நான் குடும்பநல நீதிமன்ற அனுபவங்களை எழுதும் போது எப்போதும் ஆண்களின் தரப்பையே முன்னிலைப்படுத்துகிறேன் என் சில தோழிகள் வருத்தம் தெரிவித்ததால் நான் அண்மையில் சந்தித்த ஒரு தோழி சொன்ன கதையையும் பகிர்கிறேன். அவர் ஒரு பெண் என்பதால் கூச்சப்பட்டு என்னிடம் மொத்த கதையையும் சொல்லவில்லை என்பதால், நான் கற்பனை கிற்பனை எல்லாம் மிக்ஸ் செய்வது இல்லையென்பதால் இது சுருக்கமாகவே இருக்கும். இப்போது எழுத்தாளர்களின் ஆளுமைப்பிறழ்வு, சறுக்கல், பாலியல் குற்றம் பற்றின விவாதம் நடப்பதால், வக்கீல்களும் எழுத்தாளர்களே என சில நண்பர்கள் சொல்லுவதால் இக்கதை இங்கு பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.
இத்தோழி அண்மையில் தன் கணவனை விட்டுப்பிரிந்தவர். குழந்தையையும் இவரே வளர்க்கிறார். படித்தவர். ஆனால் நல்ல வருமானமுள்ள வேலை இல்லை. ஏதோ ஒரு சிறிய தொகைக்கு ப்ரீலேன்ஸிங் பண்ணி அன்றாட செலவுகளை கவனிக்கிறார். காதல் திருமணம் என்பதால் பெற்றோருடன் ஆரம்பத்தில் இருந்தே மோதல். அவர்களிடம் திரும்ப சென்று உதவி கேட்கவும் இவருக்கு மனமில்லை. குடும்ப நல நீதிமன்றத்துக்கு வரும் இவர் ஒரு வக்கீலை நாடிப் போகிறார். வக்கீல் முதலில் நான் ஜெய்பீம் சூர்யாவைப் போல, எனக்கு எல்லாமே ஒடுக்கப்பட்டோரை காப்பாற்றுவது தான், உங்கள் கணவனை இழுத்து வந்து மண்டியிட வைக்கிறேன், நீதி பெற்றுத் தருகிறேன், மாதம் 30,000 ஆவது ஜீவனாம்சம் வாங்கித்தருகிறேன் என பில்ட் அப் கொடுத்து சில மாதங்கள் வழக்கை ஓட்டிவிட்டு “சரி நீங்க இன்னும் பீஸ் கொடுக்கலையேம்மா” என இழுத்திருக்கிறார். “நீங்க கேட்கவே இல்லையே சார், நானும் வாழ்க்கையை நடத்த ரொம்ப சிரமப்படுகிறேனே.” “அது எனக்குத் தெரியுமேம்மா. அதுக்காகத் தான் போராட வந்திருக்கேன். ஆனா எனக்கும் ஒரு பீஸ் இருக்குதே. அதை நீங்க கொடுத்துதான் ஆகணும்.” தோழி ஒரு கணம் ஜெய்பீமில் சூர்யா பீஸே கேட்கலையே என குழம்புகிறார். சுதாரித்துவிட்டு சரி எவ்வளவு தான் வேணும் எனக் கேட்கிறார். நம் ஜெய்பீம் சூர்யாவோ ஒரு லட்ச ரூபாய் எடுத்து வையுங்க என்கிறார். இவரிடம் அக்கவுண்டில் பத்தாயிரம் தான் இருக்கிறது. “சரி பரவாயில்ல, நான் ஹெல்ப் பண்றேன்” என்று சொல்லிட தோழி ‘ஹப்பாடா’ என மூச்சுவிடுகிறார். ஆனால் அடுத்தடுத்த மாதங்கள் நம் வக்கீல் கட்டணம் கேட்டு அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் என்னால் சத்தியமா முடியல, முடிஞ்ச தொகையை கொடுத்த்திர்ரேன் என்று தோழி ஜீபே பண்ணிவிடுகிறார். வக்கீல் அவரிடம் வந்து நீங்க எனக்குத் தர வேண்டிய ரெண்டு லட்சத்தில 10% கூட இன்னும் தரல. என்று முகத்தை பக்கத்தில் போய் காட்டி மிரட்டியிருக்கிறார். என்ன ஜெய்பீம் சூர்யா இப்படி பேசுகிறாரே என தோழி மீண்டும் நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வக்கீல் “சரி பரவாயில்லம்மா, என்னைத் தேடி ஹெல்ப்புன்னு வந்திட்டீங்க. உங்களை கைவிடவும் மனசில்ல. எனக்கும் பீஸ் வாங்காமல் அடுத்து வேலை பண்ண முடியாது. நீங்க ஒண்ணு பண்ணுங்க, என் கூட வந்திருங்க, நான் உங்களைப் பார்த்துக்கிறேன்” என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அவர் சொல்லியதன் பொருளென்ன என்று தோழிக்கு விளங்கவே பத்து நிமிடம் எடுத்திருக்கிறது. தோழி அதற்கு பதில் சொல்லாமல் வந்துவிட “நான் கேட்ட பீஸ் என்னாச்சு?” எனக் கேட்டு தினமும் போனில் தொந்தரவு. அவர் இப்படி ஒரு வக்கீலே வேண்டாம் என கடைசியில் தப்பித்து ஓடி வந்துவிட்டார்.
இந்த வக்கீல் ஏன் இப்படி நடந்து கொண்டார் என எனக்கு குழப்பமாக இருந்தது. இப்போது எழுத்தாளன் என்றால் அவனுக்குள் குற்றம் செய்யும் மனநிலை இருக்கும் தானே, அவன் அடிப்படையில் பிறழ்ந்தவன் தானே என்று சில நண்பர்கள் ஒரு பக்கமும், வக்கீலும் எழுத்தாளன் தானே என வேறு சில நண்பர்கள் இன்னொரு பக்கமும் வாதிடுவதைப் பார்க்கும் போது எனக்கு விடை கிடைத்து விட்டது: இந்த வக்கீல் ஒரு உன்னத படைப்பாளியாகவும் வக்கீலாகவும் ஒரே சமயம் இருந்திருக்கிறார்! உன்னத படைப்பாளி என்றால் கையைப் பிடித்து இழுப்பார், வக்கீல் என்றால் பீஸ் கேட்பார். இவர் ரெண்டுமே என்பதால் பீஸாக கையைப் பிடித்து இழுத்துவிட்டார்.
Comments