1955இல் கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டம் மாற்றுத்திறனாளிகள் இடத்து எவ்வளவு பாரபட்சமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்: இச்சட்டப்படி விவாகரத்து வழக்கு நடக்கையில் மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ அல்லாவிடிலோ, வழக்கு அவர் வசிக்கிற ஊரில் இருந்து தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் நடக்கிறது, அங்கு போக அவர் சிரமப்பட்டு செலவழித்து பயணிக்க வேண்டும் எனில் அவருக்கு ஆகும் செலவுகளை கணவரே அளிக்க வேண்டும். அதே நேரம் கணவர் மாற்றுத்திறனாளி எனில், அவர் நீண்ட தூரம் பயணித்து நீதிமன்றத்திற்கு வர வேண்டும் எனில், அவருக்கு மனைவி பணம் அளிக்க வேண்டாம். அவர் தானே தன் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் சிரமப்படவும் வேண்டும்.
அது மட்டுமல்ல, நீண்ட தூரம் பயணிப்பதில் பெண்ணுக்கு சிரமம் ஏற்பட்டால் வழக்கில் அவர் நேரடியாக வர வேண்டியதில்லை, அவர் ஆன்லைன் மூலமாகத் தோன்றலாம். இதுவே கணவனுக்கு இரண்டு கால்களுமே இல்லை, அவர் பயணிக்க முடியாமல் சிாமப்படுகிறார் என்பதால் ஆன்லைனில் வருவதற்கான சாத்தியம் அவருக்கு இல்லை.
அதே போல மனைவி தான் பயணிக்க வேண்டிய தொலைவை சுட்டிக் காட்டி வழக்கை தான் வசிக்கும் ஊருக்கு மாற்ற வேண்டும் எனக் கோரலாம். அதை நீதிமன்றம் அனுமதிக்கும். ஆனால் கணவன் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் அப்படி வழக்கை தான் வசிக்கும் ஊருக்கு மாற்றும்படி கேட்கக் கூடாது. அனுமதி இல்லை. இதை நம் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
மாற்றுத்திறனாளிகளிடத்து இவ்வளவு பாரபட்சமாக நடக்கிற ஒரு சட்டம் இந்தியாவில் மட்டுமே இருக்கும். இந்து திருமணச் சட்டப்படி ஒரு ஆண் மாற்றுத்திறனாளி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நீண்ட தூரம் பயணித்து சிரமப்பட வேண்டி இருந்தால் கடவுள் தோன்றி அவரது ஊனத்தை தற்காலிகமாக களைந்து விடுவார். அல்லது அவர் ஆணாக இருப்பதாலே ஊனத்தின் பிரச்சினைகள் அவரை பாதிக்காது. நம் சட்டத்தின் படி ஆண் மாற்றுத்திறனாளிகளே இல்லை. ஆண் மாற்றுத்திறனாளிக்கு கால் இல்லையென்றாலும் நடக்கலாம். ஆண் மாற்றுத்திறனாளிக்கு வாய் இல்லையென்றாலும் பேசலாம். ஆண் மாற்றுத்திறனாளிக்கு கண்ணில்லை என்றாலும் பார்க்கலாம். அப்படி ஒரு ஆண் மாற்றுத்திறனாளிக்கு முடியாது என்றால் அவர் நடிக்கிறார் என்று பொருள்.
இப்படி மாற்றுத்திறனாளிகளை பால்நிலை பாரபட்சத்துடன் பார்க்கும் ஒரே நாடு இந்தியா தான். பெருமையாக இருக்கிறது.
ஆணாகவும் மாற்றுத்திறனாளியாகவும் பிறப்பது ஒரு குற்றமாய்யா?
Comments