முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆணாகவும் மாற்றுத்திறனாளியாகவும் பிறப்பது ஒரு குற்றமா?


1955இல் கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டம் மாற்றுத்திறனாளிகள் இடத்து எவ்வளவு பாரபட்சமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்: இச்சட்டப்படி விவாகரத்து வழக்கு நடக்கையில் மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ அல்லாவிடிலோ, வழக்கு அவர் வசிக்கிற ஊரில் இருந்து தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் நடக்கிறது, அங்கு போக அவர் சிரமப்பட்டு செலவழித்து பயணிக்க வேண்டும் எனில் அவருக்கு ஆகும் செலவுகளை கணவரே அளிக்க வேண்டும். அதே நேரம் கணவர் மாற்றுத்திறனாளி எனில், அவர் நீண்ட தூரம் பயணித்து நீதிமன்றத்திற்கு வர வேண்டும் எனில், அவருக்கு மனைவி பணம் அளிக்க வேண்டாம். அவர் தானே தன் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் சிரமப்படவும் வேண்டும். 

அது மட்டுமல்ல, நீண்ட தூரம் பயணிப்பதில் பெண்ணுக்கு சிரமம் ஏற்பட்டால் வழக்கில் அவர் நேரடியாக வர வேண்டியதில்லை, அவர் ஆன்லைன் மூலமாகத் தோன்றலாம். இதுவே கணவனுக்கு இரண்டு கால்களுமே இல்லை, அவர் பயணிக்க முடியாமல் சிாமப்படுகிறார் என்பதால் ஆன்லைனில் வருவதற்கான சாத்தியம் அவருக்கு இல்லை. 

அதே போல மனைவி தான் பயணிக்க வேண்டிய தொலைவை சுட்டிக் காட்டி வழக்கை தான் வசிக்கும் ஊருக்கு மாற்ற வேண்டும் எனக் கோரலாம். அதை நீதிமன்றம் அனுமதிக்கும். ஆனால் கணவன் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் அப்படி வழக்கை தான் வசிக்கும் ஊருக்கு மாற்றும்படி கேட்கக் கூடாது. அனுமதி இல்லை. இதை நம் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

 மாற்றுத்திறனாளிகளிடத்து இவ்வளவு பாரபட்சமாக நடக்கிற ஒரு சட்டம் இந்தியாவில் மட்டுமே இருக்கும். இந்து திருமணச் சட்டப்படி ஒரு ஆண் மாற்றுத்திறனாளி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நீண்ட தூரம் பயணித்து சிரமப்பட வேண்டி இருந்தால் கடவுள் தோன்றி அவரது ஊனத்தை தற்காலிகமாக களைந்து விடுவார். அல்லது அவர் ஆணாக இருப்பதாலே ஊனத்தின் பிரச்சினைகள் அவரை பாதிக்காது. நம் சட்டத்தின் படி ஆண் மாற்றுத்திறனாளிகளே இல்லை. ஆண் மாற்றுத்திறனாளிக்கு கால் இல்லையென்றாலும் நடக்கலாம். ஆண் மாற்றுத்திறனாளிக்கு வாய் இல்லையென்றாலும் பேசலாம். ஆண் மாற்றுத்திறனாளிக்கு  கண்ணில்லை என்றாலும் பார்க்கலாம். அப்படி ஒரு ஆண் மாற்றுத்திறனாளிக்கு முடியாது என்றால் அவர் நடிக்கிறார் என்று பொருள்.
  இப்படி மாற்றுத்திறனாளிகளை பால்நிலை பாரபட்சத்துடன் பார்க்கும் ஒரே நாடு இந்தியா தான். பெருமையாக இருக்கிறது. 

ஆணாகவும் மாற்றுத்திறனாளியாகவும் பிறப்பது ஒரு குற்றமாய்யா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...