Skip to main content

கடவுள் என்னை ஆட்கொண்ட கதை




நான் சிறுவயதில் இருந்தே கடவுளைக் கும்பிட்டதில்லை. யாரும் எனக்கு கையைக் குவித்து கடவுளைத் தொழவோ மனமுருகி வேண்டவோ சொல்லவில்லை. எங்களுடைய வீட்டில் ஒரு சிறிய மூலையில் ஒரு கடவுளின் படம் இருக்கும். அங்கு அம்மா மட்டுமே விளக்கேற்றி வைத்து சில நிமிடங்கள் தொழுவார். கோயிலுக்குப் போவார். என் அப்பா ஒரு தீவிர நாத்திகர். சாகும் வரை அவர் அப்படித்தான். அவருக்கு புற்றுநோய் வந்த போது கூட அவர் கடவுளை நம்பவில்லை. நான் ஆரம்பம் முதலே அவருடனே இருந்ததால் அம்மா செய்வதெல்லாம் வேடிக்கையாகவே ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால் பகுத்தறிவு சார்ந்து நான் நாத்திகன் ஆகவில்லை. (வெகுபின்னரே பெரியாரைப் படித்தேன்.) கடவுளுக்கு என் வாழ்க்கையில் இடமே இருக்கவில்லை. எப்படி ஒரு ஆண் பெண்களின் பாத்ரூமுக்குள் போவதில்லையோ அப்படியே நான் கடவுளின் பக்கமும் போனதில்லை.


 தமிழ் எழுத்தாளர்களில் கோயில் கலாச்சார பழக்கமே இல்லாத ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன். எந்தளவுக்கு என்றால் எந்த பண்டிகை, விசேச தினங்கள் பற்றியும், விரதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும் எனக்கு ஏதும் தெரியாது. நான் என் சிறுவயதில் ஜெயமோகனை சந்தித்த போது அவர் மதம் சார்ந்த சடங்குகள், பக்தி இலக்கியங்கள்தொன்மங்கள், இடங்களில் தான் நமது பண்பாட்டின் வேர்கள் உள்ளன, அதுவே படைப்பூக்கத்தின் அடிப்படை என நம்புகிறவராக இருந்தார். என் மனதில் எங்குமே கடவுளோ கோயிலோ இல்லையே என்றவரிடம் ஒருமுறை அப்போது கூறிய போதுஉங்கள் உபமனதில் எங்காவது இருக்கும், எழுதும் போது தானே வரும்என்றார். ஆனால் நான் எவ்வளவோ தேடித் துருவிப் பார்த்ததில் வேறு பல ஐட்டங்கள் கிடைத்தன, கடவுள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அப்படியே விட்டு விட்டேன். கடந்த சில ஆண்டுகளில் பௌத்தம் சார்ந்த வாசிப்பு எனக்கு கடவுள் நம்பிக்கையின் சிக்கல்களை, ஆபத்துகளை தர்க்கரீதியாக விளக்கியது. கடவுள் என்பவர் சாராம்சவாத சிந்தனையின் ஒரு உருவகம், ஒரு சின்னம், அவரைக் கொன்றாலே அதிகார மையங்களை, மொழிக்குள் உறைந்திருக்கும் பிழையான பார்வைகளை ஒழிக்க முடியும் என்று புரிந்து கொண்டேன். சரி கடவுளின் ஆணிவேரையே அறுத்து விட்டோம் என நினைத்தேன். ஆனால் பாருங்கள், பின்னர் ஜெயமோகன் சொன்னது பாதி உண்மையாகி விட்டது. இந்த பதிவே அதைப் பற்றியது தான்


அண்மையில் நான் இவ்வருடத்தின் எனது இரண்டாவது நாவலை எழுத ஆரம்பித்தேன். அது ஒரு காதல் கதை. அதில் ஒரு கதாபாத்திரத்தை ஒரு கட்டத்தில் தீவிர முருக பக்தனாக்க முடிவு செய்தேன். இது தற்செயலாக அமைந்தது தான். நான் கல்லூரியில் படிக்கையில் மகாபலிபுரம் சென்றிருந்த போது ஒரு முருக பெருமான் கோயிலைக் கண்டேன். அங்கு கிடைத்த ஒரு பிம்பம் இந்த நாவலில் ஒரு அத்தியாயத்தில் ஒரு இடத்தில் நினைவு வந்தது. அப்போது ஒரு வசனத்தை எழுதினேன். உடனே இவனை நாம் முருக பக்தனாக்க வேண்டும் என முடிவு செய்து நாவலின் துவக்கத்துக்கு சென்று அங்கிருந்து திரும்ப நிறைய மாற்றங்களை அவனுடைய நடவடிக்கைகளில், மொழியில், சிந்தனைகளில் கொண்டு வந்தேன். கூடவே இங்கு எனக்குப் பயிற்சியாளராக இருப்பவரிடம் அவதானித்த ஒரு சிறு இயல்பை (பக்தியே தானே) பிரதானமாக்கி மற்றொரு பாத்திரத்தை உருவாக்கினேன். இந்த இரு பாத்திரங்களுக்காக பக்தி இலக்கியங்கள், பாடல்கள், கோயில்கள் என நிறைய கவனிக்கத் தொடங்கினேன். என்னுடைய ஒரு நாளானது பக்திப் பாடல்களைக் கேட்டே துவங்க ஆரம்பித்தது. நாள் முழுக்க பக்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். மனதுக்குள் ஏதாவது ஒரு வரியை உருப்போட்டபடி இருப்பேன். அவனையும் பயிற்சியாளரையும் சேர்த்து உலவ விட்ட போது அவனுடைய பாத்திரத்திற்கு ஒரு ஆழமும் நம்பகத்தன்மையும் வருவதை உணர்ந்தேன். ஆனால் இங்கே சொல்ல வந்த விசயம் அதுவல்ல. இந்த பாத்திரம் ஒரு எழுத்தாளனாகவும் மனிதனாகவும் என் சிந்தனாமுறையை, புரிதலை வெகுவாக மாற்றி விட்டான். வாழ்க்கையில் முதன்முதலாக பக்தர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடன் சேர்ந்து நானும் உருகினேன், பித்தாக திரிந்தேன், அபத்தமாக யோசித்தேன். விளைவாக, இந்த பக்தர்கள் சொல்வது, செய்வது எல்லாம் முட்டாள்தனம் தான், ஆபத்து தான், ஆனால் அதில் ஒரு உண்மை உள்ளது என எனக்கு பொட்டில் அடித்தாற் போலத் தோன்றியது.


அண்மையில் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதியாக பக்தி மார்க்கம் பற்றி மாணவர்களிடம் வகுப்பில் பேசிய போதுபக்தி என்பது ஒருவிதமான காதல். ஒரு பக்தன் பக்தியில் திளைப்பது கடவுளை அடையவோ, பிறவிச் சங்கிலியை அறுக்கவோ அல்ல. தானற்றுப் போவதற்கல்ல. பக்தியின் இலக்கு பக்தி மட்டுமே. பக்தியில் இருக்கவே அவன் பக்தியில் இருக்கிறான்


லகான் சொல்லும் வேட்கையின் மார்க்கத்தைப் போன்றதே பக்தி மார்க்கமும். ஏன் ஒருவராலும் பக்திக்கான தர்க்கத்தை விளக்க முடியாது என்றால் காதலைப் போன்றே அதற்கு ஒரு தர்க்கமில்லை, காதலைப் போன்றே அது ஒரு புதைமணலைப் போல நம்மை உள்ளே உள்ளே இழுத்து செல்கிறது. தெளிவாக சீரான முன்னேற்றத்துடன் வாழ்வதை விட இப்படி பைத்தியமாக இருப்பதையே மனிதன் விரும்புகிறான். பக்தி அதனால் ஒரு முடிவற்ற, அரூபமான வேட்கையாக உள்ளது. காதலைப் போன்றே இந்த வேட்கை அவனை முழுமையாக்குகிறது. காதலில் போல ஒரு மனிதத் துணை இங்கு தேவையில்லை என்பதால் இறைவன் மீதான பக்தி காதலைப் போலல்லாது ஒரு முடிவற்ற பயணமாகிறது. அவன் இழுத்த இழுப்புக்கெல்லம் கடவுள் வருகிறார், கடவுள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவன் போகிறான், அவர்களிடையே என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியாது. அவர்களுக்கு யாரும் கல்யாணம் பண்ணி வைக்கவோ விவாகரத்து வழங்கவோ முடியாது. சமூகத்தின் இடையீடு இல்லாததாலே இந்த இறை வேட்கை மிக மிக அந்தரங்கமாகிறது, அதனாலே அது கண்மூடித்தனமாகிறது, அதே நேரம் புறவுலகை பரிசீலிக்க அல்லது அதை மாற்ற ஒரு அசல் பக்தனுக்கு ஆர்வமோ தேவையோ இல்லாமல் ஆகிறது. (இதுவே சங்கிகளுக்கும் பக்தர்களுக்குமான வித்தியாசம் என நினைக்கிறேன்.)” என்றேன். இதையே நான் மூன்று மாதங்களுக்கு முன் பேசியிருக்க மாட்டேன். பேசி இருந்தால் என்னையே நான் காறித் துப்பி இருப்பேன். ஆனால் இந்த நாவலை எழுதிய அனுபவம் என்னை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. தர்க்கத்திற்கு அப்பாலான ஒரு மனவுலகை காட்டித் தந்திருக்கிறது. பக்தர்களின் தரப்பின் நியாயத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். அவர்களைப் பார்த்தால் கேலியாக நகைத்து நான் இப்போது கடப்பதில்லை. அது மட்டுமல்ல கோயில்களைக் கடக்கும் போது நான் மறைந்து என் பாத்திரம் அங்கே தோன்றி கோயிலுக்குள் நுழைகிறது. அந்த சூழல், சப்தங்கள், வாசனை என்னை மதிமயங்க செய்கிறது


இதோடு விட்டால் பரவாதில்லை. இந்த இரு பாத்திரங்களை எழுதுவதால் வேறொரு பிரச்சனையும் ஏற்படுகிறது. முன்பு பெண்கள் என் முன்னால் வந்தால்அழகு என்பது ஒரு சாராம்சமற்ற தோற்றம்என்று எனக்குள் நானே விவாதிப்பேன். பெண்கள் எதிரில் வந்தால் புத்தகத்தினுள் முகத்தைப் புதைத்துக் கொண்டு கடந்து விடுவேன். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களாலும், படித்த கருத்துக்களாலும் நான் ஒரு சாமியாரைப் போலாகி விட்டேன். ஆனால் இந்த இரு பாத்திரங்களும் பெண்களே கதி என விழுந்து கிடப்பவர்கள் என்பதால் இப்போது எந்த ஒரு பெண் என்னைக் கடந்து போனாலும் இவர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களும் இவர்கள் சொல்லக் கூடிய வசனங்களும் எனக்குத் தோன்ற நான் பயந்து போகிறேன்


இந்த மனவோட்டங்கள்  எனக்குள், என் உபமனதில் இருந்து வருவன என நான் நினைக்கவில்லை. இவை அப்பாத்திரங்களினுள் நான் புகுந்து விட்டதால் வரும் சிக்கல்கள். நாவலை எழுதி முடித்த ஒரே மாதத்தில் நான் தர்க்க மனம் பெற்றவனாக, விட்டேந்தியானவனாக மீண்டும் மாறி விடுவேன் என அறிவேன். (அதனாலே ஜெ.மோ சொன்னதில் பாதி மட்டுமே பலித்திருக்கிறது என்றேன்.)


நாளை ஒருவேளை நான் இரு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றி நாவலெழுதினால் என் கதி என்னவாகும்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...