பாலு மகேந்திராவின் “கதை நேரம்” தொடரில் ஒரு குறும்படம்: நகரத்தில் ஒரு குடியிருப்பில் ஒரு சாவு விழுந்து விடும். மாடி வீட்டில் இருக்கும் குடும்பத்தில் மனைவி அன்று முழுக்க சமைக்க முடியாது என்று சொல்லுவாள். ஆனால் வெளியே போய் சாப்பாடு வாங்குவதென்றால் சிக்கல் சாவு வீட்டைக் கடந்து வருவது. அதனால் மொட்டை மாடியைத் தாண்டி பக்கத்து மாடியில் குதித்து என்னவெல்லாமோ பாடுபட்டு போலீசிடம் சிக்கி சாப்பாடு வாங்கப் போவான் கணவன். நான் ஊரில் இருக்கும் போது இந்தளவுக்கு கடுமையான தீட்டு பின்பற்றப்பட்டதில்லை. இருந்தாலும் துக்க வீட்டுக்குப் போனால் குளித்து விட்டு வருகிற நடைமுறை இருந்தது. நான் மட்டும் சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பின்பற்றியதில்லை. இதை மட்டுமல்ல எந்த சடங்கையும் நான் பின்பற்றிய நினைவில்லை. இப்போது எங்கள் வீட்டுக்கு மேலே உள்ள குடும்பத்தில் ஒருவர் மாரடைப்பில் இறந்து விட்டார்.
உள்ளூர்க்காரர். அதனாலே பெரிய கூட்டமே திரண்டு வந்திருக்கிறது. பெங்களூரில் முதன்முதலாக சத்தமாக ஒப்பாரிச் சத்தத்தைக் கேட்கிறேன். மரணத்தை நெருங்கும் ஒரு விலங்கு இடுவதைப் போன்ற ஓலம் அது. பாவமாக இருக்கிறது. பிணத்தை வைத்திருக்கும் ஐஸ் பெட்டி எங்கள் வீட்டு வாசலிலேயே இருக்கிறது. இந்த வீட்டுத்தொகுப்பில் உள்ளவர்கள் யாரும் சாப்பிட, புழங்க தயங்கவில்லை. இயல்பாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய குடும்பத்து முதிய பெண்மணி ஒருவர் கழிப்பறையை பயன்படுத்த எங்கள் வீட்டுக்குத் தான் வந்தார். எந்த சிக்கலும் இல்லை. இது ஒரு நல்ல முன்னேற்றம் தான் எனத் தோன்றுகிறது.
உடம்பில் உயிர் இருந்தாலும் இல்லையென்றால் அதில் என்ன தீட்டு வந்து விடப் போகிறது? மரணம் என்பது வாழ்தலின் ஒரு பகுதி அல்லவா? இந்த விசயத்தில் வந்துள்ள இயல்புத்தன்மை, நெகிழ்வு பாராட்டத்தக்கது.
Comments