Skip to main content

அன்பு குறித்து ஒரு உரையாடல்



தோழர் உங்க தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளால் தான் அன்பு, கருணை, நீதி, அறம் போன்ற நல்லுணர்வுகள், விழுமியங்களுக்கு எதிராக எழுதிறீங்களா?”


இல்ல தோழர் நான் 2007இல் இருந்தே, நான் உங்களையும் பிறரையும் போல பிரச்சினைகள் இல்லாமல் இருந்த காலத்திலும், உயிர்மையில் அன்பையும் கருணையையும் அறத்தையும் எதிர்த்து எழுதியிருக்கிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே இந்த நான்கு உருப்படிகளையும் பிடிக்காது.”


அதான் ஏன் தோழர்?”


ஒரே காரணம் தான் - சின்ன வயசில இருந்தே கற்பனையான, அருவமான உலகத்தின் மேலே எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல.”


அதான் ஏன் தோழர்?”


இவங்க இலக்கியத்தில் எழுதுகிற எதையுமே நிஜ உலகில பார்க்க முடியல. அதான் காரணம். பரிசுத்தமான தாயன்புன்னு சொல்லுவாங்க. ஆனால் நான் பார்த்த தாய்மார் எல்லாம் பயங்கர சுயநலவாதிகள். கடவுளின் அன்புன்னு சொல்லுவாங்க. நான் கடவுளையோ கோயிலுக்குள்ள போய் பார்த்ததில்ல. என்னை மாதிரியானவங்க உள்ளே விட மாட்டாங்க. அதனால கடவுள் எவ்வளவு அன்பானவர்னு பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கல. மத்த யாரையும் விட அதிகமா நீதியும் கருணையும் அதிகமா தேவைப்படுகிற ஆள் நான். ஆனா இந்த ரெண்டையும் - ஊடகங்களில், இலக்கியத்தில், சினிமாவில் தவிர - எங்கேயுமே நான் பார்த்ததில்ல. அட எனக்கு என்றல்ல, என்னைச் சுற்றியுள்ள யாருக்கும் நீதியோ கருணையோ கிடைத்து நான் பார்த்ததில்ல. அப்படி ஒரு சிறு கீற்று அவர்களை நோக்கி வந்தாலும் சில நாட்களில் அதற்கு ஒரு பில்லைக் கொடுத்து சரியான கட்டணத்தை உலகம் வாங்கி விடும். அது மட்டுமல்ல நமது முயற்சிகளினால் கிடைக்கும் வாய்ப்புகள், அங்கீகாரமே நம்மை முன்னேற்றும் என வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்தது. நம்மால் பலனில்லாத ஒருவர் கூட நம்முடன் இருக்க மாட்டார்கள். நமக்கு ஒருவர் ஒருமுறை உதவலாம், ஆனால் அடுத்தடுத்து உதவினால் அது அவர்களுக்கு அலுத்துவிடும். அதனால் ஒருமுறை உதவி கேட்டவரிடம் அடுத்த முறை கேட்கலாகாது. இப்படி நான் எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொண்டேன். யாருடைய கருணையையும் எதிர்பாராமல் வாழ்வது ஒரு பெரிய சௌகர்யம். அந்த சௌகர்யம் கொண்ட பெரும்பான்மை மக்களே தொடர்ந்து கருணை, நீதி என உருகுகிறார்கள் என்பது விசித்திரம்.


நான் இன்னொரு விசயத்தைக் கற்றுக் கொண்டேன் - ஒருவருக்கு நாம் பணரீதியாகவோ வேறு வகையிலோ தேவையாக இருக்கிறோம் என்றால் அவரிடம் எவ்வளவு முறையும் கருணையை நாடலாம். பிரச்சினையே இருக்காது. இந்த எதார்த்தத்தை நமக்குக் காட்டாதபடி சமூக இயக்கங்கள் உள்ளன என அறிவேன். ஊடகங்களும் இலக்கியமும் நமக்கு ஒரு போதை மருந்தைப் போல இந்த எதார்த்தத்தில் இருந்து தப்பிக்க ஒரு பொய்யுலகைக் காட்டி காட்டி நம்மை திசைதிருப்புகின்றன. ஆனால் இவர்கள் பணமிழந்து தெருவுக்கு வந்தாலோ உடல்நலமற்று முடங்கிப் போனாலோ எதார்த்தம் இவர்களுடைய முகத்தை வந்து அறையும். அப்போது தான் இந்த இலக்கியம், நீதிபோதனைகள் சொன்னதெல்லாம் அதரபழசான பொய்யா என புரிய வரும்.

இந்த இலக்கிய இழவெல்லாம் படிக்காமல், லட்சியவாத அபத்த சினிமாக்களைப் பார்க்காமல் தெருவையும் மனிதர்களையும் படித்து வாழும் இளைஞர்களே நன்றாக வாழ முடியும்.”


என்ன ஒரு எழுத்தாளனா இருந்து இப்படி சொல்றீங்க? வெட்கமா இல்ல?”


இருக்கு. இந்த இலக்கியம் இப்படி பொய்களின் கூடாரமே இருக்கேன்னு வெட்கமா இருக்கு. ஆனா என்ன செய்ய? இதையெல்லாம் படிக்காதீங்க, படிச்சு கெட்டுப் போகாதீங்க அடுத்த வரக் கூடியவங்களைப் பார்த்து சொல்ல மட்டும் தான் என்னால முடியும்.”


இதை நீங்க சொல்றது கேட்க ஷாக்கா இருக்கு தோழர்.”


கடைசியாக ஒன்று சொல்கிறேன் தோழர் - சகமனிதனை மதிக்கிற, அவனிடம் நேசம் காட்டுகிற மனிதர்களே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். மானுட நேயம் இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது.”

இருக்குது தோழர்

நீதி நியாயம் கூட இருக்கிறது, நிச்சயமாக இருக்கிறது. அதன் பெயர் தான் பணம். பணமிருந்தால் உங்களிடம் கன்னாபின்னாவென மானுட நேயம் வந்து குவியும், உங்களால் தாங்க முடியாதளவுக்கு கனிவும் கருணையும் உங்களை மூழ்கடிக்கும். மனித வாழ்வின் எல்லா மெல்லுணர்ச்சிகளின் அற்புத சொரூபங்களையும் நீங்கள் பார்ப்பீர்கள். பணமிருந்தால் நீங்கள் சமத்துவத்தை, சமநீதியைப் பார்ப்பீர்கள். பணமில்லாதவர்கள் அதை சினிமாவிலும் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் இலக்கியத்திலும் மட்டும் பார்ப்பார்கள்.”


ஏன் தோழர் இவ்வளவு விரக்தியா எதிர்மறையா பேசுறீங்க?”


விரக்தி இல்ல. நான் உணர்ச்சிவசப்ப்படாம மிகைப்படுத்தாம பேசுறேன். உங்களை விட நான் தான் அதிகமா நீதியையும் சமத்துவத்தையும் பற்றி கவலைப்படுறேன், கருணையைப் பற்றி யோசிக்கிறேன், அதனால தான் அது ஒரு வெற்றுக்கனவுன்னு முடிவுக்கு வரேன், அதை மறைக்காம உலகத்துக்கு சொல்றேன்.”


அறம் என்பது ஒரு லட்சியம் தோழர். நமது சமூகத்துக்கு லட்சியம் என ஒன்று இருந்தால் தானே மக்கள் முன்னேறுவார்கள். நியாயம், நீதி என்னிக்காவது கிடைக்கும்.”


யாரும் அறத்தை வைத்து முன்னேறியது இல்லை தோழர். உழைப்பையும் அதில் இருந்து கிடைத்த பணத்தையும் வைத்தே முன்னேறியிருக்கிறார்கள். அப்படி முன்னேறியவர்களைப் பார்த்து நமக்கு பொச்செரிப்பு ஏற்படும் போதுநாம் காட்டிய அறத்தை, சமூக நீதியுணர்வை வைத்தே அவன் முன்னேறி இருக்கிறான் பார், பார்என ஆறுதலடைய பயன்படுத்துவதே லட்சியம். எளிய மக்களுக்கு, அடித்துப் பிடித்து முன்னேறுகிறவர்களுக்கு லட்சியத்தால் எந்த பயனும் இல்லை. லட்சியம் என்பது சோம்பேறிகளின் சொர்க்கம்.”


அது அவங்கவங்க நம்பிக்கையை பொறுத்தது தோழர். உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இருக்கிறவங்கள ஏன் பழிக்கிறீங்க?”

நீங்க அன்பைப் பற்றி பேசுறீங்களா கடவுள் பக்தி பற்றி பேசுறீங்களா?”

அன்பைப் பற்றி தான்

அன்பும் கடவுளும் ஒண்னு தான். கடவுளைப் பற்றிக் கொண்டால் ஆறுதல் கிடைக்கும் எனச் சொல்வதைப் போன்றது அறம் இருந்தால் சமூகம் மேம்படும் என்பது. கடவுளிடம் மன்றாடும் எவனுக்கும் ஆறுதல் கிடைத்ததில்லை. பணத்தைப் பற்றிக் கொண்டவனுக்கும், அதிகாரம் படைத்தவனுக்குமே ஆறுதல் கிடைக்கிறது. கடவுளைப் பற்றிக் கொள்பவர்கள் தான் கவலையை மறைக்க மதுவையும் வேறு போதைகளையும் நாடுகிறார்கள். அவர்கள் தான் உதவிக்காக அல்லாடுகிறார்கள். தாம் இப்படி தத்தளிப்பதை மறைக்க பக்தியை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறார்கள். பணம் இருந்தால் அவர்களுக்கு இவை எதுவுமே தேவையிருக்காது. பணம் நிம்மதியைத் தரும்.”


ஆனால் பணம் படைத்தவர்கள் தாம் நிம்மதியற்று தூங்க முடியாமல் தவிப்பதாக…”


எங்கே பார்த்தீங்க? பழைய சிவாஜி படத்திலா? இல்லை ரஜினியோட அண்ணாமலையிலா?”


பொதுவா கேள்விப்படுறதை வச்சுத்தான்.”


சரி தோழர் உங்க கிட்ட நிம்மதி இருக்குது, ரஜினி கிட்ட பல நூறு கோடிகள் பணம் இருக்குது. அவர் ஏன் தன் பணத்தை உங்க கிட்ட தந்து நிம்மதியை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்க கூடாது?”


ஆமால்ல…”


பாருங்க நீங்க கூட உங்க நிம்மதியை விட்டுக்கொடுத்திருவீங்க பணம் தரதின்னா?”


ச்சேச்சே


தோழர் பணக்காரங்க நிம்மதியா இல்லைங்கிறது பணமில்லாத மத்திய வர்க்கம் தன்னை ஏமாத்திக்கிறதுக்காக உருவாக்கின ஒரு கற்பனை கதை மட்டும் தான். பணக்காரங்க அவங்க பாட்டுக்கு சந்தோசமா நிம்மதியா ஆரோக்கியமா நீண்ட காலம் வாழத்தான் செய்யுறாங்க. எந்த பணக்காரனும் தன் பணத்தை கடைசி வரை யாருக்கும் கொடுத்திட்டு பரதேசியா போறதில்ல.”


இல்லியே தோழர் பண்றாங்களே


எங்க பார்த்தீங்க? திரும்பவும் ரஜினி படத்தில பார்த்திருப்பீங்க?”


ஆமா தோழர். சரி போகட்டும், இந்த அன்பு, கருணை, அகவுலகம், ஆன்ம தரிசனம் இதெல்லாம் வேணாமுன்னா நீங்க ஒரு ரைட்டரா எப்பிடி இருக்க முடியும்?”


இந்த கண்றாவியை எல்லாம் நம்பாத எத்தனையோ எழுத்தாளர்கள் உலகளவில் இருந்திருக்காங்க தெரியுமா?”

அப்படியா தோழர்?”

ஆமா நம்மூரில் கூட ஆதவன், ஜி.நாகராஜன் போல மிகச்சிலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அன்பும், இன்ன பிற போதை வஸ்துக்களும் தேவையிருக்கின்றன. அதுவும் குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் நம் இலக்கிய கதைகளிலும் நெஞ்சை நக்குவது அதிகமாகி விட்டது. உலகில் இல்லாத நல்லவர்கள் எல்லாம் மொத்தமாக நம் கதைகளில் தான் வருகிறார்கள்.”

நீங்க கெட்டதை மட்டும் பார்க்கிறீங்க தோழர். அதுக்கு ஏன் அவங்களை பழிக்கிறீங்க?”

நான் இருப்பதை மட்டும் பார்க்கிறேன். அது கெட்டதுன்னு நான் சொல்லல. நீங்க தான் சொல்றீங்க. நான் அதுதான் நிஜமுங்கிறேன். மனிதனுக்கு இந்த உடலால் அறியக் கூடியதை மீறிய வேறெதுவும் தேவையில்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை, ஹைடெக்கரும் நீட்சேயும் சொல்லி இருக்கிறார்கள்.”

உங்க நிஜம் உங்களுது, எங்க நிஜம் எங்களுது தோழர்.”

என் நிஜத்தை என்னால் எடுத்துக் காட்ட முடியும். உங்க நிஜத்தை நீங்க காட்ட முடியுமா?”

முடியும் தோழர்.”

உங்க கிட்ட போன் இருக்குதா?”

இதோ இருக்குதே

பைக், கார்?”

பை. அதோ வெளில நிக்குது.”

ரைட்டு இதே மாதிரி உங்களோட அன்பை, நீதியுணர்வை எடுத்துக் காட்டுங்க.”

அதெப்டீங்க முடியும்? சுத்த பைத்தியக்காரத்தனமா இல்ல?”

இல்ல தோழர். எடுத்துக்காட்ட முடியாத எதையும் நான் நம்புறதில்ல. மக்களும் நம்புறதில்ல. உண்மையில் நம்புறதில்ல. அன்பு மேல யாருக்கும் நம்பிக்கை இல்லை.”

யார் சொன்னது?”

அன்பை நிரூபிக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள்! ஆனால் பணத்தையோ ஒரு பைக்கையோ வீட்டையோ தோசை இட்லியையோ நிரூபிக்க வேண்டியதில்ல. என் அன்பை யாரும் புரிஞ்சிக்கிறதில்ல, அதை மதிக்கிறதில்லைங்கிற புகார் இல்லாதவங்க யாரு இருக்காங்க? யாரவது என் இட்லியை யாரும் புரிஞ்சிக்கிறதில்ல, என் பிரியாணியை யாரும் லவ் பண்றதில்லைன்னு சொல்றதில்ல. டேஸ்டா இருந்தா சாப்ட போறாங்க.”

ஆமா


ஆனா என் கிட்ட காசிருக்குன்னு சொல்லி எடுத்துக் காட்டினா நம்பிருவாங்க. எந்த பணக்காரனும் தன் பணம் நம்பப்படுவதில்லைன்னு புலம்பறதில்ல. ஆனால் அன்பு, அன்புன்னு பொங்கிறவங்க தான் சதா புலம்புறாங்க.”


ஏன் அன்பு அனாதையா திரியுது தோழர்?”


பொய் அனாதையா திரியாம பக்கத்தில பாய விரிச்சு படுக்கவா செய்யும் தோழர்?”


அன்பில்லாம நீங்க எப்படி வாழ முடியும் தோழர்?”


அன்பை காட்டவோ எதிர்பார்க்கவோ செய்யாமல், அதை நிகழ்த்துகிறவர்கள் மட்டுமே மிக சந்தோஷமாக வாழ முடியும் தோழர். அன்பில்லாத வாழ்க்கையில் எந்த புகார்களும் இருக்காது. அன்பை நீங்க மதிக்காம இருந்தா அது தாராளமா உங்க கிட்ட வரும். அது மட்டுமில்ல நீங்க மனிதர்களுக்கு அன்பை அல்ல புலனின்பத்தையே கொடுக்க வேண்டும். அதை நேரடியாகக் கேட்க பயந்தே அன்பு, அன்பு என மருகுகிறார்கள்.”


இலக்கியம் அன்பையே போதிக்கணும் தோழர்.”


யாரு சொன்னது?”


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்னு சொல்லியிருக்காங்களே.”


யாரு?”


பவா செல்லத்துரை


அது திருக்குறள். அதே திருக்குறள்ல காமத்துப்பால்னு ஒரு பகுதி இருக்குது. அதுல ஒரு இடத்தில கூட வள்ளுவர் அன்பைப் பற்றி பேசுறதில்ல. காதல்னாலே உடலான ஒரு அனுபவம்னு வள்ளுவர் தெளிவா சொல்றார். அது மட்டுமில்ல, நமது சங்கக் கவிதைகளில் எங்குமே நாம இப்போ பேசுற தூய அன்பு வரதில்ல. இவ உடம்ப அவனும், அவன் உடம்ப இவளும் நேசிக்கிறாங்க, சேர்ந்து இருக்கிறாங்க, பிரிஞ்சு வருந்திராங்க, சேர்ந்ததும் சந்தோசப்படுறாங்க.”


லவ் யூ சொல்றதில்ல?”


இல்ல, அந்த கண்றாவி எல்லாம் வெள்ளைக்காரன் கொண்டு வந்தது. என்னோட கணக்கு சரின்னா பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு கற்பனாவாத மரபின் தாக்கத்தால் தான் இந்த அன்பு, பேரன்பு, மிகப்பேரன்பு, அனகோண்டா சைஸில் மிக மிக பிரம்மாண்டமான அன்பெல்லாம்  உருவாகி இருக்கணும். அதுக்குப் பின்னாடி ஒரு சதித்திட்டம் இருந்தது.”


சதித்திட்டமா?”


ஆமா மனிதனை தொடர்ந்து ஒரு குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது அன்பு. குற்றவுணர்வில் அவன் தன் தேவைகளை எல்லாம் மறந்துவிட்டு இந்த சமூகத்துக்கு அடிமையாகி உழைக்கிறான். மதத்துக்கும், அரசுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறான். எல்லா பொய்மைகளையும் போலித்தனத்தையும் ஏற்கிறான். தன் காதலி மீது, தன் மனைவி மீது, தன் பிள்ளைகள் மீது வைத்த அன்புக்காக தான் அப்படி அடிமைப் பணி செய்வதாக நம்புகிறான். ஆனால் அவனுக்குப் புரியவில்லை, அவர்கள் உள்ளுக்குள் அவனுடைய பொய்மையைக் கண்டு அவனை வெறுக்கிறார்கள் என. அவன் தன் போக்குக்கு தன் குற்றவுணர்வை அவர்கள் மீதும் சுமத்துகிறான். நான் குற்றவுணர்வு எனும் சிலுவை ஏந்தி முதுகு வளைந்த சமூகம் ஆகி விட்டோம். அதற்குக் காரணம் இந்த அன்பு எனும் போலித்தனம் தான்.”


மனிதன் மதவெறிக்காக, சாதிக்காக, தனக்காக வாழாமல் அன்புக்காக வாழ்வது என்பது கேட்கவே எவ்வளவு அழகாக இருக்கிறது?”


அன்பும் பக்தியும் ஒன்று தான். அதனால் தான் அழகா இருக்குது. வேஷம் எப்பவும் அழகு தானே? ஆனா அது நிலைக்காது. அன்பு ஒரு முற்போக்கான பக்தி. பக்தி நம்மை இந்த புலனுலகில் இருந்து விடுபட்டு ஒரு கற்பனையான அப்பால் உலகை நாட சொல்கிறது. அன்பும் அதையே சொல்கிறது. இரண்டுமே நம்மை வாழ்தலில் இருந்து தடுக்கிறது. அதனால் தான் மானுட நேயம் வந்ததும் அதுவரை பக்தி இலக்கியம் படித்தும் எழுதியும் வந்தவர்கள் அந்த வண்டியில் குதித்து ஏறிக்கிட்டாங்க. கடவுளை நேசி என்பதை மனிதனை நேசி என மாற்றினார்கள். சரி நானும் மனிதன் தான் என்னை நேசின்னு சொன்னா என்னையும் உங்களையும் நேசிக்க மாட்டாங்க.”


அது ஏன் தோழர்?”


அவங்க மானுடர்களை மட்டுமே நேசிப்பாங்க.”


அப்போ நாம மனிசங்க இல்லையா?”


அவங்களுக்கு நாம மனிசங்க இல்ல. அவங்க கற்பனையான ஒரு மனித குலத்துக்காக எழுதுவாங்க, உருகுவாங்க, கண்ணீர் விடுவாங்க, ஆனா நாம ஒரு டீ கேட்டா வாங்கித் தர மாட்டாங்க.”


கரெக்ட் தோழர்


கை கொடுங்க தோழர். நாம ஒரு வாக்குறுதி எடுத்துப்போம். இனிமேல் நான் உங்களை நேசிக்க மாட்டேன், நீங்க என்னை நேசிக்காதீங்க. நாம எந்த பாரமும் இல்லாம இந்த வாழ்க்கையை கொண்டாட்டமா வாழ்வோம்.”

லோன்லியா இருக்குமே?”

அந்த பயத்தை விட்டொழிக்கணும். அதைக் காட்டித் தான் நம்மை பயமுறுத்துறாங்க.”

அது முடியுமா தோழர்?”

நமக்கு கூட வாழ, பழக ஆள் வேணும். ஆனா யாரும் தவிர்க்க முடியாதவங்க இல்ல. யார் இருந்தாலும் நமக்கு இந்த உடலைத் தவிர வேறெதுவும் வேறு யாரும் இல்லைங்கிறது தான் உண்மை. எனக்குப் பசிச்சா நான் தான் சாப்பிடணும். எனக்கு உச்சா வந்த நான் தான் போகணும். எனக்குத் தூக்கம் வந்தா நான் தான் தூங்கணும். இதில் எல்லாம் நான் தனியா இருந்தாலும் ஜாலியா தானே இருக்கேன். தூக்கத்தில் காதலியை விட்டுத் தனியா இருக்கோமுன்னு பிடிக்காம யாராவது தூக்கத்தை துறந்து வாழ்நாள் பூரா இருந்ததுண்டா? நீ சாப்டா என் பசி ஆறிடிமுன்னு நம் சாப்பாட்டை யாருக்கும் கொடுத்திட்டு நாம தினமும் பட்டினியா இருக்கிறதில்ல. மேட்டரின் போது கூட நமக்கு திருப்தி கிடைக்குமான்னு தான் கவலைப்படுறோம். அதிலெல்லாம் நம்மால் தனியாக மகிழ்ச்சியா இருக்க முடியுமுன்னா தனிமை மீது பிறகென்ன பயம்? இந்த உடல் இருக்கும் வரையில நமக்குத் தனிமையில்லை தோழர்.”


Comments

murugu said…
நீங்களும் ஒரு ஓஷோ

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...