் தூக்கி வீசத் தோன்றும், மற்றொருவரோ காறித் துப்பினால் கூட அது உறைக்கவே உறைக்காததைப் போல போய் விடுவார். இது அடுத்தவர்களின் செயல்களை, உலகின் நிறபேதங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கும் டெம்பிளேட் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளி தான் எழுதும் நாவலுக்குள் தீவிரமாகப் போகும் போது அவர் அந்த நாவலின் உலகில் இருந்து, அங்கு உலவும் பாத்திரங்கள், அவர்களுடைய பிரச்சனைகள், உணர்வெழுச்சிகளில் இருந்து ஒரு மாற்று டெம்பிளேட்டை தன்னையறியாது உருவாக்குகிறார். இப்போது ஒரு அவனுக்குள் இரண்டு டெம்பிளேட்டுகள் தோன்றுகின்றன. அவனுடைய புனைவின் டெம்பிளேட் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்க நடப்புலகின் டெம்பிளேட் பின்னுக்குப் போகிறது. இது ஏன் என்றால் நமது நரம்பணுக்கள் அதிகமாக புனைவு டெம்பிளேட்டால் தூண்டப்பட நடப்புலகின் பல தூண்டுதல்களுக்கு ஈடுகொடுக்க பின்னர் அதற்கு சக்தியில்லாமல் ஆகிறது. என் நாவலுக்குள் நடக்கும் ஒரு பிரச்சனைக்காக ஒரு பாத்திரத்தின் தரப்பில் நின்று நான் கொந்தளித்திருப்பேன். அது எனக்கு மிகப்பெரிய நெருக்கடியாகத் தெரியும். நிஜ உலகில் ஒருவர் எனக்கு நெருக்கடி கொடுக்கும் போது அவரை நோக்கி கொந்தளிக்கும் ஆற்றல் என் நரம்பணுக்களுக்கு இருக்காது. சார்ஜ் இல்லாத போனைப் போல அது தானாகவே தன் திரை ஒளியைக் குறைத்துக் கொள்ளும். மின்சார வரத்து குறைகையில் ஒரு குமிழ்விளக்கு மங்கலாக எரிவதைப் போல நாம் இவ்வுலகில் ஆவோம். இப்படி ஒரு மங்கலாக எரியும் குமிழ்விளக்காக நடப்புலகில் திரிவது அவ்வளவு மகிழ்ச்சியாக சில நேரம் இருக்கிறது. ஆனால் எப்போதும் இப்படியான ஒருடிரிப்அனுபவம் கிடைப்பதில்லை. நாவலை தினமும் நான்கைந்து மணிநேரங்கள் எழுதுகையிலே சாத்தியமாகிறது. (இதையே சிக்ஸன்மிகாய் flow என்றார்.) நாவலுக்கு வெளியே உள்ள உலகில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கையில் போகப் போகடிரிப்மனநிலை குறைந்து எரிச்சலான ஒரு திறந்த புண்ணைப் போல் ஆகிறேன். எப்போதும் யார் மீதாவது எரிந்து விழத் தோன்றுகிறது. ஆனால் மீண்டும் போதுமான அளவுக்கு எழுதத் தொடங்கியதும், நாவலின் பிரவாகத்தில் மூழ்கியதும் நான் மீண்டும் உலகின் முன் புலன்கள் ஒடுங்கி அகவுலகின் திளைப்புகளின் பாற்பட்டு வாழத் தொடங்குகிறேன். எழுதாத போது என் மனம் எழுத்தின் போது கிடைக்கும் போதை மனநிலைக்காக ஏங்குகிறது. இதற்கு ஈடாக நடப்புலகில் இருந்தபடியே அதில் இல்லாதிருக்கும் ஒரு அனுபவத்தை வேறெதுவும் தராது. எவ்வளவு ஆயிரம் கோடி பணமிருந்தாலும் கிடைக்காது. அதற்காகவே ஒருவர் நாவலாசிரியர் ஆகலாம்.
  3. இறுதியாக, நடப்புலகில் நான் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாதவனாக, அவர்களை கருணையுடன் அக்கறையுடன் நடத்தாதவனாக இருக்கிறேன். ஒருவரிடம் அன்பு காட்டுமுன் அதற்கான தருணம் மலர்ந்து மூடிவிடுகிறது. நாவலுக்கு வெளியே பெண்கள் மீது எனக்கு கடும் கோபம் இருக்கலாம், முன்முடிவுகள் இருக்கலாம், ஆனால் நாவலுக்குள் என்னால் ஒரு பெண் மனத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு அவளுக்காக இரங்க, அவளைப் போல் யோசிக்க, அவளுடைய சிக்கல்களை வெகு அருகாமையில் இருந்து நுட்பமாக கவனிக்க முடிகிறது. நான் கடுமையாக வெறுக்கக் கூடிய ஒருவராக ஆகி அவரை நேசிக்க முடிகிறது. வாடிய பயிரை காண்கையில் எல்லாம் வாட முடிகிறது. நாவலுக்கு வெளியே சாத்தியமாகாத மனவிரிவு எனக்கு நாவலுக்குள் சாத்தியமாகிறது


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...