Skip to main content

காய்கறிகளே என் தெய்வமான கதை




நம்முடைய உடலின் பல செயல்பாடுகளை வழிநடத்தும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. ஆம் நிஜமாகவே இருக்கிறது. ஆனால் அது நாம் நினைப்பது போல நம் மூளையிலோ, ஹார்மோன்களிலோ, மரபணுக்களிலோ இல்லை. நம் மூளையையும் ஹார்மோன்களையும் வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மென்பொருள் அது - அது நமது உடலில் - குடல் பகுதியில் - வாழும் நுண்ணுயிர்கள். இவையே 90% மேல் நமது மரபணுக்களாகவும் உருப்பெற்றிருப்பதால் நாம் 10% மட்டுமே மனிதர்கள் என தனது 10% Human: How Your Body’s Microbes Hold the Key to Health and Happiness எனும் நூலில் ஆலனா கோலன் சொல்கிறார். உடல் நலம் குறித்து, குறிப்பாக ஹார்மோன்களும், மூளையும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் எப்படி நுண்ணியிர்களால் கட்டுப்படுத்தப்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் பேசுகிற மிக முக்கியமான நூல் இது.
கோலன் சொல்வது நம்மை இந்த நுண்ணியிர்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் நமக்கு தேர்வு செய்யும் திறனே இல்லையென்றல்ல. நாம் எடுக்கும் தேர்வுகளை உணர்வளவில் இந்த நுண்ணுயிர்கள் எப்படி வழிநடத்துகின்றன என்பதே கோலன் சொல்லும் முக்கியமான விசயம். அடுத்து, அவர் நவீன நோய்களான நீரிழிவு, மாரடைப்பு, மன அழுத்தம் ஆகியவை இந்த நல்ல நுண்ணியிர்களின் சமநிலை குலையும் போது ஏற்படும் சீரழிவின் விளைவுகளே என்கிறார். அதாவது பலவிதமான நுண்ணுயிர்கள் நமக்குள் வாழுகின்றன. நமது ஆரோக்கியத்தை அவை பேணினாலே அவற்றாலும் வசதியாக இருந்து தொடர்ந்து நாம் உட்கொள்ளும் உணவை பயன்படுத்த முடியும் என்பதால் அவை அப்பணியை ஆற்றுகின்றன. நாம் உண்ணும் ஒவ்வொரு வகை உணவும் உடலுக்குள் நொதித்து அழிக்கப்பட்டு அதில் இருந்து ஆற்றல் உறிஞ்சி எடுக்கப்படும் போது குடலில் வாழ்ந்து வரும் பல்வேறு நுண்ணியிர்களில் சில அந்த வகை உணவால் பயனடைகின்றன. அதாவது நம் உடலை ஒரு பெரும் உணவகம் எனக் கருதினால் அதில் வரிசை வரிசையாக பல ஆயிரம், பல லட்சம் வாடிக்கையாளர்கள் (நுண்ணுயிர்கள்) கையில் தட்டுடன் நிற்கிறார்கள். அதில் சிலருக்கு காய்கறி, மாமிசம் வேண்டும், சிலருக்கு தானியங்கள், கடலை வகைகள், பழங்கள் வேண்டும், சிலருக்கு மைதா மாவு, சர்க்கரை போன்ற நவீன உணவுகள் வேண்டும். நம் உடலின் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றும் நுண்ணியிர்கள் நொதித்த உணவு (probiotic), காய்கறி, மாமிசம் கறி, விதைகள், கொட்டை பருப்புகள், மாமிச கொழுப்பு போன்ற சர்க்கரை குறைவான உணவுகளையே நம்பி வாழ்கின்றன. நாம் இன்று அதிகமாக சோறு, மைதா, சர்க்கரை, மாமிசம், பால் சார்ந்த உணவுகளை மட்டுமே உண்கிறோம். அப்போது இவற்றைக் கொண்டு வாழ்கிற ஒருவகை வாடிக்கையாளர்கள் (நுண்ணியிர்கள்) மட்டும் பெருகுகிறார்கள். இது உணவகத்தின் (உடல்) சமநிலையைக் குலைத்து விடுகிறது. நமது ஹார்மோன்களை சரிவர நிர்வகித்தும், வேறு பல நுட்பமான வளர்சிதை மாற்றங்கள், மறுசீரமைப்பு பணிகளை செய்து வரும் நல்ல நுண்ணியிர்கள் இப்போது எண்ணிக்கையில் குறைந்து விடுகின்றன; இன்னொரு பக்கம் எந்த வேலையையும் செய்யாத (பிரியாணி, பர்க்கர், பப்ஸ், சமோசா, சிப்ஸ், பிரெட், கேக், பிஸ்கட், இனிப்பு வகைகளை மட்டும் கேட்கும்) சோம்பேறி நுண்ணியிர்கள் பெருகின்றன. இவை நம்மை மேலும் மேலும் மோசமான உணவுகளை சாப்பிடத் தூண்டுகின்றன. நமது ஆரோக்கியம் சீர்குலைகிறது - ரத்த சர்க்கரை அளவுமீறிப் போய், ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, இதய தமனிகள் அடைத்துக்கொண்டு, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமல், மூளைக்கு கிடைக்க வேண்டிய தூண்டுதல்கள் கிடைக்காமல் போய், நரம்பணுக்கள் நிலைகுலைந்து போய் நாம் நோய்களின் கிடங்காக மாறுகிறோம். இதனாலே இத்தனை நோய்களும் நம்மை ஒரே சமயம் நவீன காலத்திலே தாக்குகின்றன. ஏனென்றால் அப்போதே நமது உணவுப்பழக்கமானது முழுக்க மாறிப்போனது. நாம் நமது நுண்ணியிர்களை அனாதைகளாக்கிவிட்டோம். அவையில்லாமல் நாம் மெல்ல மெல்ல செத்து வருகிறோம்.  

நிக் லேன் எழுதிய Power, Sex, Suicide என்றொரு முக்கியமான நூல் உள்ளது (தலைப்பை பார்த்து ஏமாந்து வீடாதீர்கள். இது முழுக்க முழுக்க அறியவியல் நூல் தான்.) - அதில் நமது செல்களுக்குள் இருக்கும் மைட்டோகோண்டிரியா (ஊன்குருத்து) எனும் சக்தி சொரூபம் நம்முடையது அல்ல, நம்முடன் இணைந்து இந்த உடலை உருவாக்கிய நுண்ணுயிர்கள் உடையது என்கிறார் லேன். அதாவது நமக்குள் இருந்து காலனி ஆதிக்கம் செய்யும் நுண்ணியிர்களின் மென்பொருளே ஒரு செல் உயிருடன், ஆரோக்கியத்துடன் எத்தனைக் காலம் வாழ வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. இந்த மனித செல்லுக்குள் வாழும் நுண்ணியிரின் ஆன்மா அந்த செல் போதுமான, சரியான உணவும், பிற சௌகர்யங்களும் இல்லாது தளரும் போது அதை அழித்துவிட முனைகிறது, அதுவே ஒரு செல்லின் மரணம் என்கிறார் லேன். அதாவது மைட்டோகாண்டிரியா என்பது ஒரு பண்டத்தை வாங்கும் பயனரைப் போல. உங்கள் போன் சரியாக வேலை செய்யவில்லை, பழசாகிவிட்டது என்றால் அதை சரி செய்வதை விட சுலபம், செலவு குறைவு அதைத் தூக்கிப் போடுவது தானே? அதையே செல்லுக்குள் இருக்கும் மைட்டோகோண்டிரியாவும் செய்கிறது - அதுவே நோய்நொடி, உடல் பலவீனம், வயதாவது, அதன் விளைவான மரணம் என்கிறார் லேன். பலவீனமாகும் ஒரு செல் சிலநேரம் தன்னையே கொல்லும், அல்லது மற்றொரு செல்லுடன் தன்னை இணைத்து புதிய செல்லாகும் என்கிறார் அவர். இதன்படி திறன் இழக்கும் உடலின் தற்கொலையே நமது மரணம்.

 இந்த தன்னைப் பாதுகாக்கும் மைட்டோகாண்டிரியாவின் முயற்சிகளின் போது விளையும் கோளாறே புற்றுநோய் என்கிறார். அவர் புற்றுநோயாளிகள் தம் உணவுப்பழக்கத்தை மாற்றியதும் நல்ல விளைவுகள் ஏற்படுவதாக சொல்கிறார். இதற்கும் நம் குடலில் வாழும் நுண்ணியிர்கள் எனும் மென்பொருளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது. இந்த நுண்ணுயிர்கள் நினைத்தால் மைட்டோகாண்டிரியாவை செயல்பட வைத்து புற்று செல்களை தற்கொலை பண்ண வைக்க முடியும். அவை நினைத்தால் மன அழுத்தத்தை, தமனிகளின் அடைப்பை சரி செய்ய முடியும்.

இப்போது என் கதைக்கு வருகிறேன். நான் சிறுவயது முதலே காய்கறிகளை வெறுத்து வந்தேன். மிக அண்மையில் தான் தினமும் இரண்டு இரண்டு பெரிய பாத்திரங்களில் - வேளை மசாலா, எண்ணெய் சேர்க்காமல் வெறுமனே வேக வைத்த - காய்கறிகளை சாப்பிடத் தொடங்கினேன். அதன் நல்ல விளைவுகளைக் கண்டு நான் அசந்து போனேன். என்னுடைய நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரித்தது. என்னைச் சுற்றி பலரும் இருமல், ஜுரம் என அல்லலுற்ற போதும் அவர்களுடன் இருந்த எனக்கு எந்த தொற்றுநோயும் வரவில்லை. அண்மைக்காலத்தில் நான் ஆஸ்பத்திரிக்கு போகவோ மருந்தகங்களில் நிற்கவே தேவை ஏற்படவில்லை. (நான் காய்கறிகளுடன் கூடவே நொதித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டேன் தான்.) இது என்ன சொல்கிறது என்றால் என் உடலுக்குத் தேவையான நுண்ணியிர்களின் உணவு இந்த காய்கறிகளே. நான் அவற்றை இத்தனைக் காலமும் பட்டினி போட்டுக் கொன்றதால் அவை என்னைப் பழிவாங்கிவிட்டன. இப்போது நான் உணவளித்ததும் அவை மீண்டும் வந்து என்னைப் பாதுகாக்கின்றன. எனக்கு காய்கறிகளாக இருக்கும் உணவு உங்களுக்கு வேறொன்றாக இருக்கலாம். எல்லாருக்கும் இதே போல காய்கறிகளை உண்பது பாரித்த விளைவுகளை ஏற்படுத்தாது. ஒவ்வொரு உடலும் (உணவகமும்) அதிலுள்ள நுண்ணுயிர்களும் (வாடிக்கையாளர்கள்) வேறு, தனித்துவமானது.
 நான் எத்தனையோ மாணவர்கள் தம் சொந்த ஊரில் இருந்து புது ஊருக்கு, நகரத்துக்கு பெயர்ந்து அங்குள்ள உணவை சாப்பிட்டதும் உடல் சுகவீனம் வந்து தளர்ந்து போவதை தொடர்ந்து கவனிக்கிறேன். அவர்களுடைய குடும்பத்தினர் வம்சாவளியாக சாப்பிட்டு வந்த உணவுகளை மாற்றியது அவர்களுடைய நுண்ணுயிர் சமூகத்தை அழித்துவிட்டதே பிரச்சினை எனப் புரிந்து கொண்டேன். நான் 2000இன் துவக்கத்தில் சென்னைக்கு வந்த போது எனக்கும் இப்பிரச்சினை ஏற்பட்டது - மீன் குழம்புக்காக, பழைய சோறுக்காக தவித்தேன். சோறு, சாம்பார், பீட் ரூட் பொரியல் என்பதை என்னால் ஒரு உணவாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு உடல் சுகவீனங்கள் ஏற்பட்டது. மெல்ல மெல்ல என் உடல் இந்த மாற்றங்களுக்கு தன்னை (மோசமாக) தகவமைத்துக் கொண்டது. நம் மண்ணில், அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரில், உணவில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது, அது இந்த நுண்ணியிர்கள் தாம் அன்றி வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரும் தம் உடலின் மென்பொருளான நுண்ணியிர்கள் எவை எனக் கண்டுபிடித்து, அவற்றுக்கு படையல் போட வேண்டும். அதுவே ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ சிறந்த வழி!

Comments

Suvek said…
பரிணாமத்தில், மனிதனும்/விலங்குகளும் தங்கள் குட்டியையும்/துணையினையும் (ஆழமான) முத்தங்கள் மூலம், நன்மை செய்யும் பேக்டீரியாக்களை தங்களுக்கிடையே பரிமாறி கொண்டு, அவற்றின் சமநிலையினைப் பேணுவதன் மூலம், ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக கூட (மட்டுமே) இருக்கலாம். இதனை நிருபித்து, gut-brian axis மூலம் ஒரு தம்பதியினர் மனமொத்து, மனபித்துடன் (அல்லது ஏன் மனம் வெறுத்து) வாழ்கின்றார்கள் என்று புறவய தரவுகளுடன் நிருபித்தால், Nature Microbiology-ல் ஒரு கட்டுரை படைக்கலாம்.

30 வருட (மனமொத்த காதலுடன், இசைந்து) தாம்பத்தியத்திய வாழ்க்கைக்கு பிறகு, என் முகம் மனைவிக்கும், அவள் முகம் எனக்கும் வந்துவிட்டது, அவளுக்கும் பிடிக்காதது எனக்கும் பிடிப்பதில்லை - என்று சுஜாதா (கற்பனையாக !!??) எழுதியதற்கான காரணம், குடலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வகையான பேக்டீரியாக்களின் சமநிலையே. அத்தம்பதியின முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்று நாம் நம்பினால் !.
Suvek said…
பரிணாமத்தில், தங்களிடமுள்ள நல்பேக்டீரியாக்களை துணைக்கு(ம்) !, எதிர்கால சந்ததிகளுக்கும் கொடுத்து, இச்சமநிலையினை பேணுவதற்காக மட்டுமே முத்தமிடுதல் தோன்றியிருக்கலாம். இதனை புறவயத் தரவுகளுடன் நிருபித்தால், Nature-Microbiology-ல் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிடல்லாம்.

என்றோ, 30 வருட தாம்பத்ய வாழ்க்கையில் என்முகம் என் மனைவிக்கும், மனைவி முகம் எனக்கும் வந்துவிட்டது. அதாவது, என் மனைவிக்கு பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்காமல் போய்விட்டது - என்று சுஜாதா எழுதியதற்க்கு, இருவருக்குமிடையேயாயான பெனிபிஸீயல் பேக்டீரீயாக்களின் சமநிலையே காரணம். பேக்டீரிய்யாக்களை பரிமாறிக் கொள்வதற்க்கு, 30 வருட தாம்பத்தியத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை !. துணையினை உச்சி மோர்தற்க்கும், வெறுத்து ஒதுக்குவதர்க்கும் கூட பேக்டீரியாகளே காரணமென்று சொல்லிவிடலாம்!..

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...