மதன் - வெண்பா ஸ்டிங்கில் அம்பலமானவர்களைப் பார்க்கையில் அவர்களே நம் காலத்து நாயகர்கள் என்று தோன்றுகிறது.
உள்ளீடில்லாதவர்களின் காலம் இது. இன்றைய யுகத்தில் இவர்களே வெற்றியாளர்கள், எழுதவும் சிந்திக்கவும் தெளிவாகப் பேசவும் தெரிந்தவர்கள் முட்டாள்கள். இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரு டீக்கடைப் போய் “இந்தாப்பா நூறு கிராம் நேர்மை, ஐம்பது கிராம் அறிவு, வடைக்கு காசா? இந்தா நூறு கிராம் சித்தாந்தம்” என்று சொன்னால் செருப்பால் அடிப்பார்கள். மேலும் மக்கள் இந்த நேர்மை, கீர்மை, அறம், முறத்தில் எல்லாம் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.
நான் பதினாறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். நாற்பதுக்கு மேல் புத்தகங்கள் போட்டிருக்கிறேன். இருபதாண்டுகளுக்கு மேலாக பல இடங்களிலாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த சமூகம் கொடுத்ததென்ன? அண்மையில் நடந்த சட்ட சோதனைகளில் நான் என் அம்மா எனக்குப் போட்ட நகைகளை மொத்தமாக இழந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளாக உழைத்தும் என்னால் சொந்தமாக ஒரு பைக் வாங்கக் கூட முடியவில்லை (அதுவும் வங்கிக்கடன் தான்). மாதாமாதம் வாங்க வேண்டிய இன்சுலினை வாங்கப் போனால் மொத்தமாக 4000 போய் விடுமே என எண்ணி மருந்தகம் போவதையே தவிர்க்கிறேன். சம்பளம் வந்ததும் பாதி (வழக்கை சமரசம் பண்ணி முடிக்க எடுத்த வங்கிக்கடனின்) இ.எம்.ஐயிலும் மீதியில் ஒரு பாதி வாடகையிலும் போய் விடுகிறது. ஏனென்றால் நான் இத்தனைக் காலமாக தவறாக வாழ்ந்திருக்கிறேன். திடீரென நோய்வாய்ப்பட்டாலும் நான் மருத்துவமனை செலவுக்கு கடன் தான் வாங்க வேண்டும். இது என் நிலைமை தான் என்றில்லை, என்னைப் போல பலரை இன்று எனக்குத் தெரியும்.
முன்பு மனிதர்கள் ஒரு முகதாட்சியத்துக்காக அன்பு காட்டினார்கள், நம்மைப் பாதுகாத்தார்கள், இன்று பணமில்லையென்றால் அவர்கள் நம்மைவிட்டு விலகி விடுவார்கள். அது மட்டுமல்ல ஒரு சட்டபிரச்சினை என்று வந்துவிட்டால் ஒட்டுமொத்த கூட்டமும் நம்மை விட்டு ஓடிவிடுவார்கள் என்பதையும் என் அனுபவத்தில் கண்டேன். ஆனால் பணம் இருந்தால் ஜெயிலுக்குப் போவது கூட ஒரு பிரச்சினை அல்ல, அலுங்காமல் குலுங்காமல் அதை சமாளிக்கலாம் என இந்த 2க் கிட்ஸ் யுடியூபர்கள் நமக்கு காட்டித் தந்தார்கள். இவ்வளவு வசதியாக இல்லாவிடில் இந்நேரம் இந்த கும்பல் ரோட்டில் நின்றுகொண்டிருக்கும், குழந்தை குட்டி எல்லாரும் பத்திவிடுவார்கள்.
ரவீந்திரன் துரைசாமியைப் போல் இருந்தாலே குடும்பம், சுற்றம், நண்பர்கள் எல்லாரும் நம்மை மதிப்பார்கள். நாம் இத்தகையோரைக் பார்த்து கற்றுக்கொண்டு வளர வேண்டும்.
ரவீந்திரன் துரைசாமி அந்த சின்ன நகை டப்பாவை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல எடுத்து திறந்து பார்க்கையில் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டதே அதை மறக்க மாட்டேன். எனக்கு சற்று மகிழ்ச்சியும் தோன்றியது. மனிதர் நன்றாக வாழட்டும் என வாழ்த்தினேன்.
ஐயப்பன் ராமசாமி, மாதேஷ், சவுக்கு போன்றோர் ஊரை ஏமாற்றினார்கள் தாம், ஆனால் யார் உங்களை ஏமாற சொன்னது? சும்மாவா சொன்னார்கள் இந்த உலகில் ஏமாற்றுகிறவன், ஏமாறுகிறவன் என ரெண்டே தரப்பு தான் என. இந்த யுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும். ரவீந்திரன் துரைசாமி சொல்வதெல்லாம் அபத்தம் என்றாலும் அறிவு, சித்தாந்த உணர்வு எல்லாம் முக்கியம் அல்ல என்று அவர் நம்புவது சரி என்று இப்போது தோன்றுகிறது. ஐயப்பன் ராமசாமியைப் போன்றோர் பத்தாம் வகுப்பைத் தாண்டி படிக்காதவர்கள், நாலு வார்த்தை ஒழுங்காக பேசவோ எழுதவோ தெரியாதவர்கள். கிஷோர் கெ ஸ்வாமியை நான் ஒரு காலத்தில் “என் வீட்டில் வந்து செல்ல நாயாக இருந்துக்கட்டும் அவர், அவரை சிறைக்கெல்லாம் அனுப்பாதீங்க” என்று கலாய்த்திருக்கிறேன். அவரே இத்தனை ஊடகவியாளர்களை ஒருங்கிணைக்கும் டான் எனப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. யோவ், என்னை மன்னிச்சிக்கய்யா. என் வீட்டுக்கு வந்து என் குருநாதராக இருந்துக்கோ.
வேலூர் இப்ராஹிம் நாமம் வாழ்க!
Comments