எனக்கு மரணத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அது ஒரு மகத்தான சம்பவம் என நினைக்கிறேன். அவ்விதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை நடக்கும் இடத்தை விட துக்க வீட புனிதமானது. இன்னும் சொல்லப் போனால், தனிப்பட்ட துயருக்கு அப்பால், நாம் மரணத்தைக் கொண்டாட வேண்டும். அது ஒரு அதிசயம். அது ஒரு கவிதையின் உச்சத்தைப் போன்ற தருணம்.
ஒருவர் மரிக்கும் போது காலத்துக்கு அப்பால் போய் விடுகிறார். இந்த உலகில் உயிருள்ளவர்களில் இருந்து உயிரற்ற பொருளான ஒரு கல்லால் கூட காலத்துக்கு அப்பால் இருக்க முடியாது. ஆனால் மரணம் மட்டுமே ஒரு நீர்க்குமிழி உடைவதைப் போல நம்மை காலமற்றவனாக்குகிறது. ஒரு கவிதையை வாசித்து, காதலித்து, புணர்ச்சியின் உச்சத்தில், இருத்தலின் ஒவ்வொரு மகத்தான கணத்திலும் நாம் தற்காலிகமாக அடைகிற ஒன்றை நிரந்தரமாக - அது கூட சரியான சொல் அல்ல, காலமின்மையில் என்ன நிரந்தரம்? சரியாக சொல்வதானால் முழுமையாக - அடைவது மரணத்தின் போது தான். நாம் பிறக்கும் போது காலமின்மையில் இருந்தே காலத்திற்குள் வருகிறோம், அந்த ‘காலக்கடனை’ நாம் வாழ்க்கை பூரா அடைக்க முடியாமல் போகிறது. அந்த காலக்கடனை மரணத்தின் போது திரும்பக் கொடுத்து விட்டுப் போகிறோம் என்றார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு கடனாளி தன் கடனைத் தீர்ந்து சுதந்திரமாகிறான். இது எவ்வளவு அற்புதமான விசயம். இதை நாம் கொண்டாடக் கூடாதா?
இன்று மாலை என் அண்டை வீட்டுக்காரரின் உடல் வைக்கட்டிருந்த ஐஸ் பெட்டியை இன்று தொட்டு வணங்கிய போது கடவுளைத் தொட்டதைப் போல உணர்ந்தேன்.

Comments