என்னுடைய இன்றைய மதிய உணவு இது தான். முக்கால் வாசி தட்டில் வேக வைத்த காய்கறி. கூடவே pro biotic உணவாக தயிரும், புரதச் சத்துக்காக நட்ஸ், விதைகள், உலர்பழம் சிறிதளவு சேர்த்த முட்டை ஆம்லேட்.
காலையில் மாவுச்சத்தை எடுத்துக் கொண்டதால் மதியம் அதைத் தவிர்த்தேன்.
இந்த உணவில் மிக மிக முக்கியமானது ஆம்லேட் அல்ல, இந்த காய்கறிகள் தாம். நான் சிறுவயதில் இருந்தே காய்கறிகளை வெறுத்து வந்தேன். அண்மையில் தான் காய்கறிகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டேன் - நமது உடலில் உள்ள 90வித செல்கள் நல்ல நுண்ணுயிர்களால் ஆனவை என்கிறார்கள். குடலில் வாழும் இவை தான் நமது செரிமானம், சத்துக்கள் உடலுக்குப் போவது, நமது மனநிலை சீராக உற்சாகமாக இருப்பது, கொழுப்பு, சர்க்கரை அளவை சீராக வைப்பது ஆகிய முக்கிய பணிகளை செய்கின்றன. நமது ஹார்மோன்களை பெருமளவு கட்டுப்படுத்துவது நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களும் மூளையுமே. மூளையின் செயல்பாடும் கூட இந்த நுண்ணுயிர்களின் கையிலே உள்ளதாக சொல்லுகிறார்கள். நல்ல நுண்ணுயிர்கள் நமது குடலில் சரியான எண்ணிக்கையில் இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியும் வலுவாக இருக்கும். நுண்ணுயிர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே நம்மையும் பாதுகாத்து நம் உடலையும் நன்றாக இயங்க வைக்கின்றன என நினைவில் வையுங்கள்.
ஆக இந்த நுண்ணுயுர்களை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைத்திருந்தாலே நாமும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்க முடியும். நல்ல நுண்ணுயிர்கள் நமது குடலில் தழைக்க காய்கறிகள் வழங்கும் நார்ச்சத்தும் நீரூற்றி வைத்த பழைய சோறு, தயிர் ஆகிய fermented pro biotic உணவுகளும் அவசியம்.
கடந்த சில பத்தாண்டுகளில் நாம் செய்த மிகப்பெரிய தவறு மூன்று வேளையும் மாவுச்சத்து, புரதச்சத்துணவுகளை மட்டும் எடுத்து வந்தது. நீங்கள் எந்த ஓட்டலுக்குப் போங்கள், யாருடைய சாப்பாட்டு டப்பாவை எடுத்துப் பாருங்கள் - இந்த இரண்டுமே இருக்கும், நார்ச்சத்து மிக மிக குறைவாக இருக்கும். இந்த நார்ச்சத்து சிறுகுடலுக்குப் போய் நொதித்து அதிக நேரம் இருக்க வேண்டும், அப்போதே நல்ல நுண்ணுயிர்கள் பெருகி செழிக்கும், அவை நன்றாக வேலை செய்து நம்மையும் நன்றாக வேலை செய்ய உதவும். ஆனால் நாம் இதை அனுமதிப்பதில்லை.
கூடவே நிறைய antibioticsஐயும் இப்போது எடுத்துக் கொள்கிறோம். இவை நம் குடலில் வாழும் நல்ல நுண்ணுயிர்களை காலி பண்ணி விடுகின்றன. இதனால் நமது உடலின் இயக்கம் சீர்கெட எடை அதிகரிப்பு, ஹார்மோன் சமநிலையிழப்பு, மனப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எடை அதிகமாகிறது. நோயெதிர்ப்பு சக்தி குறைய அடிக்கடி தொற்றுகள் வந்து உடல் நலமழிகிறது. அதை சரிசெய்ய ஆண்டிபயோட்டிக் எடுத்து மேலும் நல்ல நுண்ணுயிர்களைக் கொன்று உடல் ஆரோக்கியத்தை கூடுதலாக அழிக்கிறோம்.
இதற்கு தீர்வு நிறைய காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்வதே. அரைக்கரண்டி பொரியல் போதாது. இப்படி தட்டில் முக்கால் பாகம் வரும்படி எடுத்துக் கொள்ளுங்கள். நான் இரண்டு வேளைகளும் தவறாமல் காய்கறிகளை சாப்பிடுகிறேன். இதன் பலனை நான் ஒரே மாதத்தில் அறிந்தேன். அதாவது டயட் இருப்பது, உடற்பயிற்சி செய்வதை விட காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவது உடனடி பலன்களை அளிக்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.
உணவே மருந்து!
Comments