Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காய்கறிகளே என் தெய்வமான கதை




நம்முடைய உடலின் பல செயல்பாடுகளை வழிநடத்தும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. ஆம் நிஜமாகவே இருக்கிறது. ஆனால் அது நாம் நினைப்பது போல நம் மூளையிலோ, ஹார்மோன்களிலோ, மரபணுக்களிலோ இல்லை. நம் மூளையையும் ஹார்மோன்களையும் வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மென்பொருள் அது - அது நமது உடலில் - குடல் பகுதியில் - வாழும் நுண்ணுயிர்கள். இவையே 90% மேல் நமது மரபணுக்களாகவும் உருப்பெற்றிருப்பதால் நாம் 10% மட்டுமே மனிதர்கள் என தனது 10% Human: How Your Body’s Microbes Hold the Key to Health and Happiness எனும் நூலில் ஆலனா கோலன் சொல்கிறார். உடல் நலம் குறித்து, குறிப்பாக ஹார்மோன்களும், மூளையும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் எப்படி நுண்ணியிர்களால் கட்டுப்படுத்தப்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் பேசுகிற மிக முக்கியமான நூல் இது.
கோலன் சொல்வது நம்மை இந்த நுண்ணியிர்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் நமக்கு தேர்வு செய்யும் திறனே இல்லையென்றல்ல. நாம் எடுக்கும் தேர்வுகளை உணர்வளவில் இந்த நுண்ணுயிர்கள் எப்படி வழிநடத்துகின்றன என்பதே கோலன் சொல்லும் முக்கியமான விசயம். அடுத்து, அவர் நவீன நோய்களான நீரிழிவு, மாரடைப்பு, மன அழுத்தம் ஆகியவை இந்த நல்ல நுண்ணியிர்களின் சமநிலை குலையும் போது ஏற்படும் சீரழிவின் விளைவுகளே என்கிறார். அதாவது பலவிதமான நுண்ணுயிர்கள் நமக்குள் வாழுகின்றன. நமது ஆரோக்கியத்தை அவை பேணினாலே அவற்றாலும் வசதியாக இருந்து தொடர்ந்து நாம் உட்கொள்ளும் உணவை பயன்படுத்த முடியும் என்பதால் அவை அப்பணியை ஆற்றுகின்றன. நாம் உண்ணும் ஒவ்வொரு வகை உணவும் உடலுக்குள் நொதித்து அழிக்கப்பட்டு அதில் இருந்து ஆற்றல் உறிஞ்சி எடுக்கப்படும் போது குடலில் வாழ்ந்து வரும் பல்வேறு நுண்ணியிர்களில் சில அந்த வகை உணவால் பயனடைகின்றன. அதாவது நம் உடலை ஒரு பெரும் உணவகம் எனக் கருதினால் அதில் வரிசை வரிசையாக பல ஆயிரம், பல லட்சம் வாடிக்கையாளர்கள் (நுண்ணுயிர்கள்) கையில் தட்டுடன் நிற்கிறார்கள். அதில் சிலருக்கு காய்கறி, மாமிசம் வேண்டும், சிலருக்கு தானியங்கள், கடலை வகைகள், பழங்கள் வேண்டும், சிலருக்கு மைதா மாவு, சர்க்கரை போன்ற நவீன உணவுகள் வேண்டும். நம் உடலின் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றும் நுண்ணியிர்கள் நொதித்த உணவு (probiotic), காய்கறி, மாமிசம் கறி, விதைகள், கொட்டை பருப்புகள், மாமிச கொழுப்பு போன்ற சர்க்கரை குறைவான உணவுகளையே நம்பி வாழ்கின்றன. நாம் இன்று அதிகமாக சோறு, மைதா, சர்க்கரை, மாமிசம், பால் சார்ந்த உணவுகளை மட்டுமே உண்கிறோம். அப்போது இவற்றைக் கொண்டு வாழ்கிற ஒருவகை வாடிக்கையாளர்கள் (நுண்ணியிர்கள்) மட்டும் பெருகுகிறார்கள். இது உணவகத்தின் (உடல்) சமநிலையைக் குலைத்து விடுகிறது. நமது ஹார்மோன்களை சரிவர நிர்வகித்தும், வேறு பல நுட்பமான வளர்சிதை மாற்றங்கள், மறுசீரமைப்பு பணிகளை செய்து வரும் நல்ல நுண்ணியிர்கள் இப்போது எண்ணிக்கையில் குறைந்து விடுகின்றன; இன்னொரு பக்கம் எந்த வேலையையும் செய்யாத (பிரியாணி, பர்க்கர், பப்ஸ், சமோசா, சிப்ஸ், பிரெட், கேக், பிஸ்கட், இனிப்பு வகைகளை மட்டும் கேட்கும்) சோம்பேறி நுண்ணியிர்கள் பெருகின்றன. இவை நம்மை மேலும் மேலும் மோசமான உணவுகளை சாப்பிடத் தூண்டுகின்றன. நமது ஆரோக்கியம் சீர்குலைகிறது - ரத்த சர்க்கரை அளவுமீறிப் போய், ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, இதய தமனிகள் அடைத்துக்கொண்டு, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமல், மூளைக்கு கிடைக்க வேண்டிய தூண்டுதல்கள் கிடைக்காமல் போய், நரம்பணுக்கள் நிலைகுலைந்து போய் நாம் நோய்களின் கிடங்காக மாறுகிறோம். இதனாலே இத்தனை நோய்களும் நம்மை ஒரே சமயம் நவீன காலத்திலே தாக்குகின்றன. ஏனென்றால் அப்போதே நமது உணவுப்பழக்கமானது முழுக்க மாறிப்போனது. நாம் நமது நுண்ணியிர்களை அனாதைகளாக்கிவிட்டோம். அவையில்லாமல் நாம் மெல்ல மெல்ல செத்து வருகிறோம்.  

நிக் லேன் எழுதிய Power, Sex, Suicide என்றொரு முக்கியமான நூல் உள்ளது (தலைப்பை பார்த்து ஏமாந்து வீடாதீர்கள். இது முழுக்க முழுக்க அறியவியல் நூல் தான்.) - அதில் நமது செல்களுக்குள் இருக்கும் மைட்டோகோண்டிரியா (ஊன்குருத்து) எனும் சக்தி சொரூபம் நம்முடையது அல்ல, நம்முடன் இணைந்து இந்த உடலை உருவாக்கிய நுண்ணுயிர்கள் உடையது என்கிறார் லேன். அதாவது நமக்குள் இருந்து காலனி ஆதிக்கம் செய்யும் நுண்ணியிர்களின் மென்பொருளே ஒரு செல் உயிருடன், ஆரோக்கியத்துடன் எத்தனைக் காலம் வாழ வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. இந்த மனித செல்லுக்குள் வாழும் நுண்ணியிரின் ஆன்மா அந்த செல் போதுமான, சரியான உணவும், பிற சௌகர்யங்களும் இல்லாது தளரும் போது அதை அழித்துவிட முனைகிறது, அதுவே ஒரு செல்லின் மரணம் என்கிறார் லேன். அதாவது மைட்டோகாண்டிரியா என்பது ஒரு பண்டத்தை வாங்கும் பயனரைப் போல. உங்கள் போன் சரியாக வேலை செய்யவில்லை, பழசாகிவிட்டது என்றால் அதை சரி செய்வதை விட சுலபம், செலவு குறைவு அதைத் தூக்கிப் போடுவது தானே? அதையே செல்லுக்குள் இருக்கும் மைட்டோகோண்டிரியாவும் செய்கிறது - அதுவே நோய்நொடி, உடல் பலவீனம், வயதாவது, அதன் விளைவான மரணம் என்கிறார் லேன். பலவீனமாகும் ஒரு செல் சிலநேரம் தன்னையே கொல்லும், அல்லது மற்றொரு செல்லுடன் தன்னை இணைத்து புதிய செல்லாகும் என்கிறார் அவர். இதன்படி திறன் இழக்கும் உடலின் தற்கொலையே நமது மரணம்.

 இந்த தன்னைப் பாதுகாக்கும் மைட்டோகாண்டிரியாவின் முயற்சிகளின் போது விளையும் கோளாறே புற்றுநோய் என்கிறார். அவர் புற்றுநோயாளிகள் தம் உணவுப்பழக்கத்தை மாற்றியதும் நல்ல விளைவுகள் ஏற்படுவதாக சொல்கிறார். இதற்கும் நம் குடலில் வாழும் நுண்ணியிர்கள் எனும் மென்பொருளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது. இந்த நுண்ணுயிர்கள் நினைத்தால் மைட்டோகாண்டிரியாவை செயல்பட வைத்து புற்று செல்களை தற்கொலை பண்ண வைக்க முடியும். அவை நினைத்தால் மன அழுத்தத்தை, தமனிகளின் அடைப்பை சரி செய்ய முடியும்.

இப்போது என் கதைக்கு வருகிறேன். நான் சிறுவயது முதலே காய்கறிகளை வெறுத்து வந்தேன். மிக அண்மையில் தான் தினமும் இரண்டு இரண்டு பெரிய பாத்திரங்களில் - வேளை மசாலா, எண்ணெய் சேர்க்காமல் வெறுமனே வேக வைத்த - காய்கறிகளை சாப்பிடத் தொடங்கினேன். அதன் நல்ல விளைவுகளைக் கண்டு நான் அசந்து போனேன். என்னுடைய நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரித்தது. என்னைச் சுற்றி பலரும் இருமல், ஜுரம் என அல்லலுற்ற போதும் அவர்களுடன் இருந்த எனக்கு எந்த தொற்றுநோயும் வரவில்லை. அண்மைக்காலத்தில் நான் ஆஸ்பத்திரிக்கு போகவோ மருந்தகங்களில் நிற்கவே தேவை ஏற்படவில்லை. (நான் காய்கறிகளுடன் கூடவே நொதித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டேன் தான்.) இது என்ன சொல்கிறது என்றால் என் உடலுக்குத் தேவையான நுண்ணியிர்களின் உணவு இந்த காய்கறிகளே. நான் அவற்றை இத்தனைக் காலமும் பட்டினி போட்டுக் கொன்றதால் அவை என்னைப் பழிவாங்கிவிட்டன. இப்போது நான் உணவளித்ததும் அவை மீண்டும் வந்து என்னைப் பாதுகாக்கின்றன. எனக்கு காய்கறிகளாக இருக்கும் உணவு உங்களுக்கு வேறொன்றாக இருக்கலாம். எல்லாருக்கும் இதே போல காய்கறிகளை உண்பது பாரித்த விளைவுகளை ஏற்படுத்தாது. ஒவ்வொரு உடலும் (உணவகமும்) அதிலுள்ள நுண்ணுயிர்களும் (வாடிக்கையாளர்கள்) வேறு, தனித்துவமானது.
 நான் எத்தனையோ மாணவர்கள் தம் சொந்த ஊரில் இருந்து புது ஊருக்கு, நகரத்துக்கு பெயர்ந்து அங்குள்ள உணவை சாப்பிட்டதும் உடல் சுகவீனம் வந்து தளர்ந்து போவதை தொடர்ந்து கவனிக்கிறேன். அவர்களுடைய குடும்பத்தினர் வம்சாவளியாக சாப்பிட்டு வந்த உணவுகளை மாற்றியது அவர்களுடைய நுண்ணுயிர் சமூகத்தை அழித்துவிட்டதே பிரச்சினை எனப் புரிந்து கொண்டேன். நான் 2000இன் துவக்கத்தில் சென்னைக்கு வந்த போது எனக்கும் இப்பிரச்சினை ஏற்பட்டது - மீன் குழம்புக்காக, பழைய சோறுக்காக தவித்தேன். சோறு, சாம்பார், பீட் ரூட் பொரியல் என்பதை என்னால் ஒரு உணவாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு உடல் சுகவீனங்கள் ஏற்பட்டது. மெல்ல மெல்ல என் உடல் இந்த மாற்றங்களுக்கு தன்னை (மோசமாக) தகவமைத்துக் கொண்டது. நம் மண்ணில், அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரில், உணவில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது, அது இந்த நுண்ணியிர்கள் தாம் அன்றி வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரும் தம் உடலின் மென்பொருளான நுண்ணியிர்கள் எவை எனக் கண்டுபிடித்து, அவற்றுக்கு படையல் போட வேண்டும். அதுவே ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ சிறந்த வழி!

Comments

Suvek said…
பரிணாமத்தில், மனிதனும்/விலங்குகளும் தங்கள் குட்டியையும்/துணையினையும் (ஆழமான) முத்தங்கள் மூலம், நன்மை செய்யும் பேக்டீரியாக்களை தங்களுக்கிடையே பரிமாறி கொண்டு, அவற்றின் சமநிலையினைப் பேணுவதன் மூலம், ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக கூட (மட்டுமே) இருக்கலாம். இதனை நிருபித்து, gut-brian axis மூலம் ஒரு தம்பதியினர் மனமொத்து, மனபித்துடன் (அல்லது ஏன் மனம் வெறுத்து) வாழ்கின்றார்கள் என்று புறவய தரவுகளுடன் நிருபித்தால், Nature Microbiology-ல் ஒரு கட்டுரை படைக்கலாம்.

30 வருட (மனமொத்த காதலுடன், இசைந்து) தாம்பத்தியத்திய வாழ்க்கைக்கு பிறகு, என் முகம் மனைவிக்கும், அவள் முகம் எனக்கும் வந்துவிட்டது, அவளுக்கும் பிடிக்காதது எனக்கும் பிடிப்பதில்லை - என்று சுஜாதா (கற்பனையாக !!??) எழுதியதற்கான காரணம், குடலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வகையான பேக்டீரியாக்களின் சமநிலையே. அத்தம்பதியின முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்று நாம் நம்பினால் !.
Suvek said…
பரிணாமத்தில், தங்களிடமுள்ள நல்பேக்டீரியாக்களை துணைக்கு(ம்) !, எதிர்கால சந்ததிகளுக்கும் கொடுத்து, இச்சமநிலையினை பேணுவதற்காக மட்டுமே முத்தமிடுதல் தோன்றியிருக்கலாம். இதனை புறவயத் தரவுகளுடன் நிருபித்தால், Nature-Microbiology-ல் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிடல்லாம்.

என்றோ, 30 வருட தாம்பத்ய வாழ்க்கையில் என்முகம் என் மனைவிக்கும், மனைவி முகம் எனக்கும் வந்துவிட்டது. அதாவது, என் மனைவிக்கு பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்காமல் போய்விட்டது - என்று சுஜாதா எழுதியதற்க்கு, இருவருக்குமிடையேயாயான பெனிபிஸீயல் பேக்டீரீயாக்களின் சமநிலையே காரணம். பேக்டீரிய்யாக்களை பரிமாறிக் கொள்வதற்க்கு, 30 வருட தாம்பத்தியத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை !. துணையினை உச்சி மோர்தற்க்கும், வெறுத்து ஒதுக்குவதர்க்கும் கூட பேக்டீரியாகளே காரணமென்று சொல்லிவிடலாம்!..

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...