Skip to main content

ஆயிரம் கோடி பணம் வைத்திருப்பவனுக்கும் கிடைக்காதது



 கடந்த ஆறு ஆண்டுகளாகவே அனேகமாக நான் தினமும் ஏதாவது ஒரு நாவலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவற்றில் பல நாவல்களை என்னால் சரிவர எழுதி முடிக்க இயலவில்லை என்பதாலே பாதியில் கைவிட நேர்ந்தது. 2021இல் தான் ஒரு நாவலை முடித்து தொடராக வெளியிட்டேன் - “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை”. 2023இல் அது புத்தகமாக வெளிவரும். தடைகள் வராமல் போனால் மற்றொரு நாவலையும் இவ்வருடம் முடித்து விடுவேன். கடந்த ஐந்தாண்டுகள் என் வாழ்வின் மிக மோசமான கட்டம். ஒவ்வொரு சில மாதங்களும் நான் நரகத்தில் மூழ்கி வெளிவருகிறேன். ஒவ்வொரு கணமும் என்னை அழித்து புத்துருவம் பெற்றாலே என்னால் வாழ முடிகிறது. ஒட்டுமொத்த வாழ்வுக்கான துன்பத்தையும் ஒரு சில வருடங்களில் அடைந்து விட்டேன். இருந்தாலும் இந்த கட்டத்தில் நான் ஏன் இப்படி தொடர்ந்து நாவலெழுத்தில் இருந்திருக்கிறேன், இருக்கிறேன் என்பதற்கான பதிலை சொல்கிறேன்.


வேறெந்த வேலையும், அனுபவமும் தராத சில அனுகூலங்களை நாவல் எழுதுவது, ஒரு நாவலின் புனைவுலகம், பாத்திரங்கள், அங்கு தோன்றும் பிரத்யேகமான உணர்வுநிலைகள், நெருக்கடிகள், கண்டடைதல்கள் எனக்கு அளித்திருக்கின்றன:


  1. நடப்பு வாழ்வில் போல யாரோ முடிவெடுப்பதற்காக நாம் நாவலின் உலகில் காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு முடிவையும் பாத்திரங்களின் போக்கை ஒட்டி நாமே எடுக்கலாம்.
  2. இந்த புறவுலகிற்கு எந்த சம்மந்தமும் இல்லாத முற்றிலும் புதியதொரு உலகை சிருஷ்டித்து அங்கு என்னால் போய் பதுங்கி இருக்க முடியும். அங்கு நான் என்ன நினைக்கிறேன், என்ன முடிவெடுக்கிறேன், எதற்காக ஒன்றை செய்கிறேன் என யாருக்கும் சொல்லவோ நியாயப்படுத்தவோ தேவையில்லை. நிஜவாழ்வில் இல்லாத ஒரு ஏஜென்ஸி, அதிகாரம், உரிமை, அது தரும் சுதந்திரம் எனக்கு நாவலின் உலகில் உள்ளது. யாராலும் என்னை நாவலை பாதியில் நிறுத்தவோ எழுதி முடித்த பின் பிடுங்கிக் கொள்ளவோ ஒரு பாத்திரத்தின் போக்கை மாற்றவோ நாவலின் கருப்பொருளை மாற்றவோ முடியாது. என் வாழ்வில் சாத்தியமில்லாத எத்தனையோ விசயங்கள் என் நாவலின் உலகில் சாத்தியமாகிறது. நடப்புலகில் நான் ஒரு திறந்த சிறைச்சாலையின் கைதியாகவும் நாவலுக்குள் ஒரு சுதந்திர மனிதனாகவும் இருக்கிறேன்.


  1. நாவலை எழுதிப் போகையில் ஒரு கட்டத்தில் என் துயரங்கள், நடப்புலகில் நான் எதிர்கொள்ளும் அபத்தங்கள், அவை தரும் மண்டையிடியைப் பற்றி நான் கவலைகொள்ளத் தேவையில்லாமல் போகிறது. எழுதாத போதும் அவற்றை நான் மறந்திருக்கிறேன் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இதைப் பற்றி ஒரு உளவியல் பேராசிரியரிடம் நான் விசாரித்த போது ஒரு விளக்கம் சொன்னார்
  2. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுகளை செயலாக்கம் செய்வதற்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. இதை ஒரு வண்ணக் கண்ணாடி என்று கூறலாம். இதை நாம் அணிந்து கொண்டதும் உலகை நாம் பார்க்கிற வண்ணம், தீவிரம் மாறுபடுகிறது. பச்சைக் கண்ணாடியெனில் உலகம் பச்சை, சிவப்பெனில் உலகம் சிவப்பு. இந்த நடப்பு உலகம் ஏற்படுத்தும் பாதிப்பை சார்ந்து அதை எப்படி அர்த்தப்படுத்துவது, அதை எந்தளவுக்குப் புரிந்து கொள்வது என்பதைத் தீர்மானிப்பது இந்த டெம்பிளேட் தான். சிலருக்கு ஒருவர் முறைத்தாலே கடும் கோபம் வந்து கத்தியைத் தூக்கி வீசத் தோன்றும், மற்றொருவரோ காறித் துப்பினால் கூட அது உறைக்கவே உறைக்காததைப் போல போய் விடுவார். இது அடுத்தவர்களின் செயல்களை, உலகின் நிறபேதங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கும் டெம்பிளேட் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளி தான் எழுதும் நாவலுக்குள் தீவிரமாகப் போகும் போது அவர் அந்த நாவலின் உலகில் இருந்து, அங்கு உலவும் பாத்திரங்கள், அவர்களுடைய பிரச்சனைகள், உணர்வெழுச்சிகளில் இருந்து ஒரு மாற்று டெம்பிளேட்டை தன்னையறியாது உருவாக்குகிறார். இப்போது ஒரு அவனுக்குள் இரண்டு டெம்பிளேட்டுகள் தோன்றுகின்றன. அவனுடைய புனைவின் டெம்பிளேட் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்க நடப்புலகின் டெம்பிளேட் பின்னுக்குப் போகிறது. இது ஏன் என்றால் நமது நரம்பணுக்கள் அதிகமாக புனைவு டெம்பிளேட்டால் தூண்டப்பட நடப்புலகின் பல தூண்டுதல்களுக்கு ஈடுகொடுக்க பின்னர் அதற்கு சக்தியில்லாமல் ஆகிறது. என் நாவலுக்குள் நடக்கும் ஒரு பிரச்சனைக்காக ஒரு பாத்திரத்தின் தரப்பில் நின்று நான் கொந்தளித்திருப்பேன். அது எனக்கு மிகப்பெரிய நெருக்கடியாகத் தெரியும். நிஜ உலகில் ஒருவர் எனக்கு நெருக்கடி கொடுக்கும் போது அவரை நோக்கி கொந்தளிக்கும் ஆற்றல் என் நரம்பணுக்களுக்கு இருக்காது. சார்ஜ் இல்லாத போனைப் போல அது தானாகவே தன் திரை ஒளியைக் குறைத்துக் கொள்ளும். மின்சார வரத்து குறைகையில் ஒரு குமிழ்விளக்கு மங்கலாக எரிவதைப் போல நாம் இவ்வுலகில் ஆவோம். இப்படி ஒரு மங்கலாக எரியும் குமிழ்விளக்காக நடப்புலகில் திரிவது அவ்வளவு மகிழ்ச்சியாக சில நேரம் இருக்கிறது. ஆனால் எப்போதும் இப்படியான ஒருடிரிப்அனுபவம் கிடைப்பதில்லை. நாவலை தினமும் நான்கைந்து மணிநேரங்கள் எழுதுகையிலே சாத்தியமாகிறது. (இதையே சிக்ஸன்மிகாய் flow என்றார்.) நாவலுக்கு வெளியே உள்ள உலகில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கையில் போகப் போகடிரிப்மனநிலை குறைந்து எரிச்சலான ஒரு திறந்த புண்ணைப் போல் ஆகிறேன். எப்போதும் யார் மீதாவது எரிந்து விழத் தோன்றுகிறது. ஆனால் மீண்டும் போதுமான அளவுக்கு எழுதத் தொடங்கியதும், நாவலின் பிரவாகத்தில் மூழ்கியதும் நான் மீண்டும் உலகின் முன் புலன்கள் ஒடுங்கி அகவுலகின் திளைப்புகளின் பாற்பட்டு வாழத் தொடங்குகிறேன். எழுதாத போது என் மனம் எழுத்தின் போது கிடைக்கும் போதை மனநிலைக்காக ஏங்குகிறது. இதற்கு ஈடாக நடப்புலகில் இருந்தபடியே அதில் இல்லாதிருக்கும் ஒரு அனுபவத்தை வேறெதுவும் தராது. எவ்வளவு ஆயிரம் கோடி பணமிருந்தாலும் கிடைக்காது. அதற்காகவே ஒருவர் நாவலாசிரியர் ஆகலாம்.
  3. இறுதியாக, நடப்புலகில் நான் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாதவனாக, அவர்களை கருணையுடன் அக்கறையுடன் நடத்தாதவனாக இருக்கிறேன். ஒருவரிடம் அன்பு காட்டுமுன் அதற்கான தருணம் மலர்ந்து மூடிவிடுகிறது. நாவலுக்கு வெளியே பெண்கள் மீது எனக்கு கடும் கோபம் இருக்கலாம், முன்முடிவுகள் இருக்கலாம், ஆனால் நாவலுக்குள் என்னால் ஒரு பெண் மனத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு அவளுக்காக இரங்க, அவளைப் போல் யோசிக்க, அவளுடைய சிக்கல்களை வெகு அருகாமையில் இருந்து நுட்பமாக கவனிக்க முடிகிறது. நான் கடுமையாக வெறுக்கக் கூடிய ஒருவராக ஆகி அவரை நேசிக்க முடிகிறது. வாடிய பயிரை காண்கையில் எல்லாம் வாட முடிகிறது. நாவலுக்கு வெளியே சாத்தியமாகாத மனவிரிவு எனக்கு நாவலுக்குள் சாத்தியமாகிறது


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...