இன்று இரு வேற்று மொழி நண்பர்கள் "பொன்னியின் செல்வன்" தமிழிலக்கியத்தின் கிளாசிக்கா என்று கேட்டார்கள். நான் "இல்லை, அது ஒரு பல்ப் நாவல்" என்று கூற அதிர்ந்தார்கள். "அப்போ அது இலக்கிய நாவல் இல்லையா?" என்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் இந்திய இலக்கியங்களில் இருந்து உலக இலக்கியம் வரை அலசி ஆராய்ந்து கற்றவர்கள். என் இலக்கிய வகுப்பிலும் என் மாணவர்கள் "சார் நீங்கள் பொன்னியின் செல்வன் படித்ததுண்டா?" என வியப்புடன் கேட்கிறார்கள். " நுட்பமான இடங்கள் உண்டெனினும் அது அடிப்படையில் ஒரு பொழுபோக்கு நாவல் மட்டுமே. என் 11வது வயதில் அதைப் படித்து விட்டேன்" என்றால் நம்ப மறுக்கிறார்கள். இதே நபர்கள் ஆங்கிலத்தில் காட்பாதரோ டாவின்ஸி கோடோ ஒரு இலக்கிய கிளாசிக்கா என்று கேட்க மாட்டார்கள். ஆனால் தமிழ் என்று வந்தால் நம்மை கரகாட்டக்காரன் சொப்பன சுந்தரியின் கார் ரேஞ்சுக்குத் தான் ஆளாளுக்கு சந்தேகம் கேட்கிறார்கள்.
மணிரத்னம் எனும் கலைநயம் மிக்க படைப்பாளி, அவருடன் பணிபுரிந்தவர்கள் படமாக்கும் நாவல் ஒரு இலக்கிய கிளாசிக்காகத் தான் இருக்க வேண்டும் என அவர்களுக்குள் அப்படி ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நமது ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும் - முரட்டு புரொமோஷனுக்கு நடுவே அதை தமிழிலக்கியத்தின் தவிர்க்க முடியாத உன்னத படைப்பு எனும் அளவுக்கு ஏற்றி விட்டதுடன், அத்தனை தமிழர்களின் நெஞ்சத்திலும் இடம்பிடித்த படைப்பு, தமிழ் மொழியின் பெருமை எனும்படியாக பில்ட் அப்பும் கொடுத்ததில் தமிழறியாத மக்களும் கல்கி தான் தமிழின் தல்ஸ்தாய், தஸ்தாவஸ்கி என நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் நாம் அறுபதுகளுக்கே திரும்பி விட்டோம். புதுமைப்பித்தனில் இருந்து இன்றைய இலக்கியவாதிகள் வரை இவ்வளவு ஆயிரம் பக்கங்கள் இதைப் பற்றி பேசியும் நாம் "நடுவில கொஞ்சம்" வி.செ நிலைக்கு சென்று விட்டோம்.
மணிரத்னம் ஆண்ட் கோவையும் பழிக்க முடியாது. கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து புரொமோட் செய்வது அவர்களுடைய கடமை. செவ்வனே செய்தார்கள். ஊடகங்களுக்குத்தான் விவஸ்தை இல்லை. சினிமாவின் சக்தி அளப்பரியது. சினிமாவைக் கொண்டு எதை சொன்னாலும் மக்கள் நம்புவார்கள். சரியான விசயத்தை சொல்லுவது பொறுப்பில் உள்ளோரின் கடமை. இங்கு சினிமாவைக் கொண்டு வரலாற்றை மட்டுமல்ல இலக்கிய இடங்களையும் குழப்பி அடிக்கலாம். ஊடக புரோக்கர்களை வைத்து பெரும் புனைவுகளை உண்மையாக்கி ஒரு மகாநடிகரை நாட்டின் மன்னராக்கலாம்.
ஒரு நொடி எதுக்குடா இந்த மொழியில் உழைக்கிறோம் என்று தோன்றினாலும் இந்த அபத்தத்தைப் பார்த்து சிரித்து ஜாலியாக இருப்போமே என்றும் தோன்றுகிறது.
Comments