Skip to main content

எழுத்தாளன் - யுகபுருஷன் - குற்றவாளி



ஜெயமோகனுடைய கட்டுரையில் (“எழுத்தாளன் , புனிதன், மனிதன்”) நான்கைந்து பகுதிகள் வருகின்றன (எழுத்தாளனின் ஒழுக்கப்பிறழ்வு, அதற்கான நியாயப்பாடுகள், எழுத்தாளன் வழிகாட்டியாக இருக்க முடியுமா? ஒரு சமூகத்தில் உள்ள வழிகாட்டியும் உருக்கு மனிதனுமான லட்சியவாதிகள் vs நுண்ணுணர்வு மிக்க சுயக்கட்டுப்பாடு இல்லாத எழுதாளன், தான் எப்படி ஒரு பலவீனமான எழுத்தாளனாகவும் பலமிக்க வழிகாட்டியாகவும் ஒரே சமயம் இருக்கிறேன் எனும் விளம்பர சுயபிரகடனம்). இவற்றில் எழுத்தாளனின் மன அமைப்பு பற்றின பகுதியுடன் மட்டும் உடன்படுகிறேன். ஆனால் ‘கலைஞனின் நுண்ணுணர்வு’. உண்மையிலே அப்படி ஒன்று இல்லை என்பதையே நான் என் வாசிப்பிலும் உலக அனுபவத்திலும் எழுத்தனுபவத்திலும் கண்டறிந்தது. நுண்ணுணர்வு என்று அவர் குறிப்பிடுவது ஒரு நரம்பியல் சிக்கலே - இதை நான் அல்ல கண்டுபிடித்தது, நவீன அறிவியல் சொல்வதையே நான் சொல்கிறேன். இந்த நரம்பியல் அமைப்பு ஒரு சிலருக்கு மட்டுமே வாழ்க்கையை ஒரு முழுக்க மாறுபட்ட கோணத்தில் பார்க்கவும், status quoவுக்கு எதிராக யோசிக்கவும் தூண்டுகிறது. அவர்களுடைய கற்பனையை சற்று விசித்திரமானதாக ஆக்குகிறது, மொழி / இசை / ஓவியம் / படக்கருவி / வெகுஜன கலைகள் என ஏதோ ஒரு வடிவத்தில் தன் வெளிப்பாட்டை இந்த நரம்பியல் அமைப்பு காணும். இவர்களுக்கு இந்த வடிவங்களுக்குள் செயல்படுகையில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி, மனத்திளைப்பு, சுதந்திரம் அனுபவப்படும். கற்றல் திறன் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் (learning disability) கொண்டோரை ஊன்றி கவனித்தால் இது உங்களுக்குப் புரியும். அவர்களுடைய உலகம் நம்மில் இருந்து முழுக்க மாறுபட்டது.
தத்துவார்த்தமாக பார்த்தால் மொழியின் இடைவெளிகளின் ஊடே நம் இருத்தலை அறிய கலைஞர்களுக்கு சாத்தியப்படும் (தெரிதா / ஹைடெக்கரின் கருதுகோள் - இருவரும் மொழியை இருவிதங்களில் அர்த்தம் கொண்டார்கள்.) - இதுவே கலைஞனின் சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். கையைப் பிடித்து இழுப்பதோ குடித்து கலாட்டா பண்ணுவதோ திருடுவதோ கொலை செய்வதோ அல்ல. அதற்கு பின்னால் வருகிறேன்.
மொழியின் இடைவெளிகளை அறிய ஒரு சாமான்ய மனிதனாலும் முடியும் - ஆனால் அதை தீவிரமாக அறிய மொழிக்குள் யாருமே யோசிக்காத வகையில் சில விளையாட்டுகளை நிகழ்த்த வேண்டும் (இதையே படைப்பூக்கம் என்கிறோம்). இந்த வேலை தான் ஒரு எழுத்தாளனை தனித்துக் காட்டுகிறது என்றாலும் சாமான்யர்களாக அறியப்படுபவர்கள் மொழிக்கு வெளியே தம் இருத்தலை இன்னும் இயல்பாக கண்டடைகிறார்கள் (இப்படி சும்மா இருக்க முடிவதையும் ஹைடெக்கர் மொழி என்றே கூறுகிறார்.). அன்றாட உலகில் இருந்து - உலகம் என்றால் உடலால் புலன்வழியாக அறியத்தக்க உலகம் - வெகுவாக விலகி வந்துவிட்ட ஒரு ‘பண்பட்ட’ சமூகத்திற்கு என்றே கண்டடையப்பட்ட கருவி தான் மொழி, அதற்குள் தம் இருத்தலை அவர்கள் உணர வசதிப்படுத்திக் கொண்டதே கலை. இப்படி இருவகையான மொழிகள் உள்ளதால் - தத்துவார்த்தமாக நோக்கினால் - உங்கள் இருத்தலை அறிய உங்களுக்கு கலைகள் கட்டாயமல்ல, கலையனுபவத்தை துய்ப்பது ஒரு விருப்பத்தேர்வு மட்டுமே.
ஜெயமோகனின் “நுண்ணுணர்வு” எனும் சொல் ரொம்ப காலமாக தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் புழக்கத்தில் இருப்பதுதான். ஆனால் அது சற்று பூடகமாக, விருப்பப்படி கற்பனை செய்ய வழிவகுப்பதாக இருப்பதால் அது பல குழப்பங்களுக்கு வழிகோலுவதுடன், சமூகப் படிநிலையாக்கத்துக்கும் பாதையமைக்கிறது. ஆனால் என் தத்துவ, இலக்கிய வாசிப்பும், வாழ்வனுபவமும் இந்த படிநிலை - எழுத்தாளன் வழிகாட்டுபவன், ஆசான், உயர்ந்தவன், நுண்ணுணர்வு கொண்டவன், அவனுக்கு கீழே அவனுடைய வாசகர்களும், அவர்களுக்கு கீழே படிக்காத சாமான்யர்களும் உள்ளனர் என்பதை - பருவுலகில் எங்குமே இல்லாத ஒரு அபத்தம் எனப் புரிய வைக்கிறது. தமிழில் இதை தீவிரமாக முன்வைப்பவர்கள் சில இருக்கிறார்கள் (ஜெயகாந்தன், ஜெயமோகன்). பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரசித்தமாக இருந்த கற்பனாவாத மரபில் தான் முதன்முதலாக ஜெயமோகன் தன் கட்டுரையில் சொல்லும் கருத்துக்கள் தோன்றி பிரசித்தமாகின. அவர்கள் மேதைமை எனும் கருத்தாக்கத்தை பரவலாக்கினார்கள். யார் மேதையாக இருக்க முடியும், யார் சாதாரணமான படைப்பாளிகள் எனும் விவாதம் அங்கு ஏற்பட்டு அண்மையில் தான் அடங்கியது. அதன் பிறகு நவீன இலக்கியம், பின்நவீன சிந்தனைகள் வந்த பின்னர் எழுத்தாளன் குறித்த சித்திரமே உலகம் முழுக்க மாறிவிட்டாலும் அந்த பழைய ரொமாண்டிக் பார்வை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பாலகுமாரன் ஒரு எழுத்தாளனை சித்த புருஷனாக முன்வைத்து இன்னொரு மரபை தமிழில் உருவாக்கினார்; கடைசி வரை அவர் மட்டுமே அதில் குருவாக இருந்தார் என்பதொரு வேடிக்கை. (இன்று ஜெயமோகன் இதே சித்த புருஷனை பண்பாட்டு நுண்ணுணர்வு அதிமனிதனாக முன்வைக்கிறார்.) என்னுடைய பார்வையில் இவையெல்லாம் கற்பனைகள். எழுத்தாளர்கள் தம்மை ஒரு நீர்க்குமிழுக்குள் அடைத்துக்கொண்டு தமது படைப்பாற்றலை காப்பாற்றிக் கொள்ள இக்கற்பனைகள் உதவலாம். ஆனால் இவை அடிப்படையில் கற்பனைகளே. (கூடுதலாக உருட்டி மிரட்டி புத்தகங்களை வாங்க வைக்கவும் இந்த பிரச்சாரம் உதவும் என்பதை நான் மறுக்கவில்லை.)
‘நுண்ணுணர்வு’ எனும் சொல்லில் உள்ள ‘கருவில் திரு’ ஒளிவட்டத்தை நான் ஏற்கவில்லை என்பதாலே ‘விசித்திரமான மன அமைப்பு கொண்டவன்’ எழுத்தாளன் எனும் விளக்கத்தை பரிந்துரைக்கிறேன். இவ்வகை மன அமைப்பு கொண்ட எழுத்தாளாராக வலுவான சாத்தியம் கொண்ட சிலரை நான் இளமையில் இருந்தே கண்டிருக்கிறேன். இவரால் நிச்சயமாக படைப்பாளியாக முடியும் என்று நினைத்து, அவர்களிடமே போய் சொல்வேன். ஆனால் அவர்களுக்கு ஆர்வமோ, ஆர்வமிருந்தால் உழைக்கும் முனைப்போ இருக்காது. இப்போதெல்லாம் நான் இத்தகையோரைக் கண்டால் பொருட்படுத்தாமல் நகர்ந்து விடுகிறேன். திறமை என்பதே ஒரு அபத்தம் எனும் இடத்துக்கு வந்துவிட்டேன். செயலே திறமை. அதைத்தாண்டி ஒன்றுமே இல்லை. ஜெயமோகன் ரொம்ப சாமர்த்தியமாக ‘உழைப்பு’, ‘முனைப்பு’, ‘திட்டமிடல்’ ஆகிய பதங்களை பயன்படுத்துவதில்லை பாருங்கள் - ஒரு கட்டற்ற ஆற்றல் கொண்ட மகாபுருஷனாக எழுத்தாளனை சித்தரிக்கிறார். ஆனால் அப்படி யாரும் இல்லை. தமிழின் மகத்தான படைப்புகள் கடுமையாக உழைத்து திட்டமிட்டு தினம் தினம் படிப்படியாக எழுதப்படுகின்றன. அவற்றின் பின்னால் ஒரு பித்து நிலை உள்ளது. ஆனால் பித்து நிலை மட்டுமே படைப்பாகாது. பித்து நிலை மட்டுமே இருந்தால் அது உங்களை குடிகாரனாகவோ மனநோயாளியாகவோ பெண் பித்து மிக்கவனாகவோ ஆக்கும். சாகும் போது ‘நான் ஒரு யுகபுருஷன், ஆனால் ஒன்றுமே எழுதவில்லையே’ என்று தோன்றும். விடிய விடிய கண்விழித்து எழுத வேண்டும், சின்னச்சின்ன தியாகங்கள் பண்ண வேண்டும், மனக்கட்டுப்பாடு இருக்க வேண்டும் - 98% இவையே உங்களை சிறந்த படைப்பாளி ஆக்குகின்றன. மன அமைப்பில் உள்ள பிழைகள் 2% உங்கள் படைப்புக்கு ஒரு தனித்த ஒளியைக் கொடுக்கலாம். ஆனால் அந்த ஒளியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கொசுவைக் கூட அடிக்க முடியாது.
நான் இப்போது நாற்பது மாணவர்களுக்கு வாரம் சில மணிநேரங்கள் நாவல் எழுதும் கலை வகுப்பெடுக்கிறேன். அவர்களிடம் இதையே திரும்பத் திரும்ப சொல்கிறேன் - எழுத்தில் அதிரூபர்கள் என யாரும் இல்லை. தனித்திறமையும் தேவையில்லை. எல்லாராலும் ஒரு நாவல் எழுத முடியும். அதற்கு எழுதும் கலை, மொழியை பயன்படுத்தும் உத்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். எழுதிப் பயிற்சி செய்தோ படித்தோ இதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் முக்கியமாக தினசரி எழுதும் ஒழுக்கம் வேண்டும். செயலே திறமை. செய்யத் தெரிவதே திறமை. சோம்பேறிகள் கவிஞன் ஆகலாம், ஆனால் நாவலாசிரியன் ஆக முடியாது. எழுதுவதற்கான மன ஊக்கத்தையும் அன்றாட பழக்க வழக்கங்கள் மூலமாக நாம் உருவாக்கிக் கொள்வது எளிதே (விலகி இரு, தனித்திரு, ஒன்றையே செய் எனும் சூத்திரம்). எழுதுவது நம் இருத்தலின் ஒரு பகுதி. எழுத்து மட்டுமே உலகம் அல்ல. இவ்வளவு தான்.
தமிழில் ஊக்கம் இல்லாதவர்களும், ஊக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். எழுத்தாளன் - சாமான்யன் எனும் இருமை தவறானது.
கடைசியாக, குற்ற மனப்பான்மைக்கும் பிறழ்வுக்குமான உறவுக்கு வருகிறேன் - நுண்ணுணர்வு எனும் குடைக்கு கீழே ஜெயமோகன் படைப்பாற்றல், ஆளுமைப் பிறழ்வு, குற்ற மனப்பான்மை என சம்மந்தமில்லாத சங்கதிகளை போட்டுக் குழப்பி விட்டார். குற்ற மனப்பான்மைக்கு (ஒழுக்கப்பிறழ்வு நடவடிக்கைகள்) படைப்பாற்றலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உதாரணமாக சிறையில் இருக்கும் எந்த குற்றவாளியும் தன்னளவில் படைப்பாளி அல்ல. ஆளுமைப்பிறழ்வில் இருந்து குற்றம் செய்ய மனநிலை வருகிறது என்று வேண்டுமெனில் சொல்லலாம். எழுத்தாளன் மட்டுமல்ல சமூகத்தில் பலருக்கும் இந்த சமூக விதிமுறைகளை மீற வேண்டும் எனும் விருப்பம் உண்டு. இது ஒரு வேட்டை மனநிலை. நாம் பூர்வீகத்தில் வேட்டைக்காரர்கள் தானே. வேளாண் சமூகமாக நாம் மலர்ந்த பின்னர் வேட்டை மனநிலையைக் கட்டுப்படுத்தும் கட்டாயம் சமூகத்துக்கு உண்டாகிறது. அப்படியே குற்றம் என ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை, தண்டனை எல்லாம் வருகிறது. ஒருவேளை வினோதமான நரம்பியல் அமைப்பு கொண்டவர்களுக்கு சமூகம் குறித்த பயம், பிரக்ஞை குறைவாக இருக்கலாமே ஒழிய அவர்கள் இயல்பிலேயே பிறழ்ந்தவர்கள் அல்ல. இப்படி இல்லாத படைப்பாளிகளையும் நிறைய பார்த்திருக்கிறேன். நீங்கள் அசோகமித்திரனிடம் ஒரு இளம் நங்கையை பக்கத்தில் விட்டுப்போனாலும் அவர் அவள் கையைப் பிடித்து இழுக்க மாட்டார் என உறுதியாக சொல்வேன். படைப்புத் திறனே இல்லாத இன்னொருவர் அதைச் செய்யலாம். அதனால் அவர் அசோகமித்திரனைப் போல ஆக மாட்டார். குற்றம் என்பது மிக மிக இயல்பான ஒரு செயல். அது நம் கண்ணுக்கு சுலபத்தில் புலப்படுவதில்லையே தவிர குற்றம் என்பது எல்லா மட்டத்திலும் அன்றாட உலகில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. குற்றத்துக்கு ஒரு தனி ஆளுமைத்திறன் தேவையில்லை. மனிதன் மட்டுமல்ல, மிருகங்கள் கூட குற்றங்களை செய்கின்றன. விலங்குகளை நுட்பமாக கவனித்தவர்களுக்கு தெரியும். விலங்கு குற்றவியல் சட்டம், நீதிமன்றம் எல்லாம் உருவாக்கினால் ஆயிரக்கணக்கான விலங்குகள் தினமும் அணிவகுத்து நிற்கும். விலங்கு சட்ட வக்கீல்களும் தோன்றுவார்கள். இதற்கும் எழுத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமென்றால் இதைக்குறித்த தன்னுணர்வு எழுத்தாளனுக்கு சற்று அதிகம் என்று சொல்லலாம். இப்போதைக்கு இது போதும். குற்றம் என்றால் என்ன என மற்றொரு பதிவில் சொல்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...