தமிழில் தீவிர சமூகவியல் விவாதங்களை எழுப்பும் படங்களை எடுப்பவர் ராம். தமிழ் தேசியம், நகரமயமாக்கலால் ஒடுக்கப்படும் தனியர்களின், சாமர்த்தியமற்றோரின் உளவியல், குரூரமும் கருணையும் கலந்த பெண்களின் தனித்த உலகம், உலகுடன் ஒத்துப் போக முடியாத வளர்ந்தவர்களின் உருவகம் போலத் தோன்றும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள், எல்லாரையும் மன்னிக்கிற யாரையும் நசுக்கக் கூடிய இவ்வாழ்க்கையின் குறியீடான இயற்கை, இவற்றுக்கு இவர்களுக்கு இடையிலான மோதலே ராமின் படங்கள்.
யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பார்வையும் திரைமொழியும் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார் ராம். "பராசக்திக்குப்" பிறகு பார்வையாளர்களுடன் நேரடியாக அரசியல் 'பேசுகிற' படங்களை எடுத்திருக்கிறார். ரஞ்சித்தின் படங்கள் தலித் / பௌத்த அரசியலின் அழகியலை முன்னெடுத்தால் ராமின் படங்கள் நவமுதலீட்டிய ஏற்றத்தாழ்வான 'வளர்ச்சிக்கு' எதிரான கேள்விகள், விவாதங்கள், கொந்தளிப்புகள் என நீளும் மற்றொரு அரசியலை முன்வைத்தன. நீண்ட காலம் நம் நினைவுகளில், கற்பனையில் தங்கி இருக்கக் கூடிய படங்கள் அவை.
அவருடைய இயக்கத்தில் யார் நடித்தாலும் அற்புதமாக இருக்கும். ஒரே படத்தில் ஒரு நடிகனின் சிறந்த பரிமாணத்தை வெளிக்கொணர்ந்து விடுவார். அண்மையில் "பேரன்பு" படத்தை மீண்டும் பார்த்த போது இப்படத்துக்கு எப்படி மம்முட்டிக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது என வியந்தேன். மம்முட்டியின் சிறந்த படங்களில் ஒன்று. விரிவாகப் பேசப்பட வேண்டிய படம் அது.
அதே போல யுவனின் இசை ராமின் படங்களில் தான் அதி அற்புதமாக இருக்கும்.
ராம் செவ்வியலிலும் நவீன இலக்கியத்திலும் விரிவான வாசிப்பு கொண்டவர். உலக சினிமா குறித்த ஆழமான புரிதல் உடையவர். பொறுமையும் கனிவும் மிக்கவர். சொல்லித் தருவதில் அவருக்குள்ள ஆர்வத்தை கவனித்திருக்கிறேன். ஒரு சிறந்த பேராசிரியராகவோ எழுத்தாளராகவோ வர வேண்டியவர் ஆலிஸ் அற்புத உலகிற்குள் நுழைந்ததைப் போல தெரியாத்தனமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து விட்டார் என எனக்குத் தோன்றும்!
தன் 48வது பிறந்த நாளைக் கொண்டாடும் ராமுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!
Comments