Skip to main content

அரசு இந்த 12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!

ஏனென்றால்,


முதலில், பொருளாதார வளர்ச்சி என்பது முதலீட்டாளர்களர்கள் லாபத்தை பெருக்கும் போது நிகழ்வதல்ல, சந்தைக்கு பணம் வந்தாலே அது நிகழும். அதற்கு மக்களிடம் அதிக பணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக பணப்புழக்கம் இல்லாவிடில் பணவீக்கம் ஏற்படும். அதற்கு முதலில் எல்லா மக்களுக்கும் கையில் பணம் வரும்படி தொழிலோ வேலையோ இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அதானி, அம்பானி ஆகியோரின் லாபம் பல நூறு மடங்கு அதிகரித்தது, ஆனால் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைப் பார்த்தோம். பொருளாதாரம் நொடித்தால் இதே முதலீட்டாளர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிடுவார்கள். இதை நான் சொல்லவில்லை, ஜி.எஸ்.டியை எதிர்த்து பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் சொன்னது.  
8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்தும் போது இரட்டை ஷிப்ட் பணி ஒன்றரை ஷிப்ட் ஆகும். இரண்டு பேர் பண்ணின வேலை ஒருத்தர் செய்வதாகும். இருவரது சம்பளம் ஒருவரது சம்பளம் ஆகும். இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நமது பொருளாதாரத்துக்கே கேடு. ஏனென்றால் பணமானது முதலாளியின் ஜேப்புக்குப் போனால் அது அங்கேயே கிடக்கும், நுகர்வுக்கு பயன்படாது. தாராளமய சந்தையானது நுகர்வின் அடிப்படையிலானது என்பதால் இப்பணத்தினால் ‘சந்தைக்கு லாபம்’ இல்லை. சந்தையின் லாபம் வேறு, முதலாளியின் லாபம் வேறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தெருவில் போகிறவரின் சட்டைப்பையில் உள்ள பணமே சந்தையின் லாபம், முதலாளியின் பணம் பின்னர் பிலிப்பைன்ஸ், மெக்ஸிக்கோ ஷெல் கம்பெனி கணக்கில் சேர்க்கப்படும் கறுப்புப் பணமாகும். ஏனென்றால் பொருளாதார வீக்கம் ஏற்பட்டால் முதலாளி மீண்டும் இங்கே முதலீடு பண்ணப் போவதில்லை. அதனால் 12 மணிநேர வேலை மசோதா நம் பொருளாதாரத்தை மேலும் வீங்க வைத்து அழிக்கப் போகிறது.
பொருளாதாரம் குறித்து சுத்தமாகப் புரியாத ஒருவரே இதை ஆதரிக்க முடியும்.

இன்னொரு பிரச்சினை 50 பேர்கள் 8 மணிநேர வேலை செய்வதை, 18 மணிநேரமாக மாற்றினால் 16 பேர்களுக்கு வேலை போகிறது என்பதை ஒரு எளிய கணக்கிட்டுப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். உடனே அரசாங்கம் இப்படியான பணி இழப்பு நேராமல் பார்த்துக்கொள்ளும், நிர்வாகம் கனிவாக நடந்துகொள்ளும் என்றெல்லாம் முட்டுக்கொடுப்பது நியாயம் அல்ல. அப்படியான நம்பிக்கை ஏற்படுத்தும்படியாக சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அப்பொறுப்பை தனிநபர்களின் நல்லுணர்வின் மீது சுமத்தக் கூடாது.

இதற்குப் பதிலாக குறைந்தபட்ச வேலை நேரத்தை 8இல் இருந்து 5ஆக குறைக்க வேண்டும், வாரத்திற்கு 48இல் இருந்து 30ஆக குறைக்க வேண்டும், மீத 18 மணிநே வேலையை ஒரு புதிய ஆளை பணியில் அமர்த்தி அவருக்கு கொடுக்க வேண்டும், அப்படி வேலையில்லாதவர்களுக்கு பணியளித்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்கள் வழங்கும் தீர்வு. ஏனென்றால் வேலையற்றோரை பணியில் அமர்த்துவது அவர்களைக் காப்பாற்ற அல்ல, நமது நிதி நிலைமையை மேம்படுத்தவே. இதை பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே முன்னெடுத்துள்ளன. அங்கெல்லாம் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் போது வேலை நேரத்தை குறைத்து, வேலையில்லாதோருக்கு வேலை கிடைக்கும்படி பண்ணுகிறார்கள், நிதி நிலைமையை சீர் செய்து, பணவீக்கத்தை குறைக்கிறார்கள். ஆனால் இங்கோ வேலை நேரத்தை அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து, பொருளாதார வீக்கத்தை அதிகரித்து, அதனாலே விலைவாசியையும் எகிற வைக்கிறார்கள். ஏன் இவ்வளவு அபத்தமாக யோசிக்கிறார்கள்?

கேட்டால் தொழில் வளர்ச்சிக்காக, நெகிழ்வான தொழில் சூழலுக்காக என்றெல்லாம் நாக்கில் விளக்கெணெய் போட்டுக்கொண்டு பேசக் கூடாது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல தொழில் வளர்ச்சியானது பண்டங்களின் அதிக உற்பத்தியிலோ, அதில் இருந்து கிடைக்கும் லாபத்திலோ இல்லை, அப்பண்டங்களை வாங்குவதற்கான பணம் மக்களிடம் இருந்தாலே தொழில் வளர்ச்சி ஏற்படும். அதனாலே ஜப்பானில் மக்கள் சிரமம் பார்க்காமல் 24 மணிநேரமும் வேலை செய்யவில்லையா என உளறக் கூடாது. ஏனென்றால் மக்கள் தம் உடல், மன நலனுக்கு கேடான அளவுக்கு வேலை செய்தால் அதனால் எந்த வளர்ச்சியில் ஒரு நாட்டில் ஏற்படாது. மேலும் இந்தியா ஒரு ஏற்றுமதி சார்ந்த நாடு அல்ல. இங்கு உற்பத்தி அளவுக்கு நுகர்வும் அவசியம். அந்த சமநிலையிலே இந்த பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே 8 மணிநேரம் எனும் பெயரில் 12 மணிநேரங்கள் மக்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் போது இந்த சுரண்டலையே சட்டபூர்வமாக்குவது தவறு அல்லவா எனக் கேட்பது ஒரு நியாயமான கேள்வியே. 9-9 கடைகளிலும், ஆலைகளிலும் நின்றுகொண்டே ஆணும் பெண்ணும் வேலை செய்தல் கட்டாயம் எனும் நிலை ஏற்பட்டால் அவர்கள் எப்படி வீடு திரும்பி குடும்பத்தை கவனிப்பார்கள், ஓய்வெடுப்பார்கள், சமூகமாக்கல் செய்வார்கள்? 

நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்பதும் கூட சட்டத்தில் எங்கும் குறிக்கப்படவில்லை. அதுவும் நிர்வாகம் முடிவு பண்ணுவதே என அரசு சொல்லுகிறது. எந்த நிர்வாகம் மூன்று நாட்கள் ஓய்வுகொடுக்கும்? அவர்களுக்கு அதில் என்ன லாபம்? இப்படி பொறுப்பைத் தூக்கி நிர்வாகம் மீது போடுவது அவலமானது. 

அதே போலத்தான் ஒரு தொழிலாளி தான் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என முடிவெடுக்கலாம் எனக் கூறுவதும் - அதற்கான உரிமையை, வேலைப் பாதுகாப்பை ஏன் இச்சட்டம் உறுதிபடுத்தவில்லை? அந்த அதிகாரம் இல்லாத போது அவனால் எப்படி முடியாது எனக் கூற முடியும்? ஓவர் டைமாக இந்த உபரி நேரத்தை எடுத்துக்கொண்டு அரை நாள் சம்பளம் கொடுக்கப்படுமா? அதையும் இந்த மசோதா சொல்ல மறுக்கிறது. அதன் பொருள் இனி அதே மாத சம்பளத்துக்கு நாம் 104 மணிநேரங்கள் ஒரு மாதம் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதே.  

இது எல்லாரையும் பாதிக்காது எனும் வாதத்தையும் நான் ஏற்கவில்லை. ஏனென்றால் தனியாரிலும் லாக் டவுனுக்குப் பிறகு வேலை நேரம் அதிகரித்துக் கொண்டு போவதை பார்க்கிறேன். வெள்ளைக்காலர் வேலைகளிலேயே கூடுதலாக அரை மணிநேரம், ஒருமணிநேரம் என்று அலுவல்ரீதியாகவும், 4-6 மணிநேரங்கள் வேலை நேரத்துக்கு வெளியேவும் அதிக வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள் மக்கள். இப்போது இந்த திருட்டுத்தனங்கள் இன்றி நம்மை நேரடியாகவே 9-9 வேலையிடத்திலே இருக்க சொல்லி அதிக பொறுப்புகளையும் சுமத்துவார்கள். ஒரு வார்த்தை எதிர்த்து கேட்க முடியாது. 

இது நம் மக்களின் உடல், மனநலத்தை முழுக்க சூறையாடப் போகிறது. நம் ஆயுளைக் குறைக்கப் போகிறது. நம் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கப் போகிறது. போதைப்பழக்கத்தை அதிகப்படுத்தப் போகிறது. தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் சொன்னதைப் போல அடுத்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கில் புதிய மருத்துவமனைகளை இலவசமாக அரசு திறக்கும் நிலை வரப் போகிறது. அந்தளவுக்கு நோயாளிகள் பெருகப் போகிறார்கள்.

இந்த திமுக அரசு இதுவரை நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களின் நற்பெயரை ஒரேயடியாக சூறையாடும் மசோதாவாக இது இருக்கிறது. இது எதிர்ப்பின் மத்தியில் நிறைவேற்றப்பட்டால் அது இந்த அரசை வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும், அதிமுக-பாஜகவுக்கு சாதகமாகும். ஆகையால் திமுகவின் தோல்வியை உள்ளூர விரும்புகிறவர்கள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை, கூடுதல் வேலை இழப்பை விரும்புவோர் மட்டுமே - அதாவது இந்நாட்டின், இம்மாநிலத்தின் வளர்ச்சியை, இந்த அரசின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி முழுமையாக ஒழிக்க விரும்புவோர் - இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படை.  

இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...